25 December 2015

சென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்

எந்த ஏரி நீர் எந்த ஆற்றில் ஓடுகிறது?

(புதிய தலைமுறை, 24 டிசம்பர் 2015 இதழில் வெளியானது)


கன மழை களேபரங்கள் சென்னைவாசிகளுக்கு நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள் பற்றிய பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக ஆறுகள் பக்கம் வசிப்பவர்கள், தன் வீட்டுக்குள் பெருக்கெடுத்த மழை நீர் எங்கெல்லாம் இருந்து வந்தது? சென்னைக்குள் மட்டுமல்லாமல் சென்னைக்கு வெளியேயும் எங்கெல்லாம் மழை பெய்யும்போது தாங்கள் கவனமாக இருக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடுகிறார்கள். சென்னைக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் சிறிய, பெரிய ஏரிகள் எத்தனை? எந்தந்த ஏரிகளின் உபரி நீர் எந்த ஆறுகள் வழியாக செல்கிறது? அந்த ஆறுகள் சென்னைக்குள் எந்தந்தப் பகுதிகள் வழியாகச் செல்கிறது? ஒரு பருந்துப் பார்வை.

சென்னையைச் சூழ்ந்துள்ள ஏரிகள்


செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி, புழல், மதுராந்தகம் போன்ற பெரிய ஏரிகள் உள்பட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் 3 மாவட்டங்களிலும் சிறியதும் பெரியதுமாக கிட்டத்தட்ட 4000 ஏரிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 1995, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1823 ஏரிகள் தவிர மற்றவை சென்னைக்குள்ளேயே உள்ளன.

இந்த மூன்று மாவட்டங்களில் பெய்யும் மழை மட்டுமல்லாமல் வேலூர் மாவட்டம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தின் சில பகுதிகளில் பெய்யும் மழை நீரும் பாலாறு உள்பட பல்வேறு ஆறுகள், ஓடைகள் வழியாக இந்த ஏரிகளுக்கு வருகிறது. ஆனால், இந்த எல்லா ஏரிகளின் உபரி நீரும் சென்னை நோக்கி வருவதில்லை. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் வட்ட ஏரிகளின் உபரி நீர், தென்னேரியில் கலந்து, அங்கிருந்து செங்கல்பட்டு நகரையொட்டி செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாய் வழியாகச் சென்று, பழவேலி கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது. சங்கிலி தொடராக இணைக்கப்பட்டுள்ள உத்திரமேரூர், கரிக்கிலி, வெள்ளப்புத்தூர், கட்டியாம்பந்தல், வேடந்தாங்கல் ஏரிகளின் நீர், கிளியாறு மூலம் மதுராந்தகம் ஏரியை அடைகிறது. மதுராந்தகம் ஏரி உபரி நீர் மீண்டும் கிளியாற்றுக்கு சென்று ஈசூர் கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது. பாலாற்றில் கலப்பவை அப்படியே கடலுக்குச் செல்கிறது. இதுபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 1000 ஏரிகளின் உபரி நீர் கொசஸ்தலை, ஆரணி ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது. மீதமுள்ள சுமார் 2000 ஏரிகளின் உபரி நீர் சென்னைக்குள் நுழைந்தும் சென்னையை ஒட்டி உரசியும் சென்று கடலுடன் கலக்கிறது.

அடக்கமான அடையாறு


அடையாறு பாதை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாகாணியம் மலையம்பட்டு ஏரியில் உற்பத்தியாகும் அடையாறு காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் 42.5 கிமீ தூரம் பயணித்து பட்டினப்பாக்கம் அருகிலும் முட்டுக்காட்டிலும் கடலில் கலக்கிறது. தமிழகத்தின் மற்ற ஆறுகளைவிட வித்தியாசமான ஆறு இது. மேட்டிலிருந்து சரிவை நோக்கி பாயும் ஆறுகளின் ஓட்டத்துக்கு மாறாக பெரும்பாலான பகுதிகளில் ஒரே தளமாக உள்ளது அடையாறு. இதன் காரணமாக இந்த ஆற்றில் ஓடும் நீர் மற்ற ஆறுகள் போல் இல்லாமல் நின்று நிதானித்து மெதுவாகவே கடலுக்குச் சென்று சேரும்.

அடையாறுக்கு அதிகளவு தண்ணீர் கொடுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி கடல் மட்டத்திலிருந்து 62 அடி உயரத்தில் உள்ளது.  அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து, சென்னை வெளிவட்டச் சாலையை தொடும்போது, கடல் மட்டத்திலிருந்து 35 அடிக்கு இறங்குகிறது. தொடர்ந்து மேலும் சரிந்து மீனம்பாக்கம் அடையும்போது கடல் மட்டத்திலிருந்து 12 அடி இறங்கிவிடுகிறது.

இனிமேல்தான் பிரச்சினை. மீனம்பாக்கத்துக்குப் பிறகு கடலைச் சேர்வது வரைக்குமான அடையாறு பயணம் மிகச் சிரமமானது. மீனம்பாக்கத்துக்குப் பிறகு பல இடங்களில் 10 முதல் 20 அடிவரை உயர்வதும் பின்பு சரிவதுமாகவே இருக்கிறது அடையாற்றின் படுகைகள். இதனால், தங்கு தடையின்றி செல்ல வேண்டிய தண்ணீர், பல இடங்களில் தேங்கி அப்பகுதிகளை நிறைத்த பின்னரே அடுத்த இடத்திற்கு நகர்கிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 12 அடிக்குத் தாழ்ந்த அடையாறு, அங்கிருந்து வடக்கு நோக்கித் திரும்புகையில், அதிக தண்ணீர் வரும் போது, 35 அடி உயரம் வரை தேங்கிய பின்பே வழிய நேர்கிறது. விமான நிலையத்தைவிட்டு வெளியேறி நந்தம்பாக்கம் வரும்போது 15 அடி அளவுக்குத் தாழ்கிறது. ஆனால், அடுத்துவரும் ஈக்காட்டுத்தாங்கலுக்கு வடக்கேயுள்ள அடையாறு படுகை 30 அடி உயரமாக இருக்கிறது. எனவே, நந்தம்பாக்கம் பகுதியிலிருந்து காசி தியேட்டர் பாலம் வரும்போது, ஈக்காட்டுத்தாங்கலுக்கு வடக்கேயுள்ள அடையாறு படுகை உயரம் வரை நின்று தேங்குகிறது. காசி தியேட்டர் பாலம் தாண்டி திருவிக இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டை ஒட்டி 12 அடி, அன்னை வேளாங்கண்ணி பள்ளி மற்றும் கல்லூரியை ஒட்டி வரும்போது 28 அடி, சைதாப்பேட்டை பாலத்தை நெருங்கும் முன் 12 அடி, பாலத்தைக் கடந்து ‘டர்ன்பல்ஸ் சாலைபாலத்தை அடுத்து மீண்டும் 28 அடி என ஏறி இறங்கியே இருக்கிறது அடையாற்றுப் படுகை. இதனால் உயரமான இடங்களில் எல்லாம் தேங்கியே நகர வேண்டும். திடீர் நகரில் கடல்மட்டத்திற்கு சமமான நிலையை அடையும் அடையாறு, அங்கிருந்து கடல்வரை முழுக்க தேங்கியே வழிகிறது.

அடையாற்றின் சராசரி கொள்ளளவு 39,000 கன அடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 70,000 கனஅடி. அடையாற்றின் ஏற்ற இறக்கப் பயணம், ஆக்கிரமிப்பால் ஆற்றின் கொள்ளளவு குறைந்துள்ளது புரிந்துகொள்ளப்படாமல் அதிக தண்ணீர் திறந்துவிடப்பட்டதுதான் இந்த வருடம் சென்னையை அடையாறு மூழ்கடிக்க காரணம் என சில நீரியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

சென்னையில் அடையாறு வழித்தடம்


குன்றத்தூர்அனகாபுத்தூர்மதனந்தபுரம்பொழிச்சலூர்மீனம்பாக்கம் விமான நிலையம்ராணுவப்பகுதி, மணப்பாக்கம், ராமாவரம், கே.கே.நகர், ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம், அடையார்

அடையாறுக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வருகிறது?


ஸ்ரீபெரும்புதூர், செம்பரம்பாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், இரும்புலியூர், ஆதனூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், நாட்டரசன்பட்டு, ஒரத்தூர், கண்ணந்தாங்கல், மாம்பாக்கம், வெங்காடு, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், பூந்தண்டலம், பழந்தண்டலம், சீக்கராயபுரம், சோமங்கலம், அமரமேடு, குன்றத்தூர், கோவூர், மாங்காடு, பெரியபணிச்சேரி, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, காவனூர், பெருங்களத்தூர், நந்திவரம், மண்ணிவாக்கம், ஆதனூர் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள ஏரிகளின் உபரி நீர் அடையாறு வழியாகச் சென்றுதான் கடலில் கலக்கிறது. மேலும் பாப்பான் கால்வாய், மண்ணிவாக்கம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், ராமாபுரம் கால்வாய், திருமுடிவாக்கம் இணைப்புக் கால்வாய், ஊரப்பாக்கம் இணைப்புக் கால்வாய், ஒரத்தூர் ஓடை ஆகிய கால்வாய்கள் வழியாக வடியும் நீர்களும் அடையாறுக்கு வந்து சேர்கின்றன.

கூவம் ஆற்றின் வழியிலுள்ள ஜமீன்கொரட்டூர் அணைக்கட்டு, கூவம் நீர் எப்போதும் கடலுக்கு செல்லும் வகையிலும்ஷட்டர்கள் திறந்தால் பங்காரு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆக கூவத்திலிருந்து ஒரு பகுதி தண்ணீரும் அடையாறுக்கு வரும்.

இவை தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறு வாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 19 சதவிகிதமும் அடையாற்றில் கலக்கும்.

பெருமைக்கார கூவம்


கூவம் பாதை
வேலூர் மாவட்டத்தில் ஓடும் கல்லாறு, சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் கூவம், கொசஸ்தலை என இரு ஆறுகளாகப் என பிரிகிறது. இதில் கூவம் திருவள்ளூர் மாவட்டத்தில் 40 கி.மீ. பயணம் செய்து பருத்திப்பட்டு அணையைக் கடந்து சென்னைக்குள் நுழைகிறது. சென்னைக்குள் 32 கிமீ பயணித்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் கூவம் குளத்தில் இருந்து உபரியாக வெளியேறும் நீர் கலந்ததால் இதற்கு கூவம் என்னும் பெயர் வந்தது. 

‘தென்னிந்தியாவின் தேம்ஸ்’ என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பெருமை வரலாறு உடையது கூவம். இரண்டாயிரம் ஆண்டுகளாக கூவம் ஆற்றில் வாணிகம் நடந்து வந்திருக்கிறது. ரோமானியர்கள் இந்த ஆற்றில் பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவ்வளவு கலாச்சார புகழை தாங்கி நிற்கும் கூவம், 1960-க்குப் பிறகுதான், நமது தவறான நீர் மேலாண்மைக் காரணமாக சீர்கெடத் தொடங்கியது.

கூவத்தின் சராசரி கொள்ளளவு 19,500 கனஅடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 22,000 கனஅடி. அடையாறு அளவுக்கு இல்லாவிட்டாலும், சென்னையின் ஏற்ற இறக்கமான நிலமட்டம் காரணமாக கூவமும் நின்று நிதானித்துதான் கடல் நோக்கி செல்கிறது.

சென்னையில் கூவம் வழித்தடம்


பருத்திப்பட்டு(ஆவடி)பூவிருந்தவல்லி, திருவேற்காடு, வானகரம்நெற்குன்றம்பாடிக்குப்பம், என்.எஸ்.கே. நகர்செனாய் நகர்சேத்துப்பட்டுஎழும்பூர், ஸ்பர்டேங்க், சிந்தாதிரிப்பேட்டை, நேப்பியர் பாலம்

கூவம் நதிக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வருகிறது?


திருவள்ளூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஏரிகள் உபரி நீரும், கூவத்தின் தாய் நதியான கல்லாறு நீரில் ஒரு பகுதியும் கூவத்தில் செல்லும். இது தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறுவாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 27 சதவிகிதம் கூவம் ஆற்றில் கலக்கும்.

கூவத்தின் சகோதரி கொசஸ்தலை


கொசஸ்தலை, ஆரணி ஆறுகள் பாதை
வடசென்னையில் ஓடும் ஆறு கொசஸ்தலை. ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் பகுதியில் உருவாகிவேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கம் வழியாகத் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் நுழைந்து, எண்ணூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது கொசஸ்தலை ஆறு. ஒரு பகுதி தண்ணீர் சீமாவரம் ஆற்றின் வழியாகவும் கடலுக்குச் செல்கிறது. இதன் நீளம் சுமார் 136 கிமீ.

கேசாவரம் அணைக்கட்டில் இரண்டாகப் பிரியும் கல்லாறு கிளைகளில் இதுவும் ஒன்று, மற்றொன்று கூவம். கொசஸ்தலை ஆற்றின் பாதையில்தான் பூண்டி நீர்த்தேக்கம் உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்டலம், ஞாயிறு, சடையங்குப்பம், பூண்டி உள்ளிட்ட 550 ஏரிகளின் உபரி நீர் இந்த ஆறு வழியாகத்தான் கடலுக்குச் செல்கிறது. இந்த ஆற்றின் சராசரி கொள்ளளவு 1,10,000 கனஅடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 1,25,000 கனஅடி.

சென்னையை உரசி செல்லும் ஆரணி


வடசென்னையை ஒட்டியும் உரசியும் பாய்வது ஆரணி ஆறு. ஆந்திர மாநிலத்தில் நகரி மலையடிவாரத்தில் உருவாகிறது. தமிழகத்துக்குள் நுழைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 131 கிமீ பயணித்துப் பழவேற்காடு பகுதியில் கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செழியம்பேடு, எளாவூர், காட்டேரி உள்ளிட்ட 461 ஏரிகளின் உபரி நீர் இந்த ஆற்றில்தான் செல்லும்.

சென்னையின் வடிநீர் கால்வாய்கள்


பக்கிங்காம் கால்வாய்
அடையாறு, கூவம், கொசஸ்தலை தவிர ஓட்டேரி நல்லா, பக்கிங்காம், விருகம்பாக்கம் – அரும்பாக்கம், கொடுங்கையூர், வீராங்கல், கேப்டன் காட்டன், வேளச்சேரி உள்ளிட்ட 9 பெரிய கால்வாய்களும் சுமார் 500 சிறிய கால்வாய்களும் சென்னைக்குள் ஓடுகின்றன.
கடல் கொந்தளிக்கும்போது வெளியேறும் தண்ணீர் ஊருக்குள் வெள்ளமாக வந்து விடுவதை தடுக்கவும், மழைநீர் வடிகாலாகவும், நீர் வழி போக்குவரத்துக்காகவும் பிரிட்டீஷார் ஆட்சியில் செயற்கையாக அமைக்கப்பட்டது பக்கிங்காம் கால்வாய். ஆந்திராவின் நெல்லூர் தொடங்கி, தமிழகத்தில் கடலூர் வரை, கடற்கரையில் இருந்து ஓரிரு கிலோமீட்டர் உள்வாங்கி, சென்னை வழியாக இந்தக் கால்வாய் செல்கிறது. சென்னையில் மட்டுமே 48 கி.மீ தூரம் பக்கிங்ஹாம் கால்வாய் பயணிக்கிறது. ஆரணி, கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகிய ஆறுகள், ஓட்டேரி நல்லா கல்வாய் தவிர திருப்போரூர் வட்டத்தில் உள்ள 17 ஏரிகள் உபரிநீரும் பக்கிங்காம் கால்வாயை கடந்துதான் கடலுக்குச் செல்கின்றன. இவை தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறுவாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 29 சதவிகிதமும் பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது.

மறைந்துபோன பாடி, வில்லிவாக்கம் ஏரிகளிலிருந்து தொடங்கும் ஓட்டேரி நல்லா கால்வாய் அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் கார்டன், அயனாவரம், புரசைவாக்கம், ஒட்டேரி, வியாசர்பாடி, புலியந்தோப்பு வழியாக பக்கிம்காம் கால்வாய் வரை சென்னைக்குள் 10.2 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. மறைந்துபோன விருகம்பாக்கம் ஏரியிலிருந்து தொடங்கும் விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய் நுங்கம்பாக்கம் கூவம் ஆறு வரை சென்னைக்குள் 6.36 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. கொடுங்கையூர் கால்வாய், கொளத்தூர் ஏரி முதல் பங்கிங்காம் கால்வாய் வரை 6.9 கி.மீட்டரும்; வீராங்கல் ஓடை, ஆதம்பாக்கம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 2.78 கி.மீட்டரும்; கேப்டன் காட்டன் கால்வாய், வியாசர்பாடி ஏரியிலிருந்து தண்டையார்பேட்டை பக்கிங்காம் கால்வாய் வரை 6.9 கி.மீட்டரும்; வேளச்சேரி கால்வாய், வேளச்சேரி ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 2.14 கி.மீட்டரும் சென்னைக்குள் ஓடுகிறது.

சென்னையைக் காப்பாற்றிய ஆறுகள்


கடல் மட்டத்திற்கு கிட்டத்தட்ட சம்மாக இருக்கும் சென்னையின் நில மட்டம் இந்த வருடம் சென்னை மழையில் பாதிப்புகள் பற்றிய விவாதங்களில் அச்சத்துடன் பார்க்கப்பட்டது. இது எப்போதும் ஆபத்தானதுதானா? ஆனால், இதே காரணம்தான் சென்னையை ஒருமுறை பேரழிவில் இருந்து காப்பாற்றவும் செய்துள்ளது. 2004 டிசம்பர் சுனாமியில், மற்ற தமிழக கடலோரப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது சென்னை குறைவான பாதிப்புகளையே அடைந்தது. அதற்குக் காரணம் சென்னைக்குள் ஓடும் ஆறுகள் வடிகாலாகச் செயல்பட்டதுதான். சென்னையைக் காப்பாற்றிய ஆறுகளை பத்தே வருடத்தில் சென்னையைக் கொல்லும் ஆறாக மாற்றியது யார் தவறு?



09 September 2015

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்

சாதனையா ஜாலி டூரா?
(புதிய தலைமுறை, 25 மே 2015 இதழில் பிரசுரமானது)

பிரதமர் நரேந்திர தாமோதரதாசு மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள், அரசியல் தலைவர்கள் பிரஸ் மீட் முதல் ஃபேஸ்புக் பதிவுகள் வரை, கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. வாட்ஸ் அப்பில் இது சம்பந்தமான கேலியும் கிண்டலுமான பகிர்தல்கள், பாஜகவினர் பதில் எனப் பரபரப்பு விவாதங்கள் நடக்கிறது. பிரதமராகப் பதவியேற்றது முதல் இதுவரை 18 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார், மோடி. வரும் நாட்களில் மேலும் பல நாடுகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயணங்கள் எதிர்கட்சிகள் சொல்வது போல் ஜாலி ஊர் சுற்றல்தானா அல்லது பாஜகவினர் வாதமான நாட்டுக்காகவா? ஓர் அலசல்!

நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முதலாகச் சென்ற வருடம் ஜனவரி மாதம் பூட்டான் சென்றார். அதனைத் தொடர்ந்து சீசெல்ஸ், மொரீசியஸ், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, பிரேசில், ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, தென்கொரியா உட்பட 18 நாடுகளுக்கு ஓராண்டில் இதுவரை பயணம் செய்துள்ளார். சிங்கப்பூருக்கு மட்டும் இரண்டு முறை பயணம் செய்துள்ளார். அதாவது, சராசரியாக இரண்டு மாதங்களுக்கு மூன்று நாடுகள் பயணம். வரும் நாட்களில் அடுத்து மாதம் பங்களாதேஷ், ஜூலை 7 – 10இல் ரஷ்யா, ஜூலை 11இல் துர்க்மெனிஸ்தான், நவம்பர் 15 – 16இல் துருக்கி என மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்வதைப் பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், இதனைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கும் சிங்கப்பூருக்கும் மோடி இரண்டாவது முறையாகப் பயணம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயணங்களின் தேதி இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என நாங்கள் ஆவலுடன் உள்ளோம்என அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்புக் குறித்துப் பிரதமர் அலுவலகம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த அழைப்பை ஏற்றால், மோடி சென்ற நாடுகள் பட்டியலில் பிரிட்டனும் சேர்ந்துகொள்ளும்.

பிரதமரானது முதல் இப்படித் தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்களில் மோடி இருப்பது குறித்த விமர்சனங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறியதாகத் துவங்கியது, இன்று உச்சத்தைத் தொட்டுள்ளது. டிவிட்டர், ஃபேஸ்புக், பிளாக், வாட்ஸ் அப் என எல்லா இடங்களிலும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்தான் இன்று அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது. இப்பயணங்களில் மோடி எடுத்துக்கொள்ளும் செல்ஃபியும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மோடி அதிகமும் வெளிநாடுகளில்தான் இருக்கிறார். வெளிநாட்டுப் பயணங்களுக்கு இடையிடையே இந்தியா வருகிறார்என ஒருவர் ட்விட் செய்துள்ளார் என்றால், அதனை, ‘வெளிநாடு வாழ் இந்தியப் பிரதமர் மோடி விடுமுறையைக் கழிக்க இந்தியா வருகைசில நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது...எனக் கிண்டல் செய்கிறது, ஷெக்சிக்கந்தர் என்பவர் டிவிட். செல்ஃபி எடுக்குறதுக்காக வெளிநாடு போகிற ஒரே பிரதமர் நம்ம மோடிஜி மட்டும்தான்என்கிறது இன்னொரு ட்விட். சமூக வலைதளங்களில் நிலைமை இப்படியிருந்தால் இன்னொரு பக்கம் வைகோ, ராகுல், சீதாராம் யெச்சூரி, மம்தா, அஜித்சிங் எனப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்துத் தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார்கள்.

நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு கூட மோடி அளவுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லவில்லைஎன்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த மதிமுகக் கட்சித் தலைவர் வைகோ, ‘மோடி வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறார்என்று கேட்கிறார்.

மோடி, உள்நாட்டில் இருப்பதைவிட வெளிநாடுகளில்தான் அதிகம் இருக்கிறார். வெளிநாடுகளில் போய் உள்நாட்டு விவகாரத்தைப் பற்றிப் பேசுகிறார். வறட்சி மற்றும் பருவம் தவறி பெய்த மழை காரணமாக நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்கள் சேதமடைந்து வருவாய் இழந்து தவித்து வருகின்றனர். அதற்கு உரிய இழப்பீடு கேட்டு மத்திய அரசை எதிர்த்து போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். அவர்கள் பிரச்சினை குறித்துக் கேட்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடியோ வெளிநாட்டு பயணங்களில்தான் ஆர்வம் காட்டி வருகிறார்என்கிறார், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சித் தலைவர் அஜித்சிங்.

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களில் காட்டும் ஆர்வத்தையும் நேரத்தையும் கொஞ்சம் உள்நாட்டில் பயணம் செய்வதற்கும் பயன்படுத்தலாம். அப்பொழுதுதான் நமது நாட்டில் மக்கள் வேதனையில் வாடும் நிலையை அவர் தெரிந்துகொள்ள முடியும்என்கிறார், பீகார் முதல்வர் நிதீஷ்குமார்.

ராகுல் காந்தி, 56 நாட்கள் விடுமுறையை முடித்துக்கொண்டு திரும்பி பின், கூடுதல் பலத்துடன் மோடியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஒவ்வொரு முறையும் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தைக் குறிப்பிடத் தவறுவதில்லை. அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிலும் சுற்றுப் பயணம் செய்து விவசாயிகளைச் சந்திக்காதது ஏன்?’’ என்று பாராளுமன்றத்தில் ராகுல் எழுப்பிய கேள்வியால் கடும் அமளி ஏற்பட்டது.
ராகுல்காந்திக்குப் பதில் சொன்ன, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ‘நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமரை விமர்சிப்பதாஎனக் கேள்வி எழுப்பினார். மேலும், ‘தேசத்தின் வளர்ச்சிக்காகவே பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனால், ஒரு சிலர் எதற்காக வெளிநாடு செல்கின்றனர், அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதே தெரியாத அளவுக்கு உள்ளதுஎன ராகுல்காந்தியை மறைமுகமாகத் தாக்கவும் செய்தார்.

வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் ஒருபக்கம் இருக்க, பாரதிய ஜனதா கட்சிக்குள் இருந்தும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. வாஜ்பாய் தலைமையிலான அரசில் பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரி, ‘மோடி அரசு இலக்கில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. வெளிநாட்டுக் கொள்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை மோடி செய்யவில்லை. செய்தித்தாள் தலைப்புச் செய்திகளை உருவாக்குவதில்தான் இந்த அரசு கவனமாக உள்ளதுஎனக் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தலைமை, ஓராண்டு ஆட்சி பற்றித் தொடர் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு வரும் இந்நேரத்தில், மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் மீதான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதே அவர்களுக்குப் பெரும்பணியாக இருக்கப் போகிறது. இந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லாமல் ஒராண்டு சாதனைகள் பற்றிப் பேச முடியாது என்ற யதார்த்தத்தை அவர்களும் உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. இப்போதே சமூக வலைதளங்களில் அதனைப் பாஜகவினர் தொடங்கியும் விட்டார்கள்.

வெளியூறவூக் கொள்கைகளை வலுப்படுத்துவதிலும் இ மேக் இன் இந்தியாதிட்டத்திலும் அதிகக் கவனம் செலுத்தி வரும் மோடி, இதற்காகவே வெளிநாட்டுப் பயணங்கள் செல்கிறார்என்கிறார்கள் பாஜகவினர். மேலும், ‘நமது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தித் தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டவர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அணுகுமுறையைப் பின்பற்றியே நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. இரு தரப்பு வர்த்தகம், கலாசார உறவு, பாதுகாப்பை மேம்படுத்துதல், இந்தியாவில் செல்வந்த நாடுகளின் முதலீடு, சிறிய நாடுகளுக்கு இந்தியாவின் உதவி என மோடியின் பயணத் திட்டத்தில் தெளிவான வரையறைகள் காணப்படுகின்றன. இந்தப் பயணங்களில் அந்தந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் பல முதலீடுக்கான ஒப்பந்தங்களும் அடங்கும். வெளிநாட்டுப் பயணங்களின் பயன்பாடு பற்றி அறியாத, வெளியுறவுக் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சியில் கொண்டுள்ள பங்களிப்பை அறியாதவர்கள்தான், மோடியின் பயணங்களைச் சுற்றுலா நோக்குடன் எள்ளி நகையாடுகின்றனர். மோடி பயணம் செய்துள்ள நாடுகளின் பட்டியலைக் காணும் எவரும், தெளிவான இலக்குடன் அவரது பயணம் அமைந்து வருவதை உணர்வர்என்கிறது பாஜகவினர் வாட்ஸ் அப் பிரசாரம்.

நாட்டிற்கு வருமானத்தையும் பொருளாதாரத்தையும் முதலீடுகளையும் கொண்டு வருவதற்காகவே பிரதமர் வெளிநாடு செல்கிறார்’’ எனக் கூறும் பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜன், ‘மோடி ஒன்றும் கள்ளத்தோணி ஏறிக் காணாமல் போகவில்லைஎன மோடியின் பயணங்களை விமர்சித்த வைகோவை மறைமுகமாகச் சாடுகிறார்.

பிரதமர் வெளிநாட்டுப் பயணங்களால் நமது நாட்டிற்கு 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்திருக்கிறது. கடன்பாக்கி வைத்துப் பழக்கப்பட்ட நாடு, இன்று மங்கோலியாவுக்கு 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் உதவி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மேலும், நாட்டை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், 5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வர வேண்டும். உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்த வேண்டும்என்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் பூட்டானுடன் தொடங்கியது. அதன்மூலம், பூடான் மீது சீனா வல்லாதிக்கம் செலுத்த முடியாதவாறு பாசவலையை இறுக்கியது இந்தியா. அடுத்துப் பிரேசில் சென்றார். மோடியின் ஆலோசனைப்படி, பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, இந்தியாவின் மிக நெருக்கமான கூட்டாளியாக இருந்திருக்க வேண்டிய, அதேசமயம் நம்மிடம் இருந்து வெகுவாக விலகிப் போயிருக்கும் நேபாளத்திற்கு மோடியின் பயணம் அமைந்தது. நேபாளத்துக்கு இந்தியா அறிவித்த பல கோடி ரூபாய் கடனுதவிகள், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பங்களிப்புக்கான ஒப்பந்தங்கள் அந்த நாட்டுடனான நமது உறவை வலுப்படுத்தின. குறிப்பாக இந்திய எதிர்ப்பையே நோக்கமாகக் கொண்ட மாவோயிஸ்ட் தலைவர் பிரசாண்டாவே மோடியின் வருகையையும் அதனால் விளைந்த நன்மைகளையும் வரவேற்றார். நான்காவதாக மோடி பயணம் செய்த நாடு ஜப்பான். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் சீனா தொடர்ந்து நெருடலான அண்டை நாடாக உள்ள நிலையில், ஜப்பான் பயணத்தைச் சீனாவுக்கு எதிரான ராஜதந்திரப் பயணமாக மோடி அமைத்துக்கொண்டார்என ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தையும் மோடியின் சாதனைகளாக முன்வைக்கிறது, பாஜகவினர் வாட்ஸ் அப் கட்டுரை.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மோடி அரசின் ஓராண்டு ஆட்சி குறித்துக் கூறியுள்ளது, பாஜகவினர் வாதத்துக்கு வலு சேர்க்கிறது. "அமெரிக்காவில் நிலவிய முதலீட்டாளர்கள் மந்த நிலையை அந்நாட்டு முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் மாற்றியமைத்தார். பொருளாதாரத்தைச் சீரமைக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றிக் கண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை நரேந்திர மோடி என்பவர் 'வெள்ளை குதிரையில் வந்த ரோனால்ட் ரீகன்' போலவே பார்க்கப்பட்டார். மோடி தலைமையிலான அரசின் மீது நாட்டின் மக்கள் அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த அதீத நம்பிக்கை, எதிர்பார்த்த அளவுக்கு நிறைவேற்றுவதற்குச் சாத்தியம் இல்லாதது. இருப்பினும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதலீட்டை ஈர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. முதலீட்டாளர்களின் தேவையைப் பூர்த்திச் செய்யும் நிலையை அரசு கூர்ந்து கவனித்துக் கையாளுகிறதுஎன்கிறார் ரகுராம் ராஜன். அதேநேரம், முதலீட்டை ஈர்ப்பது மற்றும் வரிவிதிப்பு இரண்டுக்கும் இடையே இருக்கும் முரண் குறித்தும் கருத்து தெரிவித்த ரகுராம் ராஜன், ‘வரி விதிப்பிலும் இந்த அரசு கவனத்தோடு செயல்பட்டு இருக்கலாம். வணிகச் சூழலில் வரிவிதிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்றார்.

ஆனால், மோடி பயணங்களின் சாதனையாகப் பாஜகவினர் முன்வைப்பவற்றைச் சீதாராம் யெச்சூரியும் ராகுல்காந்தியும் மறுக்கிறார்கள். மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் முதலாளிகளுக்கானது மட்டுமே. அதனால் ஏழை மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாதுஎன்கிறார் ராகுல்காந்தி.

இந்திய வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்தவரையில், மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய அரசு கடைப்பிடித்த அதே கொள்கையைத்தான், தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசும் பின்பற்றி வருகிறது. ஆனால், இதற்கு முன்பிருந்த பிரதமர்களைவிட, மிக அதிகமான வெளிநாட்டுப் பயணங்களை மோடி மேற்கொள்கிறார். இவரது வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் நலனுக்கானவை அல்ல. அவை அதிகமும் அமெரிக்க நலன் சார்ந்தவையாகவே உள்ளன. எனவே, இந்தப் பயணங்களால் நாட்டுக்கு நிச்சயம் உறுதியான நன்மை எதுவும் கிடைக்காது. இது கவலையளிக்கக் கூடியதுஎன்கிறார் சீதாராம் யெச்சூரி.

சரி, இந்த விமர்சனங்கள் பற்றிப் பிரதமர் மோடி என்ன சொல்கிறார்?

தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து, தொடர்ந்து கிண்டல் செய்து எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி நிலையிலும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த மோடி, சீன பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியாக இந்திய சமுதாயத்தினருடன் கலந்துரையாடிய போது முதன்முறையாக இதுபற்றிப் பேசினார். ஜெர்மனி, பிரான்ஸ், கனடா நாடுகளுக்குச் சென்றபோதே என் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. வெளிநாடு செல்வதுதான் மோடியின் முக்கிய வேலை என்கிறார்கள். உழைக்காமல் இருந்தால் குறை கூறலாம். தூங்கிக் கொண்டிருந்தாலும் குறை கூறலாம். ஆனால், எனது துரதிர்ஷ்டம், ஓய்வில்லாமல் உழைப்பதை குறை கூறுகிறார்கள். மக்களுக்கு அதிகமாக உழைப்பதை குற்றம் என்று கூறினால், அந்தக் குற்றத்தை 125 கோடி இந்தியர்களுக்கு மீண்டும் மீண்டும் நான் செய்வேன்.

செலவை குறைப்பதற்காகவே ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நான் பயணம் செல்கிறேன். பதவியேற்ற பிறகான இந்த ஓராண்டில் நான் ஒருநாள் கூட விடுமுறை எடுத்துக்கொண்டது கிடையாது. இரவு பகலாக உழைக்கிறேன். ஓய்வெடுத்தாலோ சுற்றுலாவுக்குச் சென்றாலோ என்னால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. நான் அனுபவமில்லாதவன். பிரதமராகப் பதவியேற்றபின், தினமும் பல விஷயங்களைக் கற்று வருகிறேன். வெளிநாடு பயணங்களையும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்துகிறேன். வளர்ந்து வரும் நாடுகள் பற்றி 20 ஆண்டுக்கு முன் முன்னேறிய நாடுகள் கண்டு கொண்டதில்லை. ஆனால், இப்போது காலம் மாறி வருகிறது. இதற்கு இந்தியா தயாராகி வருகிறது. உலகுக்கு இந்தியா அளிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன என்பதை என் பயணங்களில் உணர்கிறேன்.

மக்களவை தேர்தலுக்கு முன், மோடி யார்? அவருக்கு வெளியுறவு கொள்கைகள் பற்றி என்ன தெரியும்? என்று விமர்சித்தனர். இப்போது எனப் பயணங்களை விமர்சிக்கின்றனர். இந்தப் பயணங்களை நான், ஐந்தாவது ஆண்டில் செய்திருந்தால் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். முதல் ஆண்டிலேயே செய்துள்ளதால்தான் இவ்வளவு விமர்சனங்கள். ஆனால், இதனால்தான் உலகம் இந்தியாவைத் திரும்பிப் பார்த்துள்ளது. எனது பயணங்கள், அந்தந்த நாடுகளுடான இந்திய உறவை வலுப்படுத்தியுள்ளது. இந்தப் பயணங்களில் நான் விதைத்த விதைகள், வளர்ச்சியடைவதற்குக் கால அவகாசம் தேவைஎன்கிறார், மோடி.

ஆனால், ‘மோடியின் பயணங்களில் பல ஒரு பிரதமர் செல்ல வேண்டிய அவசியம் இல்லாதவை. சில அதிகாரிகள் மட்டத்திலேயே முடிந்துவிடக்கூடியவை. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையின் பலனாக விளைந்தவை. அவற்றை மோடி தனது தனிப்பட்ட சாதனைகளாக முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததுஎன்கிறார்கள் மோடி பயணங்களை விமர்சிப்போர்.

01 September 2015

புத்தகம் அறிமுகம்

புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு!


ஊரடங்கு உத்தரவு - பி.என்.எஸ். பாண்டியன்விலை ரூ. 200/-வெளியீடு: வெர்சோ பேஜஸ்3 முதல்தளம்விமானத் தளச் சாலைமுத்துலிங்கம் பேட்டைபுதுச்சேரி – 605008தொலைபேசி: 9894660669மின்னஞ்சல்: versopages@gmail.com

பாண்டிச்சேரி என்றாலே, தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்கு மதுதான் நினைவுக்கு வரும். மதுவிலக்கு போராட்டங்கள் குறித்த சமீப விவாதங்கள் அனைத்திலும்கூடப் பாண்டிச்சேரி பெயர் தவறாமல் அடிபடுகிறது. ஆனால், இது பாண்டிச்சேரியின் ஒரு முகம்தான். அதன் இன்னொரு முகம், இரண்டாயிரம் ஆண்டுகள் செழுமையான வரலாறும் பண்பாடும் கொண்டது. அரவிந்தர், அனந்தரங்கம்பிள்ளை, பாரதியார், பாரதிதாசன், வ.வே.சு. ஐயர் எனப் பல ஆளுமைகளைப் பெற்றடுத்த/அரவணைத்து ஆதரித்த மண்ணாக மிகச் சமீபகால வரலாறுகளில்கூடப் பாண்டிச்சேரி பெருமையுடன் இடம்பெறுகிறது. ‘பேரமைதியின் பிறப்பிடம்’ என்று பாண்டிச்சேரியைச் சொல்கிறார் அரவிந்தர். இந்த இரண்டு முகங்கள் தவிர இன்னொரு முகமும் பாண்டிச்சேரிக்கு இருக்கிறது. அந்த மூன்றாவது முகம், ‘காலம், புதுவையை உராய்ந்து அல்லது இடித்து நகர்த்தும் போதெல்லாம், சிலிர்த்து எழும். ஒரு புதிய வரலாற்றை உருவாக்கும்’’ என்பார், புதுச்சேரி தந்த எழுத்தாளர் பிரபஞ்சன். அப்படி, சிலிர்ந்தெழுந்து புதுச்சேரி உருவாக்கிய ஒரு சமீப கால வரலாற்றைப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.

புதுச்சேரியிலும் தமிழர்கள்தான் வாழ்கிறார்கள் என்றாலும், அதற்கென்று தனித்துவமான வரலாறும் பண்பாட்டுச் செழுமைகளும் இருக்கின்றன. புதுச்சேரியின் மிகத் தொன்மையான வரலாறு 2ஆம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. அக்கால உரோம மாலுமிகளின் செலவுக் குறிப்பேடான செங்கடல் செலவுஎன்னும் கையேட்டில், ‘பொடுகெ’ எனப்படும் சந்தை குறித்து உள்ளது. இந்த இடம் புதுச்சேரியிலிருந்து 2 கிமீ தொலைவில், தற்போது அரியாங்குப்பத்தின் பகுதியாக உள்ள, அரிக்கமேடுதான். 1944இலிருந்து 1949 வரை அரிக்கமேட்டில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளில் ரோமானிய மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டன. இதன்மூலம், கி.பி. 1ஆம் நூற்றாண்டில் இந்த இடம் முக்கிய வணிக மையமாக விளங்கியது உறுதி செய்யப்பட்டது.
1673 பிப்ரவரி 4 முதல் புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. தமிழகம் உட்பட இந்தியாவின் பெரும்பகுதி ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தபோது, புதுச்சேரி மட்டும் பிரெஞ்சுக்காரர்கள் கையில்தான் இருந்தது. ஆங்கிலேயர்கள் போல் வெறும் ஆட்சியாளர்களாகவும் வியாபாரிகளாகவும் இல்லாமல், புதுச்சேரி மக்களின் அன்றாட வாழ்வோடு பிரெஞ்சுக்காரர்கள் நெருக்கமாக இணைந்திருந்ததன் விளைவு, பிரெஞ்ச் பண்பாட்டுடனும் வாழ்வியல் கூறுகளுடனும் உணர்வுபூர்வமாகப் பிணைக்கப்பட்டார்கள் புதுச்சேரி மக்கள். இது தமிழர்களிடயே புதுச்சேரிக்காரர்களின் தனிச் சிறப்புக்கு காரணம்.

1947இல் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் புதுச்சேரி பிரஞ்சுக்காரர்கள் ஆட்சியின் கீழ்தான் இருந்தது. இந்நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 1954 நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரிக்கு விடுதலை அளிக்கப்பட்டது. ஆனாலும், பிரான்ஸ் - இந்தியா ஒப்பந்தப்படி, யூனியன் பிரதேசம் என்ற தனி அந்தஸ்துடன் புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்தது. பாண்டிச்சேரி தவிர நாகப்பட்டினம் அருகேயுள்ள காரைக்கால், ஆந்திராவின் காக்கி நாடாவுக்கு அருகேயுள்ள ஏனாம், கேரளாவின் கோழிக்கோட்டுக்கு அருகேயுள்ள மாஹே என வெவ்வேறு பகுதிகளில் உள்ள இந்த நான்கு பகுதிகளும் சேர்ந்ததுதான் புதுச்சேரி யூனியன் பிரதேசம். அந்தந்தப் பகுதிகளின் தன்மைக்கேற்ப கூடுதல்குறைவாக வாழும் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகளுடன் இன்னமும் பிரெஞ்சு பாஸ்போர்ட் வைத்துள்ள சிறுபான்மை இந்திய வம்சாவளி அல்லாதவர்களும் இந்த யூனியனில் வாழ்கின்றனர். 1954இல் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டு விலகும்போது பிரான்ஸ் அரசு வழங்கிய விருப்பத் தேர்வின்படி அதன் குடிமக்களாக நீடிக்க விரும்பியவர்களின் சந்திதியினர் இவர்கள்.

யூனியன் பிரதேசமாக இருக்கும் புதுச்சேரியை தனி மாநிலமாக அங்கீகரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகப் புதுச்சேரி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். புதுச்சேரி போலவே யூனியன் பிரதேசங்களாக இருந்த இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா ஆகியவற்றுக்கு 197172இல் இந்திய அரசாங்கம் முழு மாநிலத் தகுதி வழங்கியது. ஆனால், புதுச்சேரி மக்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. இதற்கு மாறாக இன்னொரு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது.

பிரஞ்சுக்காரர்கள் வசம் இருந்த புதுச்சேரி பகுதிகளை, 1954ஆம் ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கும் போது, நேரு கையொப்பமிட்ட பிரெஞ்ச இந்திய ஒப்பந்தம்புதுச்சேரியை வேறொரு மாநிலத்துடன் இணைக்க வேண்டுமானால் அங்குள்ள மக்களது கருத்தை அறிய வேண்டும் என்று சொல்கிறது. இந்த வரலாற்று உடன்படிக்கையை மாற்றியமைக்க முயன்றது மத்திய அரசு. ஒன்றுடன் ஒன்று இணையாமல் துண்டு துண்டாகக் கிடக்கும் புதுச்சேரியின் நான்கு மாவட்டங்களையும், அந்தப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் மாநிலத்தோடு இணைத்துவிடும் முயற்சி 1978ஆம் ஆண்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாகப் பாண்டிச்சேரியை தமிழகத்தோடு இணைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இருவரும் இதில் முக்கியப் பங்கு வகித்தார்கள். அப்போது சென்னை வந்திருந்த மொரார்ஜி தேசாய், “புதுச்சேரியை தமிழகத்தோடு இணைத்துவிடலாமா என ஆலோசித்து’’ வருவதாகச் சொன்னார். இது புதுச்சேரி மக்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.

முதலில் ஆர்ப்பாட்டங்கள், பந்த் என அமைதியான வழியில்தான் போராட்டங்கள் ஆரம்பித்தன. தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், வியாபாரிகள், அனைத்துக் கட்சி தொண்டர்கள் என எல்லோரும் இப்போராட்டங்களில் கலந்துகொண்டார்கள். ஜனவரி 26 குடியரசு தின விழாவையும் அணிவகுப்பையும்கூட அரசு ஊழியர்களும் பொதுமக்களும் புறக்கணித்தார்கள். ஆனால், மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்காமல் தன் முடிவில் உறுதியாக நின்ற அரசு, மக்கள் எழுச்சியை ஆயுதப் போலீஸ் துணைகொண்டு அடக்க நினைத்தது. கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. அரசு அடக்குமுறையும் தீவிரமானது. தமிழகத்தில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் குவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. மில் தொழிலாளி ஒருவரும் கல்லூரி மாணவர் ஒருவரும் பலியானார்கள். ஆனாலும், அஞ்சாமல் போராட்டம் வலுவடையவே பாண்டிச்சேரியில் மூன்று நாட்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. 10 நாட்கள் தனியாத போராட்டத்துக்குப் பிறகு அரசு பணிந்தது. மக்கள் வெற்றிபெற்றார்கள்.

இரண்டு உயிர்கள் பலி, எண்ணற்ற இழப்புகள், சேதம், பாலியல் வன்முறை என மனித உரிமை மீறல் அனைத்தையும் இந்தப் பத்து நாட்களில் புதுச்சேரி மக்கள் அனுபவித்துள்ளார்கள். ஆனாலும், இந்தப் போராட்டம் குறித்த ஒரு விரிவான பதிவு இல்லாத சூழலே இருந்து வந்தது. இந்தக் குறையை இந்தப் புத்தகம் மூலம் போக்கியிருக்கிறார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பி.என்.எஸ். பாண்டியன்.

பி.என்.எஸ். பாண்டியன்
போராட்டக் காரணம், போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் யார் யார், தில்லி தலைவர்கள் மனோபாவம், காவல்துறை அத்துமீறல், சமரசப் பேச்சுவார்த்தை என அனைத்து விவரங்களையும் கள ஆய்வுகள் மூலமாகவும், அந்நாளைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் மூலமாகவும், அரசியல் சாட்சியங்கள் மற்றும் போராட்டக் களத்தில் காவல் அரணாக நின்றவர்களின் நேரடி வாக்குமூலங்கள் மூலமாகவும் ஆதாரங்களைத் திரட்டி இந்த நூலை எழுதியுள்ளார் பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரி மக்கள் தலைவர் வ.சுப்பையா, புதுச்சேரியின் சரித்திர பூர்வ உண்மைகளை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய விரிவான மடல்; அதன் விளைவாய் நாடாளுமனர் உறுப்பினர்கள் பூபேஸ்குப்தா, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, வை.கோபால்சாமி போன்றோர் போராட்டத்துக்கு ஆதரவாய் நாடாளுமன்றத்தில் பேசியது; குடியரசு தின புறக்கணிப்புப் படங்கள், சட்டமன்ற உறுப்பினர் உரைகள் போன்ற அக்கால ஆவணங்கள் தேடி தொகுத்து ஒரு வரலாற்று நூலாசிரியர் கடமையையும் பொறுப்புடன் செய்திருக்கிறார். பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கும், ‘பிரெஞ்சிந்திய புதுச்சேரி - ஒரு பார்வைஎன்ற குறிப்பு, புதுச்சேரி மக்கள் அரசியலைப் புரிந்துகொள்ள ஆதாரமாய் அமைகிறது.

மண்ணின் மைந்தர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றி பெற்றதின் காரணமாகப் புதுச்சேரி மண் இன்றளவும் யூனியன் பிரதேசமாகத் தனி இயல்புடன் உள்ளது. அந்தக் காலகட்டத்தில் மக்கள் மத்தியில் எழுச்சி உருவாகவில்லை என்றால் இணைப்பு நிகழ்ந்திருக்கும். தமிழகத்தின் ஒரு தாலுகாவாகவோ பேரூராட்சியாகவோ அல்லது ஒரு மாவட்டமாகவோ புதுச்சேரி உருமாறி இருக்கும்என்கிறார் இந்நூலில், பாண்டியன்.

போராட்ட காலகட்டத்தில் பள்ளிச் சிறுவனாக இருந்த நூலாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக்கி ஒரு புனைவின் சுவாரஸ்யத்துடன் எழுதியுள்ளது இதன் சிறப்பு. இதன்மூலம் ஒரு புதினம் போலப் பத்து நாட்கள் போராட்டத்தை நம் கண் முன்னால் மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக் காட்டுகிறது, இந்த வரலாற்றுப் புதையல்.

புதிய தலைமுறை, 20 ஆகஸ்ட் 2015 இதழில் பிரசுரமானது.