Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

12 August 2016

மொய் விருந்து

ஒரே நாளில் கோடீஸ்வரன்!

(புதிய தலைமுறை 06-08-2015 இதழில் வெளியானது.)


ஆடி மாதம் தமிழகம் முழுக்க விசேஷங்கள்தான். காவடி, பொங்கல், பால் குடம், தீமிதி, கூழ் என மக்கள் கூட்டம் கூட்டமாய்த் திருவிழா மனநிலையில் இருப்பார்கள். அம்மன் கோவில்களில் கொடியேற்றப்படும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் நடைபெறும். ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் பெண்கள் அவ்வையாருக்கு விரதப் பூஜை செய்வார்கள். ஆடி வெள்ளி வரலட்சுமி விரதம். பெண்கள் 108, 1008 குத்து விளக்குப் பூஜைகள் செய்வார்கள். காவேரி பாயும் பகுதிகள் முழுக்க ஆடிப்பெருக்கு. இன்னொரு பக்கம், ஆடிப்பட்டம் தேடி விதை என்று விவசாயிகள் வெள்ளாமையைத் துவங்குவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து பெண்ணைத் தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். மேலும் ஆடித் தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, வியாபார நிறுவனங்கள் அறிவுக்கும் ஆடிக் கழிவு என மாதம் முழுக்கக் கொண்டாட்டங்கள்தான். இவைகளுடன் இன்னொரு கொண்டாட்டமும் சேர தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஆடி இன்னும் விசேஷமானது. அது மொய் விருந்து!

ஆடி மாதம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சுற்று வந்ததுமே பேருந்து நிலையம், சாலை, கடை வீதி, கல்யாண மண்டபங்கள், கோயில்கள் என எங்கும் நிறைந்திருக்கும் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது. லோக்கல் பேருந்து பயணமே பிரமிப்பூட்டுகிறது. மடிப்பு கலையாத வெள்ளை வேட்டிச் சட்டையில் ஆண்கள் பக்கம் பளீர் என்றிருந்தால் பெண்கள் பக்கமோ பட்டு, கழுத்தை மறைக்கும் தங்க நகைகள் என ஜொலிக்கிறது. இரு சக்கர வாகனம், கார் எனச் சாலையில் பறப்பவர்கள் நிலையும் இதுதான். எல்லோருமே மொய் விருந்துகளுக்குச் செல்பவர்கள் அல்லது சென்றுவிட்டு திரும்புபவர்கள். ஒவ்வொரு ஊரில் டிஜிட்டல் பேனர்களில் குடும்பம் குடும்பமாகச் சிரித்துக்கொண்டே விருந்துக்கு அழைக்கிறார்கள். ஆடி மாதம் தொடங்கும் இந்தக் கொண்டாட்டம் ஆவணி கடைசி வரைக்கும் தொடருமாம். ஜுலை கடைசி வாரத்திலிருந்து அக்டோபர் பாதி வரை.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இல்லாமல் தஞ்சாவூர், புதுக்கோட்டைப் பகுதிகளுக்கு மட்டும் இந்த மொய் விருந்து கொண்டாட்டம் எப்படி வந்தது?

வங்கிகள் போன்ற வருமானத்தைச் சேமித்து வைப்பதற்கான முறைகள் இல்லாத பழங்காலங்களில், திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் வந்தால், அதனை நடத்த ஒரு குடும்பத்துக்குத் திடீரென அதிகப் பணம் தேவைப்படும். அப்போது, அவர்களது நெருக்கடியை ஊரும் உறவும் பகிர்ந்துகொள்ளும் ஒரு பகுதியாகத்தான் மொய் பழக்கம் தொடங்கியிருக்க வேண்டும்.

கல்யாணம், காது குத்து, சடங்கு, புதுமனை புகுவிழா எனக் குடும்ப வைபவங்களுக்கு மொய் செய்யும் பழக்கம் எல்லா இடங்களிலும் போல்தான் தஞ்சை, புதுக்கோட்டைப் பகுதியிலும் தொடக்கக் காலங்களில் இருந்திருக்கிறது. ஆனால், இந்தப் பகுதி தண்ணீர் செழிப்புக் காரணமாக விவசாயம் நன்றாக நடந்து, மக்கள் கொஞ்சம் வசதி வாய்ப்புகளுடன் இருப்பதால், மற்ற பகுதிகளைவிட அதிகமாக மொய் செய்வார்கள். மற்றப் பகுதிகளில் 5, 10 ரூபாய் என மொய் இருந்த காலகட்டத்திலேயே இப்பகுதிகளில் 25, 50 ரூபாய்ச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படி, மொய் செய்த வகையிலேயே நம்முடைய பெரும்பணம் ஊரெல்லாம் விரவிக் கிடக்கும். இதனை எப்படித் திரும்ப வாங்குவது? நமது வீட்டில் கல்யாணம், காட்சி வரும்போது நாம் செய்த மொய்யை அவர்கள் திரும்பச் செய்வார்கள். ஆனால், நாம் செய்திருந்ததைவிட அவர்கள் குறைவாகச் செய்தால், அதனால் குழப்பங்கள் ஏற்படும். குறிப்பாக, இப்படி நிறையப் பேர் செய்துவிட்டால், ஒரு குடும்பம் லாபம் அடைந்து இன்னொரு குடும்பம் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுவிடும். மேலும், ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் என்றால், நான்கு பேர் கல்யாணத்துக்கும் 50 ரூபாய் வீதம் செய்திருப்போம். ஆக, நமது பணம் 200 ரூபாய் அந்தக் குடும்பத்திடம் நிற்கும். (இன்று குறைந்தது 500 ரூபாய் மொய் செய்கிறார்கள். அதன்படி இன்றைய கணக்கு 2000 ரூபாய்.) ஆனால், நமது வீட்டில் ஒரு நிகழ்ச்சி மட்டும் நடைபெற்று, அவர்கள் 50 ரூபாய் மட்டும் திரும்ப செய்துவிட்டாலும், நமக்கு நஷ்டம்தான். இதனால், ஏற்பட்ட அனுபவங்கள் அடிப்படையிலும், கால ஓட்டத்திலும் மொய் செய்வதில் சில வரைமுறைகள் உருவாகி வந்திருக்கிறது.

நமது பணம் மேற்படியார் கையில் சில வருடங்கள் இருந்திருக்கிறது. அந்தப் பணம் தொழிலோ விவசாயத்திலோ முதலீடு செய்து பெருகியிருக்க வேண்டிய பணம். எனவே, அதனைக் கணக்கிட்டு அவர்கள் திரும்பச் செய்யும்போது, செய்ததையே திரும்பச் செய்யாமல், அவர்கள் சக்திக்கு தகுந்தார்போல் கூடுதலாகச் செய்திருக்கிறார்கள். இதன் அடுத்தக்கட்டமாக, யார் யார் வீட்டுக்கு நாம் எவ்வளவு செய்திருக்கிறோம், நமக்கு யார் யார் எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை ஒரு சிறிய நோட்டுப் புத்தகங்களில் குறித்து வைத்து, அதனைப் பார்த்து, யாரும் பாதிப்படையாதபடி, மொய் செய்ததைக் கணக்கிட்டுத் திரும்பச் செய்யும் வழக்கம் உருவாகியிருக்கிறது. அதிலும் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டது.

ஒரு குடும்பத்துக்கு முதல்முறை மொய் செய்யும் போது புதுநடைஎனக் குறிப்பிட்டு கொடுப்பார்கள். அதே குடும்பத்தில் அடுத்து நிகழ்ச்சி வந்தால், ‘இரண்டாம் முறைஎன்று சொல்லிக் கொடுப்பார்கள்; இப்படி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் மூன்றாம் முறை, நான்காம் முறை எனச் சொல்லிக் கொடுப்பார்கள். மொய் கொடுத்தவர் வீட்டில் நிகழ்ச்சி வரும்போது, முதல் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உள்ள கடைசி நிகழ்ச்சி நோட்டை எடுத்து முதலில் பார்ப்பார்கள். பிறகு 3வது, 2வது, முதல் நிகழ்ச்சி என்ற வரிசையில் நோட்டைப் பார்ப்பார்கள். இதில் ஒரு நோட்டில் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் அதற்கு முந்தைய நிகழ்ச்சி நோட்டுகளை எடுத்துப் பார்க்கமாட்டார்கள். எனவே, முதல் நிகழ்ச்சிக்கு செய்தால் அதன்பிறகு வரும் எல்லா நிகழ்ச்சிக்கும் தவறாமல் மொய் செய்துவிட வேண்டும். இடையில் ஒரு நிகழ்ச்சி தவறினால் அதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளுக்குச் செய்த மொய் திரும்ப வராது. எனவே, நம்மால் போக முடியாவிட்டாலும் ஒருவரிடம் கொடுத்துவிட வேண்டும்.

வேட்டைப்பெருமாள்
சரி, நாம் நிறையக் குடும்பங்களுக்கு மொய் செய்திருக்கிறோம். ஆனால், நம் வீட்டில் ஒரு வைபவமும் இல்லை என்றால் எப்படிச் செய்துள்ள மொய்களைத் திரும்பச் சேகரிப்பது. இந்நிலையில்தான் மொய் விருந்து என்னும் பழக்கம் உதயமானது. குழந்தைகள் இல்லாதவர் கல்யாணம், காதுகுத்து, சடங்கு என எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாது. இந்நிலையில் மொய் விருந்து நடத்துவார்கள். இவர்கள் யார், யாருக்கெல்லாம் மொய் செய்திருக்கிறார்களோ அவர்கள் எல்லோரையும் அந்த விருந்துக்கு அழைப்பார்கள். அவர்களும் தங்கள் வீட்டில் உள்ள நோட்டுகளைப் பார்த்து, கணக்கிட்டு, விருந்து சாப்பிட்டு மொய் செய்வார்கள். இதுதான் மொய் விருந்து உருவான கதை’’ என்கிறார், பேராவூரணி அருகேயுள்ள குன்றக்காடு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வேட்டைப்பெருமாள். இவர் மொய் விருந்துகளை அடிப்படையாக வைத்து ஒரு நாவல் எழுதும் திட்டத்துடன் கள ஆய்வுகள் செய்து வருகிறார்.

ஆனால் தற்போது, வீட்டில் விசேஷங்கள் நடத்திய குடும்பங்களும்கூட மொய் விருந்து நடத்துகிறார்கள். மேலும், ஒவ்வொரு குடும்பமும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சியாக மொய் விருந்து நடத்துகிறது. இதனால், மொய் விருந்துகள் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே வந்து, இந்த வருடம் 1000 மொய் விருந்துகள் நடத்தப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இதுவும் முந்தைய அனுபவங்கள் அடிப்படையில், மொய் கணக்கு வழக்குகள் மேலும் மேலும் முறைப்படுத்தப்பட்டு வந்ததன் ஒரு விளைவுதான்’’ என்கிறார், எழுத்தாளர் வேட்டைப் பெருமாள்.

பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. 1015 வருடங்களுக்குப் பின்னால் மொய் திரும்பிச் செய்யப்படும்போது அந்தப் பணத்தின் மதிப்பு மிகவும் இறங்கியிருக்கும். மேலும், நீண்ட காலங்கள் கணக்கு வழக்குகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கவும் முடியாது. எனவே, நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கொடுக்கல் வாங்கலை சரிசெய்துவிடுவோம் என்றாகிவிட்டது. அதாவது, நான்கு வருடத்துக்குள் நம் வீட்டில் நிகழ்ச்சி எதுவும் இல்லையென்றால் மொய் விருந்து நடத்துவார்கள். பிறகு அது, குடும்ப நிகழ்ச்சிகளுக்குச் செய்த மொய்யை திரும்ப வாங்குவதற்கு மட்டுமல்லாமல், மொய் விருந்துக்குச் செய்த மொய்யை திரும்ப வாங்குவதற்காகவும் என இப்போது எல்லாக் குடும்பத்தினரும் நான்கு வருடத்துக்கு ஒருமுறை எதாவது ஒரு குடும்ப நிகழ்ச்சி அல்லது மொய் விருந்து நடத்துகிறார்கள்.

பொதுவாக மொய் விருந்துகள் ஆடி, ஆவணி மாதங்களில்தான் நடைபெறும். இந்த நான்கு வருடங்களுக்குள் குடும்ப வைபவம் இருப்பவர்கள் மட்டும் இந்த மாதங்களில் அல்லாமல் குடும்ப வைபவத்தோடு சேர்த்து மொய் விருந்தையும் நடத்துவார்கள். அழைப்பிதழில் அது குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, கல்யாணத்துடன் நடத்தப்படும் மொய்விருந்து என்றால், ‘விருந்துண்டு மொய் பெய்து மணமக்களை வாழ்த்த வேண்டுகிறோம்என அழைப்பிதழில் போட்டிருப்பார்கள்’’ என்கிறார் வேட்டைப் பெருமாள்.

பழங்காலங்களில் மொய்க்கு இருந்தது போலவே, இப்போது மொய் விருந்துக்கும் சில வரைமுறைகள் இருக்கிறது. உதாரணமாக, 2010ஆம் ஆண்டு நீங்கள் ஒருவருக்கு 1000 ரூபாய் மொய் செய்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். 2011ஆம் ஆண்டு நீங்கள் நடத்தும் மொய் விருந்தில் அவர் திரும்ப 1000 ரூபாய் மொய் செய்துவிட்டு, மேற்படியார் புதுநடை எனக் குறிப்பிட்டு 250 ரூபாயோ அல்லது அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு கூடுதலோ செய்வார். 2011இல் நடத்தாமல் 2012ஆம் ஆண்டு நீங்கள் மொய் விருந்து நடத்தினால், 1000 ரூபாய் செய்துவிட்டு, மேற்படியார் புதுநடை 500 செய்வார். இப்படியே அதிகரித்து நான்காவது வருடம் மேற்படியார் புதுநடை 1000 ரூபாய் ஆகிவிடும். இதில் ஒவ்வொரு முறையும் மேற்படியார் புதுநடை அவரவர் சக்திக்குத் தகுந்தார் போல் அதிகமாக இருக்கும்.

இந்த மொய் வரிசையில் இருந்து விலக வேண்டும் என்று விரும்பினால், திரும்பச் செய்யும்போது மொத்தமாக 1100 செய்துவிட வேண்டும். மேற்படியார் புதுநடைஎனத் தனியாகக் குறிப்பிடவில்லை என்றால் மொய்யில் இருந்து முறித்துக்கொண்டு விட்டார் எனப் புரிந்துகொள்வார்கள். அதுபோல் மொய்யில் இருந்து விலக விரும்புகிறீர்கள். ஆனால், நீங்கள் செய்துள்ள மொய்கள் நிறைய இன்னும் பிரியாமல் இருக்கிறது என்றால், ஒரு மொய் விருந்து நடத்தி, அழைப்பிதழில், ‘போட்ட மொய் மட்டும் வாங்கப்படும்; புது மொய் தவிர்க்கவும்எனக் குறிப்பிட வேண்டும். நாம் சந்திந்த ஒவ்வொருவர் வீட்டிலும் பெரிய பெரிய பேரேடுகளில் மொய் கணக்கு வழக்குகள் குறித்து வைக்கப்பட்டுள்ளது. அனேகமாக எல்லாக் குடும்பங்களிலும் இப்படிப்பட்ட பேரேடுகள் இருக்கும் என்கிறார்கள்.

சரி, இவ்வளவு முறையான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் இருக்கிறதே, எல்லோரும் சரியாகப் பின்பற்றுவார்களா?

பெரும்பாலும் குழப்பங்கள் நடப்பதில்லை. முறைகளைப் பின்பற்றவில்லை என்றால் நாணயம் இல்லாத ஆள் என்று பெயராகிவிடும். நான்கு வருடம் என்னுடைய 1000 ரூபாயை வைத்துக்கொண்டு, வெட்கமே இல்லாமல் அதனையே திரும்பச் செய்துவிட்டுப் போகிறான் என்பார்கள். தங்கள் நாணயத்தைக் கெடுத்துக்கொள்ள யாரும் விரும்புவதில்லை’’ என்கிறார், திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, கீழாத்தூர், கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், வடகாடு, சேந்தன்குடி மற்றும் இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்கள் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, ஆவணம், நெடுவாசல், வேம்பங்குடி, பைங்கால், குருவிக்கரம்பை, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மொய்விருந்து அதிகமாக நடத்தப்படுகிறது. இன்று மொய் குறைந்தது 500 ரூபாய் என்று ஆகிவிட்டது. அதற்கும் குறைவாகச் செய்தால் கெளரவக் குறைச்சல். இன்னார் இவ்வளவு செய்திருக்கிறாராம்’’ என மற்றவர்கள் பேச வேண்டும் என்பதற்காக 50 ஆயிரம், 1 லட்சம் ரூபாய் வரை மொய் செய்பவர்களும் இருக்கிறார்கள். 3 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் வரைக்கும், அவரவர் செய்திருக்கும் சக்திக்கு தகுந்தார்போல் மொய் பிரிந்திருக்கிறது. நமக்கு எவ்வளவு பிரிந்திருக்கிறதோ அதனை அடுத்த நான்கு வருடத்துக்குள் திரும்பச் செய்ய வேண்டிருக்கும் என்பதால் அதனைக் கணக்கிட்டு தயாராக இருக்கிறார்கள். 3 கோடி ரூபாய் பிரிந்த ஒரு குடும்பம், அடுத்த நான்கு வருடமும் ஆடி, ஆவணி மாதங்களில் 2550 லட்சம் ரூபாய் வரைக்கும் திரும்ப மொய் செய்ய வேண்டியதிருக்கும்.

தமிழகம் முழுக்க, ஆரம்பக் காலங்களில் அந்தந்தக் கிராமங்களில் பந்தல்போட்டுக் கல்யாணம், காட்சி, காதுகுத்து என நடந்த குடும்ப வைபவங்கள் இப்போது பக்கத்து நகரங்களிலுள்ள கல்யாண மண்டங்களுக்கு நகர்ந்துவிட்டது போல், இப்பகுதியில் மொய் விருந்துகளும் கிராமங்களில் இருந்து பக்கத்து நகர மண்டபங்களுக்குச் சென்றுவிட்டது. மொய் விருந்து நடத்துவதற்கு என்றே தனியாக அரங்கங்களும் கட்டப்பட்டுள்ளன. வடகாடு, கீழாத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கோயில்களிலும் நடத்தப்படுகிறது. ஒரு குடும்பம் தனியாக நடத்துவது மட்டுமல்லாமல், செலவுகளைக் குறைப்பதற்காக 45 குடும்பங்கள் சேர்ந்தும் மொய் விருந்து நடத்துகிறார்கள்.

மொய் பணத்தைப் போடும் குவளைச் சட்டியில் பூ, புதுத் துண்டு சுற்றி, கையில் ஒரு பேரேடுடன் மொய் பிரிப்பவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பெரிய குடும்பங்களில், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், ஒரே அரங்கத்தில் 1012 இடங்களில் உட்கார்ந்து மொய் பிரிக்கிறார்கள். அரங்கத்தின் வாசலில் விருந்து நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நின்று வரவேற்கிறார்கள். மொய் செய்ய வருபவர்களில் சிலர் கையில் நீளமான ஒரு தாளில் யாருக்கு எவ்வளவு திரும்பச் செய்ய வேண்டும் எனக் குறித்து வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரே நாளில் பல இடங்களில் நடக்கும் விருந்துகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்பதால், குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, வீட்டிலுள்ள பழைய பேரேடுகளைப் பார்த்து, பட்டியலைத் தாயாரித்துவிட்டுதான் புறப்படுவார்களாம்.

“மொய் விருந்து என்றாலே அசைவ சாப்பாடுதான். குடும்ப நிகழ்ச்சிகளில் அசைவம் போடுவதில்லை என்பதால், கல்யாணத்தோடு சேர்த்து நடத்தப்படும் மொய் விருந்துகளில் மட்டும் சைவம் போடப்படும். ஆனால், சைவச் சாப்பாடு மொய் விருந்து என்றால் கொஞ்சம் ஆர்வக் குறைவாகத்தான் இருக்கும்’’ என்கிறார், திருச்சிற்றம்பலம் மாரிமுத்து.

காலையில் 10 மணி முதல் 1 மணி வரைதான் மொய் விருந்துகள் நடைபெறுகிறது. எனவே, மொய் செய்ய வேண்டியவர்கள் அதற்குள் வந்து செய்துவிட வேண்டும். 1 மணிக்கு கூட்டிக் கழித்து எவ்வளவு மொய் பிரிந்திருக்கிறது என்று நெருக்கமானவர்களுக்குத் தெரிவித்து விடுகிறார்கள். 1 மணிக்குப் பிறகு செய்யப்படும் மொய்கள் தனிப் பேரேடில் பின்வரவு எனக் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், “அதற்கு மரியாதைக் குறைவு. மேலும், இதனைத் திரும்ப வாங்குவதும் சிக்கலுக்குள்ளாகும். ஏனென்றால், ஒரு குடும்பத்தில் இருந்து மொய் விருந்து அழைப்பு வந்தால், அவர்கள் எவ்வளவு மொய் செய்திருக்கிறார்கள் என, மொய் விருந்துப் பேரேடில்தான் பார்ப்பார்கள். அதில் பெயர் இல்லையென்றால் மட்டும்தான் பின்வரவு பேரேடை எடுத்துப் பார்ப்பார்கள். பின்வரவு பேரேடில் பெயர் இருந்தாலே, இவன் நமக்கு மரியாதை தரவில்லை; இவனுக்கு ஏன் நாம் மரியாதை தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடும்’’ என்கிறார், வேட்டைப்பெருமாள்.

பத்திரிகை சரியாகச் சென்று கிடைக்காதவர்கள், தேதியை மறந்தவர்கள், பல்வேறு வேலைகள் காரணமாக வரமுடியாவர்கள், மொய் செய்யப் பணம் இல்லாதவர்கள் என எப்படியும் சில விடுபடல்கள் இருக்கும்தானே. இதனை எப்படிச் சமாளிக்கிறார்கள்?

இதற்காக மொய் விருந்து முடிந்தபிறகு வீட்டுக்குச் சென்று ஏற்கெனவே யார், யாருக்கு மொய் செய்திருக்கிறோம்; அவையெல்லாம் திரும்ப வந்துவிட்டதா எனப் பழைய பேரெடையும் புதுப் பேரேடையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்து, ‘மொய் பாக்கி லிஸ்ட்தயார் செய்வார்கள். பிறகு, ஓர் ஆளை நியமித்து அந்த வீடுகளில் சென்று வசூலிக்கச் சொல்லுவார்கள். இப்படி வரும் ஆள், “மொய் பாக்கி’’ என்று மட்டும்தான் சொல்லுவார். நாம் நமது வீட்டுப் பேரேட்டில் அவர்கள் எவ்வளவு செய்திருக்கிறார்கள் எனப் பார்த்து கொடுக்க வேண்டும். அப்போதும் கொடுக்க முடியாதவர்கள் இப்போது இல்லை பிறகு தருகிறேன் எனச் சொல்லுவார்கள். முடியும்போது கொடுத்துவிடலாம்.

ஆனால், 45 வருடங்களுக்கு மேலும் கொடுக்காமல் இருந்தால், சாலைகளில் வழியில் பார்க்கும்போது கேட்பார்கள். வருடங்கள் அதிகரிக்க, அதிகரிக்க மரியாதை குறையும். எனக்குத் தெரிந்த ஒருவர் 15 வருடங்களாகத் திரும்ப வராத மொய்யைக் கேட்டு, வாக்குவாதம் முற்றி, சண்டையாகி, காவல்துறை வழக்கு வரைக்கும் சென்றது. ஆனால், இப்படியாவது பெரும்பாலும் மிகக் குறைவுதான். குறிப்பிட்ட நபர் நெருக்கமானவராகவோ உறவினராகவோதான் இருப்பார் என்பதால், “அவன் நாணயம் அவ்வளவுதான்’’ என்று சொல்லி விட்டுவிடுவார்கள்.

இப்படி நாணயம் இல்லாத ஆள் என்று இப்பகுதியில் பெயரெடுத்தவர்கள் அதன்பிறகு வெளியே வட்டிக்கு கடன் வாங்குவது சிக்கலாகிவிடும். மொய்யைத் திரும்பச் செய்ய முடியாதவர், கடனை எப்படித் திரும்ப அடைப்பார் என யோசிப்பார்கள். எனவே, பெரும்பாலும் மொய்யை திரும்பச் செய்துவிடுவார்கள். செய்ய முடியாத சிலருக்கு உறவினர்கள், ஏதோ கஷ்டப்பட்டுவிட்டான், கைதூக்கிவிடுவோம் என உதவுவதும் நடக்கும்’’ என்கிறார் வேட்டைப்பெருமாள்.

குறிப்பிட்ட சாதியினர் என்றில்லாமல் எல்லாச் சாதியினரும் மொய் விருந்து நடத்துகிறார்கள். குடும்ப நிகழ்ச்சிக்கு உறவினர்கள் மட்டுமல்லாமல் நண்பர்கள், தெரிந்தவர்கள் என எல்லாச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வருவதுபோல் மொய் விருந்துக்கும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அதுபோல் திரும்பச் செய்வதற்கும் வேறுவேறு சமூகத்தினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார்கள். இதில் இன்னொரு சுவாரசியம், முன்பின் தெரியாத ஒருவரும் மொய் விருந்து பற்றிக் கேள்விப்பட்டு வந்து மொய் செய்கிறார். அதுபோல் தெரியாதவர்களிடம் இருந்தும் ஒருவருக்கு மொய் விருந்து பத்திரிகைகள் வருகிறது. இப்போது சிலர் வாட்ஸ்அஃப்பிலும் அழைப்பிதழ்கள் அனுப்புகிறார்கள்.

“மொய் விருந்தில் பிரியும் பணம் நமது பணமல்ல; இதனைத் திரும்பச் செய்ய வேண்டும் என்ற தெளிவுடன், பணத்தைச் சரியாகக் கையாளக்கூடியவர்களுக்கு நிச்சயம் இது மிகப்பெரிய வாய்ப்புதான். வேறு எங்கும் இவ்வளவு பணம் வட்டியில்லாமல் கிடைக்காது. இப்படி மொய் விருந்தில் பிரியும் பணத்தைத் தொழில் முதலீடாக்கி மிகப்பெரிய அளவில் வளர்ந்த நிறையப் பேர்கள் இப்பகுதியில் இருக்கிறார்கள்.

மொய்ப் பணத்தைக் கொண்டு வீடு கட்டுவது, நிலம் வாங்கிப் போடுவது, வங்கியில் இருப்பு வைத்துக் கொள்வது என்று இறங்கிவிட்டால் பணம் முடங்கிப் போய்விடும். இதனால், தொடர்ந்து வருமானம் வரும் வகையில் முதலீடு செய்யலாம். நிலம் வாங்குவதாக இருந்தால் தென்னந் தோப்பு போன்ற நிரந்தர வருமானம் கிடைக்கும் நிலமாக இருந்தால் நல்லது’’ என்கிறார் மாரிமுத்து.

தற்போது இரண்டு மாதங்களுக்குள் 1000 மொய் விருந்துகள் நடப்பதாலும், ஒரே நாளில் நிறைய நிகழ்ச்சிகள் நடந்து, குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், அந்தந்தப் பகுதிகளில் மொய் விருந்து கமிட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டியில் மொய் விருந்தும் நடத்தும் தேதியை பதிவு செய்ய வேண்டும். சிலர் தேதி கிடைக்காது என்பதற்காக ஒரு வருடம் முன்பேகூடப் பதிவு செய்துவைத்து விடுகிறார்கள்.

கடந்த ஆண்டு (2014), அதிகபட்சமாக, ஆலங்குடி அருகே வடகாட்டில் கிருஷ்ண மூர்த்தி என்ற விவசாயி நடத்திய மொய் விருந்தில் இரண்டரை கோடி ரூபாய் மொய் பிரிந்துள்ளது. இந்த ஆண்டு (2015) நடைபெறும் 1000 மொய் விருந்துகளும் சேர்ந்து மொத்தம் 100 கோடி ரூபாய் பிரியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்றவாரம், 19ஆம் தேதி, ஆலங்குடி அருகே கீழாத்தூரில் 12 பேர் மொய் விருந்து நடத்தினார்கள். இதில், அதே ஊரைச் சேர்ந்த எம். சுப்பிரமணியன் என்பவருக்கு ரூ. 17 லட்சம் வசூலானது. மற்றவர்களில் பி. ராஜா ரூ. 14.35 லட்சம், க. மருதன் ரூ.11.85 லட்சம், மு. கருணாகரன் ரூ. 12 லட்சம் என வசூலாகியுள்ளது. மொத்தமாக 12 பேருக்கும் சேர்த்து மட்டும் 1 கோடி ரூபாய்க்கு மேல் மொய் பிரிந்துள்ளது. மொய் விருந்தால் பந்தல்காரர், இலை வியாபாரி, அச்சகத்தார், அரிசி மண்டி, கறி கடை, ஜவுளிக்கடை உட்படப் பல நேரடித் தொழில்களும் சில மறைமுகத் தொழில்களும் பலனடைகிறது. அத்துடன் மொய்க் கணக்கு எழுதும் வகையில் ஏராளமான இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 வரை கணக்கு எழுத 500 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள்.

பல குடும்பங்களின் பொருளாதார ஏற்றத்திற்கு உதவியிருப்பது போலவே, பலரது பொருளாதார வீழ்ச்சிக்கும் மொய் விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன என்றும் சொல்லப்படுகிறது. ஒரே நாளில் ஒரே ஊரில் பல மொய் விருந்துகள் நடைபெறும்போது, திருப்பிச் செய்யும் வகையில் ஒரே குடும்பத்திற்குப் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும். அதற்காக வட்டிக்கு கடன் வாங்கிச் சிலர் பொருளாதாரச் சிக்கல்களுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள் என்றும் சிலர் தற்கொலை வரைக்கும்கூடச் சென்றிருப்பதாகச் செய்திகள் வருகிறது.

ஆனால், “இவை எல்லாம் தவறான புரிதல்கள். மொய் விருந்து குறித்த ஊடகங்களின் தவறான சித்தரிப்பின் விளைவாக உருவானது. வங்கியில் வெறும் 25 ஆயிரம் கடன் வாங்கவே நடையாய் நடக்க வேண்டியுள்ளது. அதுவும், சொத்தையோ நகையையோ அடமானம் வைத்துதான் வாங்க முடியும். மேலும் வங்கி கடன், கிரிடிட் கார்ட் கடன் போன்றவை குண்டர்கள் வைத்து வசூலிக்கப்படுகிறது. அதனால், மனம் ஒடிந்து தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். அப்படியெதும் மொய் விருந்தில் நடப்பதில்லை. பெரும்பாலும் உறவினர்கள், தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்பதால் அவர் நாணயம் அவ்வளவுதான் என விட்டுவிடுவார்கள்.

ஏழை, எளியவர்களுக்கு மொத்தமாக 23 லட்சங்கள் பணத்தைப் பார்ப்பது கஷ்டம். சிறுக சிறுக இவ்வளவு பணத்தைச் சேமிப்பதற்கான வழிமுறைகளும் அவர்களிடம் இல்லை. பங்குச் சந்தை, யூலிப், மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் போன்றவை உட்பட்ட எத்தனை முதலீடுகளில் போட்ட பணத்துக்கு உத்தரவாதம் உள்ளது? மொய் விருந்தில் அந்தப் பிரச்சினை இல்லை. இப்பகுதி மக்கள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியைச் சிறுகச் சிறுக பலருக்கும் மொய்யாக எழுதுகிறார்கள். இவர்கள் மொய் விருந்து வைக்கும்போது அது மொத்தமாகத் திரும்பக் கிடைக்கிறது.

இதுபோல் சின்னக் கவுண்டர்போன்ற திரைப்படங்களின் தவறான சித்தரிப்பு காரணமாகவும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்குக் கை கொடுப்பதற்காக நடத்தப்படுவதுதான் மொய் விருந்து என்ற தவறான அபிப்ராயமும், மற்ற பகுதியினர் மத்தியில் உள்ளது. அது உண்மையல்ல. மொய் விருந்து இப்பகுதி மக்கள் மத்தியில் உயிரோடும் உணர்வோடும் அன்றாட வாழ்வோடும் கலந்த பாரம்பரிய பழக்கம்; கலாசாரப் பரிவர்த்தனை. மொய் கொடுக்கல் வாங்கல் ஒருவகையில் உறவும் நட்பும் நீடிக்க உதவுகிறது’’ என்கிறார் வேட்டைப்பெருமாள்.


தமிழகத்துக்குள் நமக்கு தெரியாமல்தான் எவ்வளவு ஆச்சர்யங்கள்!

23 August 2014

சென்னை சுவடுகள்

சென்ட்ரல் ரயில் நிலையம் கடிகாரம்!


ஒரு ஆள் மட்டும் ஏறுவதற்குதக்க, சுரங்கப் பாதை மாதிரியான குறுகலான படிக்கட்டு; சுற்றிக் கொண்டே செல்லும் படிக் கட்டுகளில், ஆங்காங்கே இருக்கும் துளைகள் வழியாக மெல்லிசாக கசிகிறது வெளிச்சம். ‘‘ஸார், பார்த்து வாங்க. சில இடங்களில் கல் பெயர்ந்திருக்கும்’’ என்ற குரலுக்கு பயந்து, இருளில் தடவித் தடவி ஊர்ந்துகொண்டே ஏறத் தொடங்கினால், கொஞ்ச நேரத்தில் மெலிதாக அந்தச் கேட்கிறது... ‘‘டிக், டிக், டிக்....’’. மேலே செல்லச் செல்ல கூடிக் கொண்டே வரும் இந்த சத்தம்தான், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உச்சியில் நான்கு பக்கமும் பார்த்தவாறு இருக்கும் கடிகாரத்தின் இதயத் துடிப்பொலி.

சென்னையின் அடையாளமே சென்ட்ரல் ரயில் நிலையமும் இந்தக் கடிகாரமும்தான். சினிமாக்களில், கிராமங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களைக் காட்ட, சென்டரல் ரயில் நிலையம் முன்பு வைத்து தவறாமல் ஒரு ஸீன் எடுப்பார்கள். சென்னைவாசிகளுக்கு இன்னும் நெருக்கம்... கையில் வாட்ச் கட்டியிருந்தாலும், சென்ட்ரலைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் நிச்சயம் இதில் மணி பார்ப்பார்கள். இந்தக் கடிகாரத்தை வைத்து தங்கள் வாட்ச்சின் நேரத்தையே சரிசெய்து கொள்வார்கள். அந்தளவுக்கு துல்லியமானது சென்ட்ரல் கடிகாரத்தின் நேரம். சென்னை சரித்தரத்தில், கிட்டத்தட்ட 135 வருடங்கள் ஒரு மௌன சாட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தக் கடிகாரம்.

மேலே, உச்சியில் விசாலமாக இருக்கும் ஒரு அறைதான் கடிகாரத்தின் உட்பகுதி. இரண்டு மூலைகளிலும் 180, 275 கிலோ வீதம் இரண்டு எடைக்கற்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து தொடங்கி, குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன கம்பிகள். நடுவில் நெல் கதிரடிக்கும் மிஷின் அளவுக்கு ஒரு பெரிய இயந்திரம். நாம் ஒரு கடிகாரத்தின் உட்பகுதியில் இருக்கிறோம் என்பதை நம்பவே முடியவில்லை. ஒரு குட்டி தொழிற்சாலை மாதிரி இருக்கிறது கடிகாரம்.

இந்தக் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்வதற்கு என்றே, ‘கிளாக் மெக்கானிக்என்று ஒரு பதவி தென்னக ரயில்வேயில் முன்பு இருந்திருக்கிறது. இப்போது, சீனியர் செக்ஷன் இன்ஜினியராக இருக்கும் சத்தியமூர்த்திதான் கடிகாரத்தைக் கவனித்துக் கொள்கிறார்.

‘‘கடந்த இருபது வருஷங்களா நான்தான் பார்த்துக் கொள்கிறேன். நான்கு பக்கமும் தெரியும் கடிகாரங்களுக்கு இந்த ஒரே இயந்திரம்தான். 1870ம் ஆண்டு ‘GILLETT & BLAND MANUFACTURERS’ என்ற லண்டன் கம்பெனியில் தயாரிக்கப்பட்டது இது. 1873ம் வருஷம் ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், சென்ட்ரல் ரயில் நிலையம் 1900ல்தான் கட்டப்பட்டது. இடையில் 25 வருடங்கள் வேறு எங்கோ இருந்திருக்க வேண்டும். அனேகமாக, சென்னையின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் ஸ்டேசனில் இருந்திருக்கலாம். சென்ட்ரல் ஸ்டேசன் கட்டும்போது, அண்ணாசாலையில் குதிரையில் செல்லும் ஆங்கிலேயர்கள் மணி பார்ப்பதுக்கு வசதியாக, அவ்வளவு உயரத்தில் வைத்திருக்கிறார்கள். கிழக்கு பக்கம் உள்ளக் கடிகாரத்தை அக்காலங்களில் கடற்கரையில் இருந்து பார்க்க முடியுமாம். பத்து வருடங்களுக்கு ஒரு முறை இதற்கு மேஜர் சர்வீஸ் செய்வோம். மற்றபடி 135 வருஷமா எந்த பிரச்னையும் இல்லாம ஓடிக்கொண்டிருக்கிறது. உயரத்தில் பறக்கும் கழுகுகள் ஓய்வெடுப்பதற்காக, அடிக்கடி இதன் முள் மேல் வந்து உட்காரும். அப்போது, அந்தக் கழுகின் எடையையும் தூக்கிக்கொண்டே முள் சுற்றும். அந்தளவுக்கு பலமானது.’’ தன் வீட்டு செல்ல வளர்ப்பு பிராணியைப் பற்றி சொல்வது போல், அவ்வளவு ஆசையுடன் பேசுகிறார் சத்தியமூர்த்தி.

கடிகாரம் கீயில் தான் இயங்குகிறது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை, இரண்டு கீகள் கொடுக்க வேண்டும். ஒன்று, கடிகார முள் சுற்றுவதற்காக; மற்றொன்று மணியோசைக்காக. ஒவ்வொன்றையும் 300 முறைகள் சுற்றவேண்டும்! கடிகார இயந்திரம் உள்ள அறைக்கு கீழுள்ள அறையில் இரண்டு மணிகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. ‘‘இப்போதும் சென்னையில் இரவு வாகனங்களின் இரைச்சல் எல்லாம் அடங்கி, நிசப்தமாக இருக்கும் போது 5 & 8 கிலோமீட்டர் தூரம் வரைக்கும் இதன் பெல் சத்தம் கேட்கும். நடுநிசியில் தேவி தியேட்டர் பக்கம் போனால், கடல் அலைகள் சத்தத்துடன் கால் மணிக்கு ஒரு முறை அடிக்கும் பெல் சத்தமும் கேட்கலாம். இந்தியாவுக்கே பெருமைக்குறிய விஷயம் இந்தக் கடிகாரம். அதனுடன் சம்பந்தப்பட்டவன் என்பதில் எனக்கு பெருமை, சந்தோஷம்’’ எனக்கூறும் சத்தியமூர்த்திக்கு, தான் ஓய்வுபெற்ற பிறகு, இதே அளவு வாஞ்சையுடன் கடிகாரத்தைக் கவனித்துக்கொள்ளும் வேறு யார் வருவார்கள் என்பதுதான் இப்போதையக் கவலை.

சத்தியமூர்த்தி
சென்னை சென்டரல் ரயில் நிலையம் கடிகாரம் போல நான்கு பக்கமும் முகப்புகள் உள்ளக் கடிகாரங்கள், மேலும் பல சென்னையில் உள்ளன. அனைத்துமே ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டவை; நூற்றாண்டு சரித்திரம் உடையவை. சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் இருக்கும் கடிகாரம் 1813ம் ஆண்டும், தலைமைச் செயலகத்தில் செயின்ட் மேரிஸ் சர்ச்சில் இருக்கும் கடிகாரம் 1824ம் ஆண்டும், ஜெமினி பாலம் அருகே கதீட்ரல் சர்ச்சில் உள்ள கடிகாரம் 1828ம் ஆண்டும், ஆன்டர்சன் சர்ச்சில் இருக்கும் கடிகாரம் 1851ம் ஆண்டும் கொண்டுவரப்பட்டவை. சத்தியமூர்த்தி போன்ற ஆசையுடன் பார்த்துக்கொள்ளும் நண்பன் இல்லாததால், இவற்றில் தலைமைச் செயலக கடிகாரம் ஐந்தரையில் நிற்கிறது.

‘‘இந்தக் கடிகாரங்கள், நமது பழமையின் பெருமைகள். அவற்றை பாதுகாப்பது நமது சந்ததிகளுக்கு நாம் அளிக்கும் அன்பளிப்பு’’ என்கிறார் சத்தியமூர்த்தி.

(2007ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியானது. இப்போது கடிகாரத்தின் வயது 142. சத்தியமூர்த்தி பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். சத்தியமூர்த்து கவலைப்பட்டது போல் நிகழாமல் தற்போதும் யாரோ பொறுப்பாக பார்த்துக்கொள்கிறார்கள். யார் என்று தெரியவில்லை.)

02 July 2008

தமிழ்நாடு

நதிநீர் பிரச்னைகள்

பூனைக்கு யார் மணி கட்டுவது?


காவிரி தென்பண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருநைநதி என
மேலிடும் ஆறு பல ஓடி திரு
மேனி செழித்த தமிழ்நாடு
- பாரதி

கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் கடந்துவிட்டது. ''கர்நாடகாவில் தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி அமைந்த பிறகு பேசி தீர்த்துக் கொள்ளலாம்” என தமிழக முதல்வர் கருணாநிதியால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இந்த ஒரு மாதத்தில் எந்த முன் னேற்றமும் இல்லை. கர்நாடகாவின் புதிய முதல்வர் எடியூரப்பா, இந்த பிரச்னை தொடர்பாக அவ்வப்போது உதிர்த்த ஒன்றிரண்டு வார்த்தைகளும் அவ்வளவு நம்பிக்கையளிக்கும் படியாக இல்லை. இன்னொரு காவேரி பிரச் னையாக இதுவும் வருடக் கணக்காக இழுத்தடிக்கப்படும் என்றே தெரிகிறது.

தாமிரபரணி தவிர்த்து காவிரி, தென்பண்ணை, பாலாறு, கொரட்டலையாறு என தமிழகத்தின் எல்லாப் பெரிய நதிகளும் அண்டை மாநிலங்களில் உற்பத்தி யாகிதான் தமிழ்நாட்டுக்குள் ஓடுகின்றன. வைகை தமிழகத்திலேயே உற்பத்தி யாகிறது என்றாலும், தண்ணீருக்கு கேரளாவின் பெரியாற்றைதான் நம்பி இருக்கிறது. மழை பரவலாகவும் சம அளவிலும் பெய்யாததால் பக்கத்து மாநிலங்களில் இருந்து இந்த ஆறுகளில் வரும் தண்ணீரையே தமிழகம் பெருமளவில் நம்பி இருக்கிறது. இந்நிலையில், கடைமடை பாசனக்காரர் களுக்கே உரிய பிரச்னை... முந்தியவர்கள் விட்டால்தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் என்னும் நிலை. இப்படி, கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரைக் கும் குடிநீருக்கும் பாசனத்துக்கும் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம். இந்நிலையில் கர்நாடகம், கேரளா, ஆந்திரா என எல்லா பக்கத்து மாநிலங்களுடனும் நதி நீர்ப் பகிர்வில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தமிழகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

காவேரியில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகும் பிரச்னை தீர்ந்த பாடில்லை. இன்னொரு பக்கம் வற்றாத ஜீவநதியான பாலாற்றின் பாதையில் கர்நாடகம் புதிய பல ஏரிகளை உருவாக்கியதன் விளைவு, பாலாறும் வறண்டு விட்டது. இப்போது, மழைக் காலங்களில் பாலாற்றில் ஓடும் மூன்று நாள் தண்ணீருக்கும் பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட திட்டமிட்டுள்ள ஆந்திரா வின் முயற்சியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்திலும் சிக்கல்; ஒப்புகொண்டபடி 12 டி.எம்.சி. தண் ணீரை எந்த வருடத்திலும் ஆந்திரா தந்ததில்லை. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம், நெய்யாற்றில் கேரளா உருவாக்கும் பிரச் னைகள் என தமிழகம் மிகப்பெரிய ஒரு தண்ணீர் பிரச்னையை எதிர்நோக்கி உள்ளது.

காவேரி:

''ஒரு நீர் ஆதாரத்தை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பின்னர் அதன் பயன்பாட்டு உரிமை அவர்களுக்குதான் சொந்தம்' என்கிறது சர்வதேச நதிநீர் ஒப்பந்தம். அதன்படி காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். இரண்டாம் நூற்றாண்டில் கரிகாற்சோழன் கல்லணை கட்டியது தொடங்கி, பத்தொன்பது நூறாண்டுகளாக காவிரியைப் பயன்படுத்தி வருகிறார்கள் தமிழக விவசாயி கள். ஆனால், இன்று தங்களுக்குச் சொந்தமான நதியையே மற்றவர்களிடம் பிச்சைக் கேட்கும் நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.

காவேரியின் மீதான உரிமைப் பிரச்னை இன்று நேற்று தொடங்கினதல்ல. கி.பி.1146ஆம் ஆண்டு மைசூரை ஆண்டு வந்த போசாள மன்னன் நரசிம்மன் காவிரியின் குறுக்கே தடை ஏற்படுத்த முயல, அதற்கு எதிராக இரண்டாவது ராஜராஜன் தமிழகத்தில் இருந்து படையெடுத்து சென்ற அன்றே தொடங்கிய பிரச்னை இது. 1892ஆம் ஆண்டு சென்னை மாகாண பிரிட்டீஷ் அரசாங்கம் ஒரு ஆணை பிறப்பித்தது. சென்னை மாகாண எல்லைக்குட்பட்ட பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணை கட்டவேண்டுமானால், அதற்கு சென்னை மாகாண அரசாங்கத்தின் அனுமதி வேண்டும் என்கிறது அந்த ஆணை. அதன்பிறகு, 1924ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசாங் கத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் 93 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையும் மைசூரில் 44 டி.எம்.சி. கொண்ட புல்லம்பாடி அணையும் (பிறகு இது கிருஷ்ணராஜசாகர் என பெயர் மாற்றப்பட்டது) கட்டிக்கொள்ள முடிவானது.

1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில், ‘ஐம்பது ஆண்டு களுக்குப் பிறகு எதாவது மாற்றம் இருந்தால் இரண்டு அரசுகளும் கலந்து பேசி முடிவு செய்து கொள்ளலாம்' எனச் சொல்லப்பட்டிருந்தது. இதனைப் பிடித்துக் கொண்டு, ஐம்பது வருஷம் கடந்ததும் 1974ஆம் ஆண்டு, ‘‘1924 ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது'' என பிரச்னை செய்யத் தொடங்கியது கர்நாடகம். ஆனால் உண்மை நிலை, இன்று வரைக்கும் ஒப்பந்தம் காலாவதி ஆகவில்லை என்பதுதான். ‘தேவைப்பட்டால் மாற்றம் செய்துகொள்ளலாம்’ என்றுதான் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அன்றைய கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நீதிமன்றம் சென்றது. பிறகு, அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் வழக்கை வாபஸ் வாங்கியது. ஆனால், இந்திராகாந்தி சொன்னதை கர்நாடகம் கேட்கவில்லை. எனவே, மீண்டும் நீதிமன்றம் சென்றது தமிழகம். 1990ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிமன்றம் நடுவர் மன்றத்தை அமைக்கச் சொன்னது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தான், பதினாறு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு வெளி யானது.

இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. நீரைத் தமிழகத்துக்கு கொடுக்கச் சொன்ன நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி. தண்ணீரைக் கொடுக்கச் சொல்லியிருக்கிறது. ‘’இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி'' என தமிழ் ஆர்வலர்கள் பலரும் கொதித்து எழுந்தார்கள். ஆனால், இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. தண்ணீரை மேட்டூரில் கொடுக்கச் சொல்லியிருந்தார்கள். இறுதித் தீர்ப்பில், பிலிகுண்டுவில் 192 டி.எம்.சி. கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். பிலிகுண்டு மேட்டூருக்கு மேல்புறத்தில் 60 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேட்டூரில் அளவெடுப்பதைவிட அங்கே துல்லியமாக அளவெடுக்க முடியும் என்பதால் பிலிகுண்டுவைத் தேர்வு செய்திருக்கிறார்கள். பிலிகுண்டுவுக்கும் மேட்டூ ருக்கும் இடைப்பட்ட பகுதியில் பெய்யும் மழை நீரின் அளவு தோராயமாக ஆண்டுக்கு 25 டி.எம்.சி. எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆக 192ம் 25ம் சேர்த்து 217 வருகிறது. எனவே, இடைக்காலத் தீர்ப்புக்கும் இறுதித் தீர்ப்புக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. அதைவிட இப்போதுள்ள முக்கியமான பிரச்னை, இறுதித் தீர்ப்பில் கொடுக்கச் சொல்லியுள்ள தண்ணீரையாவது கர்நாடகம் கொடுக்குமா என்பதுதான்.

மத்திய அரசு, நீதிமன்றம், நடுவர் மன்றம் - யார் சொன்னாலும் கேட்பதில்லை என்னும் போக்கைத்தான் கர்நாடகம் கடைபிடித்து வருகிறது. இடைக்காலத் தீர்ப்பில் சொல்லப்பட்ட அளவு தண்ணீரை எப்போதுமே கர்நாடகம் கொடுத்ததில்லை. அதிகம் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் வருடங் களில் உபரி நீரினை கழித்துவிடும் ஒரு வடிகால் பகுதியாகத்தான் தமிழ்நாட்டைக் கடந்த 30 வருடங்களாக நடத்தி வருகிறது. மேலும், கர்நாடகத்தில் 5 லட்சம் ஏக்கராக இருந்த விவசாயப் பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 12 லட்சம் ஆக்கியிருக்கிறார்கள். இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம் தனது விவசாயப் பரப்பை மேலும் அதிகரித்துக்க்கூடாது எனச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அதனையும் அவர்கள் பொருட்படுத்த வில்லை. இப்போது, 12 லட்சம் 24 லட்சம் ஆகியிருக்கிறது. இப்படி, இடைக்காலத் தீர்ப்பை உதாசீனம் செய்ததைப் போல இறுதித் தீர்ப்பையும் அவர்கள் உதாசீனம் செய்யலாம். அப்போது நம்மால் என்ன செய்யமுடியும்?

இதற்காகத்தான், தீர்ப்பை அமல்படுத்தும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நடுவர்மன்றத்திடம் கேட்டது தமிழகம். அதுகுறித்த எந்த விபரமும் இறுதித் தீர்ப்பில் இல்லை. இந்நிலையில், அப்போது சென்னை வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ‘‘அமல்படுத்தும் அமைப்பு ஏற்படுத்தப்படும்'' எனக் கூறினார். இன்றுவரைக்கும் அந்த அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை!

முல்லைப் பெரியாறு, நெய்யாற்றுத் திட்டம்:

கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான காவிரி பிரச்னை தொடர்கதை மாதிரி சமசரச பேச்சு, நீதிமன்றம் என கேரளாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே இழுத்தடிக்கப்படும் பிரச்னை முல்லைப் பெரியாறு.

1886ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திருவாங்கூர் மன்னருக்கும் சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையில் தேங்கும் நீரினை ஒரு சுரங்கம் மூலமாகத் திருப்பி மதுரை, இராமநாதபுரம் ஜில்லாகளின் வறண்ட பகுதிகளில் பாசனத்துக்குப் பயன்படுத்த வகை செய்த இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் குறிக்கப்பட்டது. அணை கட்டுவ தால் நீரில் மூழ்கும் 8000 ஏக்கர் நிலத்துக்கும் வாடகையாக ஆண்டு தோறும் ஏக்கருக்கு ஐந்து ரூபாய் வீதம் மொத்தம் 40,000 ரூபாயை பிரிட்டீஷ் நாண யமாக சென்னை அரசாங்கம் திருவிதாங்கூர் மன்னருக்குத் தரவேண்டும் எனவும் ஒப்புகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம்படி 1895ஆம் ஆண்டு பெரியாற் றின் குறுக்கே அணை கட்டி முடிக்கப்பட்டது. சென்னை மாகாணம் தமிழ் நாடாகவும் திருவிதாங்கூர் சமஸ்தானம் கேரளாவாகவும் ஆனபிறகும் முல்லைப் பெரியாறில் சிக்கல்கள் எதுவும் இன்றி, அறுபது ஆண்டுகள் வரைக் கும் பாசனம் நடந்து வந்தது.

1955ஆம் ஆண்டு பெரியாறு தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின்உற்பத்தி செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டு பழைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக புது ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் நீரில் மூழ்கும் நிலத்துக்கான வாடகை ஏக்கருக்கு ஐந்தில் இருந்து முப்பது ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்படி 2,40,000 ரூபாயை ஆண்டுதோறும் தமிழக அரசு கேரளாவுக்கு கொடுத்து வருகிறது. இந்நிலையில், 1963ஆம் ஆண்டு முதன்முதலாக ‘அணை பல வீனமாகிவிட்டது. கேரள மக்களுக்கு ஆபத்து. எனவே, அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கவிட மாட்டோம்'' எனப் பிரச்னையை எழுப்பியது கேரள அரசாங்கம்.

முல்லைப் பெரியாறின் முழு கொள்ளளவான 152 அடி நீர் இருக்கும் போதும் மிக உயர்ந்த நில நடுக்கம் ஏற்பட்டால்கூட உடையாத பலத்துடன்தான் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக் கட்டப்பட்ட பிறகு இப்பகுதியில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அணையில் ஒரு விரிசல்கூட விழுந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், கேரளா பயத்தைப் போக்க மத்திய அரசின் நிபுணர் குழு அணையைப் பார்வையிட்டது. அந்தக் குழு 152 அடி வரை நீரைத் தேக்கக்கூடிய பலத்துடன் அணை பலமாகத்தான் இருக்கிறது என அறிக்கைத் தந்தது. என்றாலும், கேரள மக்களின் அநாவசி யமான பீதியைப் போக்க சில எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் அறிவுரை கூறியது. இதன் அடிப்படையில் 26 கோடி ரூபாய் செலவில் அணையைப் பலமூட்டும் பல நடவடிக்கைகள் தமிழகத்தால் எடுக்கப்பட்டன. கேரளா ஏற்படுத்திய இடையூறுகளுக்கு இடையே மிகுந்த பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும்தான் தமிழக பொறியாளர்கள் இந்தப் பணிகளை செய்து முடித்தார்கள்.

இத்தனைப் பணிகளுக்குப் பின்னரும், 1978ஆம் ஆண்டு மீண்டும் அணை பற்றிய புகாரை எழுப்பிய கேரளா, ‘‘அணை உடைந்துவிடும், 30 லட்சம் கேரள மக்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவார்கள்'' என்றது. இதனையொட்டி அணையைப் பார்வையிட்ட மத்திய அரசின் பாசன கமிஷன் அதிகாரிகள், அணை நல்ல நிலையில்தான் இருக்கிறது எனவும் என்றாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 145 அடியாகக் குறைத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்கள். தமிழ அரசு அதனை ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தை 145 அடியாகக் குறைத்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரச்னை செய்தது கேரளா. இப்போது, அணையின் நீர்மட்டம் 152இல் இருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. இதனால், நீரில் மூழ்கும் நிலப்பகுதி 4677 ஏக்கராக குறைந்தது. இப்பகுதியில் சுற்றுலா கேளிக்கை சாதனங்களை நிறுவி சம்பாதிக்கிறது கேரளா. ஆனாலும், இன்றும் தொடர்ந்து இந்தப் பகுதிக்கும் சேர்த்து முதலில் தீர்மானித்தபடி 8000 ஏக்கருக்கான வாடகையையே கொடுத்து வருகிறது தமிழக அரசு. மேலும், நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 10.4 டிம்சியில் இருந்து 6.4 டிஎம்சியாக குறைந்துவிட்டதால் பாசனப்பகுதியில் 1,25,000 ஏக்கர் நிலம் தரிசாக மாறியது. 140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பெரியாறு மின்நிலயத்தில் 40 சதவிகிதம் உற்பத்திக் குறைந்தது. மேலும், முல்லைப் பெரியாறு அணையில் வழிந்துபோகும் தண்ணீரை இடுக்கி அணையில் தேக்கி மின் உற்பத்தி செய்து அதனை தமிழ்நாட்டுக்கே விற்றது கேரளா. முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் இவ்வளவு நஷ்டங்களைத் தாங்கி வருகிறது தமிழகம். நிலமை இவ்வாறு இருக்க தமிழ்நாடுதான் ஏதோ குற்றம் செய்துவிட்டதாக பேசி வருகிறது கேரள அரசு. இது முழுக்க முழுக்க அரசியல் காரணங் களுக்காக சொல்லப்படும் புரளியே தவிர, தொழில்நுட்ப அடிப்படையில் ஒரு சதவிகிதம்கூட இதில் உண்மையில்லை என்பது ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் புரியும்.

2006ஆம் வருடம் உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறில் முழு நீர் மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தாலாம் என உத்தரவு கொடுத்தப் பிறகு, ‘‘பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யலாம். நீங்கள் வேண்டுமானால் 152 அடிக்கு புது அணை கட்டிக்கொள்ளுங்கள்'' என்றார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். இது, காலம் கடத்துவதற்கான தந்திரமே தவிர இது வேறு ஒன்றும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட அதே காலகட்டத்தில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பேச்சிப்பாறை அணையும் கட்டப்பட்டது. இந்த அணை இப்போதும் பலமாகத் தான் இருக்கிறது. 2000 வருடம் பழமையான கல்லணையும் பல பெரிய ஏரி களும் தமிழகத்தில் உள்ளன. இவைகள் உடைந்துவிடும் என யாரும் இதுவரை கூக்குரல் எழுப்பியதில்லை.

முல்லைப் பெரியாறில் கேரளா பிரச்னை செய்வதன் உண்மையான நோக்கம் அதன் கீழ்பகுதியில் இருக்கும் இடுக்கி அணைதான். முல்லைப் பெரியாறு அணையைவிட 34 மடங்கு பெரியதாக இது கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு தண்ணீர் கொண்டு வரத்தான் முல்லைப் பெரியாற்றில் அவர்கள் பிரச்னை செய்கிறார்கள். இடுக்கி அணைக் கட்டப்பட்ட பிறகே அவர்கள் பிரச்னையை ஆரம்பித்தார்கள் என்பதை கவனிக்கலாம்.

தமிழ்நாட்டுக்கு கேரளாவோடு சிக்கலிலுள்ள இன்னொரு திட்டம் நெய்யாற் றுத் திட்டம். இத்திட்டத்தின்படி நெய்யாற்றில் இருந்து கன்னியாகுமரி மாவட் டத்துக்கு விநாடிக்கு 150 கன அடி நீரை கேரளம் தரவேண்டும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் பிரிந்த பிறகு தொடங்கி இன்று வரைக்கும் இந்தத் தண்ணீரை தர மறுத்து வருகிறது கேரளம். இத்தனைக்கும் கேரளாவின் மொத்த நீர்வளத்தில் 88 சத விகிதம் கடலில் கலக்கிறது என்பதுதான் வேதனையானது.

கிருஷ்ணா நதி நீர் திட்டம், பாலாறு:

கர்நாடகம், கேரளாவுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டம் தொடங்கி பாலாற்றின் குறுக்கே கட்டும் அணை வரைக்கும் ஆந்திரா இன்னொரு பக்கம் பிரச்னை செய்கிறது.

சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துவர, சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் குடிநீர் பிரச்னை பூதாகரமாகத் தலைதூக்கியது. எனவே, அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி, மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாயும் கிருஷ்ணா நதியின் உபரி நீரை சென்னைக்கு கொண்டுவர திட்டமிட்டார். 1976இல் இந்திரா காந்தி முன்னிலையில் கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா, தமிழ்நாடு முதல்வர்கள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தப்படி கர்நாடகா, மகராஷ் டிரா, ஆந்திரா மூன்று மாநிலங்களும் தலைக்கு 5 டி.எம்.சி. நீரை ஒவ்வொரு ஆண்டும் சென்னையின் குடிநீர் தேவைக்கு வழங்கவேண்டும். இந்த நீர், ஆந்தி ராவிலுள்ள சோமசீலா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டலேறு நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து தெலுங்கு - கங்கா கால்வாய் வழியாக ஆந்திரா, தமிழ்நாடு எல்லையிலுள்ள பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப் படும். மூன்று மாநிலங்களும் வழங்கும் 15 டி.எம்.சி. தண்ணீரில் விரயம் போக 12 டி.எம்.சி. தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வரும். இந்த தெலுங்கு - கங்கா கால்வாயைத்தான் சமீபத்தில் சாய்பாபா டிரஸ்ட் சீரமைத்துத் தந்தது.

ஆனால், கிருஷ்ணா நதி நீர் திட்டத்துக்கு செலவிடப்பட்ட மதிப்புடன் ஒப்பி டும்போது வரும் தண்ணீரின் அளவு மிகக்குறைவு. 1996இல் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் வேலைகள் முடிந்த பிறகு தொடங்கி, இன்றைக்கு வரைக்கும் ஒப்பந்தபடி ஒரு வருடம்கூட 15 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரா வழங்கிய தில்லை. வேண்டா வெறுப்பாக 1/2, 1. 2. 3 என மிகக் குறைவான தண்ணீரையே திறந்துவிட்டிருக்கிறது. இதில் மண் உறிஞ்சுவது, இடையில் விவசாயிகள் பைப் போட்டு திருடுவது, கால்வாய் உடைத்துக் கொண்டு போனது போக மிகச் சொற்பமான தண்ணீரே பூண்டியை வந்தடைந்திருக்கிறது. இடையில் தண்ணீரை எடுத்த விவசாயிகளை கட்டுப்படுத்த ஆந்திரா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த பன்னிரண்டு வருடத்தில் அதிகமாக தண்ணீர் வந்தது 2007ஆம் ஆண்டுதான். அந்த வருடம் 6 டி.எம்.சி. தண்ணீர் பூண்டிக்கு வந்திருக்கிறது. இதற்கு சாய்பாபா டிரஸ்ட் கால்வாயை செப்பனிட் டது ஒரு காரணம் என்றாலும், முக்கியமான காரணம் அதிக மழை பெய்தது தான். போதுமான தண்ணீர் இருந்ததன் காரணமாக இடையில் விவசாயிகள் தண்ணீரை பைப் போட்டு எடுக்கவில்லை. ஆனால், மழை குறைவான வருடங் களில் இதுமாதிரி அவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. வரும் காலங்களில் அவர்கள் தண்ணீரை எடுத்தால், இதுவரைக்கும் எப்படி பார்த்துக் கொண்டிருந்ததோ அதுமாதிரிதான் ஆந்திரா பார்த்துக் கொண்டு இருக்கும்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி திருப்ப திட்டமிடும் ஆந்திராவின் முயற்சி வெற்றிபெற்றால் பாலாறும் செத்த ஆறாக ஆகிவிடும். பாலாற்றில் இப்போது மழைக்காலங்களில் மட்டும்தான் தண்ணீர் வருகிறது என்றாலும் அதனால் பாலாற்றின் பாதையில் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஊற்றுக்கால் மிக நன்றாக உள்ளது. இதனால் பாலாறை பூமிக் கடியில் பாயும் ஆறு என்பார்கள். மழைக்கால பாலாற்று தண்ணீரை இம்மா வட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப முடியும். காவிரி மாதிரியே காட்டு மழை பெய்து வெள்ளம் வந்தால்தான் பாலாற்றிலும் தண்ணீரைப் பார்க்கமுடியும் என்னும் நிலை விரைவில் ஏற்படும். நாம் அதைப் பார்க்கத் தான் போகிறோம்.

இப்படி கர்நாடகம், கேரளா, ஆந்திரா என மூன்று பக்கமும் அடிவாங்கும் நிலை உருவானதுக்கு தமிழகத்தின் மிதமான போக்கும் அரசியல்வாதிகளின் அக்கறையின்மையும்தான் காரணம் என்பதுதான் உண்மை. மீண்டும், மீண்டும் நீதிமன்றம், போராட்டம் என நதிநீர்ப் பிரச்னைகளை இழுத்தடித்தால் கேரளா - தமிழ்நாடு, கர்நாடகா - தமிழ்நாடு, ஆந்திரா - தமிழ்நாடு மக்களுக்கு இடையே மனக்கசப்பும் பகைமையுணர்ச்சியும்தான் வளரும். மேலும், நீதிமன்றங்கள் மூலமும் மத்திய அரசு அதிகாரத்தின் மூலமும் தீர்வுகாண முடியாது என்பதும் ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. எனவே, மாநிலங்களுக்கு இடையே யான நதி நீர் பகிர்வை சமரச முயற்சிகள் மூலம்தான் முடிவு செய்யமுடியும். அது எப்படி என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.

இதற்கு அவர் முன்வைக்கும் ஒரே தீர்வு, ‘இந்திய நதிகள் இணைப்பு'. கங்கை - காவிரி இணைப்புத் திட்டம், தென்னக நதிகள் இணைப்பு திட்டம் ஆகியவை நீண்ட காலமாக பேசப்பட்டுவரும் திட்டங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந் திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இவற்றைச் செயல்படுத்துவது இயலாத ஒன்றல்ல என்கிறார்கள் பொறியியலாளர்கள். பெரியாறு - வைகை இணைப் பும், காவிரி - வெள்ளாறு - வீராணம் இணைப்பும் இப்போது சாத்தியமாகி இருக்கிறது. இதுபோல் பிரம்மபுத்ரா, கங்கை ஆகிய இரண்டு பெரிய நதிக ளையும் திருப்பி மற்ற ஆறுகளில் விடுவதுதான் பிரதான நோக்கம். இதில், பிரம்மபுத்ராவின் குறுக்கே சைனா அணை கட்டிக்கொண்டிருக்கிறது. அந்த அணை வேலைகள் முடிந்தால் அந்த நதியில் தண்ணீர் வராது. இப்போது ஒரிஸாவில் வளர்ச்சி இல்லை. பின்னால் அங்கே வளர்ச்சி திட்டங்கள் தொடங்கும் போது அவர்களும் தண்ணீர் தரமாட்டேன் என்பார்கள்.

இன்னொரு பக்கம், நதி நீர் இணைப்பு சாத்தியமற்ற திட்டம் என்கிறார்கள் சூழலியலாளர்கள். நதிகளை திருப்பிவிடுவது இயற்கையின் சுழற்சியின் பல மாற்றங்களை உருவாக்கும். சுற்றுப்புறச்சூழல் சார்ந்தும் மற்றும் பலவிதங் களில் இதன் பக்க விளைவுகள் இருக்கும். புதிய பிரச்னைகள் உருவாக்கும். எனவே, இயற்கையின் சுழற்சிக்குத் தக்க செயல்பட்டு நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் சிறந்தது என்கிறார்கள் அவர்கள். ஆக, நதிகள் இணைப்பு திட்டம் இப்போதைக்கு கானல் நீர்தான்!

இதுவரைக்கும் நாம் பார்த்தது, தமிழகம் எதிர்கொண்டுள்ள தண்ணீர் பிரச்னை யில் மிகப் பரவலாக கவனத்தைப் பெற்றவற்றை மட்டும்தான். சமீபத்தில், ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திடீரென விஸ்வரூபமம் எடுத்தது போல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் தூங்கிக் கொண்டிருக்கும் பல சின்ன சின்ன திட்டங்கள் வெடிக்கக் காத்திருக்கின்றன. கொந்தளிப்பான நேரங்களில் அரசியல்வாதிகளும் சினிமாகாரர்களும் பிரச்னைகளை கையில் எடுத்து மேலும் சிக்கலாக்காமல், விவசாயிகளும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பேசினால் மட்டுமே எதிர்காலத்தில் சூமுகமான தீர்வு நோக்கி நகர முடியும்.

ஒரு மனிதனுக்கு சராசரியாக எவ்வளவு தண்ணீர் தேவை என்பது குறித்த டாக்டர் மாலின்சல் கென்மார்க்கின் ஆய்வு உலகம் முழுக்க எல்லா நாடுக ளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் சொல்கிறார்... ‘ஒரு மனிதனின் வளமான வாழ்வுக்கு 1700 – 2000 கனமீட்டர் தண்ணீர் போதுமானது. 1000 கனமீட்டருக்கும் கிழே சென்றால் அங்கு பற்றாக்குறை என அர்த்தம். இதனால் அந்நாட்டில் மோசமான சமூகப் பிரச்னைகள் உதயமாகும் வளர்ச்சி தடைபடும்’ என்கிறார். தமிழகத்தில் நிலத்தடி நீராதாரத்தையும் சேர்ந்து பார்த்தாலும் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1000 கனமீட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஆற்றுநீர் தடைபட்டால் இது 600 கனமீட்டராகக் குறையும். மிக மோசமான ஒரு அபாயக் கட்டத்தை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது.

எதிர்கால சந்ததியைக் காப்பாற்ற உடனடி தேவை மக்கள் விழிப்புணர்வுதான். வெளிமாநிலங்களில் இருந்து வரும் தண்ணீர் உரிமையைக் கேட்டுப் பெறுவதுடன் ஏரி, குளம் என நமது நீராதாரங்களையும் காப்பாற்ற வேண்டும். அண்டை மாநிலங்களுடன் பேசி தீர்ப்பதைவிட நம்மால் உடனே செய்ய முடிவது ஏரி, குளங்களைக் காப்பாற்றுவதுதான். முக்கியமான பெரிய ஏரிகளை குடியிருப்புகளாக மாற்றுவதை நாம் உடனே நிறுத்த வேண்டும்.

பூனைக்கு யார் மணி கட்டுவது?

(தகவல்கள் உதவி: பொறியாளர்கள் கோமதிநாயகம், குப்புராஜ் மற்றும் தியடோர் பாஸ்கரன்)