05 November 2008

ஆல்பம்


சந்திப்பு


சென்னை இலக்கியச் சந்திப்புகளில், அதன் பிறகு இன்று வரை அப்படியொரு நிகழ்ச்சி நடைபெறவில்லை என்று பெருமைகொள்ளும் விதமான ஒரு அபூர்வமான நிகழ்வு இது. சி.எல்.எஸ். அமைப்பு சென்னையில் நடத்திய இந்திய எழுத்தாளர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்டது. எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் சேகரிப்பில் இருக்கிறது. முதல் வரிசையில்; வெள்ளை வேஷ்டி சட்டையில் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பவர்: க.நா. சுப்பிரமணியம்; நான்காவதாக நிற்பவர்: கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த்; அடுத்து நடுவில் கையை கட்டிக்கொண்டு நிற்பவர் ஆர்.கே. நாராயண், கருப்பு கோட்டுடன் நிற்பவர்: ஆங்கில எழுத்தாளர் ராஜாராவ்; இரண்டாவது வரிசையில்: இடதுபக்கம் இருந்து இரண்டாவதாக நிற்பவர்: சிவபாதசுந்தரம்; மூன்றாவது வரிசையில்: இரண்டாவது நிற்பவர்: சி.சு. செல்லப்பா. மற்றவர்கள் தெரியவில்லை. யாராவது, தெரிந்தவர்கள் சொன்னால் சேர்த்துக் கொள்ளலாம்.

18 September 2008

தொடர் - அறிமுகம்


உலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்

ராஜகோபால்
தளவாய் சுந்தரம்

"மனிதன் ஒரு நாணல். இயற்கையில் உள்ளவற்றில் மிகவும் பலகீனமானவன் அவனே. ஆனால், அவன் ஒரு சிந்திக்கும் நாணல். சிந்தனையில்தான் மனிதனின் பெருமை பொதிந்துள்ளது. மனிதனின் மீட்சிக்கு நாம் நமது கற்பனை, சிந்தனை தவிர வேறொன்றையும் சார்ந்திருக்க முடியாது."
- பாஸ்க்கால்

பாஸ்க்காலின் உலகப் புகழ்பெற்ற இந்த மேற்கோள், நமது வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளது. ஒவ்வொரு மனிதனும் சந்தோசத்தின் போதும் நெருக்கடியின் போதும் ஏதோவொரு கற்பனை பாத்திரத்தை நினைத்துக் கொள்கிறான். அக்கதாபாத்திரம்தான் அவன் வாழ்க்கையை வழி நடத்துகிறது. நம் அன்றாட பேச்சு வழக்கில்கூட இக்கற்பனை பாத்திரங்கள் எளிதாக ஊடுறுவி விடுகிறார்கள். "அவனொரு ஒநாய்; டிராகுலா!", "அவனுக்கு பெரிய அரிச்சந்திரன்னு நினைப்பு!" போன்ற வாக்கியங்கள் கற்பனை நம் வாழ்க்கையை பாதித்தற்கான தடயங்கள். அரிச்சந்திரன் நாடகம் காந்தியின் வாழ்க்கையில் நிகழ்த்திய பாதிப்பை நாம் அறிவோம். நண்பர்கள், உறவினர்கள் போலவே இந்தக் கற்பனை மனிதர்களும் நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அப்படி மிகவும் அதிகமாக இந்த உலகைப் பாதித்த, எப்போதுமே இந்த உலகில் வாழ்ந்திராத கற்பனை மனிதர்களைப் பற்றிய தொடர் இது.

முதலில்... டிராகுலா!

(விகடன் புக் கிளப் உறுப்பினர்களுக்காக வெளியிடப்படும் ‘விகடன் புக்ஸ்’ இதழில் ராஜகோபாலுடன் இணைந்து எழுதியது இது. நான் விகடன் நிறுவனத்தில் இருந்து விலகிய பிறகு இதனை தொடர முடியவில்லை. இப்பொழுது, இந்த பிளாக்கில் தொடரும் திட்டம்.)

28 August 2008

புத்தகம்


சத்யஜித் ரேயின் ஆசை!


உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே, முக்கியமான ஒரு எழுத்தாளரும்கூட. ரேயின் திரைப்படங்கள், ஓவியங்கள், இசைக் கோர்வைகளைப் போலவே ரேயின் எழுத்துகளும் அவரது கலை மேதமையின் வெளிப்பாடுகளாக உள்ளன. பெரும்பாலும் சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காவும்தான் ரே எழுதியிருக்கிறார். அவற்றில் பிரசித்தமானவை ஃபெலுடா வீரசாகசக் கதைகள். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை. கலைப்பட இயக்குநராக நாமறிந்த சத்யஜித் ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம் இது!

1965இல் தொடங்கி தன் இறுதி காலம் வரைக்கும் மொத்தம் முப்பத்தைந்து ஃபெலுடா சாகசக் கதைகளை எழுதியுள்ளார், ரே. அவரது சிறந்த திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் இந்தக் கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்பது, தொடர்ந்து எழுதுவதை அவர் முக்கியமாகக் கருதியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. குறிப்பாக, கடைசி ஃபெலுடா கதை அவரது இறுதி நாள்களில் எழுதப்பட்டு, அவரது மறைவுக்குப் பிறகு 1995ஆம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. வங்காளத்தில் எழுதப்பட்ட இந்தக் கதைகள், சத்யஜித் ரே காலகட்டத்திலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இப்பொழுது, கிழக்கு பதிப்பகம் முப்பத்தைந்து ஃபெலுடா கதைகளையும் தமிழில் கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள மேற்கு வங்க தகவல் நிலையத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் வீ.பா. கணேசன், இம்மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார்.

இதில் விசேஷம் என்னவென்றால், தன் எழுத்துகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என சத்யஜித் ரே விரும்பி இருக்கிறார் என்பதுதான். மொழிபெயர்ப்பாளர் வீ.பா. கணேசன், வங்காளத்தில் பணிபுரிந்த காலங்களில் ரேயுடன் நேரடியாக பழகியவர். சென்னை ஃபிலிம் சொசைட்டி மிகவும் செயலூக்கத்துடன் இருந்த காலகட்டத்தில் அதில் இருந்தவர்களுள் கணேசனும் ஒருவர். மிருனாள் சென்னின் “சினிமா: ஒரு பார்வை’, ஜோதிபாசுவின் சுயசரிதை உள்பட பல புத்தகங்களை ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதில் “சினிமா: ஒரு பார்வை’ தமிழ் மொழிபெயர்ப்பை ரேயிடம் காட்டிய போதுதான் இப்படி ஒரு ஆசையை வெளியிட்டாராம் ரே. துரதிர்ஷ்டவசமாக தன் ஆசை நிறைவேறுவதைப் பார்க்க இப்பொழுது ரே இல்லை. சத்யஜித் ரே இருந்த போதே, இந்திரன் அவரைப் பற்றி எழுதிய ஒரு சிறு நூல் தமிழில் வந்திருந்தது. அதையும் ரே அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. இத்தனைக்கும் அக்காலகட்டத்தில் அவர் அடிக்கடி சென்னை வந்துபோய் கொண்டிருந்திருக்கிறார். அவரது திரைப்படங்களின் தொழில்நுட்ப வேலைகள் பெரும்பகுதி சென்னையில்தான் நடந்துள்ளன.

குழந்தைகள், சிறுவர்கள் மீதான சத்யஜித் ரேயின் அக்கறையும் கரிசனமும் நாம் நன்கறிந்தது. அவரது முக்கியமான சிறுவர்கள் திரைப்படங்களே அதற்கு சாட்சி. இதன் வேர், ரேயின் அப்பா வழி தாத்தா உபேந்திர கிஷோர் ரேயிடம் இருந்து தொடங்குகிறது. உபேந்திர கிஷோர் ரே, ‘சந்தேஷ்’ என்ற சிறுவர்கள் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். அவரது காலத்துக்குப் பிறகு ரேயின் தந்தை சுகுமார் ரே அந்தப் பத்திரிகையை நடத்தினார். ஆனால், பொருளாதார இழப்புகள் காரணமாக தொடர்ந்து நடத்த முடியாமல் இடையிலேயே நிறுத்திவிட்டார். சத்யஜித் ரே வளர்ந்து, பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்தபிறகு 1961ஆம் வருடம் ‘சந்தேஷ்’ பத்திரிகையை மீண்டும் தொடங்கி, தன் இறுதிகாலம் வரைக்கும் நடத்தினார். இந்த ‘சந்தேஷ்’இல் தான் ஃபெலுடா என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, துப்பறியும் கதைகள் எழுதினார் சத்யஜித் ரே.

முதல் ஃபெலுடா கதை ‘டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்’ 1965ஆம் வருடம் வெளியானது. அப்பொழுது தொடர்ந்து ஃபெலுடா கதைகள் எழுதும் திட்டம் எதுவும் ரேயிடம் இல்லை. ஆனால், “டார்ஜீலிங்கில் ஒர் அபாயம்’ கதைக்கு வங்காள வாசகர்கள் மத்தியில் கிடைத்த உற்சாக வரவேற்பு, அவரை தொடர்ந்து எழுதத் தூண்டியது. அடுத்த வருடமே இரண்டாவது மற்றும் மூன்றாவது ஃபெலுடா கதைகளான “மகாராஜாவின் மோதிரம்’, ‘கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்’ ஆகியவற்றை எழுதினார். அடுத்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் 1970இல் தொடங்கி 1992 வரைக்கும், வருஷம் ஒன்று அல்லது இரண்டு வீதம் விடாமல் எல்லா வருடங்களும் எழுதியிருக்கிறார். 1992 ஏப்ரல் 23இல் ரே காலமானார். கடைசி ஃபெலுடாக் கதையான “மாய உலகின் மர்மம்’ அவரது மறைவுக்குப் பிறகு 1995ஆம் வருடம் வெளியானது.

‘சந்தேஷ்’ இதழில் இக்கதைகள் வெளியான போது அதற்கான படங்களையும் சத்யஜித் ரே வரைந்துள்ளார். ரே அடிப்படையில் ஒரு ஓவியர்; சாந்தி நிகேதன் கலாபவனத்தில் ஓவியத்தை முறையாகப் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களும் கிழக்கு பதிப்பகம் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளன.

சிறுவயது முதல் துப்பறியும் கதைகள் மீது சத்யஜித் ரேக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. பள்ளிக்கூட நாட்களிலேயே ஹெர்லக் ஹோம்ஸ் கதைகள் முழுவதும் படித்து முடித்திருக்கிறார். ஒருவகையில் இந்த ஆர்வம்தான் வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என்று அழைக்கப்பட்ட ஃபெலுடா கதாபத்திரத்தை உருவாக்கவும் காரணமாக இருந்திருக்கும். துப்பறியும் நிபுணரான ஃபெலுடாவும், அவரது ஒன்றுவிட்ட சகோதரன் தபேஷும், துப்பறியும் கதை எழுத்தாளர் லால்மோகன் பாபுவும் தான் இக்கதைகளின் பிரதான பாத்திரங்கள். இதில் தபேஷ் சொல்வது போல் எல்லாக் கதைகளையும் ரே எழுதியுள்ளார். அசாத்திய புத்திக்கூர்மை, தெளிவான சிந்தனை வீச்சு, குழப்பமான மர்ம முடிச்சுகளையும் திறம்பட அவிழ்க்கும் திறன் ஆகியவற்றுடன் மெல்லிய நகைச்சுவை உணர்வும் கொண்டவராக ஃபெலுடா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார், ரே. ஃபெலுடாவின் ஒவ்வொரு செயலும் தபேஷுக்கு வியப்பூட்டுகின்றன. இந்த வியப்பு, படிக்கும் நம்மையும் பற்றிக்கொள்கிறது என்பதுதான் ரே எழுத்தின் சாகசம்.

சத்யஜித் ரேயின் முக்கியமான சிறுவர் திரைப்படங்களான ‘ஜொய் பாபா ஃபெலுநாத்’, ‘சோனார் கெல்லா’ ஆகியவை முறையே ‘பிள்ளையாருக்குப் பின்னே ஒரு மர்மம்’, ‘தங்கக் கோட்டை’ ஆகிய ஃபெலுடா கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவைதான். ரேயின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் சந்தீப் ரேயும் சில ஃபெலுடா கதைகளை திரைப்படமாக எடுத்துள்ளார்.

சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும்தான் ஃபெலுடா வரிசை கதைகளை சத்யஜித் ரே எழுதியுள்ளார். என்றாலும், பெரியவர்களும் இக்கதைகளை விரும்பிப் படிக்கிறார்கள்; படிக்கலாம். தமிழில் ‘க்ரைம் ஸ்டோரி’ என நமக்கு அறிமுகமாகி இருக்கும் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை ஃபெலுடா வீர சாகசக் கதைகள். சிறுவர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைக்கலாம்; அவ்வளவு நாகரிகம்!

18 August 2008

விவசாயம்

ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!

மரங்கள் நடக்கின்றன

உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!

தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் தங்கசாமி, காடு வளர்ப்பில் உலகுக்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தங்கசாமியின் தோட்டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்கள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்...

“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.

அப்போது பேராசிரியர் சீனிவாசன், 'மரப்பயிரும் பணப்பயிரே' என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.

மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.

ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.

திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.

இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்கசாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.

இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.

எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.

நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.

எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.

விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.

மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன்றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட்டை பிடித்து விற்றுவிடுவேன். என்னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.

நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.

செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”

விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”

(குமுதம் நிறுவனத்தில் இருந்து வெளிவருவதாக இருந்த 'மண்வாசனை' (விவசாய இதழ்) பத்திரிகைக்காக மரம் தங்கசாமியை அவரது தோட்டத்தில் சந்தித்தேன். மூன்று இலவச இதழ்களுக்குப் பிறகு மண்வாசனை நின்றுவிட்டது.)

நன்றி: மரம் தங்கசாமி படம் - நல்லது நடக்கட்டும் வலைப்பூ.

08 August 2008

ஆல்பம்


பாதல் சர்க்கார் பயிற்சிப் பட்டறை


01.09.1980ஆம் நாள் முதல் ஒன்பது நாள்கள் சென்னை சோழமண்டலக் கலைக் கிராமத்தில் பாதல் சர்க்காரால் நடத்தப்பட்ட வீதி நாடகப் பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக): (1) அம்ஷன்குமார், (2) மனோகரன், (3) பரஞ்சோதி, (4) ரங்கராஜன், (5) கோவிந்தராஜ், (6) முருகேசன், (7) பழனிவேலன், (8) முத்துராமலிங்கம், (9) பூமணி, (10) அரவிந்தன், (11) சாமிநாதன், (12) ஆல்பர்ட், (13) மீனாட்சிசுந்தரம், (14) ஞாநி,(15) ராஜேந்திரன், (16) சந்திரன், (17) கார்வண்ணன்; உட்கார்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக): (1) பரமேஸ்வரன், (2) விவேகானந்தன், (3) அக்னிபுத்திரன், (4) கே.வி.ராமசாமி, (5) பாதல்சர்க்கார், (6) அந்தனிஜீவா, (7) செல்வராஜ், (8) சம்பந்தன், (9) கே.ஏ.குணசேகரன், (10) மு.ராமசுவாமி, (11) பாரவி, (12) பிரபஞ்சன்.

தகவல்: அரிஅரவேலன்

01 August 2008

சித்திர எழுத்து


எழுத்தாளர்கள் - ஓவியர்கள் கூட்டமைப்பு

ஆதிமூலத்தை முன்வைத்து


உலகப் பிரசித்திபெற்ற தமிழக ஓவியர்களில் ஒருவர் கே.எம். ஆதிமூலம். சென்றவருடம் கடைசியில் லண்டனைச் சேர்ந்த ஒரு பிரபல பதிப்பகம் ஆதிமுலம் பற்றி வெளியிட்ட புத்தகத்தின் மூலம், சர்வதேச ஓவிய சேகரிப்பாளர்கள் கவனம் ஆதிமுலம் பக்கம் திரும்பியது. அவரது குரல், அவரது படைப்புகளைப் போலவே கவனிக்கப்பட்டது. அவர் மீதான மதிப்பும் மரியாதையும் கூடியது. இந்திய அளவில் தனக்கு அங்கீகாரம் கிடைத்தபோது, அதனைப் பயன்படுத்தி தமிழக ஓவியர்களை முன்னிறுத்தியது போல், இப்பொழுது உலக அளவில் தமிழ ஓவியங்களுக்கு தனி அடையாளம் கிடைக்கச் செய்வார் என்னும் நம்பிக்கை தமிழகக் கலைத்துறையில் துளிர்விட்டது. இந்நிலையில், இந்த வருடம் ஆரம்பத்தில் நிகழ்ந்த அவரது இழப்பு, நமக்கு பேரிழப்பு! அடுத்த சில மாதங்களிலேயே, அவரது பெயரில் ஒரு போலி ஓவியத்தை வரைந்து, அதனை மிகப்பெரிய தொகைக்கு விற்க முயற்சி செய்யப்பட்டது கண்டுபிடிக்கபட்டது. இது நிச்சயம் படைப்பு - படைப்புரிமை – படைப்பாளிகள் உறவின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள ஒரு தாக்குதல். இதற்கு ஒரு கண்டனமாகவும் இதுபோல் தொடர்ந்து நடப்பவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி விவாதிக்கவும், சென்னை, அண்ணாசாலையில் உள்ள புக்பாயிண்ட் அரங்கத்தில் ஒரு கூட்டம் இம்மாதம் 9ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. ஓவியர் ஆதிமூலம், தன் இறுதிகாலம் வரைக்கும் வலியுறுத்தி வந்த எழுத்தாளர்கள் – ஓவியர்கள் கூட்டுச் செயல்பாட்டை மேலும் வளர்தெடுக்கும் நோக்கத்துடன் ‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பும் இக்கூட்டத்தில் தொடங்கப்படுகிறது.

சங்கீதத்தில் ராஜரத்தினம் பிள்ளை, இலக்கியத்தில் பாரதியார் போல் உன்னதக் கலைஞர்கள் ஒரு கலாசாரத்தில் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் வருவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஓவிய உலகில் அப்படிப்பட்ட வருகை ஆதிமூலம். ஒரு குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்று உலகளவில் தமிழகத்தின் ஓவிய முகமாக உயர்ந்து நிற்கும் ஆதிமூலத்தின் கலைப்பயணம் நாம் பெருமைப்படக்கூடிய ஒன்று. திருச்சி அருகே, துறையூர் ஜமீன் ஆட்சிக்குட்டிருந்த கீரம்பூர் கிராமத்தில் 1938ஆம் ஆண்டு பிறந்தார் ஆதிமூலம். விவசாயக் குடும்பங்களுக்கு படிப்பு ஒரு பொருட்டாகவே படாத காலகட்டம் அது. பித்தான்கள் இல்லாத சட்டையும் அரைஞான் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் டிரவுஷருமாக பள்ளிக்கூடம் போன பையன்களும் ஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை. ஆதிமூலத்தின் பெற்றோர்களுக்கும் அவரைப் படிக்க வைக்கும் எண்ணம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அபூர்வம் போல், தானாகவே போய் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார் ஆதிமூலம். சுற்றிலும் உற்சாகப்படுத்தாத சூழல் இருந்த போதும், படிப்பில் அவருக்கு ஆர்வம் இருந்தது. வகுப்பில் அவர்தான் முதல் 'ரேங்க்'. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, ஒன்றாம் வகுப்பு வாத்தியார் வரவில்லை என்றால் அன்றைக்கு இவர்தான் அந்த வகுப்புக்கு வாத்தியார் என்னும் அளவுக்கு பள்ளியில் ஆதிமூலம் பிரசித்தம். பள்ளிக்கூட நாட்களிலேயே தினமும் 'பிரேயர்' பாடல்கள் பாடுவது, நாடகங்களில் நடிப்பது, சிலேட்டில் படங்கள் போடுவது என ஆதிமூலத்துக்குள் இருந்த கலைமனம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.

அந்தக் காலத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை 'ஃபெயில்' என்று எதுவும் கிடையாது. எஸ்.எஸ்.எல்.சி.யில்தான் முதலில் வடிகட்டும் வேலைகள் ஆரம்பமாகும். ஆதிமூலத்தை அப்படி வடிகட்டி விட்டார்கள். இதனால், படிப்பு தடைபட்ட ஆதிமூலம், அடுத்த மூன்று வருடங்கள் அவரது மாமாவின் மளிகைக்கடையில் வேலை செய்தார். பிறகு, கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்ய முடிவு செய்து சென்னை வந்து, ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது, ஒரு விளம்பரச் சுவரொட்டிப் போட்டியை அரசாங்கம் நடத்தியது. இதற்காக ஆதிமூலம் வரைந்த, மகாபலிபுரத்தில் பேன் பார்ப்பது போல் உட்கார்ந்திருக்கும் குரங்கு படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது; 5000 பிரதிகள் அச்சிட்டு தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அந்தப் படம் ஒட்டப்பட்டது; தொடர்ந்து நிறைய விருதுகள் என மாணவப் பருவத்திலேயே 'பிரபல ஓவியர்' ஆகிவிட்டார் ஆதிமூலம்.

ஆதிமூலத்தின் பூத உடலுக்கு முன்னால் நின்று ஓவியர் ராஜான், "ஆதி... ஆதி... ஆதி... பல விஷயங்களில் எங்களுக்கு வழிகாட்டியா இருந்தியேப்பா'' என்று கதறியதைப் போல, பலவற்றில் முன்னோடி ஓவியர் ஆதிமூலம். கே.சி.எஸ்.பணிக்கருடன் சேர்ந்து, சோழமண்டலம் ஓவியர்கள் கிராமத்தை உருவாக்கியதில் தொடங்கி, பத்திரிகைகளுக்கும் நவீன ஓவியத்துக்கும் இடையே ஒரு உறவுப் பாலத்தை அமைத்தது வரை எல்லாவற்றிலும் தமிழக ஓவியர்களுக்கு சிறந்த வழிகாட்டி ஆதிமூலம்தான். சின்ன வட்டமாக சில நண்பர்கள் இணைந்து கொண்டுவந்த 'கசடதபற்' சிறுபத்திரிகை குழுவில் ஆதிமூலம் முக்கியப் பங்காற்றினார். 'கசடதபற' நண்பர்களுக்கு பத்திரிகை அச்சிடுவதற்கான செலவை சமாளிப்பதே பெரிய விஷயம். எனவே, ஓவியங்கள் போடுவது, அதற்கான 'பிளாக் மேக்கிங்’குக்கு செலவு செய்வதெல்லாம் அவர்களால் இயலாத காரியம். இதனால், ஆதிமூலமே 'பிளாக் மேக்கிங்' செய்து ஒவ்வொரு சிறுபத்திரிகைகளுக்கும் கொடுப்பார். ஆதிமூலம் முதன் முதலில் செய்த புத்தக அட்டை ஞானக்கூத்தனின் 'அன்று வேறு கிழமை' கவிதைத் தொகுப்பு. அக்காலகட்டத்தில் அது ஒரு புரட்சி. சிறுபத்திரிகைகள் மற்றும் புத்தக அட்டை வடிவமைப்பு மூலம், பழங்கால கல்வெட்டுகளின் பாதிப்புடன் உருவாக்கிய புதிய எழுத்துவகையை தமிழுக்கு அறிமுகப்படுத்தி, எழுத்தின் வரி வடிவத்தையே ஓர் ஓவிய அனுபவமாக்கினார் ஆதிமூலம். எழுபதுகளில் சிற்றிதழ்களின் பக்கங்களையும் புத்தகங்களையும் அலங்கரித்த இந்த எழுத்துக்கள் இன்று சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள், சினிமா தலைப்புகள் வரை பரந்து விரிந்திருக்கிறது.

அறிவுஜீவிகளுக்குத்தான் புரியும் என்றிருந்த நவீன ஓவியத்தை, தனது உயிரோட்டமான கோடுகள் மூலம் எல்லோரும் ரசித்து அனுபவிக்கும்படி செய்ததிலும் ஆதிமூலம்தான் முன்னோடி. 'ஜூனியர் விகடன்' இதழில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய 'கரிசல் காட்டுக் கடுதாசி' தொடருக்கு ஆதிமூலம் வரைந்த கோட்டுச் சித்திரங்கள் வாசகர்களின் நெஞ்சில் இன்றும் பசுமையான நினைவுகளாக நிலைத்திருப்பவை. வாரம்தோறும் அழகும் எளிமையும் மிளிரும் அவரது சித்திரங்கள் கி.ரா.வின் எழுத்துக்களுக்கு புதிய பரிமாணத்தை வழங்கின.

நேர்மையான கலை ஈடுபாடு, சமரசங்கள் இல்லாத உயிருள்ள கோடுகள், கவித்துவமான அழகியல் மொழி, மண்ணுடன் இணைந்த தமிழ் அடையாளம் என கோட்டோவியத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் ஆதிமூலம். உயிரும் உணர்வும் உள்ள நரம்புகள் போன்ற அவரது கோடுகள் தமிழர்களின் அடையாளமாகக் கொள்ளத்தக்கவை. ஆதிமூலத்தைப் பொருத்தவரைக்கும் ஓவியம் என்பது ஓர் அனுபவத்தை அல்லது காட்சியை சித்தரிக்கும் படமல்ல. அதுவே ஓர் அனுபவம். கிராமியக் கலைவடிவங்களும் சோழர்கால வார்ப்பு சிலைகளும் கண்ணாடி ஓவியங்களும் தேவாரமும் தெருக்கூத்தும் தமிழகத்தின் வாழ்பனுவங்களின் அடிப்படை இஸத்தை, இசையை, அழகை எவ்வாறு அழகுணர்வுடன் பகிர்ந்தனவோ அதைப் போலவே ஆதிமூலத்தின் ஓவியங்களும் ஆத்மார்த்தமான ஈடுப்பாட்டுடன் வெளிப்படுகிறது.

ஆதிமூலத்தின் காந்தி, மகாராஜா வரிசை கோட்டோவியங்கள் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் ஒருவரை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியவை. 1969இல் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி ஆதிமூலம் வரைந்த காந்தி வரிசை ஓவியங்கள் இன்றும் உலகம் முழுக்க பேசப்படுகின்றன. ஒரு கோணத்தில் புத்தர், மற்றொரு கோணத்தில் இயேசு என பல முகங்களை நினைவுக்கு கொண்டு வருபவை இவரது காந்தி ஓவியங்கள். மிகக் குறைவான, எளிமையான கோடுகள் மூலம் காந்திஜியின் முதுமையின் தளர்வை தோற்றத்திலும் உள்ளக் கனிவையும் தாய்மையின் கரிசனத்தையும் உணர்விலும் தந்துவிடுகிறார் ஆதிமூலம். ஒரு வெற்றிப் பார்முலா கிடைத்தவுடன் அதிலேயே பயணம் செய்து சுருங்கிவிடும் கலைஞர்கள் போல் இல்லாமல், தொடர்ந்து தன்னைக் கலைத்துப் போட்டுக்கொண்டே புதிய புதிய தேடல்களுடன் நகர்ந்தவர் ஆதிமூலம். கோட்டோவியங்களின் தனித்துவமான வெற்றிக்குப் பிறகு, கோடுகளுடன் வண்ணங்களை இணைத்து புதிய முயற்சிக்குத் தாவினார். அதன் வெற்றிக்குப் பிறகு, அதை அப்படியே நிறுத்திவிட்டு கனவுலக சித்தரிப்புகள் போன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட்டார். பிறகு அரூப வண்ண ஓவியங்கள் வரைந்தார். ஆரம்பகால கோட்டோவியங்கள் தொடங்கி, அரூப வண்ண ஓவியங்கள் வரைக்குமான ஆதிமூலத்தின் பயணம் இளம் தலைமுறை சித்திரக்காரர்களுக்கு ஒரு பாடம்.

1998 முதல் ரத்தப் புற்றுநோயால் தாக்கப்பட்ட ஆதிமூலம், சில நெருக்கமான நண்பர்கள் தவிர வேறு யாருக்கும் அந்தத் தகவலை கடைசிவரை சொல்லாமலே இருந்திருக்கிறார். மரணம் தன்னை நெருங்கிவிட்ட அனுதாபப் பார்வை தன் மீது விழுவதை அவர் விரும்பவில்லை. அது தன்னை மட்டுமின்றி, தன்னைச் சுற்றியும் உள்ளவர்கள் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும் என்று அவருக்குள்ளேயே போட்டு புதைத்துவிட்டார். ஆனால், புற்றுநோயால் அவரது உடல் உறுப்புகளைத்தான் வெற்றிகொள்ள முடிந்ததே தவிர அவரது தேடலையும் ஓவியம் வரையும் வேகத்தையும் குறைக்க முடியவில்லை. விடாத கடுமையான முயற்சிகள் மூலம் உலக பிரசித்திபெற்ற ஓவியராக ஆதிமூலம் அடையாளம் காணப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான்.

சமூகத்தில், ஓவியர்களுக்கு மரியாதையும் அங்கிகாரமும் இல்லாத காலகட்டத்தில் தன் ஓவியப் பயணத்தை தொடங்கியவர் ஆதிமூலம். வறுமையும் நீண்ட நாள் தாடியுமே ஓவியர்களின் முகங்களாக இருந்த நாட்கள் அவை. ஓவியர் என்பதாலாயே பெண் கொடுக்க மறுத்ததால் பலமுறை அவரது திருமணம் தள்ளிப்போயிருக்கிறது. அந்தச் சூழ்நிலையை மாற்றி, ஓவியர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியதில் ஆதிமூலத்தின் பங்கு மிக அதிகம். இன்றும் கிராமங்களில் இருந்து கலைதாகத்துடன் சென்னைக்கு வண்டி ஏறும் இளம் ஓவியர்களுக்கு ஆதிமூலம் ஒரு லட்சியக் கனவுதான். ஒரு பேட்டியில், ''இளம் ஓவியர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?'' என்ற கேள்விக்கு ஆதிமூலம் சொல்கிறார்: ''வைராக்கியத்தோட செயல்படணும். வண்ணங்களைப் பார்த்தா அது பாம்பு மாதிரி சீறிகிட்டு வரணும். தன்னை உணர்ந்து, தன் பிறப்பை உணர்ந்து ஒரு ஓவியனாக வேண்டும் என்ற லட்சியத்தில் வாழணும். எனக்கு நான்கு தங்கச்சிங்க இருக்காங்க; அவங்களைக் கட்டுக்கொடுக்கணும். அதனால என்னால ஓவியம் பண்ண முடியலைன்னெல்லாம் சொல்லக்கூடாது. நீ, இல்லைன்னா, அவங்க என்ன பண்ணியிருப்பாங்க? சாக்கு சொல்லி தட்டிக்கழிக்கக் கூடாது. ஓவியம் மீது உண்மையான பக்தி வேணும். நாம நினைச்சா ஜெயிக்கலாம்.'' சொன்னது மட்டுமல்லாமல், சொல்லியது போல் வாழ்ந்து வழிகாட்டியும் சென்றிருக்கிறார் ஆதிமூலம்.

(ஆதிமூலம் காலமானதும் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையை விரிவுபடுத்தி எழுதியது.)


02 July 2008

தமிழ்நாடு

நதிநீர் பிரச்னைகள்

பூனைக்கு யார் மணி கட்டுவது?


காவிரி தென்பண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருநைநதி என
மேலிடும் ஆறு பல ஓடி திரு
மேனி செழித்த தமிழ்நாடு
- பாரதி

கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் கடந்துவிட்டது. ''கர்நாடகாவில் தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி அமைந்த பிறகு பேசி தீர்த்துக் கொள்ளலாம்” என தமிழக முதல்வர் கருணாநிதியால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இந்த ஒரு மாதத்தில் எந்த முன் னேற்றமும் இல்லை. கர்நாடகாவின் புதிய முதல்வர் எடியூரப்பா, இந்த பிரச்னை தொடர்பாக அவ்வப்போது உதிர்த்த ஒன்றிரண்டு வார்த்தைகளும் அவ்வளவு நம்பிக்கையளிக்கும் படியாக இல்லை. இன்னொரு காவேரி பிரச் னையாக இதுவும் வருடக் கணக்காக இழுத்தடிக்கப்படும் என்றே தெரிகிறது.

தாமிரபரணி தவிர்த்து காவிரி, தென்பண்ணை, பாலாறு, கொரட்டலையாறு என தமிழகத்தின் எல்லாப் பெரிய நதிகளும் அண்டை மாநிலங்களில் உற்பத்தி யாகிதான் தமிழ்நாட்டுக்குள் ஓடுகின்றன. வைகை தமிழகத்திலேயே உற்பத்தி யாகிறது என்றாலும், தண்ணீருக்கு கேரளாவின் பெரியாற்றைதான் நம்பி இருக்கிறது. மழை பரவலாகவும் சம அளவிலும் பெய்யாததால் பக்கத்து மாநிலங்களில் இருந்து இந்த ஆறுகளில் வரும் தண்ணீரையே தமிழகம் பெருமளவில் நம்பி இருக்கிறது. இந்நிலையில், கடைமடை பாசனக்காரர் களுக்கே உரிய பிரச்னை... முந்தியவர்கள் விட்டால்தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் என்னும் நிலை. இப்படி, கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரைக் கும் குடிநீருக்கும் பாசனத்துக்கும் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம். இந்நிலையில் கர்நாடகம், கேரளா, ஆந்திரா என எல்லா பக்கத்து மாநிலங்களுடனும் நதி நீர்ப் பகிர்வில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தமிழகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

காவேரியில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகும் பிரச்னை தீர்ந்த பாடில்லை. இன்னொரு பக்கம் வற்றாத ஜீவநதியான பாலாற்றின் பாதையில் கர்நாடகம் புதிய பல ஏரிகளை உருவாக்கியதன் விளைவு, பாலாறும் வறண்டு விட்டது. இப்போது, மழைக் காலங்களில் பாலாற்றில் ஓடும் மூன்று நாள் தண்ணீருக்கும் பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட திட்டமிட்டுள்ள ஆந்திரா வின் முயற்சியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்திலும் சிக்கல்; ஒப்புகொண்டபடி 12 டி.எம்.சி. தண் ணீரை எந்த வருடத்திலும் ஆந்திரா தந்ததில்லை. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம், நெய்யாற்றில் கேரளா உருவாக்கும் பிரச் னைகள் என தமிழகம் மிகப்பெரிய ஒரு தண்ணீர் பிரச்னையை எதிர்நோக்கி உள்ளது.

காவேரி:

''ஒரு நீர் ஆதாரத்தை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பின்னர் அதன் பயன்பாட்டு உரிமை அவர்களுக்குதான் சொந்தம்' என்கிறது சர்வதேச நதிநீர் ஒப்பந்தம். அதன்படி காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். இரண்டாம் நூற்றாண்டில் கரிகாற்சோழன் கல்லணை கட்டியது தொடங்கி, பத்தொன்பது நூறாண்டுகளாக காவிரியைப் பயன்படுத்தி வருகிறார்கள் தமிழக விவசாயி கள். ஆனால், இன்று தங்களுக்குச் சொந்தமான நதியையே மற்றவர்களிடம் பிச்சைக் கேட்கும் நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.

காவேரியின் மீதான உரிமைப் பிரச்னை இன்று நேற்று தொடங்கினதல்ல. கி.பி.1146ஆம் ஆண்டு மைசூரை ஆண்டு வந்த போசாள மன்னன் நரசிம்மன் காவிரியின் குறுக்கே தடை ஏற்படுத்த முயல, அதற்கு எதிராக இரண்டாவது ராஜராஜன் தமிழகத்தில் இருந்து படையெடுத்து சென்ற அன்றே தொடங்கிய பிரச்னை இது. 1892ஆம் ஆண்டு சென்னை மாகாண பிரிட்டீஷ் அரசாங்கம் ஒரு ஆணை பிறப்பித்தது. சென்னை மாகாண எல்லைக்குட்பட்ட பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணை கட்டவேண்டுமானால், அதற்கு சென்னை மாகாண அரசாங்கத்தின் அனுமதி வேண்டும் என்கிறது அந்த ஆணை. அதன்பிறகு, 1924ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசாங் கத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் 93 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையும் மைசூரில் 44 டி.எம்.சி. கொண்ட புல்லம்பாடி அணையும் (பிறகு இது கிருஷ்ணராஜசாகர் என பெயர் மாற்றப்பட்டது) கட்டிக்கொள்ள முடிவானது.

1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில், ‘ஐம்பது ஆண்டு களுக்குப் பிறகு எதாவது மாற்றம் இருந்தால் இரண்டு அரசுகளும் கலந்து பேசி முடிவு செய்து கொள்ளலாம்' எனச் சொல்லப்பட்டிருந்தது. இதனைப் பிடித்துக் கொண்டு, ஐம்பது வருஷம் கடந்ததும் 1974ஆம் ஆண்டு, ‘‘1924 ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது'' என பிரச்னை செய்யத் தொடங்கியது கர்நாடகம். ஆனால் உண்மை நிலை, இன்று வரைக்கும் ஒப்பந்தம் காலாவதி ஆகவில்லை என்பதுதான். ‘தேவைப்பட்டால் மாற்றம் செய்துகொள்ளலாம்’ என்றுதான் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அன்றைய கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நீதிமன்றம் சென்றது. பிறகு, அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் வழக்கை வாபஸ் வாங்கியது. ஆனால், இந்திராகாந்தி சொன்னதை கர்நாடகம் கேட்கவில்லை. எனவே, மீண்டும் நீதிமன்றம் சென்றது தமிழகம். 1990ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிமன்றம் நடுவர் மன்றத்தை அமைக்கச் சொன்னது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தான், பதினாறு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு வெளி யானது.

இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. நீரைத் தமிழகத்துக்கு கொடுக்கச் சொன்ன நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி. தண்ணீரைக் கொடுக்கச் சொல்லியிருக்கிறது. ‘’இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி'' என தமிழ் ஆர்வலர்கள் பலரும் கொதித்து எழுந்தார்கள். ஆனால், இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. தண்ணீரை மேட்டூரில் கொடுக்கச் சொல்லியிருந்தார்கள். இறுதித் தீர்ப்பில், பிலிகுண்டுவில் 192 டி.எம்.சி. கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். பிலிகுண்டு மேட்டூருக்கு மேல்புறத்தில் 60 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேட்டூரில் அளவெடுப்பதைவிட அங்கே துல்லியமாக அளவெடுக்க முடியும் என்பதால் பிலிகுண்டுவைத் தேர்வு செய்திருக்கிறார்கள். பிலிகுண்டுவுக்கும் மேட்டூ ருக்கும் இடைப்பட்ட பகுதியில் பெய்யும் மழை நீரின் அளவு தோராயமாக ஆண்டுக்கு 25 டி.எம்.சி. எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆக 192ம் 25ம் சேர்த்து 217 வருகிறது. எனவே, இடைக்காலத் தீர்ப்புக்கும் இறுதித் தீர்ப்புக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. அதைவிட இப்போதுள்ள முக்கியமான பிரச்னை, இறுதித் தீர்ப்பில் கொடுக்கச் சொல்லியுள்ள தண்ணீரையாவது கர்நாடகம் கொடுக்குமா என்பதுதான்.

மத்திய அரசு, நீதிமன்றம், நடுவர் மன்றம் - யார் சொன்னாலும் கேட்பதில்லை என்னும் போக்கைத்தான் கர்நாடகம் கடைபிடித்து வருகிறது. இடைக்காலத் தீர்ப்பில் சொல்லப்பட்ட அளவு தண்ணீரை எப்போதுமே கர்நாடகம் கொடுத்ததில்லை. அதிகம் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் வருடங் களில் உபரி நீரினை கழித்துவிடும் ஒரு வடிகால் பகுதியாகத்தான் தமிழ்நாட்டைக் கடந்த 30 வருடங்களாக நடத்தி வருகிறது. மேலும், கர்நாடகத்தில் 5 லட்சம் ஏக்கராக இருந்த விவசாயப் பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 12 லட்சம் ஆக்கியிருக்கிறார்கள். இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம் தனது விவசாயப் பரப்பை மேலும் அதிகரித்துக்க்கூடாது எனச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அதனையும் அவர்கள் பொருட்படுத்த வில்லை. இப்போது, 12 லட்சம் 24 லட்சம் ஆகியிருக்கிறது. இப்படி, இடைக்காலத் தீர்ப்பை உதாசீனம் செய்ததைப் போல இறுதித் தீர்ப்பையும் அவர்கள் உதாசீனம் செய்யலாம். அப்போது நம்மால் என்ன செய்யமுடியும்?

இதற்காகத்தான், தீர்ப்பை அமல்படுத்தும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நடுவர்மன்றத்திடம் கேட்டது தமிழகம். அதுகுறித்த எந்த விபரமும் இறுதித் தீர்ப்பில் இல்லை. இந்நிலையில், அப்போது சென்னை வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ‘‘அமல்படுத்தும் அமைப்பு ஏற்படுத்தப்படும்'' எனக் கூறினார். இன்றுவரைக்கும் அந்த அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை!

முல்லைப் பெரியாறு, நெய்யாற்றுத் திட்டம்:

கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான காவிரி பிரச்னை தொடர்கதை மாதிரி சமசரச பேச்சு, நீதிமன்றம் என கேரளாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே இழுத்தடிக்கப்படும் பிரச்னை முல்லைப் பெரியாறு.

1886ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திருவாங்கூர் மன்னருக்கும் சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையில் தேங்கும் நீரினை ஒரு சுரங்கம் மூலமாகத் திருப்பி மதுரை, இராமநாதபுரம் ஜில்லாகளின் வறண்ட பகுதிகளில் பாசனத்துக்குப் பயன்படுத்த வகை செய்த இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் குறிக்கப்பட்டது. அணை கட்டுவ தால் நீரில் மூழ்கும் 8000 ஏக்கர் நிலத்துக்கும் வாடகையாக ஆண்டு தோறும் ஏக்கருக்கு ஐந்து ரூபாய் வீதம் மொத்தம் 40,000 ரூபாயை பிரிட்டீஷ் நாண யமாக சென்னை அரசாங்கம் திருவிதாங்கூர் மன்னருக்குத் தரவேண்டும் எனவும் ஒப்புகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம்படி 1895ஆம் ஆண்டு பெரியாற் றின் குறுக்கே அணை கட்டி முடிக்கப்பட்டது. சென்னை மாகாணம் தமிழ் நாடாகவும் திருவிதாங்கூர் சமஸ்தானம் கேரளாவாகவும் ஆனபிறகும் முல்லைப் பெரியாறில் சிக்கல்கள் எதுவும் இன்றி, அறுபது ஆண்டுகள் வரைக் கும் பாசனம் நடந்து வந்தது.

1955ஆம் ஆண்டு பெரியாறு தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின்உற்பத்தி செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டு பழைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக புது ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் நீரில் மூழ்கும் நிலத்துக்கான வாடகை ஏக்கருக்கு ஐந்தில் இருந்து முப்பது ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்படி 2,40,000 ரூபாயை ஆண்டுதோறும் தமிழக அரசு கேரளாவுக்கு கொடுத்து வருகிறது. இந்நிலையில், 1963ஆம் ஆண்டு முதன்முதலாக ‘அணை பல வீனமாகிவிட்டது. கேரள மக்களுக்கு ஆபத்து. எனவே, அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கவிட மாட்டோம்'' எனப் பிரச்னையை எழுப்பியது கேரள அரசாங்கம்.

முல்லைப் பெரியாறின் முழு கொள்ளளவான 152 அடி நீர் இருக்கும் போதும் மிக உயர்ந்த நில நடுக்கம் ஏற்பட்டால்கூட உடையாத பலத்துடன்தான் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக் கட்டப்பட்ட பிறகு இப்பகுதியில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அணையில் ஒரு விரிசல்கூட விழுந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், கேரளா பயத்தைப் போக்க மத்திய அரசின் நிபுணர் குழு அணையைப் பார்வையிட்டது. அந்தக் குழு 152 அடி வரை நீரைத் தேக்கக்கூடிய பலத்துடன் அணை பலமாகத்தான் இருக்கிறது என அறிக்கைத் தந்தது. என்றாலும், கேரள மக்களின் அநாவசி யமான பீதியைப் போக்க சில எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் அறிவுரை கூறியது. இதன் அடிப்படையில் 26 கோடி ரூபாய் செலவில் அணையைப் பலமூட்டும் பல நடவடிக்கைகள் தமிழகத்தால் எடுக்கப்பட்டன. கேரளா ஏற்படுத்திய இடையூறுகளுக்கு இடையே மிகுந்த பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும்தான் தமிழக பொறியாளர்கள் இந்தப் பணிகளை செய்து முடித்தார்கள்.

இத்தனைப் பணிகளுக்குப் பின்னரும், 1978ஆம் ஆண்டு மீண்டும் அணை பற்றிய புகாரை எழுப்பிய கேரளா, ‘‘அணை உடைந்துவிடும், 30 லட்சம் கேரள மக்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவார்கள்'' என்றது. இதனையொட்டி அணையைப் பார்வையிட்ட மத்திய அரசின் பாசன கமிஷன் அதிகாரிகள், அணை நல்ல நிலையில்தான் இருக்கிறது எனவும் என்றாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 145 அடியாகக் குறைத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்கள். தமிழ அரசு அதனை ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தை 145 அடியாகக் குறைத்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரச்னை செய்தது கேரளா. இப்போது, அணையின் நீர்மட்டம் 152இல் இருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. இதனால், நீரில் மூழ்கும் நிலப்பகுதி 4677 ஏக்கராக குறைந்தது. இப்பகுதியில் சுற்றுலா கேளிக்கை சாதனங்களை நிறுவி சம்பாதிக்கிறது கேரளா. ஆனாலும், இன்றும் தொடர்ந்து இந்தப் பகுதிக்கும் சேர்த்து முதலில் தீர்மானித்தபடி 8000 ஏக்கருக்கான வாடகையையே கொடுத்து வருகிறது தமிழக அரசு. மேலும், நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 10.4 டிம்சியில் இருந்து 6.4 டிஎம்சியாக குறைந்துவிட்டதால் பாசனப்பகுதியில் 1,25,000 ஏக்கர் நிலம் தரிசாக மாறியது. 140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பெரியாறு மின்நிலயத்தில் 40 சதவிகிதம் உற்பத்திக் குறைந்தது. மேலும், முல்லைப் பெரியாறு அணையில் வழிந்துபோகும் தண்ணீரை இடுக்கி அணையில் தேக்கி மின் உற்பத்தி செய்து அதனை தமிழ்நாட்டுக்கே விற்றது கேரளா. முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் இவ்வளவு நஷ்டங்களைத் தாங்கி வருகிறது தமிழகம். நிலமை இவ்வாறு இருக்க தமிழ்நாடுதான் ஏதோ குற்றம் செய்துவிட்டதாக பேசி வருகிறது கேரள அரசு. இது முழுக்க முழுக்க அரசியல் காரணங் களுக்காக சொல்லப்படும் புரளியே தவிர, தொழில்நுட்ப அடிப்படையில் ஒரு சதவிகிதம்கூட இதில் உண்மையில்லை என்பது ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் புரியும்.

2006ஆம் வருடம் உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறில் முழு நீர் மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தாலாம் என உத்தரவு கொடுத்தப் பிறகு, ‘‘பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யலாம். நீங்கள் வேண்டுமானால் 152 அடிக்கு புது அணை கட்டிக்கொள்ளுங்கள்'' என்றார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். இது, காலம் கடத்துவதற்கான தந்திரமே தவிர இது வேறு ஒன்றும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட அதே காலகட்டத்தில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பேச்சிப்பாறை அணையும் கட்டப்பட்டது. இந்த அணை இப்போதும் பலமாகத் தான் இருக்கிறது. 2000 வருடம் பழமையான கல்லணையும் பல பெரிய ஏரி களும் தமிழகத்தில் உள்ளன. இவைகள் உடைந்துவிடும் என யாரும் இதுவரை கூக்குரல் எழுப்பியதில்லை.

முல்லைப் பெரியாறில் கேரளா பிரச்னை செய்வதன் உண்மையான நோக்கம் அதன் கீழ்பகுதியில் இருக்கும் இடுக்கி அணைதான். முல்லைப் பெரியாறு அணையைவிட 34 மடங்கு பெரியதாக இது கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு தண்ணீர் கொண்டு வரத்தான் முல்லைப் பெரியாற்றில் அவர்கள் பிரச்னை செய்கிறார்கள். இடுக்கி அணைக் கட்டப்பட்ட பிறகே அவர்கள் பிரச்னையை ஆரம்பித்தார்கள் என்பதை கவனிக்கலாம்.

தமிழ்நாட்டுக்கு கேரளாவோடு சிக்கலிலுள்ள இன்னொரு திட்டம் நெய்யாற் றுத் திட்டம். இத்திட்டத்தின்படி நெய்யாற்றில் இருந்து கன்னியாகுமரி மாவட் டத்துக்கு விநாடிக்கு 150 கன அடி நீரை கேரளம் தரவேண்டும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் பிரிந்த பிறகு தொடங்கி இன்று வரைக்கும் இந்தத் தண்ணீரை தர மறுத்து வருகிறது கேரளம். இத்தனைக்கும் கேரளாவின் மொத்த நீர்வளத்தில் 88 சத விகிதம் கடலில் கலக்கிறது என்பதுதான் வேதனையானது.

கிருஷ்ணா நதி நீர் திட்டம், பாலாறு:

கர்நாடகம், கேரளாவுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டம் தொடங்கி பாலாற்றின் குறுக்கே கட்டும் அணை வரைக்கும் ஆந்திரா இன்னொரு பக்கம் பிரச்னை செய்கிறது.

சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துவர, சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் குடிநீர் பிரச்னை பூதாகரமாகத் தலைதூக்கியது. எனவே, அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி, மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாயும் கிருஷ்ணா நதியின் உபரி நீரை சென்னைக்கு கொண்டுவர திட்டமிட்டார். 1976இல் இந்திரா காந்தி முன்னிலையில் கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா, தமிழ்நாடு முதல்வர்கள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தப்படி கர்நாடகா, மகராஷ் டிரா, ஆந்திரா மூன்று மாநிலங்களும் தலைக்கு 5 டி.எம்.சி. நீரை ஒவ்வொரு ஆண்டும் சென்னையின் குடிநீர் தேவைக்கு வழங்கவேண்டும். இந்த நீர், ஆந்தி ராவிலுள்ள சோமசீலா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டலேறு நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து தெலுங்கு - கங்கா கால்வாய் வழியாக ஆந்திரா, தமிழ்நாடு எல்லையிலுள்ள பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப் படும். மூன்று மாநிலங்களும் வழங்கும் 15 டி.எம்.சி. தண்ணீரில் விரயம் போக 12 டி.எம்.சி. தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வரும். இந்த தெலுங்கு - கங்கா கால்வாயைத்தான் சமீபத்தில் சாய்பாபா டிரஸ்ட் சீரமைத்துத் தந்தது.

ஆனால், கிருஷ்ணா நதி நீர் திட்டத்துக்கு செலவிடப்பட்ட மதிப்புடன் ஒப்பி டும்போது வரும் தண்ணீரின் அளவு மிகக்குறைவு. 1996இல் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் வேலைகள் முடிந்த பிறகு தொடங்கி, இன்றைக்கு வரைக்கும் ஒப்பந்தபடி ஒரு வருடம்கூட 15 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரா வழங்கிய தில்லை. வேண்டா வெறுப்பாக 1/2, 1. 2. 3 என மிகக் குறைவான தண்ணீரையே திறந்துவிட்டிருக்கிறது. இதில் மண் உறிஞ்சுவது, இடையில் விவசாயிகள் பைப் போட்டு திருடுவது, கால்வாய் உடைத்துக் கொண்டு போனது போக மிகச் சொற்பமான தண்ணீரே பூண்டியை வந்தடைந்திருக்கிறது. இடையில் தண்ணீரை எடுத்த விவசாயிகளை கட்டுப்படுத்த ஆந்திரா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த பன்னிரண்டு வருடத்தில் அதிகமாக தண்ணீர் வந்தது 2007ஆம் ஆண்டுதான். அந்த வருடம் 6 டி.எம்.சி. தண்ணீர் பூண்டிக்கு வந்திருக்கிறது. இதற்கு சாய்பாபா டிரஸ்ட் கால்வாயை செப்பனிட் டது ஒரு காரணம் என்றாலும், முக்கியமான காரணம் அதிக மழை பெய்தது தான். போதுமான தண்ணீர் இருந்ததன் காரணமாக இடையில் விவசாயிகள் தண்ணீரை பைப் போட்டு எடுக்கவில்லை. ஆனால், மழை குறைவான வருடங் களில் இதுமாதிரி அவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. வரும் காலங்களில் அவர்கள் தண்ணீரை எடுத்தால், இதுவரைக்கும் எப்படி பார்த்துக் கொண்டிருந்ததோ அதுமாதிரிதான் ஆந்திரா பார்த்துக் கொண்டு இருக்கும்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி திருப்ப திட்டமிடும் ஆந்திராவின் முயற்சி வெற்றிபெற்றால் பாலாறும் செத்த ஆறாக ஆகிவிடும். பாலாற்றில் இப்போது மழைக்காலங்களில் மட்டும்தான் தண்ணீர் வருகிறது என்றாலும் அதனால் பாலாற்றின் பாதையில் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஊற்றுக்கால் மிக நன்றாக உள்ளது. இதனால் பாலாறை பூமிக் கடியில் பாயும் ஆறு என்பார்கள். மழைக்கால பாலாற்று தண்ணீரை இம்மா வட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப முடியும். காவிரி மாதிரியே காட்டு மழை பெய்து வெள்ளம் வந்தால்தான் பாலாற்றிலும் தண்ணீரைப் பார்க்கமுடியும் என்னும் நிலை விரைவில் ஏற்படும். நாம் அதைப் பார்க்கத் தான் போகிறோம்.

இப்படி கர்நாடகம், கேரளா, ஆந்திரா என மூன்று பக்கமும் அடிவாங்கும் நிலை உருவானதுக்கு தமிழகத்தின் மிதமான போக்கும் அரசியல்வாதிகளின் அக்கறையின்மையும்தான் காரணம் என்பதுதான் உண்மை. மீண்டும், மீண்டும் நீதிமன்றம், போராட்டம் என நதிநீர்ப் பிரச்னைகளை இழுத்தடித்தால் கேரளா - தமிழ்நாடு, கர்நாடகா - தமிழ்நாடு, ஆந்திரா - தமிழ்நாடு மக்களுக்கு இடையே மனக்கசப்பும் பகைமையுணர்ச்சியும்தான் வளரும். மேலும், நீதிமன்றங்கள் மூலமும் மத்திய அரசு அதிகாரத்தின் மூலமும் தீர்வுகாண முடியாது என்பதும் ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. எனவே, மாநிலங்களுக்கு இடையே யான நதி நீர் பகிர்வை சமரச முயற்சிகள் மூலம்தான் முடிவு செய்யமுடியும். அது எப்படி என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.

இதற்கு அவர் முன்வைக்கும் ஒரே தீர்வு, ‘இந்திய நதிகள் இணைப்பு'. கங்கை - காவிரி இணைப்புத் திட்டம், தென்னக நதிகள் இணைப்பு திட்டம் ஆகியவை நீண்ட காலமாக பேசப்பட்டுவரும் திட்டங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந் திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இவற்றைச் செயல்படுத்துவது இயலாத ஒன்றல்ல என்கிறார்கள் பொறியியலாளர்கள். பெரியாறு - வைகை இணைப் பும், காவிரி - வெள்ளாறு - வீராணம் இணைப்பும் இப்போது சாத்தியமாகி இருக்கிறது. இதுபோல் பிரம்மபுத்ரா, கங்கை ஆகிய இரண்டு பெரிய நதிக ளையும் திருப்பி மற்ற ஆறுகளில் விடுவதுதான் பிரதான நோக்கம். இதில், பிரம்மபுத்ராவின் குறுக்கே சைனா அணை கட்டிக்கொண்டிருக்கிறது. அந்த அணை வேலைகள் முடிந்தால் அந்த நதியில் தண்ணீர் வராது. இப்போது ஒரிஸாவில் வளர்ச்சி இல்லை. பின்னால் அங்கே வளர்ச்சி திட்டங்கள் தொடங்கும் போது அவர்களும் தண்ணீர் தரமாட்டேன் என்பார்கள்.

இன்னொரு பக்கம், நதி நீர் இணைப்பு சாத்தியமற்ற திட்டம் என்கிறார்கள் சூழலியலாளர்கள். நதிகளை திருப்பிவிடுவது இயற்கையின் சுழற்சியின் பல மாற்றங்களை உருவாக்கும். சுற்றுப்புறச்சூழல் சார்ந்தும் மற்றும் பலவிதங் களில் இதன் பக்க விளைவுகள் இருக்கும். புதிய பிரச்னைகள் உருவாக்கும். எனவே, இயற்கையின் சுழற்சிக்குத் தக்க செயல்பட்டு நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் சிறந்தது என்கிறார்கள் அவர்கள். ஆக, நதிகள் இணைப்பு திட்டம் இப்போதைக்கு கானல் நீர்தான்!

இதுவரைக்கும் நாம் பார்த்தது, தமிழகம் எதிர்கொண்டுள்ள தண்ணீர் பிரச்னை யில் மிகப் பரவலாக கவனத்தைப் பெற்றவற்றை மட்டும்தான். சமீபத்தில், ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திடீரென விஸ்வரூபமம் எடுத்தது போல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் தூங்கிக் கொண்டிருக்கும் பல சின்ன சின்ன திட்டங்கள் வெடிக்கக் காத்திருக்கின்றன. கொந்தளிப்பான நேரங்களில் அரசியல்வாதிகளும் சினிமாகாரர்களும் பிரச்னைகளை கையில் எடுத்து மேலும் சிக்கலாக்காமல், விவசாயிகளும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பேசினால் மட்டுமே எதிர்காலத்தில் சூமுகமான தீர்வு நோக்கி நகர முடியும்.

ஒரு மனிதனுக்கு சராசரியாக எவ்வளவு தண்ணீர் தேவை என்பது குறித்த டாக்டர் மாலின்சல் கென்மார்க்கின் ஆய்வு உலகம் முழுக்க எல்லா நாடுக ளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் சொல்கிறார்... ‘ஒரு மனிதனின் வளமான வாழ்வுக்கு 1700 – 2000 கனமீட்டர் தண்ணீர் போதுமானது. 1000 கனமீட்டருக்கும் கிழே சென்றால் அங்கு பற்றாக்குறை என அர்த்தம். இதனால் அந்நாட்டில் மோசமான சமூகப் பிரச்னைகள் உதயமாகும் வளர்ச்சி தடைபடும்’ என்கிறார். தமிழகத்தில் நிலத்தடி நீராதாரத்தையும் சேர்ந்து பார்த்தாலும் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1000 கனமீட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஆற்றுநீர் தடைபட்டால் இது 600 கனமீட்டராகக் குறையும். மிக மோசமான ஒரு அபாயக் கட்டத்தை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது.

எதிர்கால சந்ததியைக் காப்பாற்ற உடனடி தேவை மக்கள் விழிப்புணர்வுதான். வெளிமாநிலங்களில் இருந்து வரும் தண்ணீர் உரிமையைக் கேட்டுப் பெறுவதுடன் ஏரி, குளம் என நமது நீராதாரங்களையும் காப்பாற்ற வேண்டும். அண்டை மாநிலங்களுடன் பேசி தீர்ப்பதைவிட நம்மால் உடனே செய்ய முடிவது ஏரி, குளங்களைக் காப்பாற்றுவதுதான். முக்கியமான பெரிய ஏரிகளை குடியிருப்புகளாக மாற்றுவதை நாம் உடனே நிறுத்த வேண்டும்.

பூனைக்கு யார் மணி கட்டுவது?

(தகவல்கள் உதவி: பொறியாளர்கள் கோமதிநாயகம், குப்புராஜ் மற்றும் தியடோர் பாஸ்கரன்)

30 April 2008

நேர்காணல்

நாஞ்சில் நாடன்
எழுத்தாளனின் அச்சமும் கவலையும்

முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்தில் ஓர் உயர் அதிகாரி போல் இருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். பேசத் தொடங்கினால், தோளில் துண்டும் வேஷ்டியுமாக குளத்தங் கரையோரம் நின்று கவலையோடு வயக்காட்டைப் பார்க்கும் கிராமத்து விவசாயியாக மாறிவிடுகிறார்! ஆறு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், விவாதங்களை எழுப்பிய பல கட்டுரைகள் என தமிழ் மொழிக்கு செழுமை சேர்த்த தனித்துவமான எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில்நாடனா இவர் என ஆச்சரியம்.

மாறிவரும் சமூக மதிப்பீடுகள் முன் மனிதர்களும் மண் சார்ந்த உறவுகளும் என்னவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை நுட்பமாகவும் அழகாகவும் எடுத்துரைப்பவை நாஞ்சில்நாடன் படைப்புகள். நகரங்களுக்கு குடிபெயரும் படித்த கிராமத்து இளைஞர்களின் தவிப்பை இவர் அளவுக்கு இயல்பாக பதிவு செய்வதர்கள் யாரும் இல்லை. இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலே தங்கர்பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. இலக்கியம், பண்பாடு, அரசியல், சினிமா, குடி எனப் பல்வேறு விஷயங்கள் குறித்த நாஞ்சில் நாடனுடனான மிக நீண்ட சந்திப்பின் ஒரு பகுதி இங்கே....

"பொங்கல், தமிழர்கள் பண்டிகை. ஆனால், நாம இப்போ தீபாவளியைக் கொண்டாடுவது மாதிரி பொங்கலில் ஆர்வம் காட்டுவதில்லையே?”

“பொங்கல் தமிழர்களுக்கான பண்டிகை எனச் சொல்வதுடன் எனக்கு முரண்பாடு இருக்கு. பொங்கல், விவசாயிகள் பண்டிகை. தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். விவசாயத்தையும் இயற்கையையும் மதிக்காத ஒரு சமூகம், எப்படி அவர்கள் பண்டிகையை மட்டும் தங்கள் பண்டிகையாகக் கொண்டாட முடியும்? தமிழ்நாடு தவிர, எனக்கு தெரிந்து வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் வேறு பெயரில், வேறு வடிவத்தில் இந்தப் பண்டிகை விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. எனவே, பொங்கலை தமிழ்நாட்டுக்கு மட்டுமான ஒரு பண்டிகையாக எடுத்துக்கொள்ள முடியாது.

"திராவிட அரசியலுக்குப் பிறகுதான், தைப் பொங்கலுக்கு தமிழர்கள் பண்டிகை என்ற சாயம் ஏற்றப்பட்டது. சரி, தமிழர்கள் பண்டிகை என்றே வைத்துக்கொள்வோம்; எல்லாத் தமிழர்களும் பொங்கலைக் கொண்டாடுகிறார்களா என்ன? தமிழினத்தில் இருபத்தைந்து சதவிகிதமான கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பொங்கல் கொண்டாடுவதில்லை. நகரத்தில் வாழ்பவர்கள், விவசாயம் சம்பந்தப்படாதவர்கள் ஆகியோருக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களைப் பொறுத்தவரை பொங்கல் என்பது டி.வி. நிகழ்ச்சிகளும் புதிய சினிமாக்களும் மட்டும்தானே.

"ஃபேஷன் என்கிற பெயரில் நம் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்பட்டிருக்கு. நம் நிலத்துல வெளைகிற தானியங்களைக் கொண்டே செய்கிற பண்டிகைப் பலகாரங்கள் பல இருக்கு. அரிசி, தேங்காய், சர்க்கரை மூன்றும் இருந்தா சர்க்கரைக் கொழுக்கட்டை; சர்க்கரைக்குப் பதிலா உப்பு சேர்த்தா உப்பு கொழுக்கட்டை. இதுல எதையும் வெளியே இருந்து வெலைக்கு வாங்கலை. இப்படி நூற்றுக் கணக்கானப் பலகாரம் செய்து சாப்பிட்டுருக்காங்க நம்ம தாத்தாவும் பாட்டியும். அறுபது வருஷத்துக்கு முந்தி நாஞ்சில் நாட்டுக்காரன் ஜிலேபி, அல்வா, லட்டுன்னு எதையாவது கண்டிருப்பானா. ஆனால், இன்னைக்கு எந்த ஊரு ஸ்வீட் ஸ்டாலாக இருந்தாலும் அங்கே குறைந்தது இருபத்தைந்து வகையான ஸ்வீட்களைப் பார்க்கலாம். அதில ஒன்னு கூட தமிழ்நாட்டு பலகாராம் கிடையாது. எல்லாமே வடநாட்டில் இருந்து இறக்குமதி ஆனவை. கொஞ்ச நாளைக்கு முன்னால வரைக்கும் சில கடைகள்ல அதிரசம் பார்க்கலாம். இப்போது அதுவும் கிடையாது. நம்ம நாட்டுப் பலகாரங்கள் மறக்கடிக்கப்பட்டு, இந்த ஸ்வீட்கள் எல்லாம் ஏன் நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது? கிராமத்து வாசலுக்கு புரோட்டா கடை வந்தாச்சி. கிராமத்து மனுஷனுக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட வேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடி வந்தது? இதெல்லாம்தான் நாகரிகம், வளர்ச்சின்னு பேன்ஸியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இவை நமக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறது? இந்த மாற்றங்கள் ஆரோக்கியமான மாற்றங்கள் இல்லை.”

"சுதந்திரத்துக்குப் பிறகு, கடந்த அறுபது வருஷத்துல எமர்ஜென்ஸி உட்பட எவ்வளவோ பெரிய அரசியல் மாற்றங்களை தமிழ்நாடு சந்திச்சிருக்கு. ஆனால், இதற்கான எதிர்வினை, பதிவுகள்ங்கிறது நவீன தமிழ் இலக்கியத்தில் மிகக் குறைவு. நவீன இலக்கியப் படைப்பாளிகளில் பலர் அரசியல், சமூக பிரச்னைகளைப் பற்றி கருத்து சொல்வது மிகக் குறைவு. ஏன் படைப்பாளிகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புறாங்க?”

"உண்மைதான். தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்? ஓவியன், சிற்பி, இசைக் கலைஞன் எல்லோரையும்விட கூடுதல் சமூகப் பொறுப்பும் அக்கறையும் உள்ளவன் எழுத்தாளன்.

"தேனியில இருந்து ஆண்டிப்பட்டி வழியா மதுரைக்கு வர்ற வழியில இருந்த ஒரு மலையை இப்போ காணோம். கிரானைட்டா எக்ஸ்போர்ட் ஆயிடுச்சு. அந்நியச் செலாவணி, தேசிய வருமானம்னு வர்த்தக நிபுணர்கள் சொல்றாங்க. மக்களுக்கும் சந்ததிகளுக்கும் சொந்தமான, நிரந்தரமான ஒரு இயற்கைச் செல்வத்தை இல்லாம ஆக்குவதற்கான உரிமையை உனக்கு யார் தந்தான்னு அவர்களை எழுத்தாளன் கேட்க வேண்டாமா?

"முப்பது வருஷத்துக்கு முன்னாடி திருவனந்தபுரம் கோவளம் பீச்சுக்குப் போனா, எல்லாப் பகுதிக்கும் என்னால போயிட்டு வரமுடியும். அதன் அழகை ரசிக்கலாம்; உட்கார்ந்து இளைப்பாறலாம். ஒரு சாதாரண குடிமகனா என் இந்த உரிமை, இப்போது பறிக்கப்பட்டு பத்து சதமானம் மக்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. என் பாக்கெட்டுல பத்தாயிரம் ரூபாயும் ஸ்டார் ஹோட்டல்ல அறையும் போட்டிருந்தா மட்டும்தான் இப்போ அந்தக் கடலை நான் ரசிக்க முடியும். நான் ஒன்னும் அந்த இடத்தை வெட்டி வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடப் போவதில்லையே. ஒரு அரை மணி நேரம் அந்த இடத்தைப் பார்ப்பதற்கான உரிமை சாதரண குடிமகனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் மறுக்கப்படுகிறது. ஒரு பொதுச்சொத்தை செல்வந்தர்கள் கூறுபோட்டிருக்கிறார்கள். என் நாட்டின் இயற்கையில் எனக்குப் பங்கு இல்லையான்னு ஒரு எழுத்தாளன் கொதிச்சு எழுந்திருக்க வேண்டாமா?

"ஒரு நாள்ல, ஒவ்வொரு டிராபிக்கிலயும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கு? என்னுடைய அரை மணிநேரம், உங்கள் அரை மணி நேரம், இன்னும் லட்சக்கணக்கான மக்களின் அரை மணி நேரங்கள் பாழாய்ப் போயிட்டு இருக்கு. எவ்வளவு சத்தம், எவ்வளவு தூசி? இதுக்கெல்லாம் யார் பொறுப்புங்கிற கேள்வி ஒரு எழுத்தாளனுக்கு வரணும் இல்லையா? வரும்; ஆனால், அதை எழுத்துல வெளிப்படுத்தப் பயப்படுகிறான்.

"நான் எழுத்தாளனை நேரடி அரசியல்ல ஈடுபடுன்னு சொல்லலை. இந்த சமூகத்துக்கு நீ கடமைப்பட்டவனா, இல்லையான்னுதான் கேட்கிறேன். இப்படி உங்களையும் உங்க சமூகத்தையும் பாதிக்கிற, உங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கண்டுக்காம எப்படி எழுத முடியும்? படைப்புகளின் அர்த்தம் என்ன? சமூக ரீதியாகவும் மத ரிதியாகவும் வர்க்க ரீதியாகவும் எந்த வகையில் அநியாயம் நடந்தாலும் அதைச் சொல்றதுதானே படைப்பு. வங்காளம், மகாராஸ்டிரா, கேரளா மாநில எழுத்தாளர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கான்னு கேட்டால் இல்லைன்னுதான் சொல்வேன்.

"இன்னொரு பக்கம், எதுக்கு அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவங்களைப் பகைச்சிக்கனும்? நாளைக்கு அவனால ஒரு காரியம் ஆகவேண்டி இருக்கும்ங்கிற ஒரு எதிர்பார்ப்பு இப்போது எழுத்தாளர்களுக்கு உருவாகி இருக்கு. எனக்கோ, என் முந்தின தலைமுறை எழுத்தாளர்களுக்கோ இல்லாத எதிர்பார்ப்பு இது. முப்பது வருஷத்துக்கு முன்னாடி... முப்படைகளுக்கான ஒரு நிகிழ்ச்சி. அதில், அல்லா ரக்கா தபேலா, பிஸ்மில்லாகான் ஷெனாய் கச்சேரி. பிஸ்மில்லாகான் வாசித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது, முன்றாவது தளங்களில் இருந்து ஒரு சலசலப்பு. பிஸ்மில்லா கான், ‘’சுப்ரகோம்‘ (‘அமைதியாக இருங்கள்) என்று இரண்டு முறைக் கேட்டுக்கொள்கிறார். சலசலப்புக் குறையவில்லை. மூன்றாவது முறை, ஷெனாயைத் தூக்கி பைக்குள் வைத்துக்கொண்டு எழுந்து போய்விட்டார். அல்லா ரக்கா, தபேலாவை மூடுகிறார். இந்திய அரசின் மூப்படை தளபதிகளும், மகாராஸ்டிரா கவர்னரும் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிற ஒரு அரங்கத்தில் அவர்களை நிராகரித்துவிட்டு செல்கிற ஒரு கர்வம் அந்தக் கலைஞர்களுக்கு இருந்தது. ‘’நீ யாரா இருந்தால் எனக்கென்ன; என்கிட்ட இருப்பது சரஸ்வதி; வித்தை, அதுக்கு முன்னால நீ பணிந்துதான் ஆகணும்‘’ என்கிறார் பிஸ்மில்லாகான். அமெரிக்காவுக்கு வந்து செட்டிலாகிருங்கன்னு பிஸ்மில்லாகானைக் கூப்பிடுறாங்க. அங்கே விஸ்வநாதர் ஆலயமும், கங்கா நதியும் இருக்கான்னு கேட்கிறார், அவர்.

"நம் மரபிலும் கலைஞர்களுக்கு இந்த செம்மாந்த நிலை இருந்திருக்கிறது. கிழிந்த துணியை உடுத்திக்கொன்டு, அரசனுக்கு முன்னாடி, ‘வளநாடும் உனதோ, மன்னவனும் நியோ; உன்னை அறிந்தோ தமிழை ஓதினோம்‘’ என்கிறான் கம்பன். அரசன் நினைச்சா ‘லக்கலக்க’ன்னு கம்பன் தலையை சீவி இருக்க முடியுமே. அரசன் செய்யலை; சதாரண கிழிஞ்ச துணி உடுத்தியக் கம்பனைக் கண்டு அவன் பயந்திருக்கிறான். இப்போதுள்ள கவிஞர்கள், ‘’நீ எழுதுவதுதான் தமிழ். உன் முன்னாடி பேனா எடுக்கவே எனக்குக் கூசுது” என்கிறார்கள். இப்படி எதிர்பார்ப்போடு இருக்கிறவன் எப்படி கலைஞன்ங்கிற கர்வத்தோட அநியாயத்தை எதிர்க்க முடியும்? பிஸ்மில்லாகானுக்கும், அல்லா ரக்காவுக்கும், கம்பனுக்கும், ஜெயகாந்தனுக்கும் இருந்த கர்வம் இல்லைன்னா இலக்கியத்துல எதுவுமே செய்ய முடியாது.

"சரி, அவ்வளவு கர்வமா இருக்கும்படியா தமிழ் சமூகம் எழுத்தாளனை வெச்சிருக்கா என்றால் தயக்கத்தோடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆக, தமிழ் எழுத்தாளனின் பயத்துக்கு நியாயம் இருக்குங்கிறதை மறுக்க முடியாது. இந்த சமூகத்தில் எழுத்தாளனுக்கு என்ன மரியாதை இருக்கு? சினிமாவுக்குப் பாட்டு எழுதுகிறவங்களும், அரசியலிலும் அதிகாரத்திலும் பெரிய பதவிகளில் இருப்பவங்களும்தானே இங்கே உலக மகா கவிஞர்கள். ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகையில் லா.ச.ராமாமிருதம் பற்றிய ஒரு கட்டுரைல, அவர் படத்துக்குப் பதிலா லா.சு.ரங்கநாதன் படத்தைப் போட்டுருக்காங்க. பத்திரிகை ஆசிரியருக்கே லா.ச.ராமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும்? ஹங்கேரியில் பிரேக் ஏர்போர்ட்ல இறங்கி வெளியே வந்ததும், பெரிய விளம்பரப் பலகை ஒன்னு நம்மை வரவேற்கிறது. ‘நீங்கள் மொசார்ட்டும் காஃப்காவும் பிறந்த ஊருக்கு வருகை தருகிறீர்கள்’ என்றிருக்கு அதுல. சென்னையில அதுமாதிரி ஒரு போர்ட வச்சா, என்ன எழுதுவாங்கங்கிறதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நியாயமா ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மரியாதை எல்லாவற்றையும் இங்கே யாரோ பறிச்சுகிட்டுப் போறாங்க. கேரளாவிலோ, கர்நாடகத்திலோ மகாராஸ்டிராவிலோ இது நடக்குமா? ஒரு கொத்து வேலை, தச்சு வேலை செய்கிறவனுக்குக் கிடைக்கிற கூலிகூட, ஒரு சிறுகதைக்குப் செலவழித்த உழைப்புக்காக எழுத்தாளனுக்கு கிடைப்பதில்லை. மனைவி, குழந்தைகளுக்கான எவ்வளவு நேரத்தை செலவழித்து அந்தக் கதையை அவன் எழுதியிருப்பான். மாதம் எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருப்பான்.

"ஒரு எழுத்தாளன் எதிர்மறையான கருத்தைச் சொன்னா, அவன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கு. ஒரு டிவிஎஸ் 50-ல வந்துகூட அவனை இடிச்சு கொன்னுட முடியும். அந்த அளவுக்கு பலமில்லாத தனி ஆள் அவன். வெளியில உள்ள ஆபத்துகளைவிட இலக்கியத்துக்குள்ளேயே இருக்கும் ஆபத்து இன்னும் மோசம். பெண்ணியத்துக்கும் தலித்தியத்துக்கும் பொதுவுடமை தத்துவத்துக்கும் ஆதரவா எழுதுவது சுலபம். முற்போக்கானவனா உங்களைக் காட்டிக் கொள்ளமுடியும். ஆனால், இவற்றை விமர்சனம் பண்ணி எழுதுவது சிரமம். மீறி எழுதினா பயங்கரமான எதிர்ப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த எதிர்ப்புகளை தன்னால சந்திக்க முடியுமா என்ற அச்சம் எழுத்தாளனுக்கு இருக்கு. ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதியதுக்காக ஒரு பகுதியினரால் இன்றும் ஜெயமோகன் காழ்ப்புடன் பார்க்கப்படுகிறார். ஏன் ஒரு படைப்பாளி, ஒரு அரசியல் கட்சியை விமர்சித்து எழுதக்கூடாது? இதனாலதான் யாரையும் காயப்படுத்தாம, புண்படுத்தாம, நிரந்தரமான ஒரு வேலை, குடும்பம்னு சர்வ நிச்சயங்களோட வாழ்ந்துட்டு போயிருவோம்னு படைப்பாளி நினைக்கிறான்.

"அச்சமும் கவலையும் உள்ள எழுத்து தன் ஜீவனையும் ஆற்றலையும் இழந்துவிடுகிறது. எழுத்தாளன், தான் சரின்னு நினைப்பதை சொல்ல முதல்ல இந்த சமூகம் அவனை மதிக்கனும்.”

"ரவிக்குமார், சல்மா, கனிமொழி, தமிழச்சின்னு நவீன இலக்கியவாதிகள் அரசியலுக்கு வருகிறாங்களே?”

"படைப்பாளிகள் அரசியலுக்கு வர்றது நல்லதுதான். நடைமுறை அரசியல்வாதிகளைவிட நடைமுறை சமூகப் பிரச்னையை இவங்க அதிகம் உணர்ந்திருப்பாங்கதான. ஆனால், படைப்பாளியா எந்தளவுக்கு சமூகப் பொறுப்புணர்வோடு இருந்தாங்களோ, அப்படியே அரசியல்லயும் இருக்காங்களா என்பதுதான் முக்கியம். இருந்தாதான் அவர்கள் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கு. இப்போதான் இவங்க எல்லோரும் வந்திருக்காங்க. எனவே, பொறுத்திருந்து பார்த்துதான் இவங்களை மதிப்பீடு செய்யமுடியும்.”

"சினிமாவில் சிகரெட் காட்சிகளைத் தடைசெய்யணும்‘னு அன்புமணி ராமதாஸ் சொல்லி வருகிறார். விஜய், ‘என் படங்களில் இனிமே சிகரெட் காட்சிகள் இடம்பெறாது’ன்னு சொல்கிறார். இது ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாதா?”

"சினிமாவில் சிகரெட் குடிக்கலாமா, கூடாதா என்பதை கதையும் காட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும். புகை பிடிப்பது தவறு, அதைத் தடுக்கனும்னா, சினிமாவில சிகரெட் காட்சிகளை இல்லாமல் செய்து, சிகரெட் பாக்கெட்டுல சின்னதா ‘சிகரெட் உடல்நலத்துக்கு தீங்கானது’ன்னு குறிப்பிட்டா மட்டும் போதுமா? புகையிலைப் பயிர்செய்வதில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரணும். சிகரெட் கம்பெனிகளின் லைசன்ஸைக் கேன்சல் செய்யனும். ஆனா, அதைச் செய்யமாட்டாங்க. ஏன்னா, அதன் மூலம் வரும் வருமானத்தை இழக்க இவங்கத் தயாரா இல்லை. அரசு மதுபானக் கடைகளால் மட்டும் ஆண்டுக்கு ஏழாயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. அதை வாங்கி பாக்கெட்டுல போட்டுட்டு, ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு யாருக்கு இவங்க போதிக்கிறாங்க.

"கள், நம்ம ஊர் சரக்கு; உணவும் மருந்தும் சேர்ந்த இயற்கையான போதைப் பொருள். ஆனா, அதைத் தவறுன்னு தடை பண்ணியிருக்காங்க. கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு நம்மைச் சுற்றியிருக்கிற எல்லா மாநிலங்கள்லயும் கள் இறக்கலாம், குடிக்கலாம். அந்த மாநிலங்கள்ல சரியா இருக்கிற ஒரு விஷயம் நம்ம மாநிலத்துல மட்டும் எப்படி தப்பா போச்சி? கள் இறக்க அனுமதிச்சா ஏழாயிரம் கோடி வருமானம் பாதியாக ஆயிரும். கள் இறக்கினா ஒரு சமூகமே வாழும். 150 ரூபாய்க்குக் குடிக்கிறவன், 50 ரூபாயில் திருப்தியா குடிச்சிட்டு மிச்ச 100 ரூபாயை வீட்டுல கொண்டு போய் கொடுப்பான். அந்த 100 ரூபாயை அவனிடம் இருந்து பிக்பாக்கெட் அடிக்கத்தான் கள்ளைத் தடை செய்து, ஐ.எம்.எஃப் சரக்குகளை அரசாங்கமே விற்குது.

"சரி, ஏழாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் வருமானம் தருகிறவங்கன்னு குடிமகன்களை இந்த அரசாங்கம் மரியாதையா நடத்துதான்னா அதுவும் இல்லை. மூன்று ரூபாய் கொடுத்து டீ குடிக்கும் போது கிடைக்கிற மரியாதை டாஸ்மாக் பார்களில் கிடைப்பதில்லை. டீ கடையில், போன உடனே ‘வாங்க’ங்கிறான்; டேபிளைத் துடைக்கிறான்; தண்ணீர் கொண்டு வந்து வைக்கிறான்; லைட், ஸ்ட்ராங், சுகர் கம்மி, சூடு குறைவான்னு நாம சொல்றதுக்கு தக்கபடி போட்டு தர்றாங்க. ஆனா அரசாங்கம் நடத்துற டாஸ்மாக் பார்ல... உலகத்துல உள்ள மொத்த சாக்கடை ஈக்களும் அங்கதான் இருக்கு. டேபிளைத் துடைப்பதேயில்ல; குடிச்சி போட்ட பாட்டில் அங்கேயே கிடக்கும். எலி, பெருச்சாளி, குப்பைக்கு குறைவே கிடையாது. கொசுக் கடி இருக்க முடியாது. பாட்டில், சைடு டிஸ் சேர்த்து இவன் கொடுக்கிற தொன்னூறு ரூபாய்க்கு அரசாங்கம் தருகிற பரிசு இவ்வளவு துன்பங்களும். வேற எந்தத் தொழில்லயாவது வாடிக்கையாளனை இவ்வளவு கேவலமா நடத்த முடியுமா? மூன்று ரூபாய் மதிப்புள்ள சைடு டிஸை பத்து ரூபாய்க்கு விற்கிறான்; ஏழு பைசா மதிப்புள்ள பிளாஸ்டிக் கப்பு ஒரு ரூபாய். தண்ணீர் இலவசம் கிடையாது. ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு பிரசாரம் செய்கிற அரசாங்கமேதான் இந்த கொள்ளைகளை கண்டுக்காம அனுமதிக்குது. கொத்து வேலைக்காரன், பஸ் கண்டக்டர், சாதாரணக் கூலித் தொழிலாளி போன்றவங்கதான் இங்க குடிக்க வர்றாங்க. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி பேசுகிற சோசலிஷ அரசாங்கம் தன் குடிமக்களையே பன்றியைவிடக் கேவலமா நடத்துகிறதை டாஸ்மாக் பார்ல பார்க்கலாம்.

"எப்படி இத்தனைக் கொடுமைகளையும் குடிமகன்கள் பொறுத்துகிறாங்க? குடிப்பதை அவன் ஒரு குற்றவுணர்வோடு செய்கிறான். அப்படி செய்ய அவன் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். ஏன் குடிக்கிறது சம்பந்தமா ஒருவர் குற்றவுணர்வு அடையனும்? குடிக்கிறது ஒன்னும் கொலை மாதிரியான குற்றம் கிடையாதே. அசைவம் சாப்பிடுவது எப்படி என் தேர்வோ, அதுபோல குடிப்பதும் என் தேர்வு. குடி சரியா, தப்பா என்பது அடிப்படையில் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும் விஷயம். இங்கிலீஷ்காரன் குடிப்பது சரி, நான் குடிப்பது தப்புன்னா எப்படி? குடி, ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமே தவிர, அறம் சார்ந்த விஷயம் இல்லை. முன்னெல்லாம், ‘குடிக்கலைன்னா இவர் செத்துப் போயிருவாரு’ங்கிற மாதிரி டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருந்தாதான் பிரண்டி ஷாப்களில் பிராண்டி வாங்க முடியும். அப்புறம் அதைத் தளர்த்தி, ஆறரை கோடி தமிழர்களில் பத்து வயசுக்கு மேல் நாற்பது வயசுக்குள் உள்ள ஒரு தலைமுறைக்கு குடியை அறிமுகம் செய்தது யார்? அரசாங்கம்தானே. இந்த முரண்பாடு உண்மையிலேயே எனக்குப் புரியமாட்டேங்குது.”

"ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தால், நீங்க வருவீங்களா?”

"சினிமாவுக்கு எழுதுகிற எண்ணம் எனக்கு எப்போதுமே இல்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க; என் மிது மரியாதை வெச்சிருக்காங்க. நானும் அவங்க மேல மரியாதை வெச்சிருக்கேன். எனக்குத் தெரிந்து பிரமாதமான எழுத்தாளனாக வந்திருக்கக்கூடிய அனேகம் பேர் உதவி இயக்குநர்களாக சினிமாவில் இருக்காங்க.

"பல இயக்குநர்கள், அவர்களுக்கு பிடிச்ச எழுத்தாளர்னு என்னைச் சொல்றாங்க; சந்தோஷம். ஆனால், அப்படிச் சொல்கிற பெரும்பாலான சினிமாக்காரங்க, தொடர்ந்து என் படைப்புகளில் இருந்து திருடுறாங்க என்பதுதான் வருத்தத்துக்குறிய விஷயம். ஊர்ல சொல்வாங்க... பிள்ளையில்லாதவன் சொத்துன்னு. நம்மூர் சினிமாக்காரங்களுக்கு தமிழ் நாவல்களும் சிறுகதைகளும் பிள்ளையில்லாதவன் சொத்து மாதிரி. வேண்டியதை, வேணும்கிற போது எடுத்துக்கிறாங்க. அந்தப் படைப்புக்கு சொந்தக்காரனிடம் அனுமதி பெறவேண்டும்; உரிய அங்கீகாரம் கொடுக்கனும்; அதற்கான விலையைக் கொடுக்கனும்னு எதுவுமே கிடையாது. கி.ராஜநாராயணனுக்குப் பிறகு தமிழ் சினிமாக்காரங்களால அதிகம் கொள்ளையடிக்கப்பட்ட எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன்.

"என் படைப்புகளில் வேண்டியதை அவங்க எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு காட்சியை எடுத்துக்கொண்டால்கூட அதற்கான அங்கீகராத்தையும் ஊதியத்தையும் எனக்குத் தரணும் என்றுதான் நான் கேட்கிறேன். ஒரு காட்சியில் தலையைக் காட்டிக்கிட்டுப் போறவனுக்கு கூட சம்பளம் கொடுத்தாகனும். ஒரு பாட்டு காசுகொடுக்காம வாங்க முடியுமா? ஆனால், அந்தக் காட்சியை எழுதினவனுக்கு அது அவனுக்கு சொந்தம்கிற அங்கீகாரம்கூட இல்லை. நண்பர், தெரிந்தவர், மரியாதைக்குறிய எழுத்தாளர் என்று சொல்லிகிட்டு இப்படி புறவாசல் வழியா எடுத்துக்கொண்டு போவது திருட்டு இல்லாமல் வேற என்ன? கடந்த இருபது வருஷமா இந்தத் திருட்டை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதுக்கான அரசியல், பொருளாதார பின்புலம் எனக்குக் கிடையாது. நானோ அன்றாடம் காய்ச்சி. என் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல்தான் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. ‘அக்ரிமெண்ட்’ போட்டு, முறையா உரிமையை வாங்கிதான் தங்கர்பச்சான் செய்தார். படம் வந்தபோது, ‘இது நாஞ்சில் நாடனின் நாவலைத் தழுவியது’ என ஆரம்பத்துல கார்ட் போட்டிருந்தார். தியேட்டரில் நானே பார்த்தேன். ஆனால், பிறகு டி.வி.யில் இதுவரை ஐந்துமுறை அந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். ஆரம்பத்துல இருந்த அந்தக் கார்டைக் காணோம். இப்பவும் என் ஆத்மார்த்தமான நண்பர்தான் தங்கர்பச்சான். ஏன் எனக்கு இதைச் செய்தார்? எனக்கு நியாயமாகச் சேரவேண்டிய அங்கீகாரத்தை எப்படி ஒரு சக படைப்பாளியே மறுக்கலாம். இது எவ்வளவு நாணயக் குறைவானக் காரியம். எத்தனைக் கோடி செலவழித்துப் படம் எடுக்குறாங்க. எழுத்தாளனுக்கு உரிய பணத்தையும் அங்கீகாரமும் ஏன் கொடுக்க மாட்டேங்கிறீங்க?

"என் சிறுகதைத் தொகுப்பு புதிதாக வந்தால், குறைந்தது நூறு பிரதிகளாவது உதவி இயக்குநர்கள் வாங்குவாங்க. வாசிக்கிறப்ப கிடைக்கிற இலக்கிய அனுபவத்துக்காக அவங்க வாங்கலை. பழையது எல்லாவற்றையும் திருடியாச்சு, புதிசா என்ன திருடலாம் எனப் பார்க்குறாங்க. இதிலிருந்து எந்தக் காட்சியைச் சுடலாம், எந்த ஐடியாவை எடுத்துக் கொள்ளலாம் என்ற மோசடி உத்தியோடுதான் படிக்கிறாங்க. இந்த அடிப்படை நேர்மை, நாணயம் இல்லாத ஒருவர் எப்படி கலைஞனாக இருக்க முடியும்? எப்படி ஒரு நல்லக் கலைப் படைப்பை அவனால் சமூகத்துக்கு தந்துவிட முடியும்? சினிமாக்காரங்ககூட பேசிக்கொண்டிருக்கவே எனக்கு பயமாக இருக்கு. நாம பேசிக் கொண்டிருக்கும் போதே குறிப்பு எடுத்துக்கிறாங்க. அடுத்த சினிமாவில் அது காட்சியா வந்துவிடும்.

"ஒருத்தன் எனக்குப் போன் பண்ணுகிறான்... ‘’நான் இன்னார் இயக்குநரின் இன்னார் அஸிட்டென்ட் பேசுகிறேன். வெள்ளாளச் சமூகத்தில் தாலி அறுத்தா என்ன சடங்கு செய்வாங்க?’. கன்சல்டன்ஸிக்காக கூப்பிடுகிறான். ஒரு பல் டாக்டருக்கு போன் பண்ணி, ‘’எனக்கு பல் வலி. என்ன மாத்திரை சாப்பிடனு”ம்னு கேட்க முடியுமா? ‘’சொத்துல சின்ன பிரச்னை இருக்கு. என்ன பண்ணலாம்‘’னு வக்கிலுக்கு போன் பண்ண முடியுமா? அதற்கு கூலி கொடுக்கனும். ஆனால், எழுத்தாளனிடம் மட்டும் இலவசமா கவுன்சிலிங் செய்யலாம். வெள்ளாளச் சமூகத்தின் சடங்குகள் பற்றி என் புத்தகத்துல நிறைய இருக்கு. அதைத் தேடிப் படிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை. ஆனால், நான் எந்த ஊர்ல, என்ன வேலையில இருப்பனோங்கிறதைப் பத்தி கவலையே படாம போன் பண்ணுகிறான். இப்படிப்பட்டவங்க எந்த சமூக அநீதிக்கு எதிராப் போராட முடியும்? எந்தக் கலையை நிறுவிற முடியும்? அரசியல்வாதிகளைக் குறை சொல்ல இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு? அரசியல்வாதிகளைவிட எந்தவகையில் இவங்க மேலானவங்க. இன்றைக்குக் காலையில் பேப்பரில் படித்தேன்... ஒரு இயக்குநர் திருட்டு விசிடி விற்பதைப் பிடித்திருக்கிறார். ஏன்யா, உன் படத்தின் விசிடி விற்றா அது திருட்டு; என் கதையில் இருந்து இரண்டு காட்சியை உருவினா அது திருட்டு இல்லையா? நீ செய்கிற அதே செயலைத்தானே அவனும் செய்கிறான். நான் தொழில்துறையில் இருந்தவன். ஏழு முதல் எட்டு சதவிகிதம் லாபம்தான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இவங்க வட்டி மட்டுமே பதினைந்து சதவிகிதம் கொடுக்கிறாங்க. என்றால், எவ்வளவு லாபம் எதிர்பார்க்கிறாங்கன்னு கணக்கிடுங்க.”

"ஆரம்பத்துல இருந்தே நாஞ்சில் வட்டார மொழி எழுத்தாளரா அடையாளம் காணப்படுறீங்க. தொடக்க காலங்களில், வட்டார மொழிகளில் எழுதுவதை தமிழின் தனித்தன்மை சிதைத்துவிடும் என்று தமிழறிஞர்கள் விமர்சித்தார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?”

"அறிஞர்ங்கிறவன் யாரு? எழுதப்பட்டவைகளைத் தொகுத்து தன் அறிவைப் பெருக்கிக் கொண்டவன். ஆனால், கலைஞன் தன் அனுபவத்தின் மூலமாக வாழ்வில் இருந்து பெறுகிறவன். எனவே, அறிஞன் மாதிரி கலைஞனால் வாழ்வைப் பார்க்க முடியாது. அறிஞர்களின் முக்கியத்துவத்தை நான் மறுக்கலை. இப்படி மொழியை தண்ணீரிலும் அமிலத்திலும் போட்டுக் கழுவி, அவிச்சி சுத்தம் பண்ணி, பொதுத்தமிழ்ல எழுதனும்னு சொல்கிற அறிஞர்களுக்கு ஒரு அரசியல் இருக்கு. தமிழை செம்மொழி ஆக்க தோள் கொடுக்கிறவங்க நாங்கதான்னு மார்தட்டிக்கிறாங்க இவங்க. ஆனால், உண்மை நிலவரம் என்ன? தமிழ் பேராசிரியர்களும் அறிஞர்களும் அறியாத ஆயிரக்கணக்கான சொற்கள் நம் வட்டார மொழிகள்ல இன்னும் இருக்கு. இந்தச் சொற்களைப் பாதுகாத்து, பதிவு பண்றது வட்டார மொழி எழுத்துகள்தான். மொழிங்கிறது ஒரு வாழ்க்கை. தஞ்சை, செம்புலம், நாஞ்சில்னு ஒவ்வொரு புலத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கையை அந்த வட்டார மொழியிலதான் சொல்லமுடியும்.

"எங்கள் ஊர்ல ‘இளநீர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ‘கருக்கு’ன்னுதான் சொல்லுவோம். பனைமர மட்டை ஓரங்களில் கருப்பா ஒரு பகுதி இருக்கும். அதை வச்சி எதையும் வெட்டலாம். அதையும் கருக்குன்னுதான் சொல்லுவோம். மேலும், கருக்கு அருவான்னே ஒரு அருவா இருக்கு. எங்கே, எந்த இடத்துல சொல்றேங்கிறதை வச்சி வாசகர்கள் அதை புரிஞ்சிக்கிறாங்க. அப்புறம் ஏன் நான் உன்னுடைய வசதிக்காக, சௌகரியத்துக்காக என்னுடைய சொல்லை மாத்திக்கனும். மொழியை சுத்தம் பண்ணி எழுதினா, அதனுடைய உயிர்த் தன்மை செத்துப் போயிடும். அதன்பிறகு, மறைமலையடிகளும் மு.வ.வும் எழுதின தமிழைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டியிருக்கும்.

"ஒவ்வொரு படைப்பாளியும், காலத்தால் அழிந்துவிடச் சாத்தியமுள்ள ஆயிரக்கணக்கான சொற்களைப் புடிச்சி வைச்சிருக்கான். இப்படி, படைப்பாளிதான் தமிழை செம்மொழி ஆக்குகிறான்; அறிஞர்களோ, பேராசிரியர்களோ ஆக்கலை. அறிஞர்கள், சிலப்பதிகாரத்தையும் கம்ப ராமாயணத்தையும் மட்டுமே திரும்பத், திரும்ப ஆராய்ச்சிப் பண்ணி தமிழை செம்மொழி ஆக்கமுடியாது. சமகால இலக்கியத்துல என்ன நடக்குன்னு பார்க்கனும்.”

"இது அவசர யுகம். பரபரப்பா இருந்தால்தான் சம்பாதித்து வாழ முடியும்கிற நிலை. இதில் ஒருவர் ஏன் இலக்கியம் படிக்கனும்?”

"புத்தகம் படித்தும் இசை கேட்டும் ரிலாக்ஸாகப் பழகிக் கொள்ளாத ஒரு சமூகம், நாற்பது வயசுல சைக்கியாட்ரிஸ்ட் அல்லது ஆன்மிகவாதிகள்கிட்டேதான் போகனும். எதிர்காலத்துல இந்தியாவில் சைக்கியாட்ரிஸ்டுக்கு அமோகமான பிஸினஸ் இருக்கு.”

சந்திப்பு: தளவாய் சுந்தரம்
படங்கள்: சித்ரம் மத்தியாஸ்

(ஆனந்த விகடன் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. இதன் சுருக்கமான வடிவம் ஆனந்த விகடன் இதழிலும் கொஞ்சம் விரிவான பகுதி விகடன் இணையதளத்திலும் வெளியானது)