டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்
Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts
03 May 2020
திரைப்படம்
Labels:
அம்பேத்கர்,
அரசியல்,
காந்தி,
திரைப்படம்
26 November 2011
கண்ணதாசன் நினைவுகள்
என் தந்தை
காந்தி கண்ணதாசன்
‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்று பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பதித்துக்கொண்டது, வரலாறு. உலகம் முழுக்க தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும், காற்று வெளியில் அவரது பாடல் ராஜாங்கம் கம்பீரமாக நடந்து கொண்டிருப்பது, இன்றைய யதார்த்தம். எதிர்வரும் காலங்களிலும் தமிழர் மனங்களில் வாழப்போகும் அந்த கவிஞன் பற்றிய (தன் தந்தை பற்றிய) நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார், கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன்.
"எனது நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களது அப்பாவைப் பற்றிய நினைவுகளைக் கிளறும்போதெல்லாம் பய உணர்வுதான் முதலில் தோன்றும். அதைத் தொடர்ந்து அப்பா மீதான வெறுப்பு ஞாபகத்துக்கு வரும். அப்புறம்தான் அப்பாவைப் பற்றிய பசுமையான நினைவுகள் மேலெழும். குழந்தைகள் ஒழுங்காக வளர வேண்டும்; பெரிய ஆட்களாய் வர வேண்டும் என்பதற்காக அவர்களது தந்தைகள் விதித்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள், ஆலோசனைகள்.... இவற்றின் விளைவு இது. இதையெல்லாம் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அப்பா செய்தார் என்று, இப்போது அவர்கள் எண்ணினாலும், பய உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. உங்களில்; பலருக்கும்கூட இதே அனுபவம் இருக்கலாம். எனக்குத் தெரிந்து இந்த உணர்விலிருந்து விலகி இருப்பவர்கள் மிகச் சிலர்தான். காரணம் அவர்களது தந்தைகள். ‘குழந்தைகள், அவர்களது எதிர்காலத்தை அவர்களே நிர்ணயித்துக்கொண்டு, இயல்புப்படியே வளர வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் கிடைத்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வழி தவறிவிடாமல் இருக்கும்படி பெற்றோர்கள் கண்காணித்துக்கொள்ள வேண்டும்; தங்களது அனுபவங்களிலிருந்து கற்றதைக் குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும்’ என்று நினைப்பவர்கள் இவர்கள். இந்த மிகச் சிலருள் ஒருவர்தான் என் தந்தை கண்ணதாசன்.
அப்பா என்பதைக் கடந்து எங்கள் அனைவருக்கும் ஒரு நண்பராகத்தான் அவர் நினைவுகளில் தங்கியிருக்கிறார். அவரைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம், முதலில் அவருடன் நாங்கள் செய்த கலாட்டாக்களும் எங்களுடன் அவர் செய்த கலாட்டக்களுமே ஞாபகத்தில் வரும். ஒரு தந்தையாக இல்லாமல் நல்லதொரு நண்பராகத்தான் எங்களுடன் அவர்கள் பழகினார். நாங்கள் மொத்தம் பதினான்கு குழந்தைகள்; அவரையும் சேர்த்து பதினைந்து குழந்தைகள்! எனவே, வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.
வெளியில் சென்றுவிட்டு திரும்பும் அப்பா, காரில் வந்து இறங்கும் போது, நாங்கள் வாசலில் நின்று பேசிக்கொண்டிருப்போம். “என்ன பிரதர்ஸ், இங்கே நின்னுகிட்டிருக்கீங்க” என்பார். என் தம்பி கமல் கண்ணதாசன், “ஒண்ணுமில்லை பிரதர், சும்மாதான் நின்னுக்கிட்டிருக்கோம்” என்பான். அதற்கு அவர், “நல்லது. ஆனால், ரொம்ப நேரம் சும்மா நின்னுக்கிட்டிருக்காதீங்க பிரதர்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். அந்த அளவுக்கு எங்களுக்கு அவர் முழுச் சுதந்திரம் தந்திருந்தார். ஆனால், அன்பான கட்டுப்பாடுகளும் இருக்கும். அந்த அன்பு, சுதந்திரத்தின் எல்லைகளை எங்களுக்குக் காட்டிவிடும். அன்புக்கு அடுத்தபடியாக ஆலோசனைகள். பொதுவாகப் பெரிய மனிதர்களின் குழந்தைகள், தந்தையின் காலத்திலேயே அவர்களது பெயர்களை நாசம் செய்யும்படி காரியமாற்றுவார்கள். நாங்கள் 14 பேரும் அப்படியில்லாமல் அப்பா பெயரைக் கெடுக்காதபடி இன்றைய வரைக்கும் இருக்கிறோம் என்றால், அதற்கு அவரது அன்பு, ஆலோசனைகள்தான் காரணம்.
சில நாட்களில், வேலை காரணமாக இரவு நேரமாகி அப்பா வீட்டுக்கு வர நேரும் பொழுது, வந்தவுடன், “எந்திரிங்கப்பா, வாங்க உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம்” என்று எல்லோரையும் எழுப்புவார். அப்புறம் இரவு ஒரு மணி வரை உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வோம். ஒருநாள் இரவு பேசிக்கொண்டிருக்கும்போது, “சீக்கிரம் நான் செத்துருவேன் போல் இருக்குப்பா” என்று அப்பா சொன்னார். அதற்கு கமல், “அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. எனவே, நீங்க கவலைப்படாதீங்கப்பா” என்றான். “ஏம்பா அப்படிச் சொல்றே” என்றார் அப்பா. கமல் சொன்னான்: “நல்லவங்கதான் அப்பா சீக்கிரம் சாவாங்க. அதனால உங்களுக்கு வாய்ப்பு குறைவு.” நாங்கள் எல்லோரும் பயங்கரமாகச் சிரித்துவிட்டோம். அப்பாவும் விழுந்து விழுந்து சிரித்தார். அந்தளவுக்கு எங்களுடன் அவர் சகஜமாக இருந்தார்.
ஒருநாள் அம்மா, அப்பாவிடம் போய், “நான் மோதிரம் செய்து போட்டுக்கொள்ளலாம் என்றிருக்கிறேன் மோதிரத்தில் அச்சடிக்க பார்வதி கண்ணதாசன்னு உங்க கையெழுத்துல எழுதித் தாங்க’’ என்றாங்க. அப்பாவும் எழுதிக் கொடுத்தார். அம்மா வாங்கிக்கொண்டு திரும்பி விட்டார்கள். கொஞ்சநேரம் கழித்து அப்பா, அம்மாவைக் கூப்பிட்டார். “நான் எழுதியதைப் படித்தாயா” என்றார். அம்மா படித்திருக்கவில்லை. “போய் படித்துப் பார்” என்றார். அம்மா வந்து படித்துப் பார்த்தார்கள். அங்கே, ‘பார் அவதி கண்ணதாசன்’ என்றிருந்தது.
இதுபோல் ஒவ்வொரு இரவும் கலாட்டாக்களும் கும்மாளமுமாக இருக்கும். பேசிக்கொண்டேயிருக்கும் போதே தம்பி கமல் தூங்கிவிடுவான். அவனை எழுப்பப் போனால் வேண்டாம் என்று தடுத்துவிடுவார். “சாப்பிட்டவுடன் ஜீரணமாகிற வயிறுள்ளவனும் படுத்தவுடன் தூக்கம் வருகிறவனும் பாக்கியவான். அது ஒரு கிஃப்ட். அதை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்” என்று கூறிவிடுவார்.
அந்நாட்களில் ஒன்பது மணிக்கே சென்னை அடங்கிவிடும். ஆங்காங்கே ஒரு சில கடைகள் மட்டும் இருக்கும். பன்னிரெண்டு மணிக்கு பிறகு காரில் புகாரி ஹோட்டல் போய் சாப்பாடு வாங்கிக்கொண்டு திரும்புவோம். இரவு ஒரு மணிக்கு எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து நன்றாகச் சாப்பிடுவோம்.
அப்பா, பெரியம்மா - அம்மா இரண்டு பேருக்கும் இடையே வித்தியாசம் பார்த்ததேயில்லை. குழந்தைகளுக்கு இடையேயும் வித்தியாசம் வரக்கூடாது என்பதற்காக எல்லோருக்கும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலரில் ட்ரவுசர், சட்டை, பாவடை வாங்கித் தருவார்.
கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டது; ஜாமீன் கையெழுத்துப் போட்டு வாங்காத கடன்களுக்கு வட்டி கட்டியது; கூட இருந்தே ஏமாற்றிய நண்பர்கள்; முதுகில் குத்திவிட்டு, அது தெரியாது என்கிற மாதிரி கூட இருக்கும் நண்பர்கள்; என்று எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லுவார். அவையெல்லாம் எங்களை வடிவமைக்க உதவியிருக்கின்றன.
“நானும் பாட்டு, எழுதலாம் என்றிருக்கிறேன்பா” என்று ஒருமுறை அவரிடம் ஆலோசனை கேட்டேன். “பாட்டெழுதுவதில் கஷ்டம் இல்லை. ஆனால், சில விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தொடங்கி தமிழ் இலக்கியம் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். தமிழ் இசையிலும் பரிச்சயம் இருக்க வேண்டும். அப்புறம் இருக்கவே இருக்கிறது அனுபவங்கள். இவற்றுடன் கற்பனையைக் கலந்தால் பாட்டு தானாக வருகிறது” என்றார். அவர் சொன்னது பாட்டெழுதுவது சாதாரணமான விஷயம்தான், பயப்பட வேண்டியதில்லை என்பது போல் இருந்தது. ஆனால், இப்போது தெரிகிறது பாட்டெழுதுவது எவ்வளவு சிரமமானது என்று. அது அவருக்குத் தெரியாது என்றில்லை; நம்பிக்கையளிக்கும்படியும் ஊக்கப்படுத்தும்படியும்தான் எங்களுடன் எபோதும் அவர் பேசுவார்.
குழந்தைகள் 14 பேரையும் ஒரே ஸ்கூலில்தான் படிக்க வைத்தார். பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் தருவார். 1960இல் 100 ரூபாய் என்பது பெரிய விஷயம். ஒரு வருடம் ஒரு தம்பி பெயிலாகிவிட்டான். அந்த வருடம் எல்லோருக்கும் 100 ரூபாய் கொடுத்தார்; பெயிலானவனுக்கு 200 ரூபாய் கொடுத்தார். நாங்கள் எல்லாம் எப்படி அது சரியாகும் என்று கேட்டோம். “சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சோகமான மன நிலையிலிருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். மேலும், அவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாம்” என்றார். என்ன கணக்கிட்டு அப்படிச் செய்தாரோ புரியவில்லை; ஆனால், அவரது கணக்கு சரியாக இருந்தது. பெயிலாகி 200 ரூபாய் பெற்ற அந்தத் தம்பி இன்று டாக்டராக இருக்கிறான்.
நான் பி,ஏ. முடித்ததும் கூப்பிட்டு, “ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் டைரக்ஷன் படி. என் தொடர்பால் உனக்கு வருஷத்துக்கு குறைந்தது ஐந்து பட வாய்ப்புகளாவது கிடைக்கும்” என்றார். ஆனால் நான், வக்கீலுக்குத்தான் படிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர் மறுக்கவில்லை. மேலும், “பி,ஏ. வரைக்கும் உங்களிடம் இருந்து காசு வாங்கிப் படித்துவிட்டேன். இனிமேலும், உங்களிடம் காசு வாங்குவது நல்லதல்ல” என்றேன். “சரி சொந்தமாக பிஸினஸ் பண்ணி அதிலிருந்து வரும் காசில் படி” என்று பதிப்பகம் ஆரம்பித்துத் தந்தார். அந்தக் காலம் மாத நாவல்கள் அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருந்த நேரம். ஆனால் அப்பா, “நீ அர்த்தமுள்ள இந்து மதத்தைப் போடு; நான் தொடர்ந்து எழுதுகிறேன்” என்றார். எனக்கு விருப்பமில்லை. அவரது ஆலோசனைக்காகத்தான் செய்தேன். அவரது கணக்குதான் கடைசியில் ஜெயித்தது. அர்த்தமுள்ள இந்துமதம் 50 ஆயிரம் வீதம் மாதம்தோறும் விற்றது.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, எனக்கு நிறைய தோழிகள் உண்டு. ஆனால் காதல் கிடையாது. ஒருநாள் போகும் வழியில் இறக்கிவிடச் சொல்லி ஒரு தோழி கேட்டாள். அவளை பைக்கில் பின்னாடி ஏற்றிக்கொண்டேன். ஜெமினி சிக்னலில் நின்றுகொண்டிருக்கும் போது அந்தப் பக்கமாக வந்த அப்பா பார்த்துவிட்டார். இரவு அப்பாவும் அம்மாவும் கூப்பிட்டார்கள். அம்மா விசாரித்தார். நானும் காதல் கிடையாது, தோழிதான் என்றேன். அதற்கு அப்பா சொன்னார்: “நான் உன்னை நம்புகிறேன்டா. உன்னை எனக்குத் தெரியும். ஆனால், மற்றவர்களுக்குத் தெரியாதில்லையா? எனவே, கண்ணதாசன், பிள்ளையை வளர்த்திருக்கிற லட்சணத்தைப் பாரு என்பான். இனிமேல் கேர்ள் பிரண்ட்ஸோடப் போகும் போது காரை எடுத்துக்கொண்டு போ” என்றார். இந்த சுதந்திரம்தான் எங்களை வழிதவற விடாமல் செய்தது.
எனக்கு பொண்ணு பார்க்க முடிவானபோது, என்னைக் கூப்பிட்டு கேட்டார்: “உனக்கு ஏதாவது திட்டங்கள் இருந்தால் சொல்லு” என்று. “நீங்களும் அம்மாவும் பார்த்து உங்களுக்குப் பிடித்திருந்தால் போதும்” என்று சொல்லிவிட்டேன். என் கேர்ள் ஃபிரண்ட்ஸை மனதில் வைத்துக்கொண்டு, “இல்லை தயங்காமல் சொல்லு” என்றார். நான் விளையாட்டாக, “நீங்க போய் கேட்டு ஒருவேளை மறுத்துவிட்டால் என்னப்பா சொல்வது” என்றேன். “கண்ணதாசன், வீட்டுப் படியேறி பொண்ணு கேட்டால், எவண்டா மாட்டேனென்று சொல்லுவான்” என்றார். அவர்மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது.
இன்று சென்னையில் விருந்து கலாசாரம் பரவலான ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால், 1960களில் விருந்து கலாசாரம் என்பது சினிமா துறை சம்பந்தப்பட்ட ஒன்றாக மட்டும்தான் இருந்தது. டி.வி.எஸ். போன்ற பெரும்பணக்காரர் வீடுகளில்கூட விருந்துகள் நடப்பதில்லை. சினிமா துறையிலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஏ.எல்.எஸ்., அப்புறம் எங்கள் வீடு... இந்த இடங்களில் மட்டும்தான் அப்போது விருந்துகள் நடைபெறும். ஒவ்வொருவர் வீட்டில் நடைபெறும் விருந்துகள் குறித்தும் தனித்தனி சுவாரஸ்யமான கதைகள் உண்டு. அப்பா, அரசியல் நண்பர்களுக்கு ஒரு நாள், இலக்கிய நண்பர்களுக்கு இன்னொரு நாள், சினிமா நண்பர்களுக்கு மற்றொரு நாள் என்று தனித்தனியாக விருந்துகள் கொடுப்பார். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தினங்கள், விருந்தால் வீடு களைகட்டும். ‘கண்ணதாசன் வீட்டு விருந்து தகவல் எப்போது வரும் என காத்திருப்போம்’ என பின்னாட்களில் சில அப்பாவின் நண்பர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து அப்பாவின் விருந்து அப்போது எவ்வளவு பிரசித்தமானதாக இருந்திருக்கும் என ஊகிக்கலாம்.
அமிதாப்பச்சன், ராஜ்கபூர், சஞ்சீவ்குமார்... போன்ற வட இந்திய சினிமா பிரபலங்களை அப்பாவின் விருந்துகளில்தான் முதன்முதலாக நான் சந்தித்திருக்கிறேன். விருந்துக்கு வரும் பிரபலமானவர்கள் அப்பாவுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போதும்; அப்பாவைச் சந்திக்க அடிக்கடி வீட்டுக்கு வரும் காமராஜர், அண்ணா போன்ற அரசியல் தலைவர்கள் அக்காலத்தில் தமிழகத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது புரியத் தொடங்கிய போதும்தான்; எங்களுடன் விளையாடி, கலாட்டக்கள் செய்துகொண்டு, சாதரணமான ஒருவராக எங்களுக்கு தோற்றம் தந்துகொண்டிருக்கும் அப்பா, உண்மையில் சாதாரணமான அப்பா இல்லை என்பது உறைக்கத் தொடங்கியது. அது அப்பா அளவுக்கு உயர வேண்டும் என்னும் வெறியை, வைராக்கியத்தை என்னுள் உருவாக்கியது. இன்று அது சாத்தியமானதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.
வீட்டில் நடைபெறும் விருந்துகள் தவிர, தனியாக மது அருந்தும்போது உடன் இருக்கவேண்டிய நண்பர்கள் எனச் சிலரை வைத்திருந்தார், அப்பா. மலையாளக் கவிஞர் வயலார் ராமவர்மா; இசை மேதைகள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன்; ஜி.ஆர்.நாராயணன், சோ ராமசாமி, ஆஷா, நடராஜ், கலீல் சௌத்ரி... என்று அந்த நண்பர்கள் வட்டம் மிகச் சிறியதுதான். இந்த இரண்டு கும்பலிலும் மது அருந்த நான் உட்பட வீட்டில் மூத்தப் பையன்கள் மூன்று பேருக்கு மட்டும் அனுமதி உண்டு. வீட்டில் எப்போதும் பிரிட்ஜில் பியர் பாட்டில்கள் இருக்கும். சில சந்தோஷமான மன நிலைகளின்போது அப்பா எங்கள் மூன்று பேரையும் கூப்பிடுவார். “ஃபிரிட்ஜில் போய் பியர் எடுத்துக்கொண்டு வாங்கடா” என்பார். அப்போது அம்மா, “பிள்ளைகளைக் கெடுக்காதீங்க” என்று கோபித்துக் கொள்வார். “வெயில் காலங்களில் பியர் சாப்பிடுவது உடம்புக்கு எவ்வளவு நல்லது’’ என்று அப்பா, அம்மாவுக்கு விளக்குவார். பிறகு, “என் பிள்ளைகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் காலத்துக்குப் பிறகு அவர்கள் என் பெயரைக் கெடுக்கமாட்டார்கள்’’ என்பார். இப்போதும், யோசித்துப் பார்க்கும்போது எங்கள் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை, அவரது புரிதல் எல்லாம் மிகச் சரியானது என்றுதான் தோன்றுகிறது. அவர் காலமான தினத்திலிருந்து தொடங்கி இன்று வரை அவரது குழந்தைகளான நாங்கள் யாரும் மது அருந்தியதில்லை.
அண்ணாத்துரை மேல் அப்பா பெரிய மரியாதை வைத்திருந்தார். அவர் மேல் கொண்டிருந்த மரியாதை காரணமாக, என் தம்பி ஒருவனுக்கு அண்ணாதுரை என்றே பெயர் வைத்தார். ஒருநாள் அண்ணா எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தம்பியை அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார் அப்பா. சாப்பிட்டுவிட்டு, கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு புறப்படும்போது, வாசலில் அப்பாவிடம் அண்ணாத்துரை சொன்னார்: “உன் பையனுக்கு என் பெயரை ஏன் வைத்திருக்கிறாய் என்பது புரிந்துவிட்டது!’’ அப்பா, “அப்படி என்ன புரிந்துகொண்டீர்கள், சொல்லுங்கள்?’’ என்றார், அப்பா. “என் முன்னாலேயே டேய் அண்ணாத்துரை என்று கூப்பிடுவதற்குத்தானே’’ என்று அண்ணா சொன்னதும், கூடியிருந்த எல்லோரும் பலமாகச் சிரித்துவிட்டோம்.
ஆனால், அண்ணாவுக்கு அப்பாவின் குழந்தைகளில் அவரது பெயர் வைத்த தம்பியைத்தான் மிகவும் பிடிக்கும். அப்புறம், ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும் போதும் அவனைப் பற்றி விசாரிப்பார். காங்கிரஸூக்கு அப்பா போன பிறகும் அந்தத் தம்பி மீதுள்ள பாசம் அண்ணாவிடம் குறையவில்லை. கடைசியில் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் போது அப்பாவிடம் சைகையிலேயே, “என் பெயர் வைத்த பையன் எப்படி இருக்கிறான்?’’ என்று கேட்டார். அப்போது அப்பா சத்தம் போட்டுக் கதறி அழுதுவிட்டார்.
காங்கிரஸில் அப்பா சேர்ந்த பிறகு, காமராஜர் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார். காமராஜருக்கு எங்கள் வீட்டு அசைவச் சாப்பாடு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு வர முடியாத தினங்களில், “கண்ணதாசன் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வா” என்று அவரது உதவியாளர் வைரவனிடம் சொல்லிவிடுவார். காமராஜர் யாரிடமும் இப்படி உரிமையாகக் கேட்கக்கூடிய ஆள் இல்லை. எங்கள் அப்பாவிடம் கேட்கலாம் என்று அவருக்குத் தோன்றியதற்கு அப்பா மீது அவர் வைத்திருந்த அன்பு மட்டும்தான் காரணம். அனேகமாக காமராஜருக்கு நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு என்று போனது எங்கள் வீட்டுச் சாப்பாடு மட்டுமாகத்தான் இருக்கும்.
வைரவன் தொலைபேசியில் அம்மாவிடம் சொல்லி விடுவார். ஆனால், காமராஜருக்கு அசைவம் பல்லில் சிக்கிக்கொள்ளும். எனவே அம்மா, ஆட்டுத் தலைக்கறியை எலும்பை நீக்கி, நன்றாக நைத்து காமராஜருக்கு என்று தனியாகச் செய்து கொடுத்து அனுப்புவார். ஒருநாள் நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு போனேன். காமராஜர் வராண்டாவில் ஈஸி சேரில் கைகளைத் தூக்கி பின் தலையோடு சேர்த்து, விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தார். நான் போய் நின்றதும், “என்ன?” என்று கேட்டார். “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்” என்றேன். வைரவனிடம், “வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். திரும்பும்போது வைரவன், காமராஜரிடம், “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் காமராஜர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்துகொண்டேன். என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை. “எங்கெ படிக்கிறே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். “பச்சையப்பன் கல்லூரியில்’’ என்று சொன்னேன்.
”காலேஜ் இருக்கும்போது சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு ஏன் அலையிறே. இனிமெல் காலேஜுக்கு மட்டம் போட்டதா நான் கேள்விப்படக் கூடாது. ஒழுங்காப் படி, போ’’ என்றார். நான் புறப்படத் தயாரான போது, திரும்பவும் பக்கத்தில் கூப்பிட்டு அணைத்துக்கொண்டார். “நல்லா படிக்கணும். அனேகமாக உங்கள் அப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போகப்போறது இந்தப் படிப்பு மட்டுமாகத்தான் இருக்கும்’’ என்று சொன்னார். அன்று காமராஜர் சொன்னது மிகச் சரியாக இருந்தது. அப்பா காலமானபோது கடனில் அவரது சொத்துக்கள் கரைந்துவிட்டன. ஆனால், எல்லா குழந்தைகளும் நன்றாகப் படித்திருந்தோம். மூன்று பேர் டாக்டர்கள், ஒருவன் இன்ஜினீயர், நான் வக்கீல், ஒருவன் படத் தயாரிப்பாளர். அப்பாவுடைய சொத்து என்று, இன்று என்னிடம், வாசலில் நிற்கும் எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் கார் மட்டும்தான் இருக்கிறது. அந்த காரும்கூட காமராஜர் கொடுத்ததுதான்.
1967 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தோற்றதும் காமராஜர் மிகவும் நொடிந்து போய்விட்டார். “இந்த மக்களுக்காக நான் நிறைய செய்ய வேண்டும் என்றிருந்தேன். ஆனால், இப்படி என்னை முடக்கிப்போட்டு விட்டார்களே” என்று நண்பர்களிடமெல்லாம் சொன்னார். எனவே, 1967ஆம் ஆண்டு கடைசியில் வந்த நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காமராஜரை நிறுத்த காங்கிரஸ் ஆட்சி கமிட்டி முடிவு செய்தது. ஆனால், காமராஜர் சம்மதிக்கவில்லை. விண்ணப்பிக்கவோ, வாக்கு சேகரிக்கவோ வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவர் வராவிட்டாலும் பரவாயில்லை, நிற்க சம்மதித்தால் போதும் என்று ஆகிவிட்டது. அவரைச் சம்மதிக்கச் செய்து, ஜெயிக்க வைக்கும் பொறுப்பை அன்று அவருடன் நெருக்கமாக இருந்த இரண்டு இலக்கியவாதிகள் எடுத்துக்கொண்டார்கள். ஒருவர் அப்பா, மற்றொருவர் ஜெயகாந்தன். காங்கிரஸ் இவர்களை ஏற்றுக்கொண்டது. இருவருக்கும் உதவியாக அப்பா என்னை அழைத்துக்கொண்டார்.
நாங்கள் காங்கிரஸ் கட்சி எடுத்துத் தந்த விமான டிக்கெட்டுடன் நாகர்கோவில் போனோம். அங்கு நாங்கள் தொகுதியை சுற்றிவர திருச்சி காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவர் அவருடைய அம்பாஸிடர் காரை அனுப்பித் தந்தார். அந்த காரில்தான் நாங்கள் தேர்தல் வேலைகளைப் பார்த்தோம். கடைசி வரைக்கும் காமராஜர் தொகுதிப் பக்கமே வரவில்லை. ஆனாலும், காமராஜர் அமோக வெற்றி பெற்றார். சில தினங்கள் சென்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு வந்த சிலர் கட்சி உங்களுக்கு இதைத் தரச் சொல்லியது என்று கார் சாவியை அப்பாவிடம் தந்தார்கள். அந்த கார், தேர்தல் வேலைக்காக நாங்கள் உபயோகப்படுத்திய எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர். திருச்சி கட்சிக்காரரிடமிருந்து விலைக்கு வாங்கி அப்பாவுக்கு அன்பளிப்பாக கட்சி கொடுத்தனுப்பியது. ஆனாலும், “காமராஜர் கொடுத்த கார்” என்றுதான் அப்பா சொல்லுவார்.
எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் காரைத்தான் அப்பா நீண்ட நாட்கள் உபயோகித்து வந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் அரசவைக் கவிஞர் பதவியை அப்பாவுக்குக் கொடுத்தார். ரூபாய் 1000 சன்மானமும் ஒரு காரையும் அரசாங்கம் கொடுத்தது. அதன்பிறகு, அந்த காரை அப்பா பயன்படுத்தத் தொடங்கினார். நாங்கள் எம்.டி.ஜி. 140ஐ பயன்படுத்தினோம்.
முதலில் அரசவைக் கவிஞர் பதவியை ஏற்க அப்பா மறுத்து விட்டார். வற்புறுத்திதான் அந்தப் பதவியை அவரை ஏற்கச் செய்ய வேண்டியிருந்தது. அன்று எனக்கு பெண் பார்ப்பதற்காக காரைக்குடி போய்விட்டு, அப்படியே புதுக்கோட்டை, திருச்சி என்று ஒரு சுற்று போய் நண்பர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று திருச்சியில் தங்கியிருந்தோம். திருச்சியிலிருந்து வீட்டுக்கு போன் செய்தபோது, அப்பாவின் உதவியாளர் உ.அஞ்செமுத்து, “முதலமைச்சர் வீட்டிலிருந்து இரண்டு நாட்களாக உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உடனே பேசுங்கள்” என்றார். அப்பா, “சென்னைக்கு வந்தபிறகு பேசுகிறேன்” என்றார். ஆனால், சிறுது நேரத்தில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலைக் கண்டுபிடித்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார். “உடனே உங்களை முதலமைச்சர் வரச்சொன்னார்” என்றார். அப்பா என்னிடம், “என்னை ஏண்டா முதலமைச்சர் தேடணும்” என்று கேட்டார்.
அப்புறம் போனில் என்.ஜி.ஆருடன் அப்பா பேசினார். எம்.ஜி.ஆர், “உடனே சென்னை வாருங்கள். விரிவாகப் பேச வேண்டும்’’ என்று சொல்லிவிட்டார். எனவே, உடனே புறப்பட்டு சென்னை வந்தோம். சென்னையில், “உங்களை அரசவைக் கவிஞராக நியமிப்பது என்று முடிவெடுத்திருக்கிறோம்” என்றார் எம்.ஜி.ஆர். அந்த நேரம் அப்பா, எம்.ஜி.ஆரை அதிகம் திட்டிக் கொண்டிருந்த நேரம். எனவே அப்பா, “வேண்டாம்பா, உன்னை நான் தொடர்ந்து திட்டிக்கொண்டு வருகிறேன். எனவே, என் வாயை அடைக்கத்தான் அரசவைக் கவிஞர் பதவி தருகிறாய் என்று மக்கள் பேசுவார்கள்” என்று மறுத்துவிட்டார். ஆனால், எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்துவிட்டார். “மக்கள் பேசுவைதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நீங்கள் தான் அரசவைக் கவிஞர்” என்று சொல்லிவிட்டார். வீட்டில் எல்லோரும் மருமகள் வந்த நேரம் பதவி வந்திருக்கிறது என்று என் மனைவியைப் புகழ்ந்தார்கள். கல்யாண மேடையில், “நீ வந்த நேரம்தான் எனக்கு பதவி வந்திருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள் அம்மா” என்று சொன்னார் அப்பா. கல்யாணம் கீழ் திருப்பதியில் நடந்தது. எம்.ஜி.ஆர். கல்யாணத்துக்கு வந்து கல்யாண மேடையிலேயே அப்பாவை அரசவைக் கவிஞராகத் தேர்த்தெடுத்திருக்கும் விஷயத்தைச் சொன்னார்.
அப்பாவுக்கு மிகவும் பிடித்தமன விஷயங்கள் உணவு. மிகவும் விரும்பி விரும்பிச் சாப்பிடுவார். “பறப்பதில் எரோப்பேளனும் ஓடுவதில் ரயிலும் மட்டும்தான் நான் சாப்பிடாதது” என்று அப்பா சொல்லுவார். நாங்கள் எல்லாம் கல்யாணமாகி குழந்தைகள் பெற்ற பிறகும் சாப்பிடும்போது எங்களுக்கு ஊட்டிவிடுவார். அவருக்கு மிகவும் பிடித்த உணவுகளை, அவர் ஊட்டி நாங்கள் சாப்பிட வேண்டும் என்று அவருக்கு ஆசை. “நீங்கள் குழந்தைகள் பெற்றால் என்ன, இப்போதும் எனக்கு நீங்கள் குழந்தைகள்தான்பா” என்று சொல்லுவார்.
அப்புறம் பிடித்தது பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டை, துண்டு. அப்பாவுக்கு பிடிக்குமென்பதால் ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று அப்பாவுக்குப் பட்டு வேஷ்டி, சட்டை, துண்டு, கொடுத்து அனுப்புவார் எம்.ஜி.ஆர். அப்புறம் அப்பாவுக்கு பிடித்தது பேச்சு. நண்பர்களுடன் உட்கார்ந்து மணிக்கணக்காகப் பேசுவார். இரவு வீட்டுக்கு வந்தபிறகும் தொலைபேசியில் பேசிக் கொண்டேயிருப்பார். எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி, எம்.எஸ்.விஸ்வநாதன்... என்று அதிகாலை வரை அரட்டை தொடரும். இப்பொழுது சில நாட்களில் இரவு முழுவதும் தொலைபேசி மணி அடிக்காமல் சும்மாயிருப்பதைப் பார்க்கும் போது அப்பா நம்முடன் இல்லை என்பது தோன்றும். மற்றபடி அப்பா எப்போதும் எங்களுடனேயே இருக்கிறார்.
ஜனாதிபதி அப்துல்கலாமின், ‘அக்னி சிறகுகள்’ ஒரு லட்சம் பிரதிகள் விற்றதையொட்டி நடந்த விழா மேடையில் ஜனாதிபதி பக்கத்தில் சமமாக எனக்கு இருக்கை தரப்பட்டிருந்தது. அப்போது எனக்கு, அப்பாவின் 'யார் தருவார் இந்த அரியாசனம்’ என்ற பாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது. அந்த அரியாசனம், அப்ப எனக்குத் தந்தது. அப்பாவும் அம்மாவும் தந்த ஆசிர்வாதத்தால் கிடைத்தது.’’
ஒரு சிறிய மௌனத்துக்குப் பிறகு, “பேட்டியை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்” என்ற காந்தி கண்ணதாசன் கண்கள் கலங்கியிருந்தன. பையிலிருந்து கர்ச்சீப்பை வெளியில் எடுத்தார்.
சந்திப்பு: தளவாய் சுந்தரம்
Labels:
திரைப்படம்,
நினைவு,
நேர்காணல்,
முகங்கள்
01 October 2011
உலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்
டிராகுலா
ராஜகோபால்
பிராம் அபிராகாம் ஸ்டாக்கர் என்ற அயர்லாந்து எழுத்தாளரின் தனித்துவமான கண்டுபிடிப்பு 'டிராகுலா'. ஸ்டாக்கர் பல நாவல்கள் எழுதியிருந்தாலும், 'டிராகுலா' நாவலை அவர் 1897ஆம் ஆண்டு வெளியிட்ட பிறகுதான் உலகம் முழுக்க ஸ்டாக்கர் புகழ் பரவத் தொடங்குகிறது. அப்போது அவருக்கு 50 வயது. பிராம் ஸ்டாக்கர், அயர்லாந்திலுள்ள டூப்லீன் நகரில் 1847ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதிலிருந்த நரம்புக் கோளாறு நோய் காரணமாக, அவரது பால்ய காலத்தின் பெரும்பகுதியும் படுக்கையிலேயே கழிந்தது. இருட்டும் தனிமையும் பயமும் அந்நாட்களில் அவரை அலைகழிக்கத்தன. அக்காலகட்டத்தில் அவருக்கு துணையாக நின்ற ஒரே ஆறுதல், அந்த அறையில் உயரத்தில் இருந்த ஒற்றை சன்னலும் அதன் நிழல் அசைவுகளைக் கொண்டு அவர் உருவாக்கிக்கொண்ட கற்பனை உலகமும்தான். வேலையாட்கள் அவருக்காகச் சொன்ன நாட்டுபுறக் கதைகள் அவரது கற்பனைக்கு வளம் சேர்த்தன. சதா அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பதைப் பற்றிச் சொல்லும் போது, "எந்நேரமும் படுக்கையில் கிடப்பது கல்லறைக்குள் சுருண்டு கிடப்பது போலிருக்கும். இரவிலோ தூக்கம் வராது. ஆவியாகவோ, காற்றாகவோ மாறி எங்கேனும் சஞ்சரிக்க முடியாதா என்று மனம் ஏங்கும்'' என்கிறார் ஸ்டாக்கர். இந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் 'டிராகுலா' நாவல். எட்டு ஆண்டுகள் அமானுஷ்ய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து இந்நாவலை எழுதியுள்ளார் ஸ்டாக்கர். டிரான்ஸ்சில்வேனியாவில் புழங்கும் மொழிகளில் ஒன்றான வாலாச்சிய மொழியில் [ஷ்ணீறீறீணீநீலீவீணீ] டிராகுலா என்றால் சாத்தான் என்று பொருள். இந்நாவல் வெளியாகி ஒரு நூற்றாண்டும் பதிமூன்று வருடங்களும் கடந்துவிட்டன. இருப்பினும் டிராகுலா உருவாக்கிய பயம் தேசம், மொழி, இனம் எல்லாவற்றையும் கடந்து இன்றும் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
டிராகுலாவின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. நாவல் இரண்டு பகுதிகளாக விரிகிறது. முதல் பகுதி, பதினைந்தாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. டிரான்ஸ்சில்வேனியா நாட்டின் ஒரு பகுதியை டிராகுலா என்னும் அரசன் ஆண்டு வருகிறான். அவனது மனைவி பேரழகி. அவர்கள் ஒருநாள் பிரிந்திருக்க நேர்ந்தாலும், அந்நாளை நரகமாக உணர்வார்கள். அந்த அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் பேரன்பும் பெரும் காதலும் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியும் வேடிக்கை விளையாட்டுமாக நகர்கிறது. அப்போது, டிரான்ஸ்சில்வேனியா மீது துருக்கி படையெடுக்கிறது. டிராகுலா நாட்டை காப்பாற்றுவதற்காக யுத்தத்துக்குச் செல்கிறான். அவனது அசாத்திய திறமையையும் கடுமையான பயிற்சியையும் வெளிப்படுத்தி அவன் போரில் வெற்றிவாகை சூடுகிறான். வெற்றிபெற்ற சந்தோஷமும் நீண்ட நாட்களாகப் பார்க்காத மனைவியைக் காணும் ஆவலும் சேர்ந்துகொள்ள வீரர்களோடு வேகமாக அரண்மனைக்குத் திரும்புகிறவனுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
அரண்மனையில் நுழையும்போது, டிராகுலாவின் ஆசை மனைவி தற்கொலைச் செய்து தன்னை மாய்த்துக்கொண்டு செய்தி அவனுக்கு சொல்லப்படுகிறது. அவளது மரணம் டிராகுலாவை பித்துகொள்ளச் செய்கிறது. அழுது அரற்றி கதறுகிறான். யுத்தக் களத்தில் டிராகுலா கொல்லப்பட்டு விட்டதாக ஒரு தவறான தகவல் அவன் மனைவிக்கு சொல்லப்பட, அரசி ஆற்றாமையில் அரண்மனை மாடத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைச் செய்துகொண்டாள் என்ற செய்தி அவனுக்குத் தெரிய வருகிறது. அரசியின் தற்கொலைக்கு காரணமனவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கிறான். பிறகு, அரசியின் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால், அரசியின் உடலைத் தூக்கிக்கொண்டு தேவாலயத்திற்குள் நுழையும் டிராகுலாவிற்கு, அங்கே இன்னொரு அதிர்ச்சி!
தற்கொலைச் செய்துகொண்டவர்களை முறையான அடக்கம் செய்யமுடியாது என தேவசபையும் கிறிஸ்தவப் பாதிரியார்களும் டிராகுலாவை நிராகரிக்கிறார்கள். 'தேவசபைக்கும் மக்களுக்கும் நான் செய்த ஊழியத்திற்கு இந்த அவமரியாதைதான் எனக்குக் கிடைத்தப் பரிசா!' என சீற்றம் கொள்கிறான். "இனி நான் கிறிஸ்தவ மதத்திற்கும் மனித இறப்பிற்கும் எதிரி. நித்தியமானவனாக நான் மாறிகாட்டுகிறேன்'' என்று சூழுரைத்து, உடைவாளை உருவி சிலுவையையும் தேவசபை ஊழியர்களையும் வெட்டிச் சாய்க்கிறான். சிலுவையிலிருந்தும் வெட்டுப்பட்டு சாய்ந்தவர்களிடமிருந்தும் ரத்தம் பெருகி வழிகிறது. குருதியில் அரசனும் அரசியும் கரைந்துபோகிறார்கள்.
நாவலின் இரண்டாம் பகுதி... நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு, ஜோனதன் ஹார்க்கர் என்பவன் லண்டனிலிருந்து டிரான்ஸ்சில்வேனியாவிற்குப் பயணம் செய்கிறான். டிரான்ஸ்சில்வேனியாவில் இருக்கும் பிரபு ஒருவர், லண்டனில் ஓர் இடத்தை வாங்க விரும்புவதாகவும் அவருக்கு ஆலோசனை தேவைப்படுகிறது என்றும் அவனது அலுவலகம் அவனை அனுப்புகிறது. பயணத்தின் போது அவன் விசித்திரமான சில நிகழ்ச்சிகளை எதிர்கொள்கிறான். நகரத்தில் இருந்து ஒதுங்கி, தனியாக மலை முகட்டிலுள்ள அரண்மனையில் அப்பிரபு வசித்து வருகிறார். அவரது பெயர் கவுண்ட் டிராகுலா என்பதை ஹாக்கர் அறிந்துகொள்கிறான். கவுண்ட் டிராகுலாவின் சாரட் வண்டியில் மலை முகட்டை நோக்கிச் செல்லும் போது, மீண்டும் விசித்திரமான சில நிகழ்வுகளை அவன் பார்க்கிறான். வழியெங்கும் ஓநாய்களையும் விசித்திர ஒலிகளையும் அவன் கேட்கிறான். அரண்மனை வாயிலில் அவனை வரவேற்கும் கவுண்ட் டிராகுலாவின் தோற்றமும் நடத்தையும் அவனை பீதி கொள்ளச் செய்கிறது. அரண்மனையில் தங்கும்போது யாரோ தன்னை உளவு பார்ப்பதாகவும் அமானுஷ்யமான சில விஷயங்களையும் அவன் உணர்கிறான். இரவில் அங்கு ஏதேதோ நிகழ்கிறது. சிறிது நாட்கள் சென்ற பிறகுதான், அரண்மனையில் அவன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதை தெரிந்துகொள்கிறான். ஓரிரவு அவன் அரண்மனையை சுற்றிப் பார்க்கும்போது மூன்று பெண் ரத்தக் காட்டேரிகளிடம் சிக்கிக் கொள்கிறான். அவை அவனை விழுங்க முயலும்போது, கடைசி நொடியில் கவுண்ட் டிராகுலா தோன்றி அவனைக் காப்பாற்றுகிறார். அதற்கு பிறகுதான் டிராகுலா ஒரு ரத்தகாட்டேரி என்பதும், அது இறந்து பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டது என்பதும் ஹாக்கருக்குத் தெரிகிறது. எதன் பொருட்டு தான் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறோம் என்பதை மட்டும் அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. லண்டனில் இருக்கும் தன்னுடைய காதலியான மினா முர்ரேவுக்கு எல்லாவற்றையும் பற்றி கடிதங்கள் எழுதுகிறான், ஹார்க்கர். நீண்ட போராட்டதிற்கு பிறகு அவன் அங்கிருந்து தப்பி லண்டன் திரும்புகிறான்.
அவனைத் தேடிக்கொண்டு டிராகுலா லண்டலுக்கு கப்பலில் பயணம் செய்கிறது. கப்பலில் வினோதமான விஷயங்கள் நடக்கின்றன. மாலுமிகளில் பலர் காணாமல் போகிறார்கள். கப்பல் கரை சேரும்போது, கேப்டனைத் தவிர எவரும் உயிருடன் இல்லை. ஆள் அரவமற்ற கப்பலைக் கண்டு லண்டன் அதிகாரிகளும் மக்களும் திகைத்து, கேப்டனை விடுவித்துவிட்டு கப்பலை ஆராய்க்கிறார்கள். பிணங்களும் டிரான்ஸ்சில்வேனியாவில் ஏற்றப்பட்ட சில பெட்டிகளையும் கண்டுபிடிக்கிறார்கள். பெட்டிகளை உடைத்துப் பார்க்கும்போது பெட்டிகளுக்குள் எலிகளும் மணலும் மட்டும் கிடக்கின்றன. இவற்றிற்கிடையில் டிராகுலா லண்டன் மாநகருக்குள் நுழைந்துவிடுகிறது.
அச்சமயம், ஹாக்கரிடம் இருந்து நீண்ட நாட்களாக கடிதம் எதுவும் வராததால் மினா முர்ரே கலக்கமுற்று இருக்கிறாள். மினா முர்ரேயின் தோழியான லூசியை ஏதோ விசித்திர நோய் தாக்குகிறது. நோய் முற்றிய நிலையில் திடிரென்று ஒருநாள் லூசி காணாமல் போக, அவளைத் தேடும் மினா முர்ரே, லூசியை ஒரு அந்நிய புருஷனோடு கண்டுபிடிக்கிறாள். திரும்பி வந்த லூசியை பரிசோதிக்கும் மருத்துவர் வென்ஹில்சிங்கின் அவளது கழுத்தில் பதிந்து கிடக்கும் இரு பற்களைக் கண்டுகொள்கிறார். லூசியை காப்பாற்றுவதற்காக லூசியின் ரத்தத்தை முழுவதுமாக மாற்ற முயல்கிறார். [நாவலில் இச்சம்பவம் எளிதாக விவரிக்கப்பட்டு இருந்தாலும், நாவல் வெளிவந்து நீண்ட காலத்திற்கு பிறகே ரத்தமாற்று சிகிச்சையை நவீன மருத்துவம் கண்டுபிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.] மருத்துவர் முயற்சி தோற்று லூசி இறந்துபோகிறாள். இதற்கிடையில் வீடு திரும்பும் ஜோனதன் ஹாக்கர், டாக்டர் வென்ஹில்சிங்கிடம் யாவற்றையும் விவரிக்கிறான். எல்லாவற்றையும் அறிந்த டிராகுலா சீற்றம்கொண்டு மினா முர்ரேவின் கழுத்தில் மூன்று முறை பல் பதித்துவிடுகிறது. மேலும், அவளைக் கட்டுபடுத்தும் பொருட்டு தன் ரத்ததையும் மினா முர்ரேவை குடிக்கச் செய்கிறது. பின் அவளை மயக்கி அழைத்துகொண்டு டிரான்ஸ்சில்வேனியா திரும்புகிறது. டாக்டர் வென்ஹில்சிங்கும் அவருடைய நண்பர்களும் டிராகுலாவை பின்தொடர்ந்து விரட்டிச் செல்கிறார்கள். டிராகுலாவிற்கும் டாக்டர் வென்ஹில்சிங்கும் டிரான்ஸ்சில்வேனியாவில் நீண்ட சண்டை நிகழ்கிறது. சூரியன் மறையும் முன்பு டிராகுலாவை கொன்றாக வேண்டும். இல்லையென்றால் டிராகுலாவின் சக்தி மேலும் கூடிவிடும். நீண்ட போரட்டத்திற்கு பிறகு விஷேச கத்தியைகொண்டு டிராகுலாவின் கழுத்தை அறுத்துவிடுகிறார் டாக்டர் வென்ஹில்சிங். டிராகுலா சிறிது சிறிதாக கரைந்து மறைந்து போய்விடுகிறது. மினா முர்ரே மயக்கத்திலிருந்து விழித்தெழுகிறாள். போரட்டத்தில் ஒரிருவர் கொல்லப்பட பிறர் ஊர் திரும்புகிறார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு ஹாக்கரும் முர்ரேயும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு அழகான குழந்தை பிறக்க, சுபமாக முடிவடைகிறது நாவல்.
படிக்கும் போதே பயமும் பீதியும் விறுவிறுப்பும் தொற்றிக்கொள்ளும் ஒரு மொழி நடை. 'டிராகுலா' நாவல் வெளியான பிறகு, நூற்றுக்கணக்கான பேய்க்கதைகளும் பேய் சினிமாக்களும் அதையொட்டி உருவானது. இன்றுவரைக்கும் அதன் திகில் தொடர்கிறது. இத்தனைக்கும் 'டிராகுலா' நாவலின் முதல் பதிப்பு 3000 பிரதிகள்தான் விற்பனையானது. ஆனால், அடுத்தப் பதிப்பு தொடங்கி வேகமாக அதன் புகழ் பரவத்தொடங்கியது. இதுவரை 300க்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளது. 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களாக எடுக்கப்பட்டு, வெற்றிபெற்றிருக்கின்றன. தமிழில் நாசர் நடித்து, இயக்கிய 'தேவதை' திரைக்கதை 'டிராகுலா' நாவலை அடிப்படையாகக் கொண்டதுதான். 'டிராகுலா' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நான்கு உலக பிரசித்தி பெற்றவை. ஒன்று, ஜெர்மன் மௌன திரைப்பட இயக்குனரான எப்.எம்.முரனே இயக்கிய 'நோஸ்வ்வெருத்து'. இரண்டு, டொட் பிரானிங் இயக்கிய பிலா லுகோசியின் நடிப்பில் வெளிவந்த 'டிராகுலா'. மூன்று, ஜெர்மன் திரைப்பட இயக்குனரான வெர்னர் ஹெர்சாக் இயக்கிய 'நோஸ்வ்வெருத்து'. நான்கு, புகழ்பெற்ற இயக்குனரான பிரான்சிஸ் போர்ட் கப்பல்லோவின் 'டிராகுலா'. இந்நான்கு திரைப்படங்களும் மாறுபட்ட கோணங்களில் டிராகுலாவை அணுகுகின்றன். ஓர் இயக்குனரை பொறுத்தமட்டில் டிராகுலா சாத்தான்; மற்றொருவரை பொறுத்தமட்டில் அவனொரு மனநோயாளி; பிறிதொரு இயக்குனருக்கு அவனொரு வீழ்ச்சி பெற்ற காவிய நாயகன்.
உண்மையில் டிராகுலா யார்? ஸ்டாக்கருக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தைக் கண்டறியும் பயணத்தில் பல ஆய்வாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் ஈடுபட்டுள்ளார்கள். எழுத்தாளர் ஆஸ்கார் ஓயில்டின் காதலியான பிளாரென்ஸைத்தான் ஸ்டாக்கர் திருமணம் கொண்டார். எனவே, ஸ்டாக்கருக்கு எப்போதும் ஆஸ்கார் ஓயில்டோடு சிறிய பூசல் ஒன்று உண்டு. ஓயில்ட் தன் மனைவியை தன்னிடமிருந்து எப்போதும் அபகரிக்கலாம் என்ற எண்ணம் பிராம் ஸ்டாக்கரை தொடர்ந்து துரத்தி வந்திருக்கிறது. அதுதான் நாவலிலும் வெளிப்பட்டுள்ளது என பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
சிலர் வேறுவிதமாகச் சொல்லியுள்ளார்கள். 'டிராகுலா, உண்மையிலேயே டிரான்ஸில்வேனியாவை ஆண்ட ஒரு அரசன் என்றும் அவனைப் பற்றிய பலநூறு நாட்டுப்புறக் கதைகளையும் நம்பிக்கைகளையும்தான் ஸ்டாக்கர் இந்நாவலாக எழுதியுள்ளார்' என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். பதினான்காம் நூற்றாண்டில் டிரான்ஸ்சில்வேனியாவில் வாழ்ந்த வாலாசிய அரசனான மூன்றாம் வெல்ட், டிராகுலா என்றே அழைக்கப்படுகிறான். ஸ்டாக்கரின் டிராகுலாவைப் போலவே அவனும் மிதமிஞ்சிய இரத்தவெறி பிடித்தவன். போரில் கைப்பற்றிய பகுதியைச் சேர்ந்த மக்களை வெட்டவெளியில் வைத்து கழுவேற்றுவதும்போது, அதன் அருகில் அலங்காரமான மேடை அமைத்து உணவை ரசித்து ருசித்து உண்பானாம். வரலாற்றில் நூற்றிற்கும் மேற்பட்ட அரசர்களும் அரசிகளும் வெல்ட் போல டிராகுலாக்களாக செயல்பட்டிருக்கிறார்கள். 'டிராகுலா ஒருபோதும் அழிவதில்லை. அவன் நம் மனங்களுக்குள் ஒளிந்திருக்கிறான். நாம் தான் அவனை கண்டுகொள்ளவேண்டும்; அழிக்கவேண்டும்' என்கிறார் பிராம் ஸ்டாக்கர்.
(அம்ருதா, அக்டோபர் 2011 இதழில் பிரசுரமாகியுள்ளது)
18 September 2008
தொடர் - அறிமுகம்
உலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்
ராஜகோபால்
தளவாய் சுந்தரம்
"மனிதன் ஒரு நாணல். இயற்கையில் உள்ளவற்றில் மிகவும் பலகீனமானவன் அவனே. ஆனால், அவன் ஒரு சிந்திக்கும் நாணல். சிந்தனையில்தான் மனிதனின் பெருமை பொதிந்துள்ளது. மனிதனின் மீட்சிக்கு நாம் நமது கற்பனை, சிந்தனை தவிர வேறொன்றையும் சார்ந்திருக்க முடியாது."
- பாஸ்க்கால்
பாஸ்க்காலின் உலகப் புகழ்பெற்ற இந்த மேற்கோள், நமது வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளது. ஒவ்வொரு மனிதனும் சந்தோசத்தின் போதும் நெருக்கடியின் போதும் ஏதோவொரு கற்பனை பாத்திரத்தை நினைத்துக் கொள்கிறான். அக்கதாபாத்திரம்தான் அவன் வாழ்க்கையை வழி நடத்துகிறது. நம் அன்றாட பேச்சு வழக்கில்கூட இக்கற்பனை பாத்திரங்கள் எளிதாக ஊடுறுவி விடுகிறார்கள். "அவனொரு ஒநாய்; டிராகுலா!", "அவனுக்கு பெரிய அரிச்சந்திரன்னு நினைப்பு!" போன்ற வாக்கியங்கள் கற்பனை நம் வாழ்க்கையை பாதித்தற்கான தடயங்கள். அரிச்சந்திரன் நாடகம் காந்தியின் வாழ்க்கையில் நிகழ்த்திய பாதிப்பை நாம் அறிவோம். நண்பர்கள், உறவினர்கள் போலவே இந்தக் கற்பனை மனிதர்களும் நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அப்படி மிகவும் அதிகமாக இந்த உலகைப் பாதித்த, எப்போதுமே இந்த உலகில் வாழ்ந்திராத கற்பனை மனிதர்களைப் பற்றிய தொடர் இது.
முதலில்... டிராகுலா!
(விகடன் புக் கிளப் உறுப்பினர்களுக்காக வெளியிடப்படும் ‘விகடன் புக்ஸ்’ இதழில் ராஜகோபாலுடன் இணைந்து எழுதியது இது. நான் விகடன் நிறுவனத்தில் இருந்து விலகிய பிறகு இதனை தொடர முடியவில்லை. இப்பொழுது, இந்த பிளாக்கில் தொடரும் திட்டம்.)
28 August 2008
புத்தகம்
சத்யஜித் ரேயின் ஆசை!
உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே, முக்கியமான ஒரு எழுத்தாளரும்கூட. ரேயின் திரைப்படங்கள், ஓவியங்கள், இசைக் கோர்வைகளைப் போலவே ரேயின் எழுத்துகளும் அவரது கலை மேதமையின் வெளிப்பாடுகளாக உள்ளன. பெரும்பாலும் சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காவும்தான் ரே எழுதியிருக்கிறார். அவற்றில் பிரசித்தமானவை ஃபெலுடா வீரசாகசக் கதைகள். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை. கலைப்பட இயக்குநராக நாமறிந்த சத்யஜித் ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம் இது!
1965இல் தொடங்கி தன் இறுதி காலம் வரைக்கும் மொத்தம் முப்பத்தைந்து ஃபெலுடா சாகசக் கதைகளை எழுதியுள்ளார், ரே. அவரது சிறந்த திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் இந்தக் கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்பது, தொடர்ந்து எழுதுவதை அவர் முக்கியமாகக் கருதியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. குறிப்பாக, கடைசி ஃபெலுடா கதை அவரது இறுதி நாள்களில் எழுதப்பட்டு, அவரது மறைவுக்குப் பிறகு 1995ஆம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. வங்காளத்தில் எழுதப்பட்ட இந்தக் கதைகள், சத்யஜித் ரே காலகட்டத்திலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இப்பொழுது, கிழக்கு பதிப்பகம் முப்பத்தைந்து ஃபெலுடா கதைகளையும் தமிழில் கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள மேற்கு வங்க தகவல் நிலையத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் வீ.பா. கணேசன், இம்மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார்.
இதில் விசேஷம் என்னவென்றால், தன் எழுத்துகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என சத்யஜித் ரே விரும்பி இருக்கிறார் என்பதுதான். மொழிபெயர்ப்பாளர் வீ.பா. கணேசன், வங்காளத்தில் பணிபுரிந்த காலங்களில் ரேயுடன் நேரடியாக பழகியவர். சென்னை ஃபிலிம் சொசைட்டி மிகவும் செயலூக்கத்துடன் இருந்த காலகட்டத்தில் அதில் இருந்தவர்களுள் கணேசனும் ஒருவர். மிருனாள் சென்னின் “சினிமா: ஒரு பார்வை’, ஜோதிபாசுவின் சுயசரிதை உள்பட பல புத்தகங்களை ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதில் “சினிமா: ஒரு பார்வை’ தமிழ் மொழிபெயர்ப்பை ரேயிடம் காட்டிய போதுதான் இப்படி ஒரு ஆசையை வெளியிட்டாராம் ரே. துரதிர்ஷ்டவசமாக தன் ஆசை நிறைவேறுவதைப் பார்க்க இப்பொழுது ரே இல்லை. சத்யஜித் ரே இருந்த போதே, இந்திரன் அவரைப் பற்றி எழுதிய ஒரு சிறு நூல் தமிழில் வந்திருந்தது. அதையும் ரே அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. இத்தனைக்கும் அக்காலகட்டத்தில் அவர் அடிக்கடி சென்னை வந்துபோய் கொண்டிருந்திருக்கிறார். அவரது திரைப்படங்களின் தொழில்நுட்ப வேலைகள் பெரும்பகுதி சென்னையில்தான் நடந்துள்ளன.
குழந்தைகள், சிறுவர்கள் மீதான சத்யஜித் ரேயின் அக்கறையும் கரிசனமும் நாம் நன்கறிந்தது. அவரது முக்கியமான சிறுவர்கள் திரைப்படங்களே அதற்கு சாட்சி. இதன் வேர், ரேயின் அப்பா வழி தாத்தா உபேந்திர கிஷோர் ரேயிடம் இருந்து தொடங்குகிறது. உபேந்திர கிஷோர் ரே, ‘சந்தேஷ்’ என்ற சிறுவர்கள் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். அவரது காலத்துக்குப் பிறகு ரேயின் தந்தை சுகுமார் ரே அந்தப் பத்திரிகையை நடத்தினார். ஆனால், பொருளாதார இழப்புகள் காரணமாக தொடர்ந்து நடத்த முடியாமல் இடையிலேயே நிறுத்திவிட்டார். சத்யஜித் ரே வளர்ந்து, பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்தபிறகு 1961ஆம் வருடம் ‘சந்தேஷ்’ பத்திரிகையை மீண்டும் தொடங்கி, தன் இறுதிகாலம் வரைக்கும் நடத்தினார். இந்த ‘சந்தேஷ்’இல் தான் ஃபெலுடா என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, துப்பறியும் கதைகள் எழுதினார் சத்யஜித் ரே.
முதல் ஃபெலுடா கதை ‘டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்’ 1965ஆம் வருடம் வெளியானது. அப்பொழுது தொடர்ந்து ஃபெலுடா கதைகள் எழுதும் திட்டம் எதுவும் ரேயிடம் இல்லை. ஆனால், “டார்ஜீலிங்கில் ஒர் அபாயம்’ கதைக்கு வங்காள வாசகர்கள் மத்தியில் கிடைத்த உற்சாக வரவேற்பு, அவரை தொடர்ந்து எழுதத் தூண்டியது. அடுத்த வருடமே இரண்டாவது மற்றும் மூன்றாவது ஃபெலுடா கதைகளான “மகாராஜாவின் மோதிரம்’, ‘கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்’ ஆகியவற்றை எழுதினார். அடுத்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் 1970இல் தொடங்கி 1992 வரைக்கும், வருஷம் ஒன்று அல்லது இரண்டு வீதம் விடாமல் எல்லா வருடங்களும் எழுதியிருக்கிறார். 1992 ஏப்ரல் 23இல் ரே காலமானார். கடைசி ஃபெலுடாக் கதையான “மாய உலகின் மர்மம்’ அவரது மறைவுக்குப் பிறகு 1995ஆம் வருடம் வெளியானது.
‘சந்தேஷ்’ இதழில் இக்கதைகள் வெளியான போது அதற்கான படங்களையும் சத்யஜித் ரே வரைந்துள்ளார். ரே அடிப்படையில் ஒரு ஓவியர்; சாந்தி நிகேதன் கலாபவனத்தில் ஓவியத்தை முறையாகப் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களும் கிழக்கு பதிப்பகம் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளன.
சிறுவயது முதல் துப்பறியும் கதைகள் மீது சத்யஜித் ரேக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. பள்ளிக்கூட நாட்களிலேயே ஹெர்லக் ஹோம்ஸ் கதைகள் முழுவதும் படித்து முடித்திருக்கிறார். ஒருவகையில் இந்த ஆர்வம்தான் வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என்று அழைக்கப்பட்ட ஃபெலுடா கதாபத்திரத்தை உருவாக்கவும் காரணமாக இருந்திருக்கும். துப்பறியும் நிபுணரான ஃபெலுடாவும், அவரது ஒன்றுவிட்ட சகோதரன் தபேஷும், துப்பறியும் கதை எழுத்தாளர் லால்மோகன் பாபுவும் தான் இக்கதைகளின் பிரதான பாத்திரங்கள். இதில் தபேஷ் சொல்வது போல் எல்லாக் கதைகளையும் ரே எழுதியுள்ளார். அசாத்திய புத்திக்கூர்மை, தெளிவான சிந்தனை வீச்சு, குழப்பமான மர்ம முடிச்சுகளையும் திறம்பட அவிழ்க்கும் திறன் ஆகியவற்றுடன் மெல்லிய நகைச்சுவை உணர்வும் கொண்டவராக ஃபெலுடா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார், ரே. ஃபெலுடாவின் ஒவ்வொரு செயலும் தபேஷுக்கு வியப்பூட்டுகின்றன. இந்த வியப்பு, படிக்கும் நம்மையும் பற்றிக்கொள்கிறது என்பதுதான் ரே எழுத்தின் சாகசம்.
சத்யஜித் ரேயின் முக்கியமான சிறுவர் திரைப்படங்களான ‘ஜொய் பாபா ஃபெலுநாத்’, ‘சோனார் கெல்லா’ ஆகியவை முறையே ‘பிள்ளையாருக்குப் பின்னே ஒரு மர்மம்’, ‘தங்கக் கோட்டை’ ஆகிய ஃபெலுடா கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவைதான். ரேயின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் சந்தீப் ரேயும் சில ஃபெலுடா கதைகளை திரைப்படமாக எடுத்துள்ளார்.
சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும்தான் ஃபெலுடா வரிசை கதைகளை சத்யஜித் ரே எழுதியுள்ளார். என்றாலும், பெரியவர்களும் இக்கதைகளை விரும்பிப் படிக்கிறார்கள்; படிக்கலாம். தமிழில் ‘க்ரைம் ஸ்டோரி’ என நமக்கு அறிமுகமாகி இருக்கும் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை ஃபெலுடா வீர சாகசக் கதைகள். சிறுவர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைக்கலாம்; அவ்வளவு நாகரிகம்!
Subscribe to:
Comments (Atom)










