02 July 2008

தமிழ்நாடு

நதிநீர் பிரச்னைகள்

பூனைக்கு யார் மணி கட்டுவது?


காவிரி தென்பண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருநைநதி என
மேலிடும் ஆறு பல ஓடி திரு
மேனி செழித்த தமிழ்நாடு
- பாரதி

கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் கடந்துவிட்டது. ''கர்நாடகாவில் தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி அமைந்த பிறகு பேசி தீர்த்துக் கொள்ளலாம்” என தமிழக முதல்வர் கருணாநிதியால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இந்த ஒரு மாதத்தில் எந்த முன் னேற்றமும் இல்லை. கர்நாடகாவின் புதிய முதல்வர் எடியூரப்பா, இந்த பிரச்னை தொடர்பாக அவ்வப்போது உதிர்த்த ஒன்றிரண்டு வார்த்தைகளும் அவ்வளவு நம்பிக்கையளிக்கும் படியாக இல்லை. இன்னொரு காவேரி பிரச் னையாக இதுவும் வருடக் கணக்காக இழுத்தடிக்கப்படும் என்றே தெரிகிறது.

தாமிரபரணி தவிர்த்து காவிரி, தென்பண்ணை, பாலாறு, கொரட்டலையாறு என தமிழகத்தின் எல்லாப் பெரிய நதிகளும் அண்டை மாநிலங்களில் உற்பத்தி யாகிதான் தமிழ்நாட்டுக்குள் ஓடுகின்றன. வைகை தமிழகத்திலேயே உற்பத்தி யாகிறது என்றாலும், தண்ணீருக்கு கேரளாவின் பெரியாற்றைதான் நம்பி இருக்கிறது. மழை பரவலாகவும் சம அளவிலும் பெய்யாததால் பக்கத்து மாநிலங்களில் இருந்து இந்த ஆறுகளில் வரும் தண்ணீரையே தமிழகம் பெருமளவில் நம்பி இருக்கிறது. இந்நிலையில், கடைமடை பாசனக்காரர் களுக்கே உரிய பிரச்னை... முந்தியவர்கள் விட்டால்தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் என்னும் நிலை. இப்படி, கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரைக் கும் குடிநீருக்கும் பாசனத்துக்கும் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம். இந்நிலையில் கர்நாடகம், கேரளா, ஆந்திரா என எல்லா பக்கத்து மாநிலங்களுடனும் நதி நீர்ப் பகிர்வில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தமிழகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

காவேரியில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகும் பிரச்னை தீர்ந்த பாடில்லை. இன்னொரு பக்கம் வற்றாத ஜீவநதியான பாலாற்றின் பாதையில் கர்நாடகம் புதிய பல ஏரிகளை உருவாக்கியதன் விளைவு, பாலாறும் வறண்டு விட்டது. இப்போது, மழைக் காலங்களில் பாலாற்றில் ஓடும் மூன்று நாள் தண்ணீருக்கும் பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட திட்டமிட்டுள்ள ஆந்திரா வின் முயற்சியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்திலும் சிக்கல்; ஒப்புகொண்டபடி 12 டி.எம்.சி. தண் ணீரை எந்த வருடத்திலும் ஆந்திரா தந்ததில்லை. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம், நெய்யாற்றில் கேரளா உருவாக்கும் பிரச் னைகள் என தமிழகம் மிகப்பெரிய ஒரு தண்ணீர் பிரச்னையை எதிர்நோக்கி உள்ளது.

காவேரி:

''ஒரு நீர் ஆதாரத்தை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பின்னர் அதன் பயன்பாட்டு உரிமை அவர்களுக்குதான் சொந்தம்' என்கிறது சர்வதேச நதிநீர் ஒப்பந்தம். அதன்படி காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். இரண்டாம் நூற்றாண்டில் கரிகாற்சோழன் கல்லணை கட்டியது தொடங்கி, பத்தொன்பது நூறாண்டுகளாக காவிரியைப் பயன்படுத்தி வருகிறார்கள் தமிழக விவசாயி கள். ஆனால், இன்று தங்களுக்குச் சொந்தமான நதியையே மற்றவர்களிடம் பிச்சைக் கேட்கும் நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.

காவேரியின் மீதான உரிமைப் பிரச்னை இன்று நேற்று தொடங்கினதல்ல. கி.பி.1146ஆம் ஆண்டு மைசூரை ஆண்டு வந்த போசாள மன்னன் நரசிம்மன் காவிரியின் குறுக்கே தடை ஏற்படுத்த முயல, அதற்கு எதிராக இரண்டாவது ராஜராஜன் தமிழகத்தில் இருந்து படையெடுத்து சென்ற அன்றே தொடங்கிய பிரச்னை இது. 1892ஆம் ஆண்டு சென்னை மாகாண பிரிட்டீஷ் அரசாங்கம் ஒரு ஆணை பிறப்பித்தது. சென்னை மாகாண எல்லைக்குட்பட்ட பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணை கட்டவேண்டுமானால், அதற்கு சென்னை மாகாண அரசாங்கத்தின் அனுமதி வேண்டும் என்கிறது அந்த ஆணை. அதன்பிறகு, 1924ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசாங் கத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் 93 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையும் மைசூரில் 44 டி.எம்.சி. கொண்ட புல்லம்பாடி அணையும் (பிறகு இது கிருஷ்ணராஜசாகர் என பெயர் மாற்றப்பட்டது) கட்டிக்கொள்ள முடிவானது.

1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில், ‘ஐம்பது ஆண்டு களுக்குப் பிறகு எதாவது மாற்றம் இருந்தால் இரண்டு அரசுகளும் கலந்து பேசி முடிவு செய்து கொள்ளலாம்' எனச் சொல்லப்பட்டிருந்தது. இதனைப் பிடித்துக் கொண்டு, ஐம்பது வருஷம் கடந்ததும் 1974ஆம் ஆண்டு, ‘‘1924 ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது'' என பிரச்னை செய்யத் தொடங்கியது கர்நாடகம். ஆனால் உண்மை நிலை, இன்று வரைக்கும் ஒப்பந்தம் காலாவதி ஆகவில்லை என்பதுதான். ‘தேவைப்பட்டால் மாற்றம் செய்துகொள்ளலாம்’ என்றுதான் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அன்றைய கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நீதிமன்றம் சென்றது. பிறகு, அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் வழக்கை வாபஸ் வாங்கியது. ஆனால், இந்திராகாந்தி சொன்னதை கர்நாடகம் கேட்கவில்லை. எனவே, மீண்டும் நீதிமன்றம் சென்றது தமிழகம். 1990ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிமன்றம் நடுவர் மன்றத்தை அமைக்கச் சொன்னது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தான், பதினாறு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு வெளி யானது.

இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. நீரைத் தமிழகத்துக்கு கொடுக்கச் சொன்ன நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி. தண்ணீரைக் கொடுக்கச் சொல்லியிருக்கிறது. ‘’இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி'' என தமிழ் ஆர்வலர்கள் பலரும் கொதித்து எழுந்தார்கள். ஆனால், இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. தண்ணீரை மேட்டூரில் கொடுக்கச் சொல்லியிருந்தார்கள். இறுதித் தீர்ப்பில், பிலிகுண்டுவில் 192 டி.எம்.சி. கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். பிலிகுண்டு மேட்டூருக்கு மேல்புறத்தில் 60 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேட்டூரில் அளவெடுப்பதைவிட அங்கே துல்லியமாக அளவெடுக்க முடியும் என்பதால் பிலிகுண்டுவைத் தேர்வு செய்திருக்கிறார்கள். பிலிகுண்டுவுக்கும் மேட்டூ ருக்கும் இடைப்பட்ட பகுதியில் பெய்யும் மழை நீரின் அளவு தோராயமாக ஆண்டுக்கு 25 டி.எம்.சி. எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆக 192ம் 25ம் சேர்த்து 217 வருகிறது. எனவே, இடைக்காலத் தீர்ப்புக்கும் இறுதித் தீர்ப்புக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. அதைவிட இப்போதுள்ள முக்கியமான பிரச்னை, இறுதித் தீர்ப்பில் கொடுக்கச் சொல்லியுள்ள தண்ணீரையாவது கர்நாடகம் கொடுக்குமா என்பதுதான்.

மத்திய அரசு, நீதிமன்றம், நடுவர் மன்றம் - யார் சொன்னாலும் கேட்பதில்லை என்னும் போக்கைத்தான் கர்நாடகம் கடைபிடித்து வருகிறது. இடைக்காலத் தீர்ப்பில் சொல்லப்பட்ட அளவு தண்ணீரை எப்போதுமே கர்நாடகம் கொடுத்ததில்லை. அதிகம் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் வருடங் களில் உபரி நீரினை கழித்துவிடும் ஒரு வடிகால் பகுதியாகத்தான் தமிழ்நாட்டைக் கடந்த 30 வருடங்களாக நடத்தி வருகிறது. மேலும், கர்நாடகத்தில் 5 லட்சம் ஏக்கராக இருந்த விவசாயப் பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 12 லட்சம் ஆக்கியிருக்கிறார்கள். இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம் தனது விவசாயப் பரப்பை மேலும் அதிகரித்துக்க்கூடாது எனச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அதனையும் அவர்கள் பொருட்படுத்த வில்லை. இப்போது, 12 லட்சம் 24 லட்சம் ஆகியிருக்கிறது. இப்படி, இடைக்காலத் தீர்ப்பை உதாசீனம் செய்ததைப் போல இறுதித் தீர்ப்பையும் அவர்கள் உதாசீனம் செய்யலாம். அப்போது நம்மால் என்ன செய்யமுடியும்?

இதற்காகத்தான், தீர்ப்பை அமல்படுத்தும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நடுவர்மன்றத்திடம் கேட்டது தமிழகம். அதுகுறித்த எந்த விபரமும் இறுதித் தீர்ப்பில் இல்லை. இந்நிலையில், அப்போது சென்னை வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ‘‘அமல்படுத்தும் அமைப்பு ஏற்படுத்தப்படும்'' எனக் கூறினார். இன்றுவரைக்கும் அந்த அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை!

முல்லைப் பெரியாறு, நெய்யாற்றுத் திட்டம்:

கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான காவிரி பிரச்னை தொடர்கதை மாதிரி சமசரச பேச்சு, நீதிமன்றம் என கேரளாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே இழுத்தடிக்கப்படும் பிரச்னை முல்லைப் பெரியாறு.

1886ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திருவாங்கூர் மன்னருக்கும் சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையில் தேங்கும் நீரினை ஒரு சுரங்கம் மூலமாகத் திருப்பி மதுரை, இராமநாதபுரம் ஜில்லாகளின் வறண்ட பகுதிகளில் பாசனத்துக்குப் பயன்படுத்த வகை செய்த இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் குறிக்கப்பட்டது. அணை கட்டுவ தால் நீரில் மூழ்கும் 8000 ஏக்கர் நிலத்துக்கும் வாடகையாக ஆண்டு தோறும் ஏக்கருக்கு ஐந்து ரூபாய் வீதம் மொத்தம் 40,000 ரூபாயை பிரிட்டீஷ் நாண யமாக சென்னை அரசாங்கம் திருவிதாங்கூர் மன்னருக்குத் தரவேண்டும் எனவும் ஒப்புகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம்படி 1895ஆம் ஆண்டு பெரியாற் றின் குறுக்கே அணை கட்டி முடிக்கப்பட்டது. சென்னை மாகாணம் தமிழ் நாடாகவும் திருவிதாங்கூர் சமஸ்தானம் கேரளாவாகவும் ஆனபிறகும் முல்லைப் பெரியாறில் சிக்கல்கள் எதுவும் இன்றி, அறுபது ஆண்டுகள் வரைக் கும் பாசனம் நடந்து வந்தது.

1955ஆம் ஆண்டு பெரியாறு தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின்உற்பத்தி செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டு பழைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக புது ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் நீரில் மூழ்கும் நிலத்துக்கான வாடகை ஏக்கருக்கு ஐந்தில் இருந்து முப்பது ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்படி 2,40,000 ரூபாயை ஆண்டுதோறும் தமிழக அரசு கேரளாவுக்கு கொடுத்து வருகிறது. இந்நிலையில், 1963ஆம் ஆண்டு முதன்முதலாக ‘அணை பல வீனமாகிவிட்டது. கேரள மக்களுக்கு ஆபத்து. எனவே, அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கவிட மாட்டோம்'' எனப் பிரச்னையை எழுப்பியது கேரள அரசாங்கம்.

முல்லைப் பெரியாறின் முழு கொள்ளளவான 152 அடி நீர் இருக்கும் போதும் மிக உயர்ந்த நில நடுக்கம் ஏற்பட்டால்கூட உடையாத பலத்துடன்தான் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக் கட்டப்பட்ட பிறகு இப்பகுதியில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அணையில் ஒரு விரிசல்கூட விழுந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், கேரளா பயத்தைப் போக்க மத்திய அரசின் நிபுணர் குழு அணையைப் பார்வையிட்டது. அந்தக் குழு 152 அடி வரை நீரைத் தேக்கக்கூடிய பலத்துடன் அணை பலமாகத்தான் இருக்கிறது என அறிக்கைத் தந்தது. என்றாலும், கேரள மக்களின் அநாவசி யமான பீதியைப் போக்க சில எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் அறிவுரை கூறியது. இதன் அடிப்படையில் 26 கோடி ரூபாய் செலவில் அணையைப் பலமூட்டும் பல நடவடிக்கைகள் தமிழகத்தால் எடுக்கப்பட்டன. கேரளா ஏற்படுத்திய இடையூறுகளுக்கு இடையே மிகுந்த பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும்தான் தமிழக பொறியாளர்கள் இந்தப் பணிகளை செய்து முடித்தார்கள்.

இத்தனைப் பணிகளுக்குப் பின்னரும், 1978ஆம் ஆண்டு மீண்டும் அணை பற்றிய புகாரை எழுப்பிய கேரளா, ‘‘அணை உடைந்துவிடும், 30 லட்சம் கேரள மக்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவார்கள்'' என்றது. இதனையொட்டி அணையைப் பார்வையிட்ட மத்திய அரசின் பாசன கமிஷன் அதிகாரிகள், அணை நல்ல நிலையில்தான் இருக்கிறது எனவும் என்றாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 145 அடியாகக் குறைத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்கள். தமிழ அரசு அதனை ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தை 145 அடியாகக் குறைத்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரச்னை செய்தது கேரளா. இப்போது, அணையின் நீர்மட்டம் 152இல் இருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. இதனால், நீரில் மூழ்கும் நிலப்பகுதி 4677 ஏக்கராக குறைந்தது. இப்பகுதியில் சுற்றுலா கேளிக்கை சாதனங்களை நிறுவி சம்பாதிக்கிறது கேரளா. ஆனாலும், இன்றும் தொடர்ந்து இந்தப் பகுதிக்கும் சேர்த்து முதலில் தீர்மானித்தபடி 8000 ஏக்கருக்கான வாடகையையே கொடுத்து வருகிறது தமிழக அரசு. மேலும், நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 10.4 டிம்சியில் இருந்து 6.4 டிஎம்சியாக குறைந்துவிட்டதால் பாசனப்பகுதியில் 1,25,000 ஏக்கர் நிலம் தரிசாக மாறியது. 140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பெரியாறு மின்நிலயத்தில் 40 சதவிகிதம் உற்பத்திக் குறைந்தது. மேலும், முல்லைப் பெரியாறு அணையில் வழிந்துபோகும் தண்ணீரை இடுக்கி அணையில் தேக்கி மின் உற்பத்தி செய்து அதனை தமிழ்நாட்டுக்கே விற்றது கேரளா. முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் இவ்வளவு நஷ்டங்களைத் தாங்கி வருகிறது தமிழகம். நிலமை இவ்வாறு இருக்க தமிழ்நாடுதான் ஏதோ குற்றம் செய்துவிட்டதாக பேசி வருகிறது கேரள அரசு. இது முழுக்க முழுக்க அரசியல் காரணங் களுக்காக சொல்லப்படும் புரளியே தவிர, தொழில்நுட்ப அடிப்படையில் ஒரு சதவிகிதம்கூட இதில் உண்மையில்லை என்பது ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் புரியும்.

2006ஆம் வருடம் உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறில் முழு நீர் மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தாலாம் என உத்தரவு கொடுத்தப் பிறகு, ‘‘பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யலாம். நீங்கள் வேண்டுமானால் 152 அடிக்கு புது அணை கட்டிக்கொள்ளுங்கள்'' என்றார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். இது, காலம் கடத்துவதற்கான தந்திரமே தவிர இது வேறு ஒன்றும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட அதே காலகட்டத்தில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பேச்சிப்பாறை அணையும் கட்டப்பட்டது. இந்த அணை இப்போதும் பலமாகத் தான் இருக்கிறது. 2000 வருடம் பழமையான கல்லணையும் பல பெரிய ஏரி களும் தமிழகத்தில் உள்ளன. இவைகள் உடைந்துவிடும் என யாரும் இதுவரை கூக்குரல் எழுப்பியதில்லை.

முல்லைப் பெரியாறில் கேரளா பிரச்னை செய்வதன் உண்மையான நோக்கம் அதன் கீழ்பகுதியில் இருக்கும் இடுக்கி அணைதான். முல்லைப் பெரியாறு அணையைவிட 34 மடங்கு பெரியதாக இது கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு தண்ணீர் கொண்டு வரத்தான் முல்லைப் பெரியாற்றில் அவர்கள் பிரச்னை செய்கிறார்கள். இடுக்கி அணைக் கட்டப்பட்ட பிறகே அவர்கள் பிரச்னையை ஆரம்பித்தார்கள் என்பதை கவனிக்கலாம்.

தமிழ்நாட்டுக்கு கேரளாவோடு சிக்கலிலுள்ள இன்னொரு திட்டம் நெய்யாற் றுத் திட்டம். இத்திட்டத்தின்படி நெய்யாற்றில் இருந்து கன்னியாகுமரி மாவட் டத்துக்கு விநாடிக்கு 150 கன அடி நீரை கேரளம் தரவேண்டும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் பிரிந்த பிறகு தொடங்கி இன்று வரைக்கும் இந்தத் தண்ணீரை தர மறுத்து வருகிறது கேரளம். இத்தனைக்கும் கேரளாவின் மொத்த நீர்வளத்தில் 88 சத விகிதம் கடலில் கலக்கிறது என்பதுதான் வேதனையானது.

கிருஷ்ணா நதி நீர் திட்டம், பாலாறு:

கர்நாடகம், கேரளாவுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டம் தொடங்கி பாலாற்றின் குறுக்கே கட்டும் அணை வரைக்கும் ஆந்திரா இன்னொரு பக்கம் பிரச்னை செய்கிறது.

சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துவர, சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் குடிநீர் பிரச்னை பூதாகரமாகத் தலைதூக்கியது. எனவே, அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி, மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாயும் கிருஷ்ணா நதியின் உபரி நீரை சென்னைக்கு கொண்டுவர திட்டமிட்டார். 1976இல் இந்திரா காந்தி முன்னிலையில் கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா, தமிழ்நாடு முதல்வர்கள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தப்படி கர்நாடகா, மகராஷ் டிரா, ஆந்திரா மூன்று மாநிலங்களும் தலைக்கு 5 டி.எம்.சி. நீரை ஒவ்வொரு ஆண்டும் சென்னையின் குடிநீர் தேவைக்கு வழங்கவேண்டும். இந்த நீர், ஆந்தி ராவிலுள்ள சோமசீலா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டலேறு நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து தெலுங்கு - கங்கா கால்வாய் வழியாக ஆந்திரா, தமிழ்நாடு எல்லையிலுள்ள பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப் படும். மூன்று மாநிலங்களும் வழங்கும் 15 டி.எம்.சி. தண்ணீரில் விரயம் போக 12 டி.எம்.சி. தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வரும். இந்த தெலுங்கு - கங்கா கால்வாயைத்தான் சமீபத்தில் சாய்பாபா டிரஸ்ட் சீரமைத்துத் தந்தது.

ஆனால், கிருஷ்ணா நதி நீர் திட்டத்துக்கு செலவிடப்பட்ட மதிப்புடன் ஒப்பி டும்போது வரும் தண்ணீரின் அளவு மிகக்குறைவு. 1996இல் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் வேலைகள் முடிந்த பிறகு தொடங்கி, இன்றைக்கு வரைக்கும் ஒப்பந்தபடி ஒரு வருடம்கூட 15 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரா வழங்கிய தில்லை. வேண்டா வெறுப்பாக 1/2, 1. 2. 3 என மிகக் குறைவான தண்ணீரையே திறந்துவிட்டிருக்கிறது. இதில் மண் உறிஞ்சுவது, இடையில் விவசாயிகள் பைப் போட்டு திருடுவது, கால்வாய் உடைத்துக் கொண்டு போனது போக மிகச் சொற்பமான தண்ணீரே பூண்டியை வந்தடைந்திருக்கிறது. இடையில் தண்ணீரை எடுத்த விவசாயிகளை கட்டுப்படுத்த ஆந்திரா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த பன்னிரண்டு வருடத்தில் அதிகமாக தண்ணீர் வந்தது 2007ஆம் ஆண்டுதான். அந்த வருடம் 6 டி.எம்.சி. தண்ணீர் பூண்டிக்கு வந்திருக்கிறது. இதற்கு சாய்பாபா டிரஸ்ட் கால்வாயை செப்பனிட் டது ஒரு காரணம் என்றாலும், முக்கியமான காரணம் அதிக மழை பெய்தது தான். போதுமான தண்ணீர் இருந்ததன் காரணமாக இடையில் விவசாயிகள் தண்ணீரை பைப் போட்டு எடுக்கவில்லை. ஆனால், மழை குறைவான வருடங் களில் இதுமாதிரி அவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. வரும் காலங்களில் அவர்கள் தண்ணீரை எடுத்தால், இதுவரைக்கும் எப்படி பார்த்துக் கொண்டிருந்ததோ அதுமாதிரிதான் ஆந்திரா பார்த்துக் கொண்டு இருக்கும்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி திருப்ப திட்டமிடும் ஆந்திராவின் முயற்சி வெற்றிபெற்றால் பாலாறும் செத்த ஆறாக ஆகிவிடும். பாலாற்றில் இப்போது மழைக்காலங்களில் மட்டும்தான் தண்ணீர் வருகிறது என்றாலும் அதனால் பாலாற்றின் பாதையில் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஊற்றுக்கால் மிக நன்றாக உள்ளது. இதனால் பாலாறை பூமிக் கடியில் பாயும் ஆறு என்பார்கள். மழைக்கால பாலாற்று தண்ணீரை இம்மா வட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப முடியும். காவிரி மாதிரியே காட்டு மழை பெய்து வெள்ளம் வந்தால்தான் பாலாற்றிலும் தண்ணீரைப் பார்க்கமுடியும் என்னும் நிலை விரைவில் ஏற்படும். நாம் அதைப் பார்க்கத் தான் போகிறோம்.

இப்படி கர்நாடகம், கேரளா, ஆந்திரா என மூன்று பக்கமும் அடிவாங்கும் நிலை உருவானதுக்கு தமிழகத்தின் மிதமான போக்கும் அரசியல்வாதிகளின் அக்கறையின்மையும்தான் காரணம் என்பதுதான் உண்மை. மீண்டும், மீண்டும் நீதிமன்றம், போராட்டம் என நதிநீர்ப் பிரச்னைகளை இழுத்தடித்தால் கேரளா - தமிழ்நாடு, கர்நாடகா - தமிழ்நாடு, ஆந்திரா - தமிழ்நாடு மக்களுக்கு இடையே மனக்கசப்பும் பகைமையுணர்ச்சியும்தான் வளரும். மேலும், நீதிமன்றங்கள் மூலமும் மத்திய அரசு அதிகாரத்தின் மூலமும் தீர்வுகாண முடியாது என்பதும் ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. எனவே, மாநிலங்களுக்கு இடையே யான நதி நீர் பகிர்வை சமரச முயற்சிகள் மூலம்தான் முடிவு செய்யமுடியும். அது எப்படி என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.

இதற்கு அவர் முன்வைக்கும் ஒரே தீர்வு, ‘இந்திய நதிகள் இணைப்பு'. கங்கை - காவிரி இணைப்புத் திட்டம், தென்னக நதிகள் இணைப்பு திட்டம் ஆகியவை நீண்ட காலமாக பேசப்பட்டுவரும் திட்டங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந் திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இவற்றைச் செயல்படுத்துவது இயலாத ஒன்றல்ல என்கிறார்கள் பொறியியலாளர்கள். பெரியாறு - வைகை இணைப் பும், காவிரி - வெள்ளாறு - வீராணம் இணைப்பும் இப்போது சாத்தியமாகி இருக்கிறது. இதுபோல் பிரம்மபுத்ரா, கங்கை ஆகிய இரண்டு பெரிய நதிக ளையும் திருப்பி மற்ற ஆறுகளில் விடுவதுதான் பிரதான நோக்கம். இதில், பிரம்மபுத்ராவின் குறுக்கே சைனா அணை கட்டிக்கொண்டிருக்கிறது. அந்த அணை வேலைகள் முடிந்தால் அந்த நதியில் தண்ணீர் வராது. இப்போது ஒரிஸாவில் வளர்ச்சி இல்லை. பின்னால் அங்கே வளர்ச்சி திட்டங்கள் தொடங்கும் போது அவர்களும் தண்ணீர் தரமாட்டேன் என்பார்கள்.

இன்னொரு பக்கம், நதி நீர் இணைப்பு சாத்தியமற்ற திட்டம் என்கிறார்கள் சூழலியலாளர்கள். நதிகளை திருப்பிவிடுவது இயற்கையின் சுழற்சியின் பல மாற்றங்களை உருவாக்கும். சுற்றுப்புறச்சூழல் சார்ந்தும் மற்றும் பலவிதங் களில் இதன் பக்க விளைவுகள் இருக்கும். புதிய பிரச்னைகள் உருவாக்கும். எனவே, இயற்கையின் சுழற்சிக்குத் தக்க செயல்பட்டு நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் சிறந்தது என்கிறார்கள் அவர்கள். ஆக, நதிகள் இணைப்பு திட்டம் இப்போதைக்கு கானல் நீர்தான்!

இதுவரைக்கும் நாம் பார்த்தது, தமிழகம் எதிர்கொண்டுள்ள தண்ணீர் பிரச்னை யில் மிகப் பரவலாக கவனத்தைப் பெற்றவற்றை மட்டும்தான். சமீபத்தில், ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திடீரென விஸ்வரூபமம் எடுத்தது போல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் தூங்கிக் கொண்டிருக்கும் பல சின்ன சின்ன திட்டங்கள் வெடிக்கக் காத்திருக்கின்றன. கொந்தளிப்பான நேரங்களில் அரசியல்வாதிகளும் சினிமாகாரர்களும் பிரச்னைகளை கையில் எடுத்து மேலும் சிக்கலாக்காமல், விவசாயிகளும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பேசினால் மட்டுமே எதிர்காலத்தில் சூமுகமான தீர்வு நோக்கி நகர முடியும்.

ஒரு மனிதனுக்கு சராசரியாக எவ்வளவு தண்ணீர் தேவை என்பது குறித்த டாக்டர் மாலின்சல் கென்மார்க்கின் ஆய்வு உலகம் முழுக்க எல்லா நாடுக ளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் சொல்கிறார்... ‘ஒரு மனிதனின் வளமான வாழ்வுக்கு 1700 – 2000 கனமீட்டர் தண்ணீர் போதுமானது. 1000 கனமீட்டருக்கும் கிழே சென்றால் அங்கு பற்றாக்குறை என அர்த்தம். இதனால் அந்நாட்டில் மோசமான சமூகப் பிரச்னைகள் உதயமாகும் வளர்ச்சி தடைபடும்’ என்கிறார். தமிழகத்தில் நிலத்தடி நீராதாரத்தையும் சேர்ந்து பார்த்தாலும் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1000 கனமீட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஆற்றுநீர் தடைபட்டால் இது 600 கனமீட்டராகக் குறையும். மிக மோசமான ஒரு அபாயக் கட்டத்தை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது.

எதிர்கால சந்ததியைக் காப்பாற்ற உடனடி தேவை மக்கள் விழிப்புணர்வுதான். வெளிமாநிலங்களில் இருந்து வரும் தண்ணீர் உரிமையைக் கேட்டுப் பெறுவதுடன் ஏரி, குளம் என நமது நீராதாரங்களையும் காப்பாற்ற வேண்டும். அண்டை மாநிலங்களுடன் பேசி தீர்ப்பதைவிட நம்மால் உடனே செய்ய முடிவது ஏரி, குளங்களைக் காப்பாற்றுவதுதான். முக்கியமான பெரிய ஏரிகளை குடியிருப்புகளாக மாற்றுவதை நாம் உடனே நிறுத்த வேண்டும்.

பூனைக்கு யார் மணி கட்டுவது?

(தகவல்கள் உதவி: பொறியாளர்கள் கோமதிநாயகம், குப்புராஜ் மற்றும் தியடோர் பாஸ்கரன்)