05 October 2016

அரசியல்

முதல்வர் உடல்நலம் குறித்த ஊகங்கள்

நமது அரசியல் தலைவர்கள் 
உடல்சுகவீனத்தை ஏன் மறைக்கிறார்கள்?
(30-07-2015 புதிய தலைமுறை இதழில் வெளியானது)

ஜெ. ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பற்றித் தொடர்ந்து பல்வேறு விதமான தகவல்கள் / ஊகங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை மறுத்து அரசு தரப்பில் இருந்தோ முதல்வர் தரப்பில் இருந்தோ இதுவரை அதிகாரபூர்வமான அறிக்கை எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில், “முதலமைச்சர் என்பவர், ஒரு நாட்டுக்கு ரகசியமானவராக இருக்கக்கூடாது. பகிரங்கமாக, வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இதற்கு எதிராக, “ஸ்டாலினின் உடல் நலம் குறித்தும், அவர் அடிக்கடி வெளிநாடு சென்று மருத்துவப் பரிசோதனை செய்து வருவது குறித்தும் கருணாநிதி அறிக்கை வெளியிடுவாரா’’ எனக் கேள்வி எழுப்புகிறது, அதிமுக. மு.க. ஸ்டாலின் உடல்நலம் பற்றிய ஊகங்கள் பல வருடங்கள் பத்திரிகை செய்தி. ஸ்டாலினும் தனது உடல்நலம் பற்றி வரும் செய்திகளை மறுத்து அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் தெரிவித்ததில்லை. இன்னொரு பக்கம் இரண்டு முறை சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்று திரும்பிய எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தும், சிங்கப்பூரில் தான் மேற்கொண்ட சிகிச்சை என்ன என இதுவரை பேசியதிலை. ஏன் நமது தலைவர்கள் உடல் சுகவீனம் அடையும்போது அதுகுறித்த தகவல்களை மறைக்கிறார்கள்? சென்னையை மருத்துவத் தலைநகரம் எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் நிலையில், இவர்கள் வெளிநாடு சென்று சிகிச்சைப் பெறுவது எதற்காக?

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்றுப் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியது முதல், அந்த வழக்கிலிருந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்வது வரை, 7 மாதங்கள், வெளியே எங்கும் செல்லாமல் தனது போயஸ் கார்டன் இல்லத்திலேயே இருந்தார், ஜெயலலிதா. விடுதலைக்குப் பிறகு, மே மாதம் 19ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவியேற்பு விழா சில நிமிடங்களிலேயே முடிவடைந்தது. இதனையடுத்து ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இத்தொகுதியில் ஒருநாள் மட்டும் பிரச்சாரம் செய்தார். ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் 4ஆம் தேதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அந்நிகழ்வும் விரைவாக முடிக்கப்பட்டது. 10 நாட்கள் இடைவெளி. பிறகு, தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் மூலம் தேர்வான கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 1,016 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் எனவும் அதில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்குவதை துவக்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டது. எந்தக் காரணமும் அறிவிக்கப்படவில்லை.

இம்மாதம் 15ஆம் தேதி தில்லியில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையில், மாநில முதல்வர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்கவில்லை. இது தொடர்பாகப் பிரதமர் மோதிக்கு எழுதியக் கடிதத்தில், “தனக்கு முக்கியமான அரசுப் பணிகள் இருப்பதால் தன்னால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை’’ என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, அதிமுகச் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஜெயலலிதா வருகை ரத்து செய்யப்பட்டு, அவரது உரையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதில், “கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில், வழக்கம்போல் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். எனினும், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக, இந்த விழாவுக்கு என்னால் நேரில் வர இயலவில்லை’’ என ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.

தேசிய கீதத்தின் நீளம்கூடக் குறைக்கப்பட்டு முதல்வர் பதவியேற்பு சில நிமிடங்களிலேயே முடிந்தது, இடைத்தேர்தலில் போட்டியிட சென்னைக்குள்ளேயே ஆர்.கே. நகர் தொகுதியை தேர்ந்தெடுத்தது, இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது, மெட்ரோ ரயில் சேவையைத் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே தொடங்கி வைத்தது உள்பட வெவ்வேறு காரணங்கள் சேர்ந்து ஜெயலலிதா உடல்நிலை பற்றிய பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தன.

ஊடகங்களில் இதுபற்றி ஆங்காங்கு சில செய்திகள் வெளிவந்த நிலையிலேயே, ஆலந்தூர் கூட்டத்தில், திமுகத் தலைவர் கருணாநிதி, “தயவு செய்து நீங்கள் ஓய்வெடுத்து உங்கள் உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று வெளிப்படையாக பேசினார்.

“கால்களின் இரண்டு மூட்டுகளும் தீராத வலியால் அவரை வேதனைப்படுத்துகின்றன. அலோபதி, சித்தா ஆகிய இரண்டு மருத்துவ முறைகளின் படியும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். அதற்கான சில பயிற்சிகளையும் செய்கிறார். ஆனாலும், வலி குறையவில்லை. நாளுக்குநாள் கூடிக்கொண்டுதான் போகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளக் கூடாது என்பது மருத்துவர்கள் அறிவுரை. அப்படி உட்கொண்டால், உடல் எடை கூடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளாமல் இருக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அவர் நடக்க, நிற்க சிரமப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்தான் ஜெயலலிதாவுக்குச் சமீப நாட்களாக இந்த மூட்டு வலி மிக அதிகமானதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது கொடநாடு செல்லும் திட்டத்தைக் கைவிட்டதாக’’ ஊடகங்களில் செய்தி வெளியானது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்படப் பல்வேறு அரசியல் கட்சியினரும், முதல்வர் தனது உடல்நிலை குறித்து விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். “முதல்வரின் உடல் நலத்தைத் தெரிந்துகொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும்’’ என்கிறார் தொல். திருமாவளவன். “முதல்வரின் உடல் நலம் குறித்து விமர்சனம் செய்வது அரசியல் நாகரிகமற்றது’’ என்று கூறிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியனும் பிறகு, “பொதுவாக நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் உடல் நலம் குறித்துச் சந்தேகங்கள் எழும்போது, அதை மருத்துவ அதிகாரிகள் மூலமோ உரிய நபர்கள் மூலமோ அதிகாரப்பூர்வமாகத் தெரிவிப்பது வழக்கம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது அன்பு கொண்ட தொண்டர்கள், அவருக்குச் சிறு தண்டனை என்றாலே கோவில்களுக்குச் சென்று மொட்டை போடும் அளவுக்கு அன்பும் பக்தியும் கொண்டவர்கள். அவர்களுக்காக ஜெயலலிதா உடல் நிலை குறித்தும், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர் என்கிற முறையில் மக்களுக்காகவும் ஆளும் கட்சியினர் அவரது உடல் நிலை குறித்த தகவல்களைத் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

சுப்பிரமணியன் சுவாமி
இந்நிலையில், "கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக ஜெயலலிதா அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் நகரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர வாய்ப்புள்ளது. எந்த நேரத்திலும் ஜெயலலிதா கிளம்பலாம். அது ஒரு கடினமான ஆபரேசன்" என, பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டிவிட் வெளியிட்டார்.

இவ்வளவுக்குப் பிறகும் அதிமுக கட்சி தரப்பிலோ அரசு தரப்பிலோ முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. மாறாக, முதல்வரின் உடல்நலம் குறித்து தவறாக செய்தி வெளியிட்டதாக ரீடிஃப் இணையத் தளம் மீதும் பத்திரிகையாளர் ராமசுப்பிரமணயன் மீது தமிழக அரசு சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்மாதம் 15ஆம் தேதி புதன்கிழமை மதியம் தலைமைச் செயலகத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடிப் பணி நியமன ஆணை பெற்றவர்களில் ஐந்து பேருக்கு மட்டும் நியமன ஆணைகளை வழங்கினார். இதனையடுத்து ஜெயலலிதா உடல்நலம் குறித்த ஊகங்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட்து. ஆனால். அடுத்தடுத்த நாட்களில் முதல்வர் கலந்துகொண்டதாக இரண்டு நிகழ்வுகள் குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியாக, “இம்மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் நடந்தவை. அரசு ஏன் இப்படி அடுத்தடுத்த நாட்களில் நடந்த நிகழ்வாகக் காட்டுகிறது’’ என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். இதனால், இந்நிகழ்வுகள் முதல்வர் உடல்நிலை பற்றிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக மேலும் ஊகங்களை வளர்க்கவே செய்கின்றன. இச்செய்திகளால் அதிர்ச்சியடைந்த கீழகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான 58 வயது வீரராகவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முதல்வர் நினைத்தால் ஒரே ஓர் அறிக்கை மூலமோ, பத்திரிக்கை செய்தி மூலமோ இந்த விவாதங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஏனோ செய்யவில்லை.

சி.ஆர். சரஸ்வதி
இந்நிலையில், “முதல்வர் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வரும் கருணாநிதி, முதலில் ஸ்டாலினின் உடல் நலம் குறித்தும், அவர் அடிக்கடி வெளிநாடு சென்று மருத்துவப் பரிசோதனை செய்து வருவது குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்’’ என்கிறார் அ.தி.மு.க தலைமை கழகப் பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி. “2 வார சுற்றுப் பயணமாக மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் இன்று இரவு வெளிநாடு புறப்படுகிறார்’’ என்பது கடந்து சில வருடங்களில் அடிக்கடி வரும் செய்தியாகிவிட்டது. இதனையொட்டி ஸ்டாலின் உடல்நலம் குறித்தும் பல்வேறுவிதமான ஊகங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. மேலும், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காகத் திமுகவில் இருந்து மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்ட போது, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, “ஸ்டாலினைப் பற்றி, நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லை அழகிரி சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்தத் தகப்பனாராவது இதுபோன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியுமா?’’ என்றார். ஆனாலும், சி.ஆர். சரஸ்வதி குறிப்பிடுவதுபோல், கருணாநிதியோ திமுகத் தரப்போ ஸ்டாலின் உடல்நலம் குறித்த ஊகங்களுக்கு இன்றுவரை பதில் சொல்லவில்லை.

சென்ற வருடம் டெல்லியில், நரேந்திர மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த், தொடர்ந்து நடைபெற்ற பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அப்போது, முதல் நிகழ்ச்சியில் விஜயகாந்த் கண்ணில் நீர் வழிந்துகொண்டே இருந்ததால்தான் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு போகவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், சென்னை திரும்பிய சில நாட்களில் விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால், ‘விஜயகாந்துக்குக் கல்லீரல் பிரச்சனை. அதற்காகத்தான் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார்’ என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

விஜயகாந்த்
சில மாதங்களுக்குப் பிறகு, ‘நெஞ்சு எரிச்சல் காரணமாக’ விஜயகாந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, உடனே மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி பிரேமலதா மட்டும் சென்றார். விஜயகாந்தின் அப்பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. விமான நிலையத்திற்குத் தொண்டர்கள் யாரும் வரவில்லை. திரும்பி வரும்போதும் யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் காரில் ஏறி வீட்டுக்குச் சென்றனர். இன்றுவரை சிங்கப்பூரில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது குறித்து விஜயகாந்தோ தேமுதிக கட்சியோ அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இது குறித்து நம்மிடம் பேசிய மனநல மருத்துவர் ருத்ரன், “உடல் சுகவீனம் என்பது யாருக்கும் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். மேலும், அது ஓர் அவமானகரமான விஷயமும் இல்லை. தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரையும் எம்.ஜி.ஆரும் உடல்நலம் குன்றியபோது அதனை வெளிப்படையாக அறிவித்துதான் அயல்நாடு சென்றார்கள். எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோதும் இங்குத் தேர்தலில் வெற்றி பெற்றார். எனவே, இது தமிழகத்துக்குப் புதிது அல்ல. எல்லோருக்கும் வரும் உடல்நல பாதிப்பு, தன் தலைவனுக்கோ தன் அபிமான நடிகனுக்கோ வந்தால், எந்தத் தொண்டனும் ரசிகனும் அவர்களைக் குறைத்து மதித்துவிடப் போவதில்லை. மாறாக, அவர்கள் மேல் வைத்திருக்கும் மயக்கும் அன்பின் வெளிப்பாடாக விரைவில் நலம் பெறவேண்டும் என்றே வேண்டுவான். எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்ட போது தமிழகமெங்கும் மக்கள் இப்படித்தான் இருந்தார்கள்’’ என்றார்.

இதற்கு இந்திய அளவிலான மிகச் சிறந்த உதாரணம் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் (எய்ம்ஸ்) இரண்டு முறை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் மன்மோகன் சிங். இரண்டும் அவர் பிரதமராக இருக்கும்போது நடைபெற்றது; வெளிப்படையாகத் தெரிவிக்கவும் பட்டது.

ஆனால், அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு என்ன பாதிப்பு என்பது இன்றுவரை காங்கிரஸ் தரப்பில் கூறப்படவில்லை. அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, சினிமா பிரபலங்களும் உடல்சுகவீனம் குறித்த தகவல்களை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். உதாரணம்: ரஜனிகாந்த். சிங்கப்பூரில் ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை இன்றுவரை ரகசியம்தான்.

ஏன் நமது தலைவர்கள் / பிரபலங்கள் தங்கள் உடல்சுகவீனத்தை மறைக்கிறார்கள்?

டாக்டர் ருத்ரன்
“தலைவர்களும் பிரபலங்களும் பிம்பங்களின் தாங்குதல்களாலேயே வாழ்வையும் செல்வாக்கையும் நீட்டித்துக் கொண்டிருக்கிறார்கள். நோய் என்பது யாரையும் தாக்கும் என்றாலும், அது தம் அதீத பிம்பத்துக்கு எதிரானது என்று இவர்கள் கருதுகிறார்கள். என்றும் அதே குன்றா இளமையும் வசீகரமும் வலுவும் இருப்பதாகத் தொண்டர்களும் ரசிகர்களும் தம்மைப் பார்க்க வேண்டும் எனும் அவசியமில்லாத உந்துதல்தான், தம் உடலில் சிக்கல் வந்தால் அதை மறைப்பதற்கான அடிப்படை காரணம்.

இவ்வகைப் பிம்பங்கள் பல நேரங்களில் மக்களாலேயே உருவாக்கப்படுபவை, அங்கீகரிப்பினால் வளர்க்கப்படுபவை. ஒரு சாதனையின் அல்லது சின்ன வெற்றியின் கைதட்டல்தான் இதன் ஆரம்பம். கைதட்டல் மனத்துக்கு இதமான ஒரு சுகம். மேலும் மேலும் அது கிடைக்க வேண்டும் எனும் ஏக்கத்தை, தாகத்தைச் சிலருக்கு வெறியையும் உருவாக்கும். இதன் தொடர்ச்சியே தான் ஓர் அதீத மானுடம் எனும் பிரமையை அவர்களுக்குள் அமைய வழி வகுக்கும். இப்படியான அதீத மானுட பிம்பம் சாதாரண மக்கள் முன் ஒரு நோயினால் சரிவதை நம் தலைவர்கள் / பிரபலங்கள் விரும்புவதில்லை. எம்ஜியார் கூடச் சுயநினைவிலிருந்திருந்தால் தன் நோய் குறித்து மக்களிடம் தெரிவித்திருக்க மாட்டார், அவர் அவ்வளவு தீவிரமான நிலைக்குப் போகுமுன் இருந்த, எந்தப் பாதிப்பையும் வெளிக்காட்டியதில்லை. தன் பிம்பம் சரியவில்லை என்பதைக்காட்டும் முயற்சிதான், எம்.ஜி.ஆர். சிகிச்சை முடிந்து திரும்பிய உடன், மேடையில் துள்ளி ஏறியதெல்லாம்.

இது என் உடலின் நிலை; என் சொந்த விஷயம்; அதை எல்லோருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனும் வாதம் ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளக்கூடியாதக் இருக்கலாம். ஆனால், இது பிரபலங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம், அரசியல் தலைமை ஏற்று நடத்துபவருக்குப் பொருந்தாது. ரசிகன் நடிகனின் நோய் குறித்து வருந்துவானே தவிர அவன் வாழ்வில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால், தலைவன் நோயினால் செயல்திறன் குறையக்கூடும் என்றால் அது தொண்டனின் வாழ்வை செயல்பாட்டை, எதிர்காலம் குறித்த திட்டங்களைப் பாதிக்கும். மாற்றுத் தலைமையை அவன் தேடவேண்டிய அவசியம் மனத்தின் ஓரத்தில் தோன்றும். இப்படி, தம் பிம்பத்துக்கு மட்டுமல்ல, தொண்டனைக் கட்டுப்படுத்தும் தம் அதிகாரத்துக்கும் ஆபத்து எனும் எண்ணமும் அரசியல்வாதிகள் / நடிகர்கள் நோய் குறித்த செய்திகளை மறைக்க ஒரு காரணம், இதுவும் ஒருவித தன்னம்பிக்கையின்மைதான்.

பிரபலமோ அரசியல் தலைமையோ இங்கே தமிழ்நாட்டுக்குள் சிகிச்சை எடுக்கத் தயங்குவது செய்தி வெளியே தெரிந்து விடும் எனும் பயத்தினால்தான்’’ என்கிறார் டாக்டர் ருத்ரன்.

24 September 2016

முகங்கள்

நான் ஆய்வாளர் ஆனது எப்படி?

ஆ.இரா. வேங்கடாசலபதி
வரலாற்று ஆய்வாளர்



நான் பிறந்தது குடியாத்தம். ஆனால், ஒரு வயதில் ஆரம்பித்து அப்புறம் என் முழு வாழ்க்கையும் சென்னைதான். அப்பா, அம்மா இருவரும் நெசவு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்பா எம்.பி.பி.எஸ். டாக்டர். இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகளுக்கு நடுவே மூன்றாவது பையனாக நான் பிறந்தேன். சின்ன வயதில் என்னைச் சுற்றி எல்லாருமே ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், எழுதவேண்டும், படிக்கவேண்டும்; அதுதான் நாகரிகமென்று நினைத்து, செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள்தான். டாக்டராகனும், இன்ஜினியராகனும் என்று சொல்லிச்சொல்லி வளர்க்கப்பட்ட சூழல். என் அண்ணன், தங்கைகள், நண்பர்கள் அனைவருமே அந்தக் கனவுகளோடுதான் வளர்ந்தார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் படித்து, எனக்குத் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. எழுத்தாளன் ஆகவேண்டும் என்று அப்போது முடிவு செய்தேன். சென்ட்ரல் போர்ட் ஸ்கூலில் இருந்து விலகி, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போய்ச் சேர்ந்தேன். 

ஆனால், எழுத்தையே ஜீவனாம்சமாக வைத்துக்கொண்டால் என்ன ஆவோம்ங்கிறதுக்கு உதாரணமாக புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு எனக்கு முன்னாடி இருந்தது. புதுமைப்பித்தன் வாழ்க்கை ஒரு சோக நாடகம். உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை. எனவே, முழு நேர எழுத்தாளனாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். பி.காம். படித்து, வங்கி உத்தியோகத்துக்குப் போனால் எழுதுகிறதுக்கு வசதியாக இருக்குமென்று திட்டமிட்டேன். அப்பா, அம்மா இருவருமே இதை விரும்பவில்லை. ஆனால் குழந்தைகளின் உணவு, ஆடை தொடங்கி எல்லாமே தங்கள் தீர்மானம்படிதான் இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிற பெற்றோர்கள் தலைமுறை அப்போது உருவாகி இருக்கவில்லை. என்னை, என் போக்கில் விட்டுவிட்டார்கள். 

கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் அரை நாள்தான் பள்ளிக்கூடம். அதிலும், பாதி நாள் ஆசிரியர்கள் வரமாட்டார்கள். எனவே, எனக்குப் புத்தகங்கள் வாசிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது. விளையாட்டில் நான் மிகவும் மோசம். கிரிக்கெட் என்றால் இரண்டாவது பந்திலேயே அவுட்; கில்லியில் பத்துகூட தேறாது. பம்பரம், சொல்லவே வேண்டாம். எந்த விளையாட்டானாலும் எல்லாருமே என்னை தோற்கடித்துவிடுவார்கள். மனசுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். இந்த தோல்வியில் இருந்த மீளப் புத்தகங்கள் மிக ஆறுதலாக இருந்தது. ஆனால், வீட்டில் புத்தகம் வாங்குவதற்கு காசு தரமாட்டார்கள். அதனால், சினிமாவுக்கு போகிறேன் என்று சொல்லி, அந்த பணத்தில் புத்தகம் வாங்குவேன். 

‘முகம்’ மாமணி
அப்போது, பள்ளி மாணவர்க ளுக்கான ஒரு வினாடி - வினா போட்டி மூலமாக, ‘இலக்கிய வட்டம்’ என்கிற அமைப்போடு அறிமுகம் கிடைத்தது. ‘முகம்’ மாமணி அதை நடத்திக் கொண்டி ருந்தார். மாதம்தோறும் ஏதேனும் ஒரு அறிஞரை, எழுத்தாளரை, பிரமுகரை அழைத்து வந்து பேசவைப்பார். நான் தொடர்ந்து அந்தக் கூட்டங்களுக்குப் போனேன். அப்படித்தான் புதுமைப்பித்தன், கல்கி, மு.வ. புத்தகங்கள் அறிமுகமானது. மார்க்சிஸ்ட்டுகள், திராவிட இயக்கத்தவர்கள், இவர்களுக்கு எதிரானவர்கள் என்று தமிழ், ஆங்கிலப் புலமையாளர்களுடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. எல்லாருமே நாற்பதுக்கு மேல் அல்லது ஐம்பதைத் தொட்டுக்கொண்டு இருந்தவர்கள். நான், ஒன்பதாம் வகுப்பு படிக்கிற அரை நிஜார் பையன். ஆனால், பொடியன் என்கிற உதாசீனம் இல்லாமல், அவர்களுக்கு சமமானவனாகத்தான் என்னை நடத்தினார்கள். ‘‘வாங்க’’ என்று பன்மையில் மரியாதையாக கூப்பிடுவார்கள். “தமிழ், ஆராய்ச்சி, இலக்கியம் எல்லாம் வேலைக்கு ஆகாது. படித்து முன்னேற்கிற வழியைப் பார்” என்று அக்கறையாக, அவர்கள்ப் பட்ட கஷ்டங்களை சொல்வார்கள். 

பத்தாம் வகுப்பு படிக்கும் போது, வ.உ.சி. பற்றி கேள்விப்பட்டு, அவர் மீது ஒரு ஈடுபாடு வந்தது. வ.உ.சி. செய்த தியாகங்களுக்கும், வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த வெற்றிக்கும் இடையே இருந்த இடைவெளி என்னைக் கவர்ந்தது. அவரைப் பற்றி படிக்க வேண்டும் என்று தேடினபோதுதான், வ.உ.சி. பற்றிச் சிறந்த புத்தகங்களே இல்லை என்பது தெரிந்தது. அதை நாமே செய்யலாமே என்று அவர் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன். தூத்துக்குடி சென்று, பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனைச் சந்தித்தேன். சென்னையில் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் போனேன். ஆனால், “பள்ளிக்கூட பசங்களை அனுமதிக்க மாட்டோம்” என்று சொல்லிவிட்டார்கள். அதனால், ஒரு வருடம் காத்திருந்து, கல்லூரியில் சேர்ந்ததும் முதல் வேலையாக ஆவணக் காப்பகம் போனேன். ஆறு மாசம் ஆய்வு செய்து, 1984இல் வ.உ.சி. கடிதங்களைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்தேன். அப்போது, எனக்கு 17 வயசு. தொடர்ந்து என் ஆங்கிலக் கவிதைகள் புத்தகமாக வெளிவந்தது. இதே காலகட்டத்தில் சங்க இலக்கியம், ஆண்டாள், ஈழத்து எழுத்தாளர் சேரன் என்று எனக்குப் பிடித்த தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். 

ஆ. சிவசுப்பிரமணியன்
வ.உ.சி. பற்றின என் ஆய்வு, மேலும் மேலும் தமிழ் சமூகம், தமிழ்ப் பண்பாடு சார்ந்த நூல்களைப் படிப்பதற்கான பாதைக்கு என்னை இட்டுச் சென்றது. ஆவணக் காப்பகத்தில் பழைய வரலாற்று ஆவணங்களை எல்லாம் பார்க்க பார்க்க, எந்த அளவுக்கு ஆதாரப்பூர்வமற்று வரலாறுகள் இங்கே எழுதப்படுகின்றன எனத் தெரிந்துகொண்டேன். ஆவணங்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, சுவாரஸ்யம் வரலாற்றுத் துறைக்கு போகவேண்டும் என்கிற எண்ணத்தை உண்டாக்கியது. ஆனால், பல்கலைக்கழக விதிமுறைப்படி பி.காம். படித்தவர்கள் எம்.ஏ. வரலாறு சேர முடியாது. எனவே, அஞ்சல் வழியில் எம்.ஏ. வரலாறு படித்தேன். “வரலாறு படிக்கிறதே உருப்படாத காரியம். அதையும் அஞ்சல் வழியிலா” என்று சுற்றி இருந்தவர்கள் வருத்தமாக பார்த்தார்கள். அப்போது, சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் எனக்கு வேலைக் கிடைத்தது. அங்கு, உலகம் முழுக்க இருந்து நிறைய ஆய்வாளர்கள் வருவார்கள். அதில் பலர், “தமிழ்நாட்டில் வரலாற்றுக் கல்வி மிகவும் பின்தங்கி இருக்கிறது; சிறப்பான மேற்படிப்பும் ஆய்வுப் பயிற்சியும் கிடைக்க வேண்டும் என்றால் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு போங்கள்” என்று சொன்னார்கள். ரொமிலா தாப்பர், கே.என். பணிக்கர் போன்ற சமூகத்தில் அந்தஸ்தோடு இருந்த மிகச் சிறந்த ஆசிரியர்கள் அப்போது ஜே.என்.யூ.வில் இருந்தார்கள். 

கே.என். பணிக்கர்
தமிழ்நாடு நவீனமாக மாறிய, 19ஆம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் பாதி வரைக்குமான காலகட்டம்தான் என் ஆராய்ச்சியின் மையம். ஆய்வை முடித்ததும், ‘‘என்ன செய்யப் போகிற’’ என்று பணிக்கர் கேட்டார். ‘‘தமிழ்நாட்டுக்குப் போகிறேன்’’ என்று சொன்னேன். ‘‘வௌங்கமாட்ட. அங்கே வரலாற்று ஆய்வுகளே இல்லை’’ என்றார். ‘‘அப்ப, அங்கதான நான் போகவேண்டும்’’ என்று சொன்னேன். திரும்ப தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு வருடம் வேலை இல்லாமல் இருந்தேன். ஆனால், அந்த நேரத்தை என் வ.உ.சி., பாரதி பற்றின ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினேன். ‘பாரதியின் கருத்துப் படங்கள்’, ‘வ.உ.சி.யும் பாரதியும்’ இரண்டு புத்தகங்களையும் கொண்டு வந்தேன். ஆய்வுலகில் எனக்கு ஒரு கவனிப்பை ஏற்படுத்திய புத்தகங்கள் இவை. பிறகு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. ‘காலச்சுவடு’ பத்திரிகை தொடர்பு ஏற்பட்டது. அவர்கள், நான் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் எல்லாவற்றையும், பக்க அளவுகளைப் பற்றி கவலைப்படாமல் பிரசுரித்தார்கள். இது ஆய்வு வட்டத்தைத் தாண்டி, வாசகர்கள் மத்தியில் எனக்கு ஒரு பெயரைப் பெற்றுத் தந்தது. ‘புதுமைப்பித்தன் கதைகள்’, ‘அந்த காலத்தில் காப்பி இல்லை’ முதலான ஆய்வுக் கட்டுரைகள் வந்தபோது, வெகுஜன பத்திரிகைகளும் என்னைக் கவனித்தன. 

தமிழ்நாட்டு வரலாறு பெருமளவில் இலக்கியப் பதிவுகளை அடிப்படையாகத்தான் கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கியமும் இலக்கணமும் படிக்காதவர்கள், தமிழக வரலாற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியாது. மேலும், வரலாறு அடிப்படையில் கணக்கு கிடையாது; அது எழுதப்பட வேண்டும். சமகால எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தால்தான் எழுத்தாற்றல் வளரும். இது என் பலம். என் ஆய்வுக் கட்டுரைகளை சுவையாகவும் தெளிவாகவும் எழுத, என் இலக்கிய வாசிப்பு உதவுகிறது. 

நான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழ்நாடு, திராவிட இயக்கத்தைப் பற்றிய சித்திரம் வெளிநாடுகளில் மிகவும் மோசமானதாகத்தான் இருந்தது. திரைப்பட கலாசாரம், பிராமண துவேசத்தை மட்டும்தான் திராவிட இயக்கம் வளர்த்தது என்கிற கருத்தை, ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் எழுத்தாளர்கள் தொடர்ந்து உருவாக்கி வந்தார்கள். அதற்கு மாற்றான கருத்தை அங்கே முன்வைக்க வேண்டும் என்றால், ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று ஆங்கிலக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். அக்கட்டுரைகள் வெளிநாட்டு ஆய்வாளர்கள் கவனம் என் மீது திரும்ப காரணமானது. சிகாகோ, கேம்பிரிட்ஜ், லண்டன், பாரிஸ், கொலம்பியா என்று உலகளவில் பல முக்கியமான பல்கலைக்கழகங்களுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் சென்றிருக்கிறேன். 

நம் பழம் புராதனச் சின்னங்கள் எதையுமே நாம் பாதுகாக்கவில்லை. இதில் பழங்கால நூல்களும் அடங்கும். வ.உ.சி. சம்பந்தமான நூல்களைப் பார்க்க தூத்துக்குடிக்குப் போனதுபோது, அங்கே எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. டில்லி நேரு மெமோரியல் லைப்ரரியில் எல்லாம் இருக்கும் என்று கேள்விப்பட்டு அங்கே சென்றேன். டில்லியில், பாரதியாரின் ‘இந்தியா’ பத்திரிகை கல்கத்தாவில் இருக்கிறதென்று அறிந்து அங்கே போனேன். டில்லி, கல்கத்தாவிலும் இல்லாத முக்கியமான சில பழைய நூல்கள், வெளிநாட்டு நூலகங்களில் இருக்கின்றன. கருத்தரங்குகளில் கட்டுரை வாசிக்க, வெளிநாடு செல்லும் ஒவ்வொரு வாய்ப்பையும் இந்த புத்தகங்களைத் தேடுவதற்காக நான் செலவிடுகிறேன். அப்படித்தான் பாரதியாரின் ‘விஜயா கட்டுரைகள்’ லண்டனில் எனக்குக் கிடைத்தது. 

திருநெல்வேலி, சென்னை என்று இரண்டு பல்கலைக்கழகங்களில் நான் வேலை பார்த்திருக்கிறேன். முழுக்க தகவல் பிழை, மொழிப் பிழை, வரலாறு என்றால் என்ன என்பது பற்றிய தவறான புரிதல் - இவற்றின் ஒட்டுமொத்த கூட்டணிதான் நமது பல்கலைக்கழகங்களின் வரலாற்றுப் புத்தகங்கள். நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்பதுக்கான காரணத்தை, கடந்த காலத்தைக் கொண்டு விளக்குவதுதான் வரலாறு. ஆனால், இங்கே மன்னர்களின் பெயர்கள், காலம் சம்பந்தப்பட்டதுதான் வரலாறு என்ற்ய் புரிந்து வைத்திருக்கிறார்கள். இவ்வளவு மோசமான நிலை வேற எங்கேயும் இல்லை. இந்த மாதிரியான ஒரு சூழலில் தொடர்ந்து வேலை பார்ப்பதில் ஏற்படும் இயல்பான சலிப்பு எனக்கும் ஏற்பட்டது. எனவே, பாடம் நடத்தும் வேலையை விட்டுவிட்டு, ஆராய்ச்சி நிறுவனமான சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். 

இன்றைக்கு எல்லோருமே சாப்ட்வேரை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மருத்துவமே இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது. ஆனால், இது தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்வி எல்லாருக்கும் இருக்கிறது. சுத்தமான அறிவியலென்று சொல்லப்படுகிற வேதியியல், இயற்பியல் பாடங்களுக்கான தேவை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதே மாதிரி வரலாறு, சமூக அறிவியல் பாடங்களுக்கும் மீண்டும் கவனிப்பு அதிகமாகும். இனி உலகம் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தொழில்நுட்பத்தால் தீர்க்கப்படும் பிரச்சினைகள் இல்லை. தொழில்நுட்பத்தால் உருவான பிரச்சினைகள்தான். உலகம் எந்தப் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது, என்ன நடக்கிறது, அதைப் புரிந்துகொள்வது எப்படி என்கிற பார்வையை சமூகவியல், வரலாறு படிப்புகள்தான் கற்றுக் கொடுக்கும். இன்னொரு பக்கம், எந்தத் துறையாக இருந்தாலும் அதில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்காக, எப்போதும் முதல் இடம் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த சிறந்தவர்களாக, உங்களை நீங்கள் ஆக்கிக்கொண்டால் அந்த இடம் உங்களுக்குத்தான்.




உங்கள் சாதனை? 

என் வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன் ஆராய்ச்சிகளைப் பாராட்டி, ‘குட்டி உ.வே.சா’ன்னே பத்திரிகைகள் எழுதினார்கள். இது என் தகுதிக்கு மீறி கிடைத்த பெரிய அங்கீகாரம்!

ரோல் மாடல்?

‘முகம்’ மாமணி, தா. கோவேந்தன், ஆ. சிவசுப்பிரமணியன். இவர்கள் மூவரும்தான் தமிழ் வாழ்க்கையை எனக்கு காண்பித்தவர்கள்.

பொழுதுபோக்கு? 

அப்படியொன்றைக் கண்டுபிடிக்க முடியலைங்கிறதுதான் பிரச்சினை. ரிலாக்ஸுக்காக சினிமா பார்க்கப் போய், அதைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கிவிடுவேன். 

பிடித்த மேற்கோள்? 

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய் - திருக்குறள்

கெட்டபழக்கங்களை விட்டது எப்படி? 

என் தலைமுறையில்தான் எல்லோரும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், புத்தகங்கள் வாங்குவதற்கே காசு குறைவாக இருந்ததால் சிகரெட் பக்கமே நான் போகவில்லை. 

மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவது?

மாணவர்கள், குழந்தைகளை அவர்கள் விருப்பத்துக்கு விடுங்கள். சாப்பிடுவது, உடுத்துவது தொடங்கி படிப்பு வரைக்கும் எல்லாத்தையும் நீங்களே தீர்மானித்து அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

(2007இல் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளியான ‘முதல் தலைமுறை’ தொடருக்காக ஆ.இரா. வேங்கடாசலபதியைப் பேட்டி கண்டு எழுதியது.)

12 August 2016

மொய் விருந்து

ஒரே நாளில் கோடீஸ்வரன்!

(புதிய தலைமுறை 06-08-2015 இதழில் வெளியானது.)


ஆடி மாதம் தமிழகம் முழுக்க விசேஷங்கள்தான். காவடி, பொங்கல், பால் குடம், தீமிதி, கூழ் என மக்கள் கூட்டம் கூட்டமாய்த் திருவிழா மனநிலையில் இருப்பார்கள். அம்மன் கோவில்களில் கொடியேற்றப்படும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் நடைபெறும். ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் பெண்கள் அவ்வையாருக்கு விரதப் பூஜை செய்வார்கள். ஆடி வெள்ளி வரலட்சுமி விரதம். பெண்கள் 108, 1008 குத்து விளக்குப் பூஜைகள் செய்வார்கள். காவேரி பாயும் பகுதிகள் முழுக்க ஆடிப்பெருக்கு. இன்னொரு பக்கம், ஆடிப்பட்டம் தேடி விதை என்று விவசாயிகள் வெள்ளாமையைத் துவங்குவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து பெண்ணைத் தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். மேலும் ஆடித் தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, வியாபார நிறுவனங்கள் அறிவுக்கும் ஆடிக் கழிவு என மாதம் முழுக்கக் கொண்டாட்டங்கள்தான். இவைகளுடன் இன்னொரு கொண்டாட்டமும் சேர தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஆடி இன்னும் விசேஷமானது. அது மொய் விருந்து!

ஆடி மாதம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சுற்று வந்ததுமே பேருந்து நிலையம், சாலை, கடை வீதி, கல்யாண மண்டபங்கள், கோயில்கள் என எங்கும் நிறைந்திருக்கும் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது. லோக்கல் பேருந்து பயணமே பிரமிப்பூட்டுகிறது. மடிப்பு கலையாத வெள்ளை வேட்டிச் சட்டையில் ஆண்கள் பக்கம் பளீர் என்றிருந்தால் பெண்கள் பக்கமோ பட்டு, கழுத்தை மறைக்கும் தங்க நகைகள் என ஜொலிக்கிறது. இரு சக்கர வாகனம், கார் எனச் சாலையில் பறப்பவர்கள் நிலையும் இதுதான். எல்லோருமே மொய் விருந்துகளுக்குச் செல்பவர்கள் அல்லது சென்றுவிட்டு திரும்புபவர்கள். ஒவ்வொரு ஊரில் டிஜிட்டல் பேனர்களில் குடும்பம் குடும்பமாகச் சிரித்துக்கொண்டே விருந்துக்கு அழைக்கிறார்கள். ஆடி மாதம் தொடங்கும் இந்தக் கொண்டாட்டம் ஆவணி கடைசி வரைக்கும் தொடருமாம். ஜுலை கடைசி வாரத்திலிருந்து அக்டோபர் பாதி வரை.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இல்லாமல் தஞ்சாவூர், புதுக்கோட்டைப் பகுதிகளுக்கு மட்டும் இந்த மொய் விருந்து கொண்டாட்டம் எப்படி வந்தது?

வங்கிகள் போன்ற வருமானத்தைச் சேமித்து வைப்பதற்கான முறைகள் இல்லாத பழங்காலங்களில், திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் வந்தால், அதனை நடத்த ஒரு குடும்பத்துக்குத் திடீரென அதிகப் பணம் தேவைப்படும். அப்போது, அவர்களது நெருக்கடியை ஊரும் உறவும் பகிர்ந்துகொள்ளும் ஒரு பகுதியாகத்தான் மொய் பழக்கம் தொடங்கியிருக்க வேண்டும்.

கல்யாணம், காது குத்து, சடங்கு, புதுமனை புகுவிழா எனக் குடும்ப வைபவங்களுக்கு மொய் செய்யும் பழக்கம் எல்லா இடங்களிலும் போல்தான் தஞ்சை, புதுக்கோட்டைப் பகுதியிலும் தொடக்கக் காலங்களில் இருந்திருக்கிறது. ஆனால், இந்தப் பகுதி தண்ணீர் செழிப்புக் காரணமாக விவசாயம் நன்றாக நடந்து, மக்கள் கொஞ்சம் வசதி வாய்ப்புகளுடன் இருப்பதால், மற்ற பகுதிகளைவிட அதிகமாக மொய் செய்வார்கள். மற்றப் பகுதிகளில் 5, 10 ரூபாய் என மொய் இருந்த காலகட்டத்திலேயே இப்பகுதிகளில் 25, 50 ரூபாய்ச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படி, மொய் செய்த வகையிலேயே நம்முடைய பெரும்பணம் ஊரெல்லாம் விரவிக் கிடக்கும். இதனை எப்படித் திரும்ப வாங்குவது? நமது வீட்டில் கல்யாணம், காட்சி வரும்போது நாம் செய்த மொய்யை அவர்கள் திரும்பச் செய்வார்கள். ஆனால், நாம் செய்திருந்ததைவிட அவர்கள் குறைவாகச் செய்தால், அதனால் குழப்பங்கள் ஏற்படும். குறிப்பாக, இப்படி நிறையப் பேர் செய்துவிட்டால், ஒரு குடும்பம் லாபம் அடைந்து இன்னொரு குடும்பம் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுவிடும். மேலும், ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் என்றால், நான்கு பேர் கல்யாணத்துக்கும் 50 ரூபாய் வீதம் செய்திருப்போம். ஆக, நமது பணம் 200 ரூபாய் அந்தக் குடும்பத்திடம் நிற்கும். (இன்று குறைந்தது 500 ரூபாய் மொய் செய்கிறார்கள். அதன்படி இன்றைய கணக்கு 2000 ரூபாய்.) ஆனால், நமது வீட்டில் ஒரு நிகழ்ச்சி மட்டும் நடைபெற்று, அவர்கள் 50 ரூபாய் மட்டும் திரும்ப செய்துவிட்டாலும், நமக்கு நஷ்டம்தான். இதனால், ஏற்பட்ட அனுபவங்கள் அடிப்படையிலும், கால ஓட்டத்திலும் மொய் செய்வதில் சில வரைமுறைகள் உருவாகி வந்திருக்கிறது.

நமது பணம் மேற்படியார் கையில் சில வருடங்கள் இருந்திருக்கிறது. அந்தப் பணம் தொழிலோ விவசாயத்திலோ முதலீடு செய்து பெருகியிருக்க வேண்டிய பணம். எனவே, அதனைக் கணக்கிட்டு அவர்கள் திரும்பச் செய்யும்போது, செய்ததையே திரும்பச் செய்யாமல், அவர்கள் சக்திக்கு தகுந்தார்போல் கூடுதலாகச் செய்திருக்கிறார்கள். இதன் அடுத்தக்கட்டமாக, யார் யார் வீட்டுக்கு நாம் எவ்வளவு செய்திருக்கிறோம், நமக்கு யார் யார் எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை ஒரு சிறிய நோட்டுப் புத்தகங்களில் குறித்து வைத்து, அதனைப் பார்த்து, யாரும் பாதிப்படையாதபடி, மொய் செய்ததைக் கணக்கிட்டுத் திரும்பச் செய்யும் வழக்கம் உருவாகியிருக்கிறது. அதிலும் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டது.

ஒரு குடும்பத்துக்கு முதல்முறை மொய் செய்யும் போது புதுநடைஎனக் குறிப்பிட்டு கொடுப்பார்கள். அதே குடும்பத்தில் அடுத்து நிகழ்ச்சி வந்தால், ‘இரண்டாம் முறைஎன்று சொல்லிக் கொடுப்பார்கள்; இப்படி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் மூன்றாம் முறை, நான்காம் முறை எனச் சொல்லிக் கொடுப்பார்கள். மொய் கொடுத்தவர் வீட்டில் நிகழ்ச்சி வரும்போது, முதல் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உள்ள கடைசி நிகழ்ச்சி நோட்டை எடுத்து முதலில் பார்ப்பார்கள். பிறகு 3வது, 2வது, முதல் நிகழ்ச்சி என்ற வரிசையில் நோட்டைப் பார்ப்பார்கள். இதில் ஒரு நோட்டில் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் அதற்கு முந்தைய நிகழ்ச்சி நோட்டுகளை எடுத்துப் பார்க்கமாட்டார்கள். எனவே, முதல் நிகழ்ச்சிக்கு செய்தால் அதன்பிறகு வரும் எல்லா நிகழ்ச்சிக்கும் தவறாமல் மொய் செய்துவிட வேண்டும். இடையில் ஒரு நிகழ்ச்சி தவறினால் அதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளுக்குச் செய்த மொய் திரும்ப வராது. எனவே, நம்மால் போக முடியாவிட்டாலும் ஒருவரிடம் கொடுத்துவிட வேண்டும்.

வேட்டைப்பெருமாள்
சரி, நாம் நிறையக் குடும்பங்களுக்கு மொய் செய்திருக்கிறோம். ஆனால், நம் வீட்டில் ஒரு வைபவமும் இல்லை என்றால் எப்படிச் செய்துள்ள மொய்களைத் திரும்பச் சேகரிப்பது. இந்நிலையில்தான் மொய் விருந்து என்னும் பழக்கம் உதயமானது. குழந்தைகள் இல்லாதவர் கல்யாணம், காதுகுத்து, சடங்கு என எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாது. இந்நிலையில் மொய் விருந்து நடத்துவார்கள். இவர்கள் யார், யாருக்கெல்லாம் மொய் செய்திருக்கிறார்களோ அவர்கள் எல்லோரையும் அந்த விருந்துக்கு அழைப்பார்கள். அவர்களும் தங்கள் வீட்டில் உள்ள நோட்டுகளைப் பார்த்து, கணக்கிட்டு, விருந்து சாப்பிட்டு மொய் செய்வார்கள். இதுதான் மொய் விருந்து உருவான கதை’’ என்கிறார், பேராவூரணி அருகேயுள்ள குன்றக்காடு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வேட்டைப்பெருமாள். இவர் மொய் விருந்துகளை அடிப்படையாக வைத்து ஒரு நாவல் எழுதும் திட்டத்துடன் கள ஆய்வுகள் செய்து வருகிறார்.

ஆனால் தற்போது, வீட்டில் விசேஷங்கள் நடத்திய குடும்பங்களும்கூட மொய் விருந்து நடத்துகிறார்கள். மேலும், ஒவ்வொரு குடும்பமும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சியாக மொய் விருந்து நடத்துகிறது. இதனால், மொய் விருந்துகள் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே வந்து, இந்த வருடம் 1000 மொய் விருந்துகள் நடத்தப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இதுவும் முந்தைய அனுபவங்கள் அடிப்படையில், மொய் கணக்கு வழக்குகள் மேலும் மேலும் முறைப்படுத்தப்பட்டு வந்ததன் ஒரு விளைவுதான்’’ என்கிறார், எழுத்தாளர் வேட்டைப் பெருமாள்.

பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. 1015 வருடங்களுக்குப் பின்னால் மொய் திரும்பிச் செய்யப்படும்போது அந்தப் பணத்தின் மதிப்பு மிகவும் இறங்கியிருக்கும். மேலும், நீண்ட காலங்கள் கணக்கு வழக்குகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கவும் முடியாது. எனவே, நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கொடுக்கல் வாங்கலை சரிசெய்துவிடுவோம் என்றாகிவிட்டது. அதாவது, நான்கு வருடத்துக்குள் நம் வீட்டில் நிகழ்ச்சி எதுவும் இல்லையென்றால் மொய் விருந்து நடத்துவார்கள். பிறகு அது, குடும்ப நிகழ்ச்சிகளுக்குச் செய்த மொய்யை திரும்ப வாங்குவதற்கு மட்டுமல்லாமல், மொய் விருந்துக்குச் செய்த மொய்யை திரும்ப வாங்குவதற்காகவும் என இப்போது எல்லாக் குடும்பத்தினரும் நான்கு வருடத்துக்கு ஒருமுறை எதாவது ஒரு குடும்ப நிகழ்ச்சி அல்லது மொய் விருந்து நடத்துகிறார்கள்.

பொதுவாக மொய் விருந்துகள் ஆடி, ஆவணி மாதங்களில்தான் நடைபெறும். இந்த நான்கு வருடங்களுக்குள் குடும்ப வைபவம் இருப்பவர்கள் மட்டும் இந்த மாதங்களில் அல்லாமல் குடும்ப வைபவத்தோடு சேர்த்து மொய் விருந்தையும் நடத்துவார்கள். அழைப்பிதழில் அது குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, கல்யாணத்துடன் நடத்தப்படும் மொய்விருந்து என்றால், ‘விருந்துண்டு மொய் பெய்து மணமக்களை வாழ்த்த வேண்டுகிறோம்என அழைப்பிதழில் போட்டிருப்பார்கள்’’ என்கிறார் வேட்டைப் பெருமாள்.

பழங்காலங்களில் மொய்க்கு இருந்தது போலவே, இப்போது மொய் விருந்துக்கும் சில வரைமுறைகள் இருக்கிறது. உதாரணமாக, 2010ஆம் ஆண்டு நீங்கள் ஒருவருக்கு 1000 ரூபாய் மொய் செய்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். 2011ஆம் ஆண்டு நீங்கள் நடத்தும் மொய் விருந்தில் அவர் திரும்ப 1000 ரூபாய் மொய் செய்துவிட்டு, மேற்படியார் புதுநடை எனக் குறிப்பிட்டு 250 ரூபாயோ அல்லது அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு கூடுதலோ செய்வார். 2011இல் நடத்தாமல் 2012ஆம் ஆண்டு நீங்கள் மொய் விருந்து நடத்தினால், 1000 ரூபாய் செய்துவிட்டு, மேற்படியார் புதுநடை 500 செய்வார். இப்படியே அதிகரித்து நான்காவது வருடம் மேற்படியார் புதுநடை 1000 ரூபாய் ஆகிவிடும். இதில் ஒவ்வொரு முறையும் மேற்படியார் புதுநடை அவரவர் சக்திக்குத் தகுந்தார் போல் அதிகமாக இருக்கும்.

இந்த மொய் வரிசையில் இருந்து விலக வேண்டும் என்று விரும்பினால், திரும்பச் செய்யும்போது மொத்தமாக 1100 செய்துவிட வேண்டும். மேற்படியார் புதுநடைஎனத் தனியாகக் குறிப்பிடவில்லை என்றால் மொய்யில் இருந்து முறித்துக்கொண்டு விட்டார் எனப் புரிந்துகொள்வார்கள். அதுபோல் மொய்யில் இருந்து விலக விரும்புகிறீர்கள். ஆனால், நீங்கள் செய்துள்ள மொய்கள் நிறைய இன்னும் பிரியாமல் இருக்கிறது என்றால், ஒரு மொய் விருந்து நடத்தி, அழைப்பிதழில், ‘போட்ட மொய் மட்டும் வாங்கப்படும்; புது மொய் தவிர்க்கவும்எனக் குறிப்பிட வேண்டும். நாம் சந்திந்த ஒவ்வொருவர் வீட்டிலும் பெரிய பெரிய பேரேடுகளில் மொய் கணக்கு வழக்குகள் குறித்து வைக்கப்பட்டுள்ளது. அனேகமாக எல்லாக் குடும்பங்களிலும் இப்படிப்பட்ட பேரேடுகள் இருக்கும் என்கிறார்கள்.

சரி, இவ்வளவு முறையான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் இருக்கிறதே, எல்லோரும் சரியாகப் பின்பற்றுவார்களா?

பெரும்பாலும் குழப்பங்கள் நடப்பதில்லை. முறைகளைப் பின்பற்றவில்லை என்றால் நாணயம் இல்லாத ஆள் என்று பெயராகிவிடும். நான்கு வருடம் என்னுடைய 1000 ரூபாயை வைத்துக்கொண்டு, வெட்கமே இல்லாமல் அதனையே திரும்பச் செய்துவிட்டுப் போகிறான் என்பார்கள். தங்கள் நாணயத்தைக் கெடுத்துக்கொள்ள யாரும் விரும்புவதில்லை’’ என்கிறார், திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, கீழாத்தூர், கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், வடகாடு, சேந்தன்குடி மற்றும் இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்கள் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, ஆவணம், நெடுவாசல், வேம்பங்குடி, பைங்கால், குருவிக்கரம்பை, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மொய்விருந்து அதிகமாக நடத்தப்படுகிறது. இன்று மொய் குறைந்தது 500 ரூபாய் என்று ஆகிவிட்டது. அதற்கும் குறைவாகச் செய்தால் கெளரவக் குறைச்சல். இன்னார் இவ்வளவு செய்திருக்கிறாராம்’’ என மற்றவர்கள் பேச வேண்டும் என்பதற்காக 50 ஆயிரம், 1 லட்சம் ரூபாய் வரை மொய் செய்பவர்களும் இருக்கிறார்கள். 3 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் வரைக்கும், அவரவர் செய்திருக்கும் சக்திக்கு தகுந்தார்போல் மொய் பிரிந்திருக்கிறது. நமக்கு எவ்வளவு பிரிந்திருக்கிறதோ அதனை அடுத்த நான்கு வருடத்துக்குள் திரும்பச் செய்ய வேண்டிருக்கும் என்பதால் அதனைக் கணக்கிட்டு தயாராக இருக்கிறார்கள். 3 கோடி ரூபாய் பிரிந்த ஒரு குடும்பம், அடுத்த நான்கு வருடமும் ஆடி, ஆவணி மாதங்களில் 2550 லட்சம் ரூபாய் வரைக்கும் திரும்ப மொய் செய்ய வேண்டியதிருக்கும்.

தமிழகம் முழுக்க, ஆரம்பக் காலங்களில் அந்தந்தக் கிராமங்களில் பந்தல்போட்டுக் கல்யாணம், காட்சி, காதுகுத்து என நடந்த குடும்ப வைபவங்கள் இப்போது பக்கத்து நகரங்களிலுள்ள கல்யாண மண்டங்களுக்கு நகர்ந்துவிட்டது போல், இப்பகுதியில் மொய் விருந்துகளும் கிராமங்களில் இருந்து பக்கத்து நகர மண்டபங்களுக்குச் சென்றுவிட்டது. மொய் விருந்து நடத்துவதற்கு என்றே தனியாக அரங்கங்களும் கட்டப்பட்டுள்ளன. வடகாடு, கீழாத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கோயில்களிலும் நடத்தப்படுகிறது. ஒரு குடும்பம் தனியாக நடத்துவது மட்டுமல்லாமல், செலவுகளைக் குறைப்பதற்காக 45 குடும்பங்கள் சேர்ந்தும் மொய் விருந்து நடத்துகிறார்கள்.

மொய் பணத்தைப் போடும் குவளைச் சட்டியில் பூ, புதுத் துண்டு சுற்றி, கையில் ஒரு பேரேடுடன் மொய் பிரிப்பவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பெரிய குடும்பங்களில், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், ஒரே அரங்கத்தில் 1012 இடங்களில் உட்கார்ந்து மொய் பிரிக்கிறார்கள். அரங்கத்தின் வாசலில் விருந்து நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நின்று வரவேற்கிறார்கள். மொய் செய்ய வருபவர்களில் சிலர் கையில் நீளமான ஒரு தாளில் யாருக்கு எவ்வளவு திரும்பச் செய்ய வேண்டும் எனக் குறித்து வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரே நாளில் பல இடங்களில் நடக்கும் விருந்துகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்பதால், குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, வீட்டிலுள்ள பழைய பேரேடுகளைப் பார்த்து, பட்டியலைத் தாயாரித்துவிட்டுதான் புறப்படுவார்களாம்.

“மொய் விருந்து என்றாலே அசைவ சாப்பாடுதான். குடும்ப நிகழ்ச்சிகளில் அசைவம் போடுவதில்லை என்பதால், கல்யாணத்தோடு சேர்த்து நடத்தப்படும் மொய் விருந்துகளில் மட்டும் சைவம் போடப்படும். ஆனால், சைவச் சாப்பாடு மொய் விருந்து என்றால் கொஞ்சம் ஆர்வக் குறைவாகத்தான் இருக்கும்’’ என்கிறார், திருச்சிற்றம்பலம் மாரிமுத்து.

காலையில் 10 மணி முதல் 1 மணி வரைதான் மொய் விருந்துகள் நடைபெறுகிறது. எனவே, மொய் செய்ய வேண்டியவர்கள் அதற்குள் வந்து செய்துவிட வேண்டும். 1 மணிக்கு கூட்டிக் கழித்து எவ்வளவு மொய் பிரிந்திருக்கிறது என்று நெருக்கமானவர்களுக்குத் தெரிவித்து விடுகிறார்கள். 1 மணிக்குப் பிறகு செய்யப்படும் மொய்கள் தனிப் பேரேடில் பின்வரவு எனக் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், “அதற்கு மரியாதைக் குறைவு. மேலும், இதனைத் திரும்ப வாங்குவதும் சிக்கலுக்குள்ளாகும். ஏனென்றால், ஒரு குடும்பத்தில் இருந்து மொய் விருந்து அழைப்பு வந்தால், அவர்கள் எவ்வளவு மொய் செய்திருக்கிறார்கள் என, மொய் விருந்துப் பேரேடில்தான் பார்ப்பார்கள். அதில் பெயர் இல்லையென்றால் மட்டும்தான் பின்வரவு பேரேடை எடுத்துப் பார்ப்பார்கள். பின்வரவு பேரேடில் பெயர் இருந்தாலே, இவன் நமக்கு மரியாதை தரவில்லை; இவனுக்கு ஏன் நாம் மரியாதை தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடும்’’ என்கிறார், வேட்டைப்பெருமாள்.

பத்திரிகை சரியாகச் சென்று கிடைக்காதவர்கள், தேதியை மறந்தவர்கள், பல்வேறு வேலைகள் காரணமாக வரமுடியாவர்கள், மொய் செய்யப் பணம் இல்லாதவர்கள் என எப்படியும் சில விடுபடல்கள் இருக்கும்தானே. இதனை எப்படிச் சமாளிக்கிறார்கள்?

இதற்காக மொய் விருந்து முடிந்தபிறகு வீட்டுக்குச் சென்று ஏற்கெனவே யார், யாருக்கு மொய் செய்திருக்கிறோம்; அவையெல்லாம் திரும்ப வந்துவிட்டதா எனப் பழைய பேரெடையும் புதுப் பேரேடையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்து, ‘மொய் பாக்கி லிஸ்ட்தயார் செய்வார்கள். பிறகு, ஓர் ஆளை நியமித்து அந்த வீடுகளில் சென்று வசூலிக்கச் சொல்லுவார்கள். இப்படி வரும் ஆள், “மொய் பாக்கி’’ என்று மட்டும்தான் சொல்லுவார். நாம் நமது வீட்டுப் பேரேட்டில் அவர்கள் எவ்வளவு செய்திருக்கிறார்கள் எனப் பார்த்து கொடுக்க வேண்டும். அப்போதும் கொடுக்க முடியாதவர்கள் இப்போது இல்லை பிறகு தருகிறேன் எனச் சொல்லுவார்கள். முடியும்போது கொடுத்துவிடலாம்.

ஆனால், 45 வருடங்களுக்கு மேலும் கொடுக்காமல் இருந்தால், சாலைகளில் வழியில் பார்க்கும்போது கேட்பார்கள். வருடங்கள் அதிகரிக்க, அதிகரிக்க மரியாதை குறையும். எனக்குத் தெரிந்த ஒருவர் 15 வருடங்களாகத் திரும்ப வராத மொய்யைக் கேட்டு, வாக்குவாதம் முற்றி, சண்டையாகி, காவல்துறை வழக்கு வரைக்கும் சென்றது. ஆனால், இப்படியாவது பெரும்பாலும் மிகக் குறைவுதான். குறிப்பிட்ட நபர் நெருக்கமானவராகவோ உறவினராகவோதான் இருப்பார் என்பதால், “அவன் நாணயம் அவ்வளவுதான்’’ என்று சொல்லி விட்டுவிடுவார்கள்.

இப்படி நாணயம் இல்லாத ஆள் என்று இப்பகுதியில் பெயரெடுத்தவர்கள் அதன்பிறகு வெளியே வட்டிக்கு கடன் வாங்குவது சிக்கலாகிவிடும். மொய்யைத் திரும்பச் செய்ய முடியாதவர், கடனை எப்படித் திரும்ப அடைப்பார் என யோசிப்பார்கள். எனவே, பெரும்பாலும் மொய்யை திரும்பச் செய்துவிடுவார்கள். செய்ய முடியாத சிலருக்கு உறவினர்கள், ஏதோ கஷ்டப்பட்டுவிட்டான், கைதூக்கிவிடுவோம் என உதவுவதும் நடக்கும்’’ என்கிறார் வேட்டைப்பெருமாள்.

குறிப்பிட்ட சாதியினர் என்றில்லாமல் எல்லாச் சாதியினரும் மொய் விருந்து நடத்துகிறார்கள். குடும்ப நிகழ்ச்சிக்கு உறவினர்கள் மட்டுமல்லாமல் நண்பர்கள், தெரிந்தவர்கள் என எல்லாச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வருவதுபோல் மொய் விருந்துக்கும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அதுபோல் திரும்பச் செய்வதற்கும் வேறுவேறு சமூகத்தினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார்கள். இதில் இன்னொரு சுவாரசியம், முன்பின் தெரியாத ஒருவரும் மொய் விருந்து பற்றிக் கேள்விப்பட்டு வந்து மொய் செய்கிறார். அதுபோல் தெரியாதவர்களிடம் இருந்தும் ஒருவருக்கு மொய் விருந்து பத்திரிகைகள் வருகிறது. இப்போது சிலர் வாட்ஸ்அஃப்பிலும் அழைப்பிதழ்கள் அனுப்புகிறார்கள்.

“மொய் விருந்தில் பிரியும் பணம் நமது பணமல்ல; இதனைத் திரும்பச் செய்ய வேண்டும் என்ற தெளிவுடன், பணத்தைச் சரியாகக் கையாளக்கூடியவர்களுக்கு நிச்சயம் இது மிகப்பெரிய வாய்ப்புதான். வேறு எங்கும் இவ்வளவு பணம் வட்டியில்லாமல் கிடைக்காது. இப்படி மொய் விருந்தில் பிரியும் பணத்தைத் தொழில் முதலீடாக்கி மிகப்பெரிய அளவில் வளர்ந்த நிறையப் பேர்கள் இப்பகுதியில் இருக்கிறார்கள்.

மொய்ப் பணத்தைக் கொண்டு வீடு கட்டுவது, நிலம் வாங்கிப் போடுவது, வங்கியில் இருப்பு வைத்துக் கொள்வது என்று இறங்கிவிட்டால் பணம் முடங்கிப் போய்விடும். இதனால், தொடர்ந்து வருமானம் வரும் வகையில் முதலீடு செய்யலாம். நிலம் வாங்குவதாக இருந்தால் தென்னந் தோப்பு போன்ற நிரந்தர வருமானம் கிடைக்கும் நிலமாக இருந்தால் நல்லது’’ என்கிறார் மாரிமுத்து.

தற்போது இரண்டு மாதங்களுக்குள் 1000 மொய் விருந்துகள் நடப்பதாலும், ஒரே நாளில் நிறைய நிகழ்ச்சிகள் நடந்து, குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், அந்தந்தப் பகுதிகளில் மொய் விருந்து கமிட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டியில் மொய் விருந்தும் நடத்தும் தேதியை பதிவு செய்ய வேண்டும். சிலர் தேதி கிடைக்காது என்பதற்காக ஒரு வருடம் முன்பேகூடப் பதிவு செய்துவைத்து விடுகிறார்கள்.

கடந்த ஆண்டு (2014), அதிகபட்சமாக, ஆலங்குடி அருகே வடகாட்டில் கிருஷ்ண மூர்த்தி என்ற விவசாயி நடத்திய மொய் விருந்தில் இரண்டரை கோடி ரூபாய் மொய் பிரிந்துள்ளது. இந்த ஆண்டு (2015) நடைபெறும் 1000 மொய் விருந்துகளும் சேர்ந்து மொத்தம் 100 கோடி ரூபாய் பிரியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்றவாரம், 19ஆம் தேதி, ஆலங்குடி அருகே கீழாத்தூரில் 12 பேர் மொய் விருந்து நடத்தினார்கள். இதில், அதே ஊரைச் சேர்ந்த எம். சுப்பிரமணியன் என்பவருக்கு ரூ. 17 லட்சம் வசூலானது. மற்றவர்களில் பி. ராஜா ரூ. 14.35 லட்சம், க. மருதன் ரூ.11.85 லட்சம், மு. கருணாகரன் ரூ. 12 லட்சம் என வசூலாகியுள்ளது. மொத்தமாக 12 பேருக்கும் சேர்த்து மட்டும் 1 கோடி ரூபாய்க்கு மேல் மொய் பிரிந்துள்ளது. மொய் விருந்தால் பந்தல்காரர், இலை வியாபாரி, அச்சகத்தார், அரிசி மண்டி, கறி கடை, ஜவுளிக்கடை உட்படப் பல நேரடித் தொழில்களும் சில மறைமுகத் தொழில்களும் பலனடைகிறது. அத்துடன் மொய்க் கணக்கு எழுதும் வகையில் ஏராளமான இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 வரை கணக்கு எழுத 500 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள்.

பல குடும்பங்களின் பொருளாதார ஏற்றத்திற்கு உதவியிருப்பது போலவே, பலரது பொருளாதார வீழ்ச்சிக்கும் மொய் விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன என்றும் சொல்லப்படுகிறது. ஒரே நாளில் ஒரே ஊரில் பல மொய் விருந்துகள் நடைபெறும்போது, திருப்பிச் செய்யும் வகையில் ஒரே குடும்பத்திற்குப் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும். அதற்காக வட்டிக்கு கடன் வாங்கிச் சிலர் பொருளாதாரச் சிக்கல்களுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள் என்றும் சிலர் தற்கொலை வரைக்கும்கூடச் சென்றிருப்பதாகச் செய்திகள் வருகிறது.

ஆனால், “இவை எல்லாம் தவறான புரிதல்கள். மொய் விருந்து குறித்த ஊடகங்களின் தவறான சித்தரிப்பின் விளைவாக உருவானது. வங்கியில் வெறும் 25 ஆயிரம் கடன் வாங்கவே நடையாய் நடக்க வேண்டியுள்ளது. அதுவும், சொத்தையோ நகையையோ அடமானம் வைத்துதான் வாங்க முடியும். மேலும் வங்கி கடன், கிரிடிட் கார்ட் கடன் போன்றவை குண்டர்கள் வைத்து வசூலிக்கப்படுகிறது. அதனால், மனம் ஒடிந்து தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். அப்படியெதும் மொய் விருந்தில் நடப்பதில்லை. பெரும்பாலும் உறவினர்கள், தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்பதால் அவர் நாணயம் அவ்வளவுதான் என விட்டுவிடுவார்கள்.

ஏழை, எளியவர்களுக்கு மொத்தமாக 23 லட்சங்கள் பணத்தைப் பார்ப்பது கஷ்டம். சிறுக சிறுக இவ்வளவு பணத்தைச் சேமிப்பதற்கான வழிமுறைகளும் அவர்களிடம் இல்லை. பங்குச் சந்தை, யூலிப், மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் போன்றவை உட்பட்ட எத்தனை முதலீடுகளில் போட்ட பணத்துக்கு உத்தரவாதம் உள்ளது? மொய் விருந்தில் அந்தப் பிரச்சினை இல்லை. இப்பகுதி மக்கள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியைச் சிறுகச் சிறுக பலருக்கும் மொய்யாக எழுதுகிறார்கள். இவர்கள் மொய் விருந்து வைக்கும்போது அது மொத்தமாகத் திரும்பக் கிடைக்கிறது.

இதுபோல் சின்னக் கவுண்டர்போன்ற திரைப்படங்களின் தவறான சித்தரிப்பு காரணமாகவும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்குக் கை கொடுப்பதற்காக நடத்தப்படுவதுதான் மொய் விருந்து என்ற தவறான அபிப்ராயமும், மற்ற பகுதியினர் மத்தியில் உள்ளது. அது உண்மையல்ல. மொய் விருந்து இப்பகுதி மக்கள் மத்தியில் உயிரோடும் உணர்வோடும் அன்றாட வாழ்வோடும் கலந்த பாரம்பரிய பழக்கம்; கலாசாரப் பரிவர்த்தனை. மொய் கொடுக்கல் வாங்கல் ஒருவகையில் உறவும் நட்பும் நீடிக்க உதவுகிறது’’ என்கிறார் வேட்டைப்பெருமாள்.


தமிழகத்துக்குள் நமக்கு தெரியாமல்தான் எவ்வளவு ஆச்சர்யங்கள்!