14 September 2010

ஆவணக்காப்பகம்

சென்னை இலக்கிய சங்க நூலகம்
(Madras Literary Society Library)

தளவாய் சுந்தரம்

சென்னையில் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமணைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்தினுள் நுழைந்து, சிறிது தூரம் சென்றதும், இடதுபக்கம் அந்த கட்டிடம் தென்படும். மிகவும் புராதனமான கட்டிடம். இந்தோ - பிரேசியன் கட்டிடக் கலையில் உருவாக்கப்பட்டது. அந்த கட்டிடத்துக்கு முன்னால் வந்து நின்றால், கால இயந்திரத்தில் பயணம் செய்து, தற்காலத்தில் இருந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின்னால் போய்விட்டது மாதிரி இருக்கிறது. அந்த புராதனமான கட்டிடம், புதுப்பிக்கப்படாமல் இருக்கும் அதன் பழமையான தோற்றம், சுற்றிலும் உள்ள மரங்கள், மண் தரை. . . நிச்சயம் சென்னையில் இருக்கிறோம் என்ற உணர்வை அந்த இடம் தராது. எதற்கு இவ்வளவு பீடிகை, அந்த கட்டிடத்துக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்கிறீர்களா? இருக்கிறது. இந்த கட்டிடம்தான் இப்போது நாம் பேசப்போகும் விஷயத்தின் மையம். இங்கேதான் மிகவும் புகழ்பெற்றதும் இந்தியாவிலேயே மிகவும் பழமையான வாடகை நூலகமுமான சென்னை மாகாண இலக்கிய சங்க நூலகம் இயங்கி வருகிறது.

நமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற விழுமியங்களுள் ஒன்று என்றும் இந்த நூலகத்தைச் சொல்லலாம். ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டதுக்கு சாட்சியாக, அடுத்துவரும் தலைமுறைகளுக்கு அந்த கதையை சொல்லும் விதமாக இந்த நூலகம் இப்போது இருக்கிறது. நமது நாட்டிலிருக்கும் மிகவும் பழமையான வாடகை நூலகம் (lending library) இதுதான். 1812ஆம் ஆண்டு இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு பழமையான வாடகை நூலகம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. இந்த நூலகம் தமிழகத்தில் இருக்கிறது என்பதே தமிழகத்திற்கு பெருமைதான்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, சென்னை மாகாணத்தில் இருந்த சில கிழக்கிந்திய கம்பெனி படை வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய தேசங்களில் இருந்து வந்திருந்த மதபோதகர்கள் சிலர் ஆகியோர் இணைந்து சென்னை இலக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். ராயல் ஏசியாடிக் சொசைட்டி என்ற ஆங்கிலேயர்களின் அமைப்பு பம்பாய், கல்கத்தா, சென்னை என்று அக்காலத்தில் எல்லா முக்கிய நகரங்களிலும் இருந்திருக்கிறது. இதில் சென்னையிலிருந்த ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஒரு பகுதிதான் சென்னை இலக்கிய சங்கம். இச்சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ராயல் ஏசியாடிக் கழகத்தின் துணையுடன்தான் நடைபெற்று வந்துள்ளன.

சென்னை இலக்கிய சங்கத்தை உருவாக்கியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம் ஒரு நூலகம் வேண்டும் என்ற எண்ணம். இரண்டாவது காரணம் அந்த நூலகத்தில் கூடி தங்கள் அறிவை வளர்த்துக்கொள்வது மற்றும் பகிர்ந்து கொள்வது, கலந்து பேசி விவாதிப்பது. இவை எல்லாவற்றுக்குமான ஒரு சங்கமாக இதனை திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள். முக்கியமாக அவர்களின் பொழுது போக்குக்காகவும் பயனுள்ள வழியில் அறிவை செலவழிப்பதுக்காகவும் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர வாசிப்புத் தன்மையுடைய ஆங்கிலேயர்கள் தங்களுக்கிடையே நுட்பமான தகவல்களை பரிமாரிக் கொள்வதுக்கான களமாகவும் இந்நூலகம் இருந்துள்ளது. மாண்டீத், மில்லர், அன்னிபெசன்ட் அம்மையார் போன்றவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினராக இருந்திருக்கிறார்கள். மொத்தத்தில் அனைவருமே ஐரோப்பியர்கள்தான். இரண்டே இரண்டு இந்தியர்கள்தான் தொடக்கத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார்கள். இரண்டு பேர்தான் உறுப்பினராக இருந்த இந்தியர்கள் என்றதும் இந்தியர்களுக்கு அறிவைப் பெருக்குவதில் நாட்டம் இல்லை என்று கருதிவிட வேண்டாம். அதற்கு காரணம் இருக்கிறது. அக்காலத்தில் எல்லோரும் நினைத்தவுடன் சென்னை இலக்கிய சங்க உறுப்பினராகிவிட முடியாது. அதற்கு மிகுந்த கட்டுப்பாடுகள் இருந்திருக்கிறது. அந்த நூலகமே வெள்ளைக்காரர்களுக்காக உருவாக்கப்பட்டதுதானே. எனவே இந்தியர்கள் உறுப்பினராவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம்.

தங்கள் சொந்த தேசத்தில் இருந்து நீண்ட தூரத்தில் இருந்த பிரிட்டீஷ்காரர்களின் ஹோம் சிக்க்கும் இந்த நூலகம் உருவாக ஒரு காரணம் என்று சொல்லலாம்.

தொடக்கத்தில் சென்னை கோட்டையின் பின்பகுதியில் (பழைய தலைமைச் செயலகம் அமைந்திருந்த இடம்) இருந்த இடத்தில் இந்த நூலகம் இருந்திருக்கிறது. அதன்பிறகு 1875ஆம் ஆண்டு சென்னை கோட்டையின் பின்பகுதியில் இருந்த நூலகத்தை இப்போது கன்னிமாரா நூலகம் இருக்கும் பகுதிக்கு மாற்றியிருக்கிறார்கள். 1906ஆம் ஆண்டு, டி.பி.ஐ. வளாகத்தில் இப்போது நூலகம் இருக்கும் கட்டிடம் கட்டப்பட்டு நூலகம் இங்கே இடம்பெயர்ந்திருக்கிறது. சென்னை அரசின் பொதுப்பணித்துறை இந்த கட்டிடத்தைக் கட்டி நூலகத்துக்காக அர்ப்பணித்துள்ளது. இந்நூலகத்திற்கென்றே சிறப்பு அந்தஸ்து அடிப்படையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இப்போதுள்ள வாடகை நூலகங்களைப் போல் வீட்டிலேயே புத்தகங்களைக் கொண்டு கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் அதனைப் பின்பற்றுகிறார்கள். நீங்கள் உங்களுக்குத் தேவையான புத்தகத்தை குறிப்பிட்டு விட்டீர்கள் என்றால் போதும். புத்தகத்தை உங்கள் வீட்டிலேயே கொண்டு வந்து தருகிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆங்கிலேயர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும் விதிகள் தளர்த்தப்பட்டு இந்தியர்கள் அதிகமாக உறுப்பினராக வகை செய்யப்பட்டிருக்கிறது. அப்போது இந்தியர்கள் பலர் இந்த நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார்கள். 1868ஆம் ஆண்டு உள்ள பதிவேட்டில் திருவாங்கூர் மகாராஜா, ரங்கநாத முதலியார் ஆகியோர் இந்த நூலகத்தின் உறுப்பினர்களாக இருந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுபாஷ் சந்திரபோஷ், நீதிக்கட்சியைச் சேர்ந்த வரதராஜ முதலியார், ராஜமன்னார், எழுத்தாளர் எஸ்.பாலாம்மாள், டாக்டர் சுப்பராயன், நாட்டியக் கலைஞர் ருக்மணி தேவியின் கணவர் ஜி. எஸ். அருண்டேல், ஏ.எல்.ராமசாமி முதலியார் ஆகியோர் உறுப்பினராகியிருக்கிறார்கள். இவர்கள் உறுப்பினராக இருந்ததுக்கான ஆவணங்களை இப்போதும் நூலகத்தில் பார்க்கலாம். சுபாஷ் சந்திரபோஷ் இந்த நூலகத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பித்த கடிதம் அவர் கையெழுத்தில் இன்னும் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பிரிட்டீஷ்காரர்கள் ஒவ்வொருவராக தங்கள் நாட்டுக்குத் திரும்பத் தொடங்கினார்கள். அப்படி திரும்பியவர்களின் இந்த நூலகத்தின் உறுப்பினராக இருந்தவர்களும் உண்டு. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நூலகத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்த நூலகத்தின் பொற்காலமும் கொஞ்சம் கொஞ்மாக மங்கத் தொடங்கியது. இப்போது இந்த நூலகத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை பார்த்தாலே அதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 180 பேர்!

என்றாலும் இப்போதும் இது ஒரு சிறப்பு வாய்ந்த நூலகம் என்பதில் சந்தேகம் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் சென்னை இலக்கியச் சங்கத்தின் செயலாளராக இருந்த மாண்டித் மெக்பைல் என்ற ஆங்கிலேயர் சென்னை இலக்கிய சங்கம் குறித்தும் இந்த நூலகம் குறித்தும் ஒரு சிறு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதனை படித்தால் ஆச்சர்யத்தில் நம் கண்கள் விரிந்து விடும். அவ்வளவு பெருமைகள் கொண்டது இந்த நூலகம். 1906ஆம் ஆண்டு அந்த சிறு வெளியீடு வெளியாகியுள்ளது. மாண்டீத் அக்காலத்தில் சென்னை மாகாண முக்கியஸ்தர்களில் ஒருவர். சென்னையில் ஒரு சாலைக்கு மாண்டீத் பெயர் வைக்கப்பட்டது. இப்போதும் சென்னையில் அந்த சாலை மாண்டீத் சாலை என்றுதான் அழைக்கப்படுகிறது. இதிலிருந்தே அவரது முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

மாண்டீத் வெளியிட்டது சிறுகுறிப்புதான் என்றாலும் சென்னை இலக்கிய சங்க நூலகத்தைப் பொறுத்தவரைக்கும் மிக முக்கியமான ஒரு ஆவணம் அது. அக்குறிப்பேட்டில் உள்ள தகவல்கள்தான் இந்த நூலகத்தின் ஆரம்ப செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்ள இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி. 1812ஆம் ஆண்டு நூலகம் தொடங்கப்பட்ட போது நூலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் புத்தகங்கள், நூலகத்தைப் பராமரிக்க ஒரு ஆண்டுக்கு செலவாகும் மூவாயிரம் ரூபாய், உறுப்பினர்கள் கடைபிடிக்கக்கூடிய விதிமுறைகள், சந்தா விபரங்கள் உட்பட எல்லாவற்றையும் பற்றி இந்த குறிப்பேட்டில் மாண்டீத் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலகத்தின் இன்னொரு சிறப்பு, அறிஞர் தோட்டக்காடு ராமகிருஷ்ணபிள்ளை இந்த நூலகத்தின் நூலகராக இருந்திருக்கிறார் என்பது.

‘MADRAS JOURNAL OF LITRATURE AND SCIENCE' என்ற பருவ இதழையும் சென்னை இலக்கிய சங்கம் நடத்தி வந்துள்ளது. சென்னை பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது சமஸ்கிருத வகுப்பில் அதிகமும் ஜெர்மன்காரர்கள்தான் சேர்ந்திருக்கிறார்கள். அந்த ஜெர்மன்காரர்கள் இந்த பத்திரிகையின் வெளியீட்டில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். 1833ஆம் ஆண்டு இந்த இதழின் முதல் பிரதி வெளியாகியுள்ளது. அன்று முதல் 1984ஆம் ஆண்டு வரை சுமார் அறுபது வருடங்கள் தொடர்ந்து இந்த இதழ் வெளியாகியுள்ளது. அக்காலகட்டத்தில் வெளிவந்த முக்கியமான இதழ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இதழில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ‘LAND CRABS IN MADRAS' (நண்டுகளின் கூடாரம் சென்னை), ‘சேலம் மாவட்டத்திலுள்ள முற்காலத்திய நடுகல்கள்', ‘மலபார் மாவட்டம் - வயநாடு' போன்ற ஆராய்ச்சி கட்டுரைகள் மிக முக்கியமானவை. இந்த இதழின் தொகுப்பு இந்த நூலகத்தில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதுபோல் சென்னை இலக்கிய சங்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆவணமும் இங்கே இருக்கிறது. அது அழகிய கையெழுத்தில் கைப்பட எழுதப்பட்டு, பிறகு தட்டச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1960ஆம் ஆண்டு ஆவணப்படி, அப்போது ஒன்றரை இலட்சம் புத்தகங்களுக்கு மேல் இந்த நூலகத்தில் இருந்திருக்கிறது. இப்போது சுமார் 80,000 புத்தகங்கள், 1000க்கும் மேற்பட்ட பத்திரிகைகள், பல அறிய புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் இங்கு உள்ளன. இவை எல்லாமே கவனமாக பாதுகாக்கப்பட வேண்டிய அரிய ஆவணங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், ஆராய்ச்சி நூல்கள், தத்துவ நூல்கள், வரலாற்று நூல்கள், ஆன்மீக நூலகள், புவியியல் நூல்கள் எல்லாம் இங்கே உள்ளன.

ஜெனே ஆஸ்டின், பால்ஸாக், செர்வாண்டிஸ், வில்லியம் பிளேக், மேத்திவ் அர்னால்ட், ராபர்ட் லூயிஸ், வால்ட் வில்ட்மன், மார்க் ட்வைன், தாமஸ் கார்டி, ஸ்டீவன்ஸன், டென்னிசன், ரஸ்ஸல், வெல்ஸ் போன்ற முக்கிய ஆசிரியர்களின் அனைத்து புத்தகங்களும் இங்கே உள்ளது. குறிப்பாக இந்த புத்தகங்கள் அனைத்தும் குறிப்பிட்ட இந்த எழுத்தாளர்களின் வாழ்நாளிலிலேயே வெளிவந்த முதல் பதிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள விதம், புத்தக அலமாரிகள் ஆகியவையற்றை இப்போது வேறு எந்த நூலகத்திலும் பார்க்க முடியாது. 20அடி உயரமுள்ள 10 உயரமான புத்தக அலமாரிகள் 8க்கும் மேற்பட்ட அடுக்குகளில் ஒன்றன்மீது ஒன்றாக உள்ளன. மேலே இருக்கும் புத்தக அலமாரியில் இருந்து புத்தகத்தை எடுக்க ஏணிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒன்றரை லட்சம் புத்தகங்கள் என்பதாயிரம் ஆனதில் இருந்து பல புத்தகங்கள் சிதைந்து போயிருக்கின்றன என்று தெரிய வருகிறது. இப்போதும் கூட பல புத்தகங்கள் சிதைந்த நிலையில்தான் உள்ளன. புத்தகங்களின் நிலையைப் பொறுத்து, மிகவும் மோசமான நிலையில் இருப்பவை, பரவாயில்லாமல் இருப்பவை, நல்ல நிலையில் இருப்பவை என்று அவற்றை மூன்றாக பிரித்திருக்கிறார்கள். இதில் மிக மோசமான நிலையில் இருக்கும் புத்தகத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அதனை பாதுகாப்பதா அல்லது வெளியே கொடுத்து விடுவதா என முடிவு செய்கிறார்கள். இப்படி தேவையில்லை என்று கழிக்கும் புத்தகங்களை எதாவது கல்லூரி அல்லது பள்ளி நூலகங்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். சமீபத்தில் கூட இப்படி சென்னை ஐ.ஐ.டி. நூலகத்திற்கு அதிக புத்தகங்களை கொடுத்திருக்கிறார்கள். இப்படி கொடுக்கும் போது அந்த புத்தகத்தின் ஆசிரியரின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அதற்கு மாற்றுப் பிரதி வாங்கி வைக்கவும் செய்கிறார்கள்.

இப்போது இந்த நூலகம் கணினிமயப்படுத்தப் பட்டும் வருகிறது. கணினியில் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஒறு புத்தகத்தை தேடி எடுப்பது மிகவும் சுலபமாக இருக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த நூலகத்தில் ஒரு தமிழ் புத்தகங்கள் இல்லை என்பது கொஞ்சம் சங்கடத்துக்குறிய விஷயம்தான். எல்லா புத்தகங்களும் பிரஞ்சு, ஜெர்மன், இலத்தின், ஆங்கிலம் ஆகிய மொழி புத்தகங்கள்தான். ஆங்கிலேயர்கள் அவர்களுக்காக உருவாக்கிய நூலகம் என்பதால், அவர்களுக்குப் பயன்படக்கூடிய புத்தகங்களை மட்டுமே வாங்கி வைத்துள்ளார்கள். ஆனால் இனிமேல் தமிழ் புத்தகங்கள் வாங்கி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக நூலகர் உமா மகேஸ்வரி சொல்கிறார். யாராவது நன்கொடையாக புத்தகங்கள் கொடுக்க முன்வந்தாலும் அதனையும் பெற்றுக் கொள்வார்களாம்.

இங்கே இருக்கும் அரிய ஆவணங்கள் பற்றி பேசத் தொடங்கினால் நாள் முழுக்க பேசிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அரிய பொக்கிஷங்கள் இருக்கின்றன. எனவே நாம் சில மிக முக்கியமான ஆவணங்கள் பற்றி மட்டும் பேசலாம். முதலில் இங்கே இருக்கும் 1858ஆம் ஆண்டு வெளியான உலக வரைபடம் பற்றி கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த உலக வரைபடம் மிகவும் பிரசித்திப் பெற்றது. பல்வேறு மடிப்புகளாக உள்ள அந்த வரைபடம் விரித்தால் மிகவும் பெரியதாக இருக்கிறது. இரண்டு பேர் படுப்பதுக்கான பாய் மாதிரி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது போல் முப்பதுக்கும் மேற்பட்ட வரைபடங்கள் உள்ளன. 1898ஆம் வெளியான ‘HISTORY OF BUCKINGHAM CANELS PROJECT' என்ற ஒரு பெரிய புத்தகம் உள்ளது. இரண்டு பேர் சேர்ந்துதான் அதனை தூக்கிவைத்து விரித்து பார்க்க வேண்டும். பஞ்சகாலத்தில் மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம், பக்கிங்காம் கால்வாய் திட்டம். அந்த திட்டம், கால்வாயின் வரைபடம் எல்லாம் இந்த புத்தகத்தில் உள்ளன. இங்கே இருக்கும் கங்கை கால்வாய் வரைபடமும் ஒரு முக்கியமான ஆவணம். இதுபோல் முப்பதுக்கும் மேற்பட்ட அரிய வரைபடங்கள் உள்ளன.

அரிய புத்தகங்களைப் பொறுத்தவரைக்கும் ‘ARISTOTELIS OPERATMNIA' என்ற புத்தகம் இங்கே இருப்பதிலேயே மிக பழமையான புத்தகம். 1509ஆம் ஆண்டு இந்த புத்தகம் வெளியாகியுள்ளது. கிரேக்கம் மற்றும் இலத்தின் மொழியில் உள்ள இந்த புத்தகம் மேற்கத்திய கலைகள் பற்றி முனைவர் பட்டத்துக்காக அளிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி கட்டுரை. லியார்னார்டோ டாவின்ஸி, மைக்கலாஞ்சலோ போன்ற முக்கியமான மேற்கத்திய கலைஞர்களின் படைப்புகள் குறித்து இதில் உள்ளது. ‘TRAVELS IN INDIA AND TREATIES IN FAR EAST' என்ற புத்தகம் இங்கே இருக்கும் அடுத்த பழமையான புத்தகம். JOHN BAPLISTA என்பவர் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். 1680ஆம் ஆண்டு இந்த புத்தகம் வெளியாகியுள்ளது. வேறும் பல புத்தகங்கள் தேட தேட கிடைத்துக் கொண்டே இருக்குமாக இருக்கலாம்.

புத்தகங்கள், வரைபடங்கள் மட்டுமல்லாமல் அந்தகால புகைப்படங்களும் இங்கே உள்ளன. இதில் ஆங்கிலேய கேப்டன் டி. டிரைட் எடுத்த புதுக்கோட்டை, மதுரை புகைப்படங்கள் முக்கியமானவை. 1858ஆம் ஆண்டைச் சேர்ந்தவை அந்தப் புகைப்படங்கள். அவற்றைப் பார்ப்பது ஒரு பிரமாதமான அனுபவம். மிகவும் அறிய காட்சிகள். அந்த காலத்தில் மதுரையும் புதுக்கோட்டையும் எப்படி இருந்திருக்கும் எனத் தெரிந்தகொள்ள இன்றைக்கு இருக்கும் மிக முக்கியமான ஆவணங்கள் இவை. இவ்வகையில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூலகம் இது. பல முனைவர் பட்டத்துக்கான விஷயங்கள் இந்த நூலகத்தில் தூங்கிக்கொண்டிருக்கின்றன.

சரி, இவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கலமா?

பார்க்கலாம். அதற்கு உறுப்பினராக இருக்க வேண்டும். உறுப்பினராவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. யார் வேண்டுமானாலும் உறுப்பினராக சேரலாம். தனிநபர் வருட சந்தா ஐநூறு ரூபாய். உறுப்பினர் ஒரே நேரத்தில் நான்கு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். நிறுவன உறுப்பினர் சந்தா 1500 ரூபாய். உறுப்பினராகும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் நான்கு புத்தகங்கள் வீதம் எட்டு புத்தகங்கள் எடுத்துக் கொள்ளலாம். இப்போது 180 தனிநபர்களும் நான்கு நிறுவனங்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

என்.எஸ்.ராமஸ்வாமி அவர்கள் எழுதிய ‘MADRAS LITRARY SOCIETY: A HISTORY 1812 - 1984' என்ற புத்தகம் இந்த நூலகம் மற்றும் சென்னை இலக்கிய சங்கம் பற்றி மிகவும் விரிவாக பதிவு செய்துள்ள ஒரு புத்தகம். 148 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகம்தான் இது. இப்போது அச்சில் இந்த புத்தகம் இல்லை. சென்னை இலக்கிய சங்க நூலகத்தில் மட்டும் ஒரு பிரதி இருக்கிறது. தேவைப்படுபவர்கள் இங்கே சென்று நகல் எடுத்துக்கொள்ளலாம்.

2000த்தில் நான் சென்ற போது, முன்னாள் இந்தியன் வங்கி சேர்மன் எம்.கோபால கிருஷ்ணன், சென்னை இலக்கிய சங்கத்தின் சேர்மனாக இருந்தார். மோகன்குமார் செயலாளராக இருந்தார். மேலும் ஹேமலதா ராமமணி, சி.ராமகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் அதிகார்¢கள் வி.கிருஷ்ணன், கே.ஹரிபாஸ்கர் மற்றும் பி.எஸ்.சோமசுந்தரம், கே.ஆராவமுதன், ஹெச்.சி.ரேட்டன், வி.கே.மோகன், எம்.ராமன் ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக இருந்தார்கள். மொத்தம் ஆறு பேர் வேலை பார்த்தார்கள். உறுப்பினர்கள் சந்தா மற்றும் நன்கொடையின் மூலம்தான் இந்த நூலகம் இன்னும் மூச்சுவிட்டு உயிர் வாழ்ந்து வருகிறது. உறுப்பினர்கள் சந்தாவிலிருந்து வரும் வருமானத்தில் இருந்துதான் இங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கிறார்கள். பொதுப்பணித்துறையின் கீழ் இருக்கும் நூலக கட்டிடத்துக்கு மிகவும் குறைந்த அளவிலான வாடகையை மட்டுமே அரசாங்கம் பெற்றுக்கொள்கிறது. அது ஒருவகையில் இந்த நூலகத்திற்கு பெரிய ஆறுதல். உமா மகேஸ்வரி என்பவர் நூலகராக இருக்கிறார். 1994 முதல் இவர் இந்த நூலகத்தில் வேலை பார்க்கிறார். ”சென்னை இலக்கிய சங்கம் நூலக கட்டிடத்தை புணரமைக்கவும் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள அறிய புத்தகங்களுக்கு மாற்று புத்தகங்களை வாங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், சிறப்பான ஒரு நூலகமாக இதனை மாற்ற வேண்டுமானால், நிறைய தெரிந்து கொள்ளவேண்டும், நமது பெருமையாக இருக்கும் இந்த நூலகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மவர்களுக்கு வரவேண்டும். இன்னும் நிறைய பேர் இந்த நூலகத்தை பயன்படுத்த முன்வர வேண்டும்” என்றார் உமா மகேஸ்வரி.

(பழ.அதியமான் அவர்கள் கேட்டுக்கொண்டதால், ‘சென்னை, ஆல் இந்தியா ரேடியோ’வில் வாசிக்க இந்தக் கட்டுரையை 2002இல் எழுதினேன். வாசித்து கேட்கும்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டக் கட்டுரையில் இப்போது மிகச் சிறு மாறுதல்கள் செய்திருக்கிறேன். கறுப்பு வெள்ளைப் படங்கள்: மதுரை)

1 comment:

விஜய் மகேந்திரன் said...

good article dhalavai....well done!