04 September 2007

நேர்காணல்

லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்

''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்"

2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்டிருந்த ஒரு பிற்பகலில், அம்பத்தூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் லா.ச.ராமாமிருதத்தின் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். அறிமுகப்படுத்திக் கொண்டதும், சாலையைப் பார்த்து திறந்திருந்த அவருடைய அறைக்கு அழைத்து சென்றார். பார்ப்பதற்கு குழந்தைமைக்குத் திரும்பிவிட்ட வயதானவர்களைப் போல் இருந்தார் லா.ச.ரா. கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போது, ஞாபக அடுக்கிலிருந்து மேலெலும்பி வரும் நினைவுகள், ஒன்றையொன்று முட்டி மோத, உணர்ச்சி தழும்பலில் திளைத்து, குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டே, தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையைப் போல் புன்முறுவல் செய்கிறார். சில நேரங்களில் அழுதுவிடுகிறார். குரல் உடைகிறது. ஆனால் உற்சாகமாக இருக்கிறார். ''எழுதவேண்டும் என்னும் ஆர்வம் தனியாமல் இருக்கிறது. உடல்தான் ஒத்துழைப்பதில்லை'' என்றார் எங்களிடம். எனவே, அவர் சொல்லச்சொல்ல மகன் சப்தரிஷி எழுதிக் கொடுக்கிறார். லா.ச.ராமாமிருதத்துக்கு வாழ்க்கை இன்னும் கசக்கவில்லை என்பதுதான் விஷேசம். எவர் பேரிலும், எதன் பேரிலும் வருத்தங்களும் குற்றச்சாட்டுகளும் அவருக்கு இல்லை. லா.ச.ரா.வின் மருமகள் தந்த காப்பியை ''முதலில் குடியுங்கள்" என்றுவிட்டு அவருக்குள் ஆழ்ந்தார்.

'புதர்', 'அபிதா', 'கல் சிரிக்கிறது', 'பிராயச்சித்தம்', 'கழுகு' ஆகியவை லா.ச.ரா.வின் முக்கியமான நாவல்கள். 'பாற்கடல்', 'சிந்தாநதி' ஆகிய இரண்டு வாழ்க்கை வரலாற்று நூலையும், 'முற்றுப்பெறாத தேடல்', 'உண்மையான தரிசனம்' ஆகிய இரண்டு கட்டுரைத் தொகுதிகளையும், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் லா.ச.ராமாமிருதம் எழுதியுள்ளார். காப்பி குடித்து முடிந்தும், ''டேப் ரிக்கார்டரை ஆன் செய்யுங்கள்'' என்றுவிட்டு, அறைக்கு வெளியேப் பார்த்துக்கொண்டே பேசத் தொடங்கினார்.

''முதலில் இந்த 'டேப் ரிக்கார்டரு'க்காக, நான், உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு, பேட்டி என்றாலும் என் பாஷையிலேயே வரவேண்டும். குறித்துக் கொண்டு போய், நான் சொல்லாதவற்றை எல்லாம் எழுதி, நான் சொன்ன சிலவற்றை விடவும் வேறு செய்துவிட்டு, அது ரொம்ப ஆபத்தான சமாச்சாரம். அது மாதிரி அனேக நேரங்களில் நேர்ந்துவிடுகிறது. நாசம் செய்து விடுகிறார்கள். அதன்பிறகு பேட்டிகளே கொடுக்கக்கூடாது என்றிருப்பேன். அப்படி எல்லோரிடமும் நான் சொல்லிவிட முடியுமா? நான் சாதாரண ஆள்; பெரிய இடங்களை எல்லாம் பகைத்துக் கொள்ள முடியாதய்யா!

"அப்புறம் முன்னெச்சரிக்கையாக நான் சில விசயங்களை சொல்லி விடுகிறேன். எப்போதும், இது போன்ற பேட்டிகளின் போது, வழக்கமாக கேட்கிற கேள்விகளை, நீங்கள் என்னிடமும் கேட்பதில் பிரயோசனம் இல்லை. எனக்கு இப்போது என்பத்தாறு வயதாகிறது. கடந்த என்பத்தைந்து வருடங்களில் நான் நிறைய பார்த்திருக்கிறேன். எனவே, என் வயதுக்கான முதிர்ச்சியில், இப்போது என் மனதில் இருக்கிற விஷயங்களைப் பற்றிதான், நான் பேசவேண்டும் என்று விரும்புகிறேன். கொஞ்சம் அரூபமான சிந்தனைகளாக அவை இருக்கலாம்; நம்பிக்கைகள் சிதறிப் போய் இருக்கலாம். மேலும், சில புதியதாக வந்த நம்பிக்கைகள். நான் இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது உங்கள் பத்திரிகை இவற்றைத் தாங்குமா?"

''தாங்கும்."

''வெரிகுட். எனக்கு இந்த பேட்டிகளில் எல்லாம் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. எனக்கு எல்லாம் ஆகிவிட்டது. கிடைக்க வேண்டிய பாராட்டுகள், அங்கீகாரம், பரிசுகள் எல்லாம் கிடைத்து விட்டன. இனிமேலும் எனக்கு என்ன ஆகவேண்டும்? அதற்காக நான் உங்களை மதிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது. நீங்கள் உங்கள் காரியமாக என்னிடம் வருகிறீர்கள்; நான் என் காரியமாக உங்களிடம் பேசுகிறேன்; அவ்வளவுதான். இனி நீங்கள் கேட்க வேண்டியவற்றைக் கேளுங்கள்."

"முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள். எப்படி இருக்கிறீர்கள்?"

"எனக்கு இப்போது என்பத்தாறாவது வயது நடக்கிறது. இந்த வயதுக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். புத்தி இன்னும் ஸ்தம்பித்துப் போய் விடவில்லை. நன்றாகத்தான் இருக்கிறது. நான் மொத்தமாக முப்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். இப்போதும்கூட தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன். எனது பதிப்பாளர், வானதி திருநாவுக்கரசு, ரொம்ப ஆச்சர்யப்பட்டு போய்விட்டார். இந்த வருடம் என்னுடைய மூன்று புத்தகங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.

"என் ஊர் லால்குடி. ராமேஸ்வரம் போய் தவம் இருந்து பிறந்தவன் நான். என் அம்மா, எனக்காக, இடது கையால் சாப்பிட்டிருக்கிறாள். நான், எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும்தான் படித்திருக்கிறேன். மெட்ராஸில்தான் படித்தேன். 1937-ம் ஆண்டு நான் எழுத ஆரம்பித்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வசதிக்காகத்தான் இந்த வருடத்தைச் சொல்லுகிறேன். மற்றபடி நான் இருபது வயதிலிருந்து எழுதி வருகிறேன் என்றுதான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால், அதற்கு முன்பே எழுத ஆரம்பித்தாகி விட்டது. பதினாறு வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டேன் என்று ஞாபகம். அதற்காக ஒவ்வொரு சமயத்திலும், அப்போதைக்கு ஞாபகத்திலிருக்கும் படி, ஒவ்வொரு வருடத்தையும் சொல்லிக்கொண்டு இருக்க முடியாதில்லையா? உண்மையில் பார்க்கப் போனால், இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் தள்ளிப் போய்தான் பார்க்க வேண்டும். அவ்வளவு தூரத்து சமாசாரம் அவைகள். இந்த அறுபத்தைந்து வருடத்தில் இருநூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாறுகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இவைகள்தான் என் மொத்தப் படைப்புகள். என் புத்தகங்கள் நன்றாக விற்கின்றனவா, இல்லையா என்பது பற்றிக்கூட எனக்கு அக்கறை கிடையாது.

"என்னுடைய படைப்புகளில் அனேகம், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பாகிச் சென்றிருக்கின்றன. பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் மொழிகளிலும் மொழிபெயர்ப்பாகி இருக்கின்றன. 'புற்று' கதையைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்த போது, எனக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இப்போது, 'கதா' நிறுவனத்தார் என்னுடைய நாவல் ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தேர்வு செய்துள்ளார்கள். அந்த அம்மா (கீதா, கதா நிறுவனர்) போன் பண்ணினாங்க; அப்புறம் மொழிபெயர்ப்பை அனுப்பினாங்க. அது எப்போது வருமோ, அல்லது வராதோ! எனக்கு அது பற்றியும் ஒன்றும் தெரியாது. ஏதோ 'அக்ரீமெண்ட்' வந்தது. நான் கையெழுத்துப் போட்டு அனுப்பியிருக்கிறேன். அவ்வளவுதான்.

"நான் 'இங்கிலீஷில்' நன்றாக எழுதுவேன். மொழிபெயர்ப்பேன். ஆனால் இப்போது எனக்கு உடம்பில் அதற்கான தெம்பு இல்லை. அந்த நேரத்துக்கு 'ஒரிஜினலாக' எழுதலாமே என்று எனக்கு எண்ணம். என்னைப் பற்றி இரண்டு பேர் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். காப்ரில்லா ஜெய்சிங்கர் பராலுதின் என்று ஒரு ஜெர்மன் 'லேடி'. அவள் இத்தாலியில் பேராசிரியராக இருக்கிறாள். மூன்று டாக்டர் பட்டங்கள் பெற்றிருக்கிறாள். அவள், என்னைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாள். '‘The Incomparable Writer Ramamirtham’ என்பது புத்தகத்தின் தலைப்பு. விலை ஆயிரத்து முந்நூறு ரூபாயோ, என்னமோ. எனக்கு ஒரு பிரதி கொடுத்திருக்கிறாள். அவள் என்கிட்ட சொன்னாள், ''இப்போது நான், எங்கேப் போனாலும், உங்களைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறேன்'' என்று. நிறைய பேசுகிறாள் அவள். ஆங்காங்கே, அவள் பேசியவற்றை எல்லாம், எனக்கு அனுப்பித் தந்திருக்கிறாள். ''இப்போது உங்களைப் பற்றி அந்தப் பக்கத்தில் எல்லோரும் முழித்துக் கொண்டிருக்காங்க. ரொம்ப பிரமாதம் என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்கு உங்கள் எழுத்துக்களில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது'' என்று சொன்னாள். இது காரணமாகத்தான் எனக்கு இந்த வருடம் நிறைய விருதுகள் வருகின்றன என்று நினைக்கிறேன்.

"எனக்கு வராத நோயே இல்லை. இப்போது கால் போய் விட்டது. எனவே, ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். பழைய வேகத்துடன் செயல்பட முடியவில்லை. முன்பு வருடத்துக்கு ஒரு முறை, அல்லது இரண்டு முறை வெளியே கிளம்பி விடுவேன். எங்காவது போய் பதினைந்து, இருபது நாட்கள் இருந்துவிட்டு வருவேன். அதிகமும் குற்றாலம், தென்காசி, மதுரை தான் போவேன். அங்கெல்லாம் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள் இருக்கிறார்கள். நல்ல சாப்பாடு கிடைக்கும்; நல்ல பேச்சுகள் இருக்கும்."

"உங்கள் குடும்பம் பற்றி சொல்ல முடியுமா? அப்பா, அம்மா, மனைவி, மகள், மகன்கள், மருமகள்கள் எல்லோரையும் பற்றி. . . குறிப்பாக இவர்களில், உங்கள் மேல் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியர் யார் என்றும்..."

''அம்மாதான் என் மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவள். வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பதை எனக்கு அவள்தான் கற்றுக் கொடுத்தாள். அம்மாவுக்கு வாழ்க்கையில் கசப்பே கிடையாது. ஆனால், மிகவும் கசந்த வாழ்க்கை அவளுடையது. ஆனால், கசக்கவில்லை அவள். நான், பக்கத்திலிருந்து கண்ணால் பார்த்தவன்தானே. அவள் மாதிரிதான் நானும் இருக்கிறேன். எவ்வளவோ ஏமாற்றங்கள், அவளுக்கு நேர்ந்தது போலவே எனக்கும் நேர்ந்திருக்கிறது. அதற்காக நான் ஒன்றும் பயப்படவில்லை.

"அம்மாவுக்கு நாற்பத்தைந்து வயது... அப்பா, ஐம்பது வயதுகூட ஆகவில்லை. டக்கென்று போய்விட்டார். 'ஹார்ட் அட்டாக்'. அப்பா, பள்ளிக்கூட வாத்தியார். அப்போது முப்பாத்தாறு, முப்பத்தேழு ரூபாய் சம்பளம். ''என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது'' என்று அம்மா கையில் மொத்தத்தையும் கொடுத்து விடுவார். அவள் கை நல்ல கை. பசு மாடு வளர்த்தாள், தோட்டம் போட்டாள்; எல்லா நன்றாக வந்தது. சீக்காளி ஆம்படையான். அவள் ஒழுங்காக அவரைப் பார்த்துக் கொண்டாள். காதலினால் பார்த்தாள் என்று இதனை நான் சொல்ல வரவில்லை. கடமைதான் இது. அவளே சொன்னாள்: ''வேண்டியது பண்ணியாகிவிட்டது, உங்க அப்பாவுக்கு. அப்புறம் எனக்கு ஒன்றும் கடன் இல்லைப்பா. எனக்கு இதைப் பண்ணலையே என்று எந்த குற்றமும் கிடையாது.'' கொஞ்ச நேரம்தான் அழுதாள்.

"அப்பா, என் மேல் மிகவும் பிரியமாக இருந்தார். தினமும் இரவு ஏழு மணிக்கு சாப்பாட்டை முடித்துவிட்டு, முற்றத்தில் வந்து உட்கார்ந்திருப்போம். நிறைய கதைகள் சொல்வார். நான் தப்பும் தவறுமாக சொல்லும் எல்லாவற்றையும், சரிதான் என்பது போல் கேட்டுக் கொண்டிருப்பார். அம்மா, ''நீங்கள் அவனை கெடுத்துவிடுவீர்கள்'' என்பாள். ஆனாலும் அவர், என்னிடம் என்றும் கடுமையாக நடந்து கொண்டதே இல்லை. ஒருமுறை அவரிடம் அடி வாங்கி இருக்கிறேன். அன்று இரவு படுக்கையில், ''ஏண்டா ராமாமிருதம், உன்னை அடிக்க வேண்டுமென்று எனக்கு விருப்பமா என்ன. இரத்தம் கொட்டுகிறதடா உள்ளே'' என்று சொன்னார். தினமும் சேர்ந்துதான் படுத்திருப்போம்.

"நான், என் தாய், தந்தையரைத் தவிர வேறு எவரையும் வணங்க வேண்டியது இல்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். ''பொம்மனாட்டிகள் பற்றி உன்னுடன் பேச வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நீயே அதனையெல்லாம் தெரிந்து கொள்வாய். என்னைப் போல், ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இரு, போதும்'' என்று சொன்னார் அப்பா. நான் அவரைப் போல் இருந்தேனா, இல்லையா? எனக்குத் தெரியவில்லை. ஆனால், எந்தக் கெட்ட பழக்கமும் எனக்குக் கிடையாது.

"எனக்கும், என் மனைவிக்கும் இடையில் பன்னிரெண்டு வயது வித்தியாசம். கல்யாணம் நடந்த போது எனக்கு முப்பது, அவளுக்குப் பதினெட்டு. கல்யாணம் முடிந்து ஐம்பத்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது, அவள் ஆரோக்கியமாக இருக்கிறாள். நான் கிழவனாகி விட்டேன். ஆனால், அன்று பார்த்த போது, எவ்வளவு அழகாக என் மனதில் பட்டாளோ, அவ்வளவு அழகாகத்தான் இப்போதும் எனக்கு அவள் இருக்கிறாள். கன்னாபின்னாவென்று நான்கு இடங்களில் சலனப்படுகிறவர்கள், இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அவர்களைச் சேர்ந்தவன் இல்லை. அவர்களை எல்லாம் பார்த்துவிட்டு, ஏதோ என்னை அண்டி வந்துவிட்டாள் என்று நான் இவளைப் பற்றி நினைக்கிறேன். ஐயோ, நான் இப்படி பேசுகிறேனே என்று நினைக்காதீர்கள். இந்தம்மா பெரிய பண்ணையாருடைய பேத்தி; நான் சாதாரண வாத்தியார் வீட்டுப் பிள்ளை. எப்படியோ கல்யாணம் நடந்துவிட்டது. என்னை நம்பி அவளுடைய மனுஷாளையெல்லாம் விட்டுவிட்டு வந்துவிட்டாள். இவ்வளவு காலமும் எங்களுக்குள் இருந்த எவ்வளவோ பிரச்னைகளையும் கடந்து வந்துவிட்டோம். அவளுடைய அண்ணன் வீடு, இங்கே பக்கத்தில்தான் இருக்கிறது. அங்கு போகமாட்டேன் என்கிறாள். ''போய் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வாடி'' என்றாள், கேட்கமாட்டேன் என்கிறாள். இது பொம்மனாட்டிகளுக்கே உரிய தனிப்பட்ட ஒரு அம்சம்! அந்த மாதிரி அவர்களால் உடனே 'அட்ஜெஸ்ட்' செய்துகொண்டு போய்விட முடிகிறது. ஆண்களால் இது முடியாது. எதையாவது பொறுக்கிக் கொண்டே இருப்பான். அழகாகட்டும், விசுவாசங்களாகட்டும் பெண்கள் தனிதான். விசுவாசங்கள் மாறும். பிள்ளைகள் பிறந்து விட்டால் அங்கேப் போய்விடுகிறது. ''என்னதான் சொன்னாலும், உங்களை அனுப்பிவிட்டுதான் போவேன்'' என்று ஒரு நாள் சொன்னாள். ''பிள்ளைகளிடம் உங்களை நான் ஏன் விடவேண்டும்.'' இப்படி ஒரு 'சென்டிமெண்ட்'. நமக்கு ஒரு தோழி இருக்கிறாள். நம் பக்கத்திலேயே இருக்கிறாள் என்ற தைரியத்தை இது எனக்கு ஏற்படுத்துகிறது. என் மனைவியிடம் மூட்டை, மூட்டையாகப் புடவைகள் இருக்கின்றன. அவ்வப்போது பீரோவைத் திறந்து, அவற்றை எண்ணி, எண்ணிப் பார்த்துக் கொள்கிறாள். எடுத்துப் பார்க்கிறாள்; பிறகு உள்ளே வைக்கிறாள்; மறுபடியும் எடுக்கிறாள்; மறுபடியும் உள்ளே வைக்கிறாள். என்ன, என்னல்லாமோ செய்து கொண்டிருக்கிறாள். அவ்வளவு புடவைகள் அவளிடம் இருக்கின்றன. அதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், அந்தக் காசு எல்லாம் என்னுடையதுதான். அது, வேறு சமாச்சாரம். என் தாய்க்கு இந்தக் கஷ்டம் எதுவுமே இருந்ததில்லை. அவள் ஒரு வார்த்தை சொல்வாள்: ''எனக்கு இந்த வயதில் என்னடா வேண்டும்.''

"எனக்கு இரண்டு பையன்கள். ஒருவன் சிங்கப்பூரில் இருக்கிறான். இன்னொருவன், சப்தரிசி. இங்கேதான் இருக்கிறான். இப்போது வந்திருக்கிறான். இரண்டு நாட்கள் இருப்பான், போய் விடுவான். அவர்கள், அவர்கள் காரியத்தை அவரவர்கள் தான் செய்யவேண்டும். சப்தரிசிக்கு எப்போதும் பசித்துக் கொண்டே இருக்கும். கொடுத்து வைத்தவன். இவன்தான் என்னுடைய அம்பிகாபதி. என் எழுத்தில் என்னை விட அதிகம் துவைந் திருக்கிறான். அனேக நேரங்களில் இவன் சொன்னால், நான் சொன்ன மாதிரி.

"ஏதோ என் வரையில் எல்லாம் ஆகிவிட்டது. என் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டேன். மனைவிக்கு மூன்று தாலி கட்டிவிட்டேன். இது ரொம்ப அபூர்வமாகத்தான் நடக்கக் கூடியது. இப்போது இவர்கள், நினைத்த நேரத்துக்கு அவர்கள் எதிர்பார்க்கிற நிகழ்ச்சி 'டிவி'யில் வரவில்லை என்றால், ஒடிந்துபோய் விடுகிறார்கள். அந்த மாதிரியெல்லாம் எனக்கு ஒன்றுமே கிடையாது. 'டிவி'யாவது, மண்ணாங்கட்டியாவது. எவன் கண்டான் அதை. ''ஏண்டா, எனக்கு என்ன வேண்டும். உடுக்க இரண்டு புடவை, சாப்பாடு. அது எனக்குக் கிடைக்கிறதே'' என்பாள் என் தாய். அதற்கே கஷ்டப்பட்டவள். எல்லோரும் கொஞ்சம் கஷ்டப்படனும். பசி என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். 'நன்றாக சாப்பிடு, நன்றாக தூங்கு, கொஞ்சம் பசித்திரு'' என்று நான் எப்போதோ எழுதியிருக்கிறேன். கொஞ்சம்தான் பசிக்க வேண்டும். அதிகம் பசிக்கக் கூடாது. பசி என்றால் என்னவென்று தெரிந்திருந்தால் போதும், அவ்வளவுதான். சந்தோசமாக இருந்தால் சந்தோசமாக இருப்போம். இல்லை என்றாலும் அதனால் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது என்று என்னைக் கேட்டால், எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது. நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம் காட்டுவதில்தான் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அழகான எண்ணங்கள் நமக்கு இருக்கின்றன. நாம்தான் அந்த எண்ணங்களை உருவாக மாற்றவேண்டும். எல்லாவற்றுக்கும் மனதுதான் காரணம். அவ்வளவுதான் எனக்கு வாழ்க்கையைப் பற்றி தெரிந்தது எல்லாம். எனக்கு நீ, உனக்கு நான். இதுதான் வாழ்க்கை எனக்கு அளித்த உபதேசம்."

"சிறுவயதிலேயே எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற தீர்மானம் உங்களுக்கு இருந்ததா?"

"இல்லை. எழுதி புகழ் அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. ஆனால், எழுதாமலும் என்னால் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் குடும்பத்துக்கு பைசா மிகவும் தேவையாக இருந்தது. அதனால், அப்போது அதற்காக எழுதிக் கொண்டிருந்தேன். அப்புறம் காசின் மேல் ருசி விட்டுவிட்டது. என்னுடைய சாதனை என்னவென்றால், நான் எழுதி எதுவுமே வீணாக ஆனதில்லை என்பதுதான். எல்லாம் பிரசுரமாகிவிட்டது. யாராவது ஒருவர் நமக்கு குருவாக வேண்டும். தி.ஜ.ரங்கநாதன் தான் எனக்கு குரு. ''நீ எதை எழுதினாலும் போடுகிறேன்டா'' என்று அவர் சொன்னார். உயிர் என்னுடைய எழுத்தில் இருந்தது என்று அவர் அடையாளம் கண்டுகொண்டு விட்டார். ''நீ என்னைவிட நன்றாக எழுதுகிறேடா'' என்பார். அப்படி சொல்கிறவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள். இப்போது போட்டியும் பொறாமையும் எரிச்சலும் குரோதமும் மிகவும் அதிகமாகி விட்டன. யாரோடு யார் பொறாமைப்படுவது என்பதுகூட இல்லாமல் ஆகிவிட்டது."

"சிறுவயதில் உங்களைச் சுற்றியிருந்த சூழலின் எந்தக் கூறுகள், ஒரு எழுத்தாளனாக நீங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கும் என்று இப்போது பிரித்துப் பார்க்க முடியுமா?"

"நான் கிராமத்தில் வளர்ந்தேன். லால்குடியில் இல்லை; காஞ்சிபுரம் பக்கத்தில், என் அப்பா வேலை செய்த அய்யம்பேட்டை என்ற கிராமத்தில். அங்கு குயவர்களின் வீட்டோடு வீடாக எங்களுக்கு ஒரு வீடு கிடைத்தது. இரண்டு ரூபாய் வாடகை. பெரிய முற்றம் அந்த வீட்டுக்கு இருந்தது. முற்றத்தின் ஒரு பக்கம் நீளமான சுவர்; அதனையொட்டி அடுப்பு; விறகுக் கட்டைதான். ஒரேயொரு அறை. எத்தனையோ முறை பாம்பு வந்திருக்கிறது. நட்டுவாக்கில் வரும். ஏதோ கடிக்காமல் விட்டதால் நாங்கள் தப்பித்து விட்டோம். இடி இடிக்கும். உடனே, அம்மா அர்ச்சுனனின் நாமத்தைச் சொல்வாள். நான் அப்படியே அவளோடு ஒட்டி ஒடுங்கிக் கொண்டிருப்பேன். இது வீட்டின் சூழ்நிலை. அப்போது, என்னைச் சுற்றி இருந்தவர்கள் கலங்கம் இல்லாதவர்கள்; நேர்மையானவர்கள். விடிகாலையில் பத்து மணிக்குத் தொடங்கி, இரவு பத்து மணி வரைக்கும் வேலை செய்துகொண்டே இருப்பார்கள். வாழ்வின் மொத்த தத்துவத்தையும் அங்கே பார்த்தேன். அவர்களிடம்தான் பிரியம் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொண்டேன். அவர்களுடைய பாஷை மிகவும் காட்சி பூர்வமானதாக இருக்கும். அந்த மொழி என் எழுத்து மொழியை பெருமளவில் தீர்மானித்திருக்கிறது.

"எல்லோரும் சொல்கிறார்கள்: ''சில நேரங்களில், சில காட்சிகள் அப்படியே நம் மனதில் விழுந்து விடுகிறது.'' பொம்மனாட்டிகள் ஈரப் புடவையைக் கட்டிக் கொண்டு, படியில் ஏறிக்கொண்டிருக்கும் காட்சி, அப்படியே என் மனதில் இருக்கிறது. என்னுடைய கதைகளிலும் இக்காட்சி அடிக்கடி வரும். தி.ஜ.ர., ''ஏண்டா, இது அடிக்கடி வருகிறதே'' என்பார். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. சில காட்சிகள் அப்படி நம் மனதில் பதிந்து விடுகின்றன. நான் கெட்டுப் போகவில்லையேத் தவிர, கெட்ட எண்ணங்கள் எனக்கு இல்லாமல் இல்லை. 'செக்ஸ்' இல்லாமல் எதுதான் உண்டு? பெரிய பக்தியின் மூர்க்கமே செக்ஸ்தான். காமத்தால் உடலில் ஏற்படும் அவஸ்தைகள் எல்லாவற்றையும் நான் எழுத்தில் வடித்திருக்கிறேன். ஆனால், சமுதாயத்துக்கு விரோதமாக நான் என்றும் எழுதியது கிடையாது. சந்தோஷமாக, ஒற்றுமையாக இருப்பது பற்றிதான் நான் எழுதுகிறேன். அதுதான் எனக்கு தோன்றவும் செய்கிறது."

"உங்கள் எழுத்து மொழி பற்றி, 'மிகவும் விசேஷமானது, சங்கீதம் போன்றது, புரியாதது' என்று பல்வேறு விதமான விமரிசனக் கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதனையெல்லாம் இப்போது நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?"

"நான் ஜனரஞ்சகமான எழுத்தாளன் இல்லை. புரியாத எழுத்தாளர் என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டு, அப்படியே, அதனாலேயே பிரபலமாகி விட்டவன். ஏதாவது புரியும்படி எழுதினால், எனக்கு இப்போது ஆபத்துதான். தரம் குறைந்து விட்டது என்று, என்னை வேறு ஒரு பிரிவில் சேர்த்து விடுவார்கள். இரண்டு, மூன்று பேர் சொல்லிவிட்டார்கள்; எனக்கு மாற்றேக் கிடையாதாம்; முன்னாடியும் கிடையாதாம், பின்னாடியும் கிடையாதாம். என்னோடு நான் முடிந்தது. இப்படி இருப்பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஆனால், நான் என்ன செய்ய முடியும்? ராமாமிருதம், ராமாமிருதமாகத்தான் இருக்க முடியும்.

"நான் எழுதியவைகள் எந்த அளவுக்கு நிற்கும், நிற்காது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ''நிற்பதற்காகத்தான் நான் எழுதுகிறேனா?'' என்று கேட்கப்படுகிற ஒவ்வொரு சமயத்திலும், ''நான் அதற்காக எழுதவில்லை. நான் எப்போதுமே எனக்காகத்தான் எழுதுகிறேன்'' என்று சொல்லி வந்திருக்கிறேன். இதுதான் நிஜமும்கூட. ''எனக்காகத்தான் எழுதுகிறேன் என்றால், ஏன் பத்திரிகையில் பிரசுரிப்பானேன். நீயே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே'' என்று ஒரு கட்சி பேசினால், அதனை ஒரு கட்சியாகவே நான் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

"என்னுடைய எழுத்தில் சங்கீதத்தின் ஈடுபாடு இருக்கிறது. சங்கீதம், ஓவியம், எழுத்து போன்ற எல்லா கலைகளும் எதை நோக்கி நகர்கின்றன? மௌனத்தை நோக்கிதான். மௌனம்தான் எனக்கு எப்போதுமே முக்கியமானதாக இருந்திருக்கிறது. பேசிக்கொண்டே இருக்கும் போது இடையில் திடிரென்று பேச்சு நின்றுவிடும். அற்புதமான கணங்கள் அவை. மனது நிறைந்து போவது போல் இருக்கும். அதே சமயம், என்ன நேரப் போகிறதோ என்ற பயமும் இருக்கும். ஆனால், அனேக நேரங்களில், மௌனத்தை நோக்கிப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, எழுத்தாளன் நிறையப் பேசுகிறான். நான் நிறையப் பேசுகிறேன். ஒருவர் மனதைத் தொட்டு, ''அட இது எனக்கு நேர்ந்ததாச்சே; இதை ஏன் என்னால் எழுத முடியவில்லை. இந்த ஆள் எழுதியிருக்கிறானே! என் மனதில் ஓசையை எழுப்புகிறானே'' என்று வாசகன் நன்றி செலுத்துகிறான் பாருங்கள், அது போலான எழுத்தைத்தான் நான் நல்ல எழுத்து என்று நினைக்கிறேன். ''உங்கள் எழுத்து புரியவில்லையே'' என்று என்னிடமே வந்து சொல்கிறார்கள். புரியவேண்டும் என்பது அவசியமா என்ன? இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்குப் புரிந்துவிட்டுப் போகிறது. எழுத்தாளனுக்கே அவன் எழுதுபவைகள் எல்லாம் புரிகிறது என்று நீங்கள் கண்டீர்களா? புரியாமல்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் இப்போது என்ன கெட்டுப் போய்விட்டது."

"மொழியின் கவித்துவம் மற்றும் நுட்பம் காரணமாக நீங்கள் மௌனியுடன் ஒப்பிடப்பட்டுள்ளீர்கள். இதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?"

"மௌனி, இங்குப் பேசப்படும் அளவுக்கு முக்கியமான எழுத்தாளரில்லை என்ற எண்ணம்தான் எனக்கு இருக்கிறது. க.நா.சு. போன்றவர்கள் தொடர்ந்து பேசி, அதன் மூலம் அவர் முக்கியமானவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். மேலும், அவர் மிகவும் குறைவாகத்தானே எழுதியிருக்கிறார். மௌனி, ஒரு முறை என் வீட்டுக்கு வந்திருந்தார். இங்கே, இப்படி எனக்கு எதிரேதான் உட்கார்ந்திருந்தார். அவருடன் இன்னொருவரும் வந்திருந்தார். அவர், ''நீங்கள் ராமாமிருதத்தைப் படித்திருக்கிறீர்களா?'' என்று மௌனியைக் கேட்டார். ''நான் படித்ததும் இல்லை. படிக்கப் போவதும் இல்லை'' என்று மூஞ்சியில் அடிக்கிற மாதிரி பதில் சொன்னார் மௌனி. அவர் படிக்காவிட்டால் போகிறார். அது பற்றி எனக்கு வருத்தம் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால், அந்த மனிதன் இப்படி பேசவேண்டிய அவசியம் என்ன? எனக்குத் தெரியவில்லை.

"மௌனி தண்ணீர் போடுவார் என்று நினைக்கிறேன். நான் சொல்கிற இந்தத் தண்ணீர் வேற. அழிந்து போகிறவர்கள் எல்லோரும் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். அக்கிரமங்களை செய்கிறவர்கள் செய்யட்டும். நான் செய்யவில்லை என்பதாலேயே மற்றவர்களும் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பது சரியில்லை. ஆனால், ஒரு 'கேரக்டர்' இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தீவிரமான எண்ணங்கள், ஏதாவது ஒன்றின் மீது இருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் நிச்சயம் பெரிய நஷ்டம்தான்."

"மொழி பற்றிப் பேசியதன் தொடர்ச்சியாக கேட்கிறேன், உங்கள் மொழியும் கதைகளும் வாசிக்கும் போது ஒரு 'மிஸ்டீரியசான' அனுபவத்தை அல்லது உணர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. உங்கள் வாழ்வில் அதுபோன்ற அனுபவத்தை எதிர் கொண்டிருக்கிறீர்களா?''

"பலமுறை அதுபோல் நேர்ந்திருக்கிறது. இரண்டை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன். நாங்கள் ஞானமூர்த்தி நகரில் இருந்தபோது, என் வீட்டில் இடிந்த பகுதிகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தோம். மதியம் வேலைக்காரர்கள் எல்லோரும் சாப்பிட போய்விட்டார்கள். நான் படுத்திருந்தேன். திடீரென்று எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் தோன்றியது. நான் எழுந்து நின்றேன். நான் தனியாக எழுந்து கொள்கிறேன். ஆனால், என் உடம்பு அங்கேயே படுத்துக் கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்துக்கொண்டே நான் நின்று கொண்டிருக்கிறேன். ரொம்ப 'பியூட்டிபுல்'ப்பா. இப்படி ஒரு சுகமான பாவமா. இந்த உடம்பு எவ்வளவு பெரிய சுமையாக இருக்கிறது தெரியுமா? அப்படியே மிதந்து போகிற சமயத்தில், இப்படித்தான் இருக்குமோ சாவு என்று, உடம்பைப் பார்த்துக்கொண்டு தனியாக நிற்கும் போது தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஐய்யோ! இது ரொம்ப நன்றாக இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால், அதற்குள் சாப்பிட சென்றவர்கள் திரும்பி வரும் சப்தம் கேட்டது. உடனே அது உள்ளே புகுந்துவிட்டது. உடம்பை விட்டு வெளியே வந்து, உடம்பை பார்த்துக் கொண்டு நின்ற அது, என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அது மூச்சா, பிராணனா, ஞாபகச்சக்தியா, நானா அல்லது எல்லாவற்றோடும் சேர்ந்த பரம்பொருளா? ஒன்றும் தெரியவில்லை. இதனை ஒரு பெரியவரிடம் சொன்னபோது, உடனே அவர் என் காலைத் தொட்டுக் கும்பிட்டார். இதெல்லாம் பெரிய சித்தி. அது எல்லோருக்கும் கிடைக்காது. ஆசைப்பட்டால் உடனே கிடைத்துவிடுமா? ஆனால், என் ஞாபகத்தில் இருக்கிறது அது. அதனை என்னால் அழிக்கவே முடியாது."

"வேறு எதாவது. . ."

"அதுவும் ஞானமூர்த்தி நகரில் இருக்கும் போதுதான் நிகழ்ந்தது. ஒரு நாள் வாசகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவர் வந்தார். ''நம்பர் பதிமூன்றில் கண்டக்டராக இருக்கிறேன். எனக்கு ஒரே ஒரு ஆசை. எங்க அம்மாவுக்கு கண்ணில் 'கேட்ராக்ட்' ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறோம். அதுபோல் உங்களுக்கும் செய்யவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது'' என்று சொன்னார். ''சரி, அழைத்துக்கொண்டு போங்கள்'' என்று சொன்னேன்.

"என்கூட என் குழந்தைகள், பொம்மனாட்டி யாரும் வரவில்லை. அவர் அழைத்துக்கொண்டு போனார். பரிசோதனைகள் முடிந்தவுடனே, டாக்டர் சொன்னார்: ''இன்னும் ஒரு வாரத்தில் நீங்கள் ஆபரேசன் செய்து கொள்ளவில்லை என்றால், உங்கள் இடது கண் பஸ்டாகிவிடும். 'ப்ளாக் கேட்ராக்ட்' வந்திருக்கிறது உங்களுக்கு. இடது கண் பஸ்டாகிவிட்டது என்றால் வலது கண்ணும் பஸ்டாகிவிடும். உடனே நீங்கள் ஆபரேஷன் செய்து கொள்ளவேண்டும்.'' பண்ணிவிட்டார். உறவுக்காரர்கள் எல்லோரும் விஷயம் தெரிந்து வருவதற்குள், ஆபரேஷன் முடிந்துவிட்டது. வீட்டுக்கு திரும்பி வந்த பிறகும், தொடர்ந்து ஒரு வாரம் அந்த கண்டக்டர் வந்தார். ஆரஞ்சு, ஆப்பிள் என்று எதாவது பழங்கள் வாங்கிக்கொண்டு வருவார். அப்புறம் காணாமல் போனவர்தான், இன்றைய தேதி வரைக்கும் வரவில்லை! அதற்கு முன்னாடியும் எப்போதும் அவர் வந்ததில்லை. கண் கொடுப்பதற்காகவே வந்தவர் போல், வந்து சென்றுவிட்டார்!

"அவர் எதற்காக வந்தார், வந்ததும் ஏன் அவருக்கு இதைக் கேட்கவேண்டும் என்று தோன்றியது, நான் எப்படி உடனே சம்மதித்தேன், டாக்டர் வேறு உடனே ஆபரேசன் செய்யனும் என்றார். பிறகும் ஒரு வாரம் தொடர்ந்து வந்தவர், அப்புறம் ஏன் வரவேயில்லை? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலே தெரியாமல், இப்போதும் நான் இந்தக் கண்களால்தான், தொடர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் நன்றி செலுத்த வேண்டியது சமயங்களுக்கா, நபர்களுக்கா? எனக்குத் தெரியவில்லை."

"நீங்கள் ரிஷிகேஸ் சென்றபோது, அங்கே உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். இப்போது எங்களுக்காக மீண்டும் ஒருமுறை அதனை சொல்லமுடியுமா?"

"அதனை எல்லோரும் ஏற்கெனவே கேட்டிருப்பாங்கதானே!"

"இப்போது வயதும் அனுபவமும் ஏறிய நிலையில், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, அந்த அனுவத்தை எப்படி திரும்பிப் பார்க்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள்."

"ஐய்யோ! அதுதான் விஷயம். எவ்வளவு காலம் ஆனால் என்ன, அலுக்கவே அலுக்காது. அப்போது அலுவலக வேலையாக டில்லிக்கு போயிருந்தேன். அங்கு சென்றதும் ரிஷிகேஸ் போகணும் என்று ஆசை ஏற்பட்டுவிட்டது. போனேன். பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கிறோம். கங்கை ஓடிக் கொண்டிருக்கிறாள். அங்கே இறங்கினால் அந்த சிலிர்ப்பே நெருப்பாக இருக்கிறது. அங்கே குளித்தேன். நீலமாக இருக்கிறது. டில்லியில் பாலத்தின் மீது போய்க் கொண்டிருக்கும் போது கீழே பார்த்தேன். யமுனா ஓடிக் கொண்டிருக்கிறாள். அப்படியே சுழிக்கிறாள். பயங்கரமாக இருக்கிறது. ரொம்பக் கோபக்காரி போல. இவளே கோபக்காரி என்றால் கங்கை எவ்வளவு பெரிய கோபக்காரியாக இருப்பாள். ஆனால், யமுனாதான் பெரிய கோபக்காரி என்று சொல்கிறார்கள். போகட்டும். இமயமலைத் தொடர், ரிஷிகேஸிலிருந்து ஆரம்பமாகி விடுகிறது. இமயமலைத் தொடர் இங்கே ஆரம்பமாகிறது என்று தெரிந்து கொள்ளும்போதே, ரொம்ப சந்தோஷம் ஏற்படுகிறது. மேலே பார்த்தால் ஒருவிதமான மந்தகாரமான சூழ்நிலை. மேகங்கள் வெள்ளையாகக் குட்டி குட்டியாகப் போகிறது. துள்ளித் துள்ளி போகிறது. ஆட்டுக்குட்டி மாதிரி இருக்கிறது; துள்ளுகிறது. மனதில் நாம் என்னத்தையெல்லாம் நினைக்கிறோமோ, அப்பொழுதே அதனை நாம் ஆக்கவும் செய்கிறோம். அது மாதிரியான சமயங்கள், எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கிறது. நம்மால் செய்ய முடியாதது என்ன என்ற ஆச்சர்யமும் நம்பிக்கையும் அந்த சமயத்தில் ஏற்படுகிறது. நம் உள்ளே இருக்கும் இந்த அற்புத சக்திகள் எல்லாவற்றையும் நாம் வெளியேக் கொண்டுவர வேண்டும். மேகங்கள் நகர்ந்து கொண்டிருப்பதை, அப்படியே கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டே நின்றேன். திடீரென்று என்னை புகைமண்டலம் சூழ்ந்து கொண்டது. பனி என்று நினைக்கிறன். அப்போது அந்த நிலமை, என்னைப் பதப்படுத்துகிறதய்யா, பதப்படுத்துகிறது. வெறும் புகை. உடனே கற்பனை சிருஷ்டி செய்கிறது, ரிஷிகள் பயணம் செய்கிறார்கள். அவர்களை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் கேட்கிறேன். 'சச்ஜோதி, ஜோதி, ஜோதி, ஸ்வாகா' என்று காதில் கேட்கிறது. அந்தப் புகையானது, கோமக் குண்டலப் புகையாக மனதில் உருமாறுகிறது.
"இது எல்லாம் என்ன? நாம் நினைத்துக் கொள்வதுதான். மற்ற எல்லோருக்கும் தோன்றுகிறதா என்ன? இல்லையே. 'சென்சிட்டிவ்னஸ்' என்பது சிலரிடம்தான் அதிகமாக இருக்கிறது. அது எழுத்தாளர்களிடம் நிறையவே இருக்கிறது; இருக்கவேண்டும். என்னுடைய எழுத்துக்கு ஏற்றார்ப் போன்ற 'சென்சிட்டிவிட்டி' எனக்கு இருக்கிறது. அதற்கு ஏற்றார் போன்ற அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ரிஷிகேஸில் உடனே நான் நினைத்துக் கொண்டேன். எனக்கு அம்பாளுடைய நினைப்புதான் வருகிறது. அம்பாள் என்றால் யார்? அம்மாதான் அம்பாள். ரிஷிகேஸில் ஒரு பல்லக்கு மேகத்துக்கு இடையே நகர்கிறது. திரைபோட்ட பல்லக்கு திரையில் இருந்து ஒரு கண் எட்டிப் பார்க்கிறது. ஒரே ஒரு கண் மட்டும்தான். ராஜகுமாரி என்னை எட்டிப் பார்க்கிறாள். அந்த அளவுக்கு மனது போகுதய்யா... எனக்கு உடம்பெல்லாம் அலரிப் போய்விட்டது. பூமியில் என்னுடைய கால் இல்லை. நானே என்னை இழந்து நிற்கிறேன். எனக்கு நான் வேண்டும். ஆனால் அப்போது அங்கே இல்லை நான். மனைவி, குழந்தைகள் எல்லோரையும் மெட்ராஸில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். என்றால் எப்படி, என்னை நான் இழந்துவிடமுடியும். பயம் வந்துவிட்டது. பக்கத்திலிருந்தவர்கள் எல்லோரும் கத்துகிறார்கள். சோடா கொடுக்கிறார்கள். பதறிப் போய்விட்டார்கள். அவர்களுடைய பாஷையில் என்னமோ பேசுகிறார்கள். எனக்கு என்ன புரிகிறது? அவனை நான் பார்த்துவிட்டேன என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? சில தருணங்களில், அவளே ஏமாந்து விடுகிறாள். மாட்டிக்கொண்டு விடுகிறாள். நான் அவளிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது, அவள் என்னிடம் மாட்டிக்கொண்டு விட்டாள். அவளை என்னால் அவ்வளவு சுலபமாக விடுவித்துவிட முடியாது. அது இந்த லோகம் சம்பந்தப்பட்டது இல்லை. அதே நேரத்தில் இல்லையென்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது.''

''ஒரு கதை உங்களுக்குள் உருவாகும் புள்ளியிலிருந்து, ஒரு முழுமையான வடிவத்தை அடைவது வரைக்கும் உள்ள செயல் பற்றிச் சொல்லமுடியுமா?''

''கதை எங்கேத் தோன்றுகிறது, கரு எங்கே தோன்றுகிறது? எனக்குத் தெரியவில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமலும் இருக்கும். 'அஞ்சலி' என்று ஒரு கதை, ஐந்து பூதங்களையும் உருவகப்படுத்தி எழுதினேன். நான்கு கதைகள் வந்துவிட்டது. காயத்தைப் பற்றி எழுத வரவில்லை. அதற்காக எட்டு வருடம் காத்துக் கொண்டிருந்தேன். அது வரும் என்று எனக்குத் தெரியும். எனவே காத்துக் கொண்டிருப்பது பற்றி, நான் கவலைப்படுவதில்லை. ஒரு நாள் குமுட்டியில் கனல் தகதகவென்றிருந்தது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். 'ஏக்கா', என்று ஒரு வார்த்தை அப்போது மனதில் ஓடியது. ஏகாம்பரி, ஏகாம்பரம் என்று உருக்கொண்டு, கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இப்படித்தான் கதை உருவாகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். மனது தளர்ந்துபோய், எங்கே நெகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அங்கே கவித்துவம் ஏற்படுகிறது. 'சிந்காநதி'யில் ஒரு அத்தியாயம், 'my dark Gazzle of the night' என்று ஆரம்பிக்கிறது. ஏன் இப்படி ஆரம்பித்தீர்கள் என்று என்னைக் கேட்டால், எனக்குத் தெரியாது. என்னமோ தோன்றியது, அப்படி தொடங்குகிறேன். தொடங்கிய பிறகு, அதன் பாட்டுக்கு, அது போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு கதையில் ஒருவன், எதையோ, இப்படி கையில் தூக்கிக்கொண்டு போகிறான். உடனே, 'பறவையின் ஒடிந்த சிறகு போல்' என்று எழுதினேன். ஏன் இப்படி வந்தது என்று என்னைக் கேட்டால், எனக்கு எப்படித் தெரியும்! அது வந்துவிட்டது, அவ்வளவுதான். 'symbathy.'

"ஒருமுறை நாசூக்காக பேசுவது பற்றி எழுதவேண்டும். ஆனால், எனக்கு உவமானம் கிடைக்கவே இல்லை. தூங்கிவிட்டேன். அது பற்றி நான் கவலைப்படவில்லை. எது பற்றியுமே நான் கவலைப்படுவது இல்லை. இதனை நான் திரும்பத் திரும்ப பலமுறை சொல்லிக் கொள்கிறேன். தூக்கத்தில், 'மாம்பூவை காம்பு ஆய்வது போல்' என்று ஒரு கரித்துண்டு சுவற்றில் எழுதிக் கொண்டே செல்கிறது. இதனை கதையில் அப்படியே சேர்த்துவிட்டேன். இதற்கு நான் பொறுப்பாக முடியுமா? எழுத்தாளன், அவன் எழுதும் எல்லாவற்றுக்கும் பொறுப்பாக முடியாது. அவன் வழியாக வெளிப்படுவதுக்காக, சில சமயங்களில், சில தாதுக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. சமயம் வந்தவுடன் அது வெளிப்படுகிறது. இவன் மூலமாக நான் வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்; இந்த எண்ணம் நமக்கு இருக்கவேண்டும். எப்போது, எதில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்படுகிறதோ, அந்த ஈடுபாடுதான் உங்களுடைய அனுபவம். உங்களுடைய முஸ்தி, விடுதலை, குறிக்கோள், அதிர்ஷ்டம், பாக்கியம் எல்லாம். 'கழுகு' எழுத பத்து வருஷம் ஆனது; 'அபிதா', இரண்டு வருஷம்; 'புத்ர' இரண்டு வருஷம்; 'அஞ்சலி' எட்டு வருஷம்...

"நான் நேரத்தைப் பார்ப்பது கிடையாது. எழுதுவதற்காகத் தனியாக இடம் தேடுவது கிடையாது. நீங்கள் பேசிக் கொண்டிருந்தாலும், நான் எழுதிக் கொண்டே இருப்பேன். டீ தேவையில்லை, டேபிள் தேவையில்லை, பேப்பரும் பேனாவும் மையும் மட்டும் போதும். எந்த நிமிஷம் ஆரம்பிக்க வேண்டுமோ, அந்த நிமிஷம் ஆரம்பிக்க முடியும். அதனாலேயே என்னைக் கோவில் மாடு என்றுகூடச் சொல்வார்கள்.''

''மற்ற தமிழ் எழுத்தாளர்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் மீது உங்களுக்கு இருக்கும் ஈர்ப்பு, வித்தியாசப்பட்டு நிற்கிறது. 'அபிதா' நாவல் சிறந்த உதாரணம். 'அபிதா'வுக்கு பின்னாடி தேங்கி நிற்கும், காதலித்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்.''

''எனக்கு காதலுடன் சம்பந்தப்பட்டும் சம்பந்தப்படாமலும் இருக்கிறது. சிவனுடைய நெற்றிக் கண் சூடு தகிக்கும்; அது போல்தான் காதல். அதாவது அந்த அனுபவம். அதனை நான், அனு+ பவம் என்று இரண்டாக பிரிக்கிறேன். அனு என்றால், ரகசியம் என்று பொருள். பவம் என்றால், ரகசியமான அனுபவம் அல்லது உணர்ச்சி. அதனால்தான் காதலை ஒருவராலும் முழுமையாக சொல்லிவிட முடியாமல் இருக்கிறது. காதல் என்பது ஒருவிதமான உணர்ச்சி. அதனை மனிதர்களுடன் சம்பந்தப்படுத்தக் கூடாது. காதல் என்பது நேர்ந்து கொண்டே இருக்கிறது. அபிதா நிஜமானவள்தான். இப்போது இறந்து போய்விட்டாள். காலமாகும் போது வயது என்பது. ''நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என்னைக் காதலிக்கிறாயா'' என்று நாங்கள் பேசிக் கொண்டது கிடையாது. அவள் இன்னொருத்தன் பொண்டாட்டி. எட்டு வயதில் அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் அறிவோம். நான் அவளைப் பற்றி எழுதுவதாக இருக்கிறேன். அபிதாவைப் பற்றி இன்னொரு அபிதா. காதலிக்கும் மனுஷாளையே, எப்போதும் தொடர்ந்து காதலித்துக் கொண்டும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. அது ஒரு தருணம், மகத்தான ஒரு விபத்து. 'A tremendous accident'

"நாம் கல்யாணம செய்து கொள்ளப்போகும் பொம்மனாட்டியைப் பார்த்து, ''நான் உன்னைக் காதலிக்கிறேன்'' என்று சொல்ல முடியுமா? சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை. என்ன ஆகுமென்றால் ''அட, என்னடா இது இப்படிக் கல்யாணம் செய்து மாட்டிக்கொண்டு விட்டோமே'' என்று தோன்றும். ஒருநாள், நான் பார்த்தேன்... அப்போது நான் மிகவும் சின்னப் பையன். அவள்... அவனுடைய பொண்டாட்டியோ, வைப்பாட்டியோ எனக்குத் தெரியாது. அவளை, அவன் எட்டி உதைக்கிறான். அவள் அவனுடைய காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். ''ஏண்டா இவங்க இப்படி இருக்காங்க'' என்று நான் எண்ணினேன். நம்முடைய சம்பிரதாயத்தில் இது போன்ற, ஒரு ஏற்பாட்டை ஏற்படுத்தி வைத்திருக்காங்க. எதை விட்டாலும், உன்னை நான் விடமாட்டேன் என்று. இந்த காலத்தில் இதெல்லாம் கிடையாது. இந்த காலத்து மனுஷாளைப் பற்றி, நான் பேசவும் இல்லை. பொம்மனாட்டிக்குப் புருஷன் ஏன் முக்கியம் என்றால், பிறந்த வீட்டிலிருந்து கழட்டி விட்டிடுகிறாங்க. நாத்து நடுகிறது மாதிரிதான். ஒரு இடத்தில் இருந்து, இன்னொரு இடத்தில் பிடுங்கி நடுவது போல். இப்படி ஒருவர் வாழ்க்கையில் இன்னொருவர் வந்து புகுந்து கொள்வது போன்ற நிலமை ஏற்படக்கூடாது. இவனுக்குத் தனியாக ஒரு வாழ்க்கை, அவளுக்குத் தனியாக ஒரு வாழ்க்கை என்று இருக்கவேண்டும்.''

''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்'' என்று எங்கேயோ நீங்கள் குறிப்பிட்டதாக ஞாபகம். இப்போதும் அப்படித்தான் இருக்கிறீர்களா?''

''ஆமாம். இப்போதும் சொல்கிறேன், நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்தான். அழகு என்பதை தனியாக வரையறுத்துவிட முடியாது. அந்தந்த சமயத்தில மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் அழகு. எனக்கு பதினெட்டு, பத்தொன்பது வயது இருக்கிற சமயத்தில், அப்போது காஞ்சிபுரம் பக்கத்து கிராமத்தில் ஒரு நண்பி இருந்தாள். அவளைப் பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. திடிரென்று ஒரு நாள், அவளைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆவல் ஏற்பட்டுவிட்டது. நான் கிளம்பி ஓடுகிறேன். போய்ச் சேரும்போது இருட்டிவிட்டது. எப்படியோ, விசாரித்து, விசாரித்து அவள் வீட்டைக் கண்டு பிடித்துவிட்டேன். கதவைத் திறந்து உள்ளேப் போனேன். அவள் படுத்துக் கொண்டிருந்தாள். உடம்பு வயதேறி தளர்ந்துவிட்டது. என்னைப் பார்த்த மாத்திரத்தில், ''அட ராமாமிருதம் வந்தியாப்பா, எப்ப வந்த'' என்றாள். நான் அதிர்ந்து போய்விட்டேன். இது ஞாபக சக்தியில் சேர்த்தியா, அல்லது எப்போதுமே நான் அவளுடைய எண்ணத்தில இருந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தமா; அல்லது அவர்களுக்கே உரித்தான ரத்தத்தோடு ரத்தமாக கலந்த ஒரு சம்பந்தமா? எனக்குத் தெரியவில்லை. அவள் எப்படி என்னை அடையாளம் கண்டு கொண்டுவிட்டாள்? ஒரு நிமிடத்தில், ''நான்தான் ராமாமிருதம்'' என்று சொல்லக்கூட வழியில்லாமல் செய்துவிட்டாளே! இந்தத் தருணம் இருக்கிறதே, அதுதான் எனக்கு முக்கியம். இதைத்தான் நான் சௌந்தர்ய உபாஷகன் என்று சொல்கிறேன்.

"சமயம் என்பது ஒரு மூகூர்த்த வேளை. எவ்வளவோ விதமான வேதியியல் பொருட்கள் அதில் ஒன்று சேர்கிறது. முன்ஜென்மம், ஞாபகம், ஞாபகமே இல்லாத நிலை, திடீரென்று ஏற்படக்கூடிய இராசாயணம். அந்த சமயத்தில் நாம் நம்முடைய வசத்திலேயே இல்லை. எனக்குத் தோன்றுகிறது, சாவு நிகழும் சமயத்தில் கிட்டத்தட்ட இதுபோல்தான் இருக்கும் என்று.''

''இந்த என்பத்தாறு வயதில், உங்களுக்கு தெரிந்தவர்களில், உயிரோடு இருப்பவர்களின் எண்ணிக்கையைவிட, இறந்தவர்கள் எண்ணிக்கைதான் நிச்சயம் அதிகமாக இருக்கும். நிறைய பேரின் - நண்பர்களின், உறவினர்களின் - மரணங்களைப் பார்த்திருப்பீர்கள். இப்போது மரணம் குறித்த உங்கள் பார்வை என்னவாக இருக்கிறது?''

''என்னுடைய முப்பத்தைந்து வயதிலிருந்தே மரணம் என் அண்டை விட்டுக்காரனாக இருக்கிறான். தொடர்ந்து தெரிந்தவங்களில் யாராவது ஒருத்தர் போய்கொண்டே இருக்காங்க. என் தம்பி போய்விட்டான், தங்கச்சி போய்விட்டாள், இன்னொரு தங்கை விதவையாகி விட்டாள், நண்பர்கள் போய்விட்டார்கள். போக வேண்டியவர்கள் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். போனவர்கள் திரும்புவதும் கிடையாது. ஆனால், உறவினர்களைவிட நண்பர்கள் போகும்போது பார்த்துக் கொண்டிருப்பதுதான் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. என் பங்குக்கு வாழ்க்கையின் கோப்பையில் என்ன என்ன இருந்ததோ, அது எல்லாவற்றையும் நான் பருகியாகிவிட்டது. இப்போது நான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒன்றே ஒன்றைத்தான். ஒரு நாடகமேடை போன்ற இந்த அமைப்பில், எந்தப் பக்கமாக நான் வெளியேறப் போகிறேன் என்பதுதான் அது. அல்லது நடுவிலேயே போகப் போகிறேனா? எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. பயமும் இருக்கிறது. அதே சமயத்தில் பயம் இல்லையென்றும் சொல்லவேண்டும். பயந்தால் அது என்னை விட்டுவிடப் போகிறதா என்று ஒரு தெம்பும் இருக்கிறது. என்னுடைய வேலை என்ன? எதற்கு இங்கே வந்தேன்? எழுத்து என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. காலம் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும். அது யாருக்காகவும் காத்திருக்காது. நான் இப்போது பேசிக்கொண்டே இருக்கிறேன். எந்த சமயத்தில் முடிவு வரும் என்று தெரியவில்லை. அதனால் அந்த அவசரத்திலேயே நான் பேசிக் கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்த வரைக்கும் என்ன சொல்ல வேண்டுமோ, அதைச் சொல்லிவிட வேண்டும் என்னும் அவசரத்தில் பேசுகிறேன். ஆனால் எதுவும் என்னுடையதில்லை. நீ எதனையும் எடுத்துக் கொண்டு போகமுடியாது. எடுத்துக்கொண்டு எங்கேதான் போவே! கையில் காசு இல்லையே! காசு இருந்தாலும்தான், எங்கேப் போய என்ன பண்ணமுடியும்?

"ஒருமுறை என் தம்பி இங்கே வந்திருந்தான். என்னிடம் அவன் கேட்டான்: ''ஏண்டா நாம் வாழ்ந்து விட்டோமே, இத்தனை நாளும். நாம் என்னத்தை சாதித்திருக்கிறோம். நீயாவது ஒரு எழுத்தாளன். நான் என்ன பண்ணியிருக்கிறேன். எனக்கு ஒன்றும் தெரியலையே''. உடனே எனக்கு ஒரு திகில் ஏற்படத்தான் செய்தது. இப்போது நான் என்னதான் எழுதியிருந்தாலும், மக்களுக்கு மறதி ஜாஸ்தி. தி.ஜானகிராமனை இப்போது யார் கொண்டாடுகிறார்கள். ஏன் த.நா.குமாரசுவாமியையே இப்போது யாருக்கு நினைவிருக்கிறது. கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி பெயர்களை யார் சொல்கிறார்கள்? பெயர்களை குறிப்பிட்டு சொல்வது அவ்வளவு முறையல்ல. அதனால் நான் இதனை அத்துடன் விட்டுவிடுகிறேன். இப்படியாக என்னதான் செய்து, என்ன பிரயோஜனம் என்று தோன்றுகிறது.''

''பக்கத்து மாநில எழுத்தாளர்களுடன் ஒப்பிடும்போது, தமிழ் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம், விருதுகள் எல்லாம் குறைவுதான். பலருக்கும் அது ஒரு மனக்குறையாகவே இருக்கிறது. உங்களுக்கு எப்படி இருக்கிறது?''

''விருதுகள் என்று கணக்கிட்டால் பத்து, பன்னிரெண்டு வாங்கியிருக்கிறேன். சாகித்ய அகாதமி, கலைமாமணி... இப்படியே போய் கொண்டே இருக்கும். சங்கராச்சாரியார், பெரியவர், ஒரு விருது கொடுத்திருக்கிறார். நான் கொஞ்சம் அதனை பெரியதாகத்தான் நினைக்கிறேன். அவருக்கும் இலக்கியத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய எழுத்தில் ஆன்மிகத்தின் சாயல் இருப்பதால், அவர் கொடுத்திருக்கிறார். அப்பறம் ஞானபீட விருதுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப் பட்டிருக்கிறேன். நான் பிராமணன், அந்தத் தொந்தரவு வேறு இருக்கிறது. எனவே இங்கே தி.மு.க. ஆட்சியில், எனக்கு எந்த விருதும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஜெயலலிதா இருந்ததால் கலைமாமணி கிடைத்தது. அது கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன? நான் அதையெல்லாம் போட்டுக் கொள்வதே கிடையாது. டாக்டர் பட்டம் வேறு, யாரோ ஒருவர் கொடுத்திருக்கிறார். இதற்கும் மேல் மற்றவர்களால் எனக்கு என்னதான் தந்துவிட முடியும்.''

''உங்கள் எழுத்துக்களைப் படித்துவிட்டு வாசகர்களிடம் இருந்து வந்த எதிர்வினைகள் பற்றி...''

''ஞானமூர்த்தி நகரில் இருக்கும் போது ஒருவர் வந்தார். என் கையை பிடித்தார். கண்ணில் ஒத்திக் கொண்டார். அழுகிறார், அழுகிறார், அரைமணி நேரமாகத் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார். அப்புறம் நான் வருகிறேன் என்றுவிட்டு போய்விட்டார். எதுக்கு வந்தார்? என்ன சொல்ல வந்தார்? என்ன சொன்னார்? அழுகை மூலமாக, அவர் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிட்டாரா? தெரியவில்லை. இன்னொருவர் வந்தார், இலங்கையிலிருந்து. ''உங்களைப் பார்க்கவேண்டும் என்று முப்பது வருடமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். உங்களைப் பார்க்காமலேயே செத்துப்போய் விடுவேனோ என்று நினைத்தேன். அகதியாக இந்த ஊருக்கு வந்தேன். அகதியாக வந்தாலும் உங்களை பார்த்துவிட்டேன்'' அப்படின்னார். இன்னொரு ரசிகர், ''நீங்க ஏன் டாய்லெட்டுக்கு தண்ணீர் ஊத்துகிறேள். நான் வந்து ஊத்துகிறேனே'' என்றார். இது என்ன அநியாயமாக இருக்கிறது.''

''கடைசியா...''

''எழுத்துக்கோசரம் நான் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. என் இஷ்டப்படிதான் எழுதி வந்திருக்கிறேன். அப்படி எனக்கு எழுதவும் முடிந்திருக்கிறது. இனிமே காசு வந்து, எனக்கு என்ன ஆகவேண்டும்? எனக்கு எல்லாமே கிடைத்துவிட்டது. சோறுதான் இப்போதைக்கு வேண்டும். அதுவும் என்னால் அதிகம் சாப்பிடக்கூட முடியாது. வயிறு குறுகிப் போய்விட்டது. கை கால் ஓய்ந்துவிட்டது. உங்களைப் போல், யாராவது ஒருவர் வந்து பேட்டி கேட்கிறார்கள். கேட்டால் உடனே கட்டாயம பேசியாக வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? அவசியமே கிடையாது. ஆனால் என்னமோ, மரியாதைகளை மட்டும் விடுவதற்கு இன்னும் நான் தயாராக இல்லை. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். அப்பறம் நீங்களே, ''அவருக்கு வயதாகிவிட்டது. அவரைப் போய் தொந்தரவு செய்யவேண்டாம்'' என்று விட்டுவிடுவீர்கள். இல்லையென்றால் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார் என்று நினைப்பீர்கள். ஆனால் எப்போது, நான் சொல்வது உங்களுக்கு அலுக்காமல் போகிறதோ, அப்போது வரைக்கும் நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டேதான் இருப்பேன்."
சந்திப்பு: தளவாய் சுந்தரம்
படங்கள்: புதூர் சரவணன்
('குமுதம் ஜங்ஷன்' பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதன் சுருக்கமான வடிவம் 'ஜங்ஷன்' இதழில் வெளியானது. )

8 comments:

Unknown said...

dhalavai,

i read your a deep discussion with la.sa.ra. its a fine interview by u. my wishes to your contribution to the tamil literature.

sundharabuddhan,
the sunday indian.

PKS said...

Dhalavai, Thanks for republishing the interview. Good one. - PK Sivakumar

நிலாரசிகன் said...

நல்லதொரு பேட்டி நன்றி தளவாய்.

manjoorraja said...

மீள் பதிவு செய்ததற்கு நன்றி நண்பரே. சிறந்ததொரு பேட்டி.

Murali said...

I lived in gnanamurthy nager for 40years. la sa raa lived two streets away from my house.
but never get chance to talk with him. Thanks for republishing the interview.

-Murali USA

ராஜகோபால் பாலகிருஷ்ணன் said...

Nanri..
Vaarthaigal thedi kidaiththa vaarththai ithu. aanaal unmaiyaana ullarththamaana nanri. intha ner kaanalai engalukku vazhangiyamaikku. la sa ra has left a legacy to us which we have to be really proud of.......i really wish to read his writtings afted reading this interview. again thanks a lot for publiching this in net.

கோகுலன் said...

மிக நல்ல பதிவு. நேர்காணல். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி நண்பரே.

mathileo said...

அன்புடன்,
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமயான பழைய நண்பரை சந்தித்த்து போன்ற உணர்வு!
லா ச ரா வினுடய வார்த்தைகளில்
மற்க்கமுடியாத ஒன்று ‘கன்யாகுமரி
அடி கடங்காரி’
உங்களின் பதிவு என்னை பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துசென்றுவிட்டது
ந்ன்றி
மதி