01 August 2008

சித்திர எழுத்து


எழுத்தாளர்கள் - ஓவியர்கள் கூட்டமைப்பு

ஆதிமூலத்தை முன்வைத்து


உலகப் பிரசித்திபெற்ற தமிழக ஓவியர்களில் ஒருவர் கே.எம். ஆதிமூலம். சென்றவருடம் கடைசியில் லண்டனைச் சேர்ந்த ஒரு பிரபல பதிப்பகம் ஆதிமுலம் பற்றி வெளியிட்ட புத்தகத்தின் மூலம், சர்வதேச ஓவிய சேகரிப்பாளர்கள் கவனம் ஆதிமுலம் பக்கம் திரும்பியது. அவரது குரல், அவரது படைப்புகளைப் போலவே கவனிக்கப்பட்டது. அவர் மீதான மதிப்பும் மரியாதையும் கூடியது. இந்திய அளவில் தனக்கு அங்கீகாரம் கிடைத்தபோது, அதனைப் பயன்படுத்தி தமிழக ஓவியர்களை முன்னிறுத்தியது போல், இப்பொழுது உலக அளவில் தமிழ ஓவியங்களுக்கு தனி அடையாளம் கிடைக்கச் செய்வார் என்னும் நம்பிக்கை தமிழகக் கலைத்துறையில் துளிர்விட்டது. இந்நிலையில், இந்த வருடம் ஆரம்பத்தில் நிகழ்ந்த அவரது இழப்பு, நமக்கு பேரிழப்பு! அடுத்த சில மாதங்களிலேயே, அவரது பெயரில் ஒரு போலி ஓவியத்தை வரைந்து, அதனை மிகப்பெரிய தொகைக்கு விற்க முயற்சி செய்யப்பட்டது கண்டுபிடிக்கபட்டது. இது நிச்சயம் படைப்பு - படைப்புரிமை – படைப்பாளிகள் உறவின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள ஒரு தாக்குதல். இதற்கு ஒரு கண்டனமாகவும் இதுபோல் தொடர்ந்து நடப்பவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி விவாதிக்கவும், சென்னை, அண்ணாசாலையில் உள்ள புக்பாயிண்ட் அரங்கத்தில் ஒரு கூட்டம் இம்மாதம் 9ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. ஓவியர் ஆதிமூலம், தன் இறுதிகாலம் வரைக்கும் வலியுறுத்தி வந்த எழுத்தாளர்கள் – ஓவியர்கள் கூட்டுச் செயல்பாட்டை மேலும் வளர்தெடுக்கும் நோக்கத்துடன் ‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பும் இக்கூட்டத்தில் தொடங்கப்படுகிறது.

சங்கீதத்தில் ராஜரத்தினம் பிள்ளை, இலக்கியத்தில் பாரதியார் போல் உன்னதக் கலைஞர்கள் ஒரு கலாசாரத்தில் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் வருவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஓவிய உலகில் அப்படிப்பட்ட வருகை ஆதிமூலம். ஒரு குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்று உலகளவில் தமிழகத்தின் ஓவிய முகமாக உயர்ந்து நிற்கும் ஆதிமூலத்தின் கலைப்பயணம் நாம் பெருமைப்படக்கூடிய ஒன்று. திருச்சி அருகே, துறையூர் ஜமீன் ஆட்சிக்குட்டிருந்த கீரம்பூர் கிராமத்தில் 1938ஆம் ஆண்டு பிறந்தார் ஆதிமூலம். விவசாயக் குடும்பங்களுக்கு படிப்பு ஒரு பொருட்டாகவே படாத காலகட்டம் அது. பித்தான்கள் இல்லாத சட்டையும் அரைஞான் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் டிரவுஷருமாக பள்ளிக்கூடம் போன பையன்களும் ஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை. ஆதிமூலத்தின் பெற்றோர்களுக்கும் அவரைப் படிக்க வைக்கும் எண்ணம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அபூர்வம் போல், தானாகவே போய் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார் ஆதிமூலம். சுற்றிலும் உற்சாகப்படுத்தாத சூழல் இருந்த போதும், படிப்பில் அவருக்கு ஆர்வம் இருந்தது. வகுப்பில் அவர்தான் முதல் 'ரேங்க்'. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, ஒன்றாம் வகுப்பு வாத்தியார் வரவில்லை என்றால் அன்றைக்கு இவர்தான் அந்த வகுப்புக்கு வாத்தியார் என்னும் அளவுக்கு பள்ளியில் ஆதிமூலம் பிரசித்தம். பள்ளிக்கூட நாட்களிலேயே தினமும் 'பிரேயர்' பாடல்கள் பாடுவது, நாடகங்களில் நடிப்பது, சிலேட்டில் படங்கள் போடுவது என ஆதிமூலத்துக்குள் இருந்த கலைமனம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.

அந்தக் காலத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை 'ஃபெயில்' என்று எதுவும் கிடையாது. எஸ்.எஸ்.எல்.சி.யில்தான் முதலில் வடிகட்டும் வேலைகள் ஆரம்பமாகும். ஆதிமூலத்தை அப்படி வடிகட்டி விட்டார்கள். இதனால், படிப்பு தடைபட்ட ஆதிமூலம், அடுத்த மூன்று வருடங்கள் அவரது மாமாவின் மளிகைக்கடையில் வேலை செய்தார். பிறகு, கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்ய முடிவு செய்து சென்னை வந்து, ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது, ஒரு விளம்பரச் சுவரொட்டிப் போட்டியை அரசாங்கம் நடத்தியது. இதற்காக ஆதிமூலம் வரைந்த, மகாபலிபுரத்தில் பேன் பார்ப்பது போல் உட்கார்ந்திருக்கும் குரங்கு படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது; 5000 பிரதிகள் அச்சிட்டு தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அந்தப் படம் ஒட்டப்பட்டது; தொடர்ந்து நிறைய விருதுகள் என மாணவப் பருவத்திலேயே 'பிரபல ஓவியர்' ஆகிவிட்டார் ஆதிமூலம்.

ஆதிமூலத்தின் பூத உடலுக்கு முன்னால் நின்று ஓவியர் ராஜான், "ஆதி... ஆதி... ஆதி... பல விஷயங்களில் எங்களுக்கு வழிகாட்டியா இருந்தியேப்பா'' என்று கதறியதைப் போல, பலவற்றில் முன்னோடி ஓவியர் ஆதிமூலம். கே.சி.எஸ்.பணிக்கருடன் சேர்ந்து, சோழமண்டலம் ஓவியர்கள் கிராமத்தை உருவாக்கியதில் தொடங்கி, பத்திரிகைகளுக்கும் நவீன ஓவியத்துக்கும் இடையே ஒரு உறவுப் பாலத்தை அமைத்தது வரை எல்லாவற்றிலும் தமிழக ஓவியர்களுக்கு சிறந்த வழிகாட்டி ஆதிமூலம்தான். சின்ன வட்டமாக சில நண்பர்கள் இணைந்து கொண்டுவந்த 'கசடதபற்' சிறுபத்திரிகை குழுவில் ஆதிமூலம் முக்கியப் பங்காற்றினார். 'கசடதபற' நண்பர்களுக்கு பத்திரிகை அச்சிடுவதற்கான செலவை சமாளிப்பதே பெரிய விஷயம். எனவே, ஓவியங்கள் போடுவது, அதற்கான 'பிளாக் மேக்கிங்’குக்கு செலவு செய்வதெல்லாம் அவர்களால் இயலாத காரியம். இதனால், ஆதிமூலமே 'பிளாக் மேக்கிங்' செய்து ஒவ்வொரு சிறுபத்திரிகைகளுக்கும் கொடுப்பார். ஆதிமூலம் முதன் முதலில் செய்த புத்தக அட்டை ஞானக்கூத்தனின் 'அன்று வேறு கிழமை' கவிதைத் தொகுப்பு. அக்காலகட்டத்தில் அது ஒரு புரட்சி. சிறுபத்திரிகைகள் மற்றும் புத்தக அட்டை வடிவமைப்பு மூலம், பழங்கால கல்வெட்டுகளின் பாதிப்புடன் உருவாக்கிய புதிய எழுத்துவகையை தமிழுக்கு அறிமுகப்படுத்தி, எழுத்தின் வரி வடிவத்தையே ஓர் ஓவிய அனுபவமாக்கினார் ஆதிமூலம். எழுபதுகளில் சிற்றிதழ்களின் பக்கங்களையும் புத்தகங்களையும் அலங்கரித்த இந்த எழுத்துக்கள் இன்று சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள், சினிமா தலைப்புகள் வரை பரந்து விரிந்திருக்கிறது.

அறிவுஜீவிகளுக்குத்தான் புரியும் என்றிருந்த நவீன ஓவியத்தை, தனது உயிரோட்டமான கோடுகள் மூலம் எல்லோரும் ரசித்து அனுபவிக்கும்படி செய்ததிலும் ஆதிமூலம்தான் முன்னோடி. 'ஜூனியர் விகடன்' இதழில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய 'கரிசல் காட்டுக் கடுதாசி' தொடருக்கு ஆதிமூலம் வரைந்த கோட்டுச் சித்திரங்கள் வாசகர்களின் நெஞ்சில் இன்றும் பசுமையான நினைவுகளாக நிலைத்திருப்பவை. வாரம்தோறும் அழகும் எளிமையும் மிளிரும் அவரது சித்திரங்கள் கி.ரா.வின் எழுத்துக்களுக்கு புதிய பரிமாணத்தை வழங்கின.

நேர்மையான கலை ஈடுபாடு, சமரசங்கள் இல்லாத உயிருள்ள கோடுகள், கவித்துவமான அழகியல் மொழி, மண்ணுடன் இணைந்த தமிழ் அடையாளம் என கோட்டோவியத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் ஆதிமூலம். உயிரும் உணர்வும் உள்ள நரம்புகள் போன்ற அவரது கோடுகள் தமிழர்களின் அடையாளமாகக் கொள்ளத்தக்கவை. ஆதிமூலத்தைப் பொருத்தவரைக்கும் ஓவியம் என்பது ஓர் அனுபவத்தை அல்லது காட்சியை சித்தரிக்கும் படமல்ல. அதுவே ஓர் அனுபவம். கிராமியக் கலைவடிவங்களும் சோழர்கால வார்ப்பு சிலைகளும் கண்ணாடி ஓவியங்களும் தேவாரமும் தெருக்கூத்தும் தமிழகத்தின் வாழ்பனுவங்களின் அடிப்படை இஸத்தை, இசையை, அழகை எவ்வாறு அழகுணர்வுடன் பகிர்ந்தனவோ அதைப் போலவே ஆதிமூலத்தின் ஓவியங்களும் ஆத்மார்த்தமான ஈடுப்பாட்டுடன் வெளிப்படுகிறது.

ஆதிமூலத்தின் காந்தி, மகாராஜா வரிசை கோட்டோவியங்கள் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் ஒருவரை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியவை. 1969இல் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி ஆதிமூலம் வரைந்த காந்தி வரிசை ஓவியங்கள் இன்றும் உலகம் முழுக்க பேசப்படுகின்றன. ஒரு கோணத்தில் புத்தர், மற்றொரு கோணத்தில் இயேசு என பல முகங்களை நினைவுக்கு கொண்டு வருபவை இவரது காந்தி ஓவியங்கள். மிகக் குறைவான, எளிமையான கோடுகள் மூலம் காந்திஜியின் முதுமையின் தளர்வை தோற்றத்திலும் உள்ளக் கனிவையும் தாய்மையின் கரிசனத்தையும் உணர்விலும் தந்துவிடுகிறார் ஆதிமூலம். ஒரு வெற்றிப் பார்முலா கிடைத்தவுடன் அதிலேயே பயணம் செய்து சுருங்கிவிடும் கலைஞர்கள் போல் இல்லாமல், தொடர்ந்து தன்னைக் கலைத்துப் போட்டுக்கொண்டே புதிய புதிய தேடல்களுடன் நகர்ந்தவர் ஆதிமூலம். கோட்டோவியங்களின் தனித்துவமான வெற்றிக்குப் பிறகு, கோடுகளுடன் வண்ணங்களை இணைத்து புதிய முயற்சிக்குத் தாவினார். அதன் வெற்றிக்குப் பிறகு, அதை அப்படியே நிறுத்திவிட்டு கனவுலக சித்தரிப்புகள் போன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட்டார். பிறகு அரூப வண்ண ஓவியங்கள் வரைந்தார். ஆரம்பகால கோட்டோவியங்கள் தொடங்கி, அரூப வண்ண ஓவியங்கள் வரைக்குமான ஆதிமூலத்தின் பயணம் இளம் தலைமுறை சித்திரக்காரர்களுக்கு ஒரு பாடம்.

1998 முதல் ரத்தப் புற்றுநோயால் தாக்கப்பட்ட ஆதிமூலம், சில நெருக்கமான நண்பர்கள் தவிர வேறு யாருக்கும் அந்தத் தகவலை கடைசிவரை சொல்லாமலே இருந்திருக்கிறார். மரணம் தன்னை நெருங்கிவிட்ட அனுதாபப் பார்வை தன் மீது விழுவதை அவர் விரும்பவில்லை. அது தன்னை மட்டுமின்றி, தன்னைச் சுற்றியும் உள்ளவர்கள் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும் என்று அவருக்குள்ளேயே போட்டு புதைத்துவிட்டார். ஆனால், புற்றுநோயால் அவரது உடல் உறுப்புகளைத்தான் வெற்றிகொள்ள முடிந்ததே தவிர அவரது தேடலையும் ஓவியம் வரையும் வேகத்தையும் குறைக்க முடியவில்லை. விடாத கடுமையான முயற்சிகள் மூலம் உலக பிரசித்திபெற்ற ஓவியராக ஆதிமூலம் அடையாளம் காணப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான்.

சமூகத்தில், ஓவியர்களுக்கு மரியாதையும் அங்கிகாரமும் இல்லாத காலகட்டத்தில் தன் ஓவியப் பயணத்தை தொடங்கியவர் ஆதிமூலம். வறுமையும் நீண்ட நாள் தாடியுமே ஓவியர்களின் முகங்களாக இருந்த நாட்கள் அவை. ஓவியர் என்பதாலாயே பெண் கொடுக்க மறுத்ததால் பலமுறை அவரது திருமணம் தள்ளிப்போயிருக்கிறது. அந்தச் சூழ்நிலையை மாற்றி, ஓவியர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியதில் ஆதிமூலத்தின் பங்கு மிக அதிகம். இன்றும் கிராமங்களில் இருந்து கலைதாகத்துடன் சென்னைக்கு வண்டி ஏறும் இளம் ஓவியர்களுக்கு ஆதிமூலம் ஒரு லட்சியக் கனவுதான். ஒரு பேட்டியில், ''இளம் ஓவியர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?'' என்ற கேள்விக்கு ஆதிமூலம் சொல்கிறார்: ''வைராக்கியத்தோட செயல்படணும். வண்ணங்களைப் பார்த்தா அது பாம்பு மாதிரி சீறிகிட்டு வரணும். தன்னை உணர்ந்து, தன் பிறப்பை உணர்ந்து ஒரு ஓவியனாக வேண்டும் என்ற லட்சியத்தில் வாழணும். எனக்கு நான்கு தங்கச்சிங்க இருக்காங்க; அவங்களைக் கட்டுக்கொடுக்கணும். அதனால என்னால ஓவியம் பண்ண முடியலைன்னெல்லாம் சொல்லக்கூடாது. நீ, இல்லைன்னா, அவங்க என்ன பண்ணியிருப்பாங்க? சாக்கு சொல்லி தட்டிக்கழிக்கக் கூடாது. ஓவியம் மீது உண்மையான பக்தி வேணும். நாம நினைச்சா ஜெயிக்கலாம்.'' சொன்னது மட்டுமல்லாமல், சொல்லியது போல் வாழ்ந்து வழிகாட்டியும் சென்றிருக்கிறார் ஆதிமூலம்.

(ஆதிமூலம் காலமானதும் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையை விரிவுபடுத்தி எழுதியது.)


2 comments:

Perundevi said...

//"வைராக்கியத்தோட செயல்படணும். வண்ணங்களைப் பார்த்தா அது பாம்பு மாதிரி சீறிகிட்டு வரணும். தன்னை உணர்ந்து, தன் பிறப்பை உணர்ந்து ஒரு ஓவியனாக வேண்டும் என்ற லட்சியத்தில் வாழணும். எனக்கு நான்கு தங்கச்சிங்க இருக்காங்க; அவங்களைக் கட்டுக்கொடுக்கணும். அதனால என்னால ஓவியம் பண்ண முடியலைன்னெல்லாம் சொல்லக்கூடாது. நீ, இல்லைன்னா, அவங்க என்ன பண்ணியிருப்பாங்க? சாக்கு சொல்லி தட்டிக்கழிக்கக் கூடாது.//

படைப்பூக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்குமான வார்த்தைகள் இவை. பதிவில் இதைப் பிரசுரித்ததற்கு நன்றி, தளவாய்.

தமிழநம்பி said...

முயற்சி வெற்றிபெற விழைகின்றேன்.
நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!