30 April 2008

நேர்காணல்

நாஞ்சில் நாடன்
எழுத்தாளனின் அச்சமும் கவலையும்

முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்தில் ஓர் உயர் அதிகாரி போல் இருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். பேசத் தொடங்கினால், தோளில் துண்டும் வேஷ்டியுமாக குளத்தங் கரையோரம் நின்று கவலையோடு வயக்காட்டைப் பார்க்கும் கிராமத்து விவசாயியாக மாறிவிடுகிறார்! ஆறு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், விவாதங்களை எழுப்பிய பல கட்டுரைகள் என தமிழ் மொழிக்கு செழுமை சேர்த்த தனித்துவமான எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில்நாடனா இவர் என ஆச்சரியம்.

மாறிவரும் சமூக மதிப்பீடுகள் முன் மனிதர்களும் மண் சார்ந்த உறவுகளும் என்னவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை நுட்பமாகவும் அழகாகவும் எடுத்துரைப்பவை நாஞ்சில்நாடன் படைப்புகள். நகரங்களுக்கு குடிபெயரும் படித்த கிராமத்து இளைஞர்களின் தவிப்பை இவர் அளவுக்கு இயல்பாக பதிவு செய்வதர்கள் யாரும் இல்லை. இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலே தங்கர்பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. இலக்கியம், பண்பாடு, அரசியல், சினிமா, குடி எனப் பல்வேறு விஷயங்கள் குறித்த நாஞ்சில் நாடனுடனான மிக நீண்ட சந்திப்பின் ஒரு பகுதி இங்கே....

"பொங்கல், தமிழர்கள் பண்டிகை. ஆனால், நாம இப்போ தீபாவளியைக் கொண்டாடுவது மாதிரி பொங்கலில் ஆர்வம் காட்டுவதில்லையே?”

“பொங்கல் தமிழர்களுக்கான பண்டிகை எனச் சொல்வதுடன் எனக்கு முரண்பாடு இருக்கு. பொங்கல், விவசாயிகள் பண்டிகை. தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். விவசாயத்தையும் இயற்கையையும் மதிக்காத ஒரு சமூகம், எப்படி அவர்கள் பண்டிகையை மட்டும் தங்கள் பண்டிகையாகக் கொண்டாட முடியும்? தமிழ்நாடு தவிர, எனக்கு தெரிந்து வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் வேறு பெயரில், வேறு வடிவத்தில் இந்தப் பண்டிகை விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. எனவே, பொங்கலை தமிழ்நாட்டுக்கு மட்டுமான ஒரு பண்டிகையாக எடுத்துக்கொள்ள முடியாது.

"திராவிட அரசியலுக்குப் பிறகுதான், தைப் பொங்கலுக்கு தமிழர்கள் பண்டிகை என்ற சாயம் ஏற்றப்பட்டது. சரி, தமிழர்கள் பண்டிகை என்றே வைத்துக்கொள்வோம்; எல்லாத் தமிழர்களும் பொங்கலைக் கொண்டாடுகிறார்களா என்ன? தமிழினத்தில் இருபத்தைந்து சதவிகிதமான கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பொங்கல் கொண்டாடுவதில்லை. நகரத்தில் வாழ்பவர்கள், விவசாயம் சம்பந்தப்படாதவர்கள் ஆகியோருக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களைப் பொறுத்தவரை பொங்கல் என்பது டி.வி. நிகழ்ச்சிகளும் புதிய சினிமாக்களும் மட்டும்தானே.

"ஃபேஷன் என்கிற பெயரில் நம் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்பட்டிருக்கு. நம் நிலத்துல வெளைகிற தானியங்களைக் கொண்டே செய்கிற பண்டிகைப் பலகாரங்கள் பல இருக்கு. அரிசி, தேங்காய், சர்க்கரை மூன்றும் இருந்தா சர்க்கரைக் கொழுக்கட்டை; சர்க்கரைக்குப் பதிலா உப்பு சேர்த்தா உப்பு கொழுக்கட்டை. இதுல எதையும் வெளியே இருந்து வெலைக்கு வாங்கலை. இப்படி நூற்றுக் கணக்கானப் பலகாரம் செய்து சாப்பிட்டுருக்காங்க நம்ம தாத்தாவும் பாட்டியும். அறுபது வருஷத்துக்கு முந்தி நாஞ்சில் நாட்டுக்காரன் ஜிலேபி, அல்வா, லட்டுன்னு எதையாவது கண்டிருப்பானா. ஆனால், இன்னைக்கு எந்த ஊரு ஸ்வீட் ஸ்டாலாக இருந்தாலும் அங்கே குறைந்தது இருபத்தைந்து வகையான ஸ்வீட்களைப் பார்க்கலாம். அதில ஒன்னு கூட தமிழ்நாட்டு பலகாராம் கிடையாது. எல்லாமே வடநாட்டில் இருந்து இறக்குமதி ஆனவை. கொஞ்ச நாளைக்கு முன்னால வரைக்கும் சில கடைகள்ல அதிரசம் பார்க்கலாம். இப்போது அதுவும் கிடையாது. நம்ம நாட்டுப் பலகாரங்கள் மறக்கடிக்கப்பட்டு, இந்த ஸ்வீட்கள் எல்லாம் ஏன் நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது? கிராமத்து வாசலுக்கு புரோட்டா கடை வந்தாச்சி. கிராமத்து மனுஷனுக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட வேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடி வந்தது? இதெல்லாம்தான் நாகரிகம், வளர்ச்சின்னு பேன்ஸியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இவை நமக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறது? இந்த மாற்றங்கள் ஆரோக்கியமான மாற்றங்கள் இல்லை.”

"சுதந்திரத்துக்குப் பிறகு, கடந்த அறுபது வருஷத்துல எமர்ஜென்ஸி உட்பட எவ்வளவோ பெரிய அரசியல் மாற்றங்களை தமிழ்நாடு சந்திச்சிருக்கு. ஆனால், இதற்கான எதிர்வினை, பதிவுகள்ங்கிறது நவீன தமிழ் இலக்கியத்தில் மிகக் குறைவு. நவீன இலக்கியப் படைப்பாளிகளில் பலர் அரசியல், சமூக பிரச்னைகளைப் பற்றி கருத்து சொல்வது மிகக் குறைவு. ஏன் படைப்பாளிகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புறாங்க?”

"உண்மைதான். தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்? ஓவியன், சிற்பி, இசைக் கலைஞன் எல்லோரையும்விட கூடுதல் சமூகப் பொறுப்பும் அக்கறையும் உள்ளவன் எழுத்தாளன்.

"தேனியில இருந்து ஆண்டிப்பட்டி வழியா மதுரைக்கு வர்ற வழியில இருந்த ஒரு மலையை இப்போ காணோம். கிரானைட்டா எக்ஸ்போர்ட் ஆயிடுச்சு. அந்நியச் செலாவணி, தேசிய வருமானம்னு வர்த்தக நிபுணர்கள் சொல்றாங்க. மக்களுக்கும் சந்ததிகளுக்கும் சொந்தமான, நிரந்தரமான ஒரு இயற்கைச் செல்வத்தை இல்லாம ஆக்குவதற்கான உரிமையை உனக்கு யார் தந்தான்னு அவர்களை எழுத்தாளன் கேட்க வேண்டாமா?

"முப்பது வருஷத்துக்கு முன்னாடி திருவனந்தபுரம் கோவளம் பீச்சுக்குப் போனா, எல்லாப் பகுதிக்கும் என்னால போயிட்டு வரமுடியும். அதன் அழகை ரசிக்கலாம்; உட்கார்ந்து இளைப்பாறலாம். ஒரு சாதாரண குடிமகனா என் இந்த உரிமை, இப்போது பறிக்கப்பட்டு பத்து சதமானம் மக்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. என் பாக்கெட்டுல பத்தாயிரம் ரூபாயும் ஸ்டார் ஹோட்டல்ல அறையும் போட்டிருந்தா மட்டும்தான் இப்போ அந்தக் கடலை நான் ரசிக்க முடியும். நான் ஒன்னும் அந்த இடத்தை வெட்டி வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடப் போவதில்லையே. ஒரு அரை மணி நேரம் அந்த இடத்தைப் பார்ப்பதற்கான உரிமை சாதரண குடிமகனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் மறுக்கப்படுகிறது. ஒரு பொதுச்சொத்தை செல்வந்தர்கள் கூறுபோட்டிருக்கிறார்கள். என் நாட்டின் இயற்கையில் எனக்குப் பங்கு இல்லையான்னு ஒரு எழுத்தாளன் கொதிச்சு எழுந்திருக்க வேண்டாமா?

"ஒரு நாள்ல, ஒவ்வொரு டிராபிக்கிலயும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கு? என்னுடைய அரை மணிநேரம், உங்கள் அரை மணி நேரம், இன்னும் லட்சக்கணக்கான மக்களின் அரை மணி நேரங்கள் பாழாய்ப் போயிட்டு இருக்கு. எவ்வளவு சத்தம், எவ்வளவு தூசி? இதுக்கெல்லாம் யார் பொறுப்புங்கிற கேள்வி ஒரு எழுத்தாளனுக்கு வரணும் இல்லையா? வரும்; ஆனால், அதை எழுத்துல வெளிப்படுத்தப் பயப்படுகிறான்.

"நான் எழுத்தாளனை நேரடி அரசியல்ல ஈடுபடுன்னு சொல்லலை. இந்த சமூகத்துக்கு நீ கடமைப்பட்டவனா, இல்லையான்னுதான் கேட்கிறேன். இப்படி உங்களையும் உங்க சமூகத்தையும் பாதிக்கிற, உங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கண்டுக்காம எப்படி எழுத முடியும்? படைப்புகளின் அர்த்தம் என்ன? சமூக ரீதியாகவும் மத ரிதியாகவும் வர்க்க ரீதியாகவும் எந்த வகையில் அநியாயம் நடந்தாலும் அதைச் சொல்றதுதானே படைப்பு. வங்காளம், மகாராஸ்டிரா, கேரளா மாநில எழுத்தாளர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கான்னு கேட்டால் இல்லைன்னுதான் சொல்வேன்.

"இன்னொரு பக்கம், எதுக்கு அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவங்களைப் பகைச்சிக்கனும்? நாளைக்கு அவனால ஒரு காரியம் ஆகவேண்டி இருக்கும்ங்கிற ஒரு எதிர்பார்ப்பு இப்போது எழுத்தாளர்களுக்கு உருவாகி இருக்கு. எனக்கோ, என் முந்தின தலைமுறை எழுத்தாளர்களுக்கோ இல்லாத எதிர்பார்ப்பு இது. முப்பது வருஷத்துக்கு முன்னாடி... முப்படைகளுக்கான ஒரு நிகிழ்ச்சி. அதில், அல்லா ரக்கா தபேலா, பிஸ்மில்லாகான் ஷெனாய் கச்சேரி. பிஸ்மில்லாகான் வாசித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது, முன்றாவது தளங்களில் இருந்து ஒரு சலசலப்பு. பிஸ்மில்லா கான், ‘’சுப்ரகோம்‘ (‘அமைதியாக இருங்கள்) என்று இரண்டு முறைக் கேட்டுக்கொள்கிறார். சலசலப்புக் குறையவில்லை. மூன்றாவது முறை, ஷெனாயைத் தூக்கி பைக்குள் வைத்துக்கொண்டு எழுந்து போய்விட்டார். அல்லா ரக்கா, தபேலாவை மூடுகிறார். இந்திய அரசின் மூப்படை தளபதிகளும், மகாராஸ்டிரா கவர்னரும் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிற ஒரு அரங்கத்தில் அவர்களை நிராகரித்துவிட்டு செல்கிற ஒரு கர்வம் அந்தக் கலைஞர்களுக்கு இருந்தது. ‘’நீ யாரா இருந்தால் எனக்கென்ன; என்கிட்ட இருப்பது சரஸ்வதி; வித்தை, அதுக்கு முன்னால நீ பணிந்துதான் ஆகணும்‘’ என்கிறார் பிஸ்மில்லாகான். அமெரிக்காவுக்கு வந்து செட்டிலாகிருங்கன்னு பிஸ்மில்லாகானைக் கூப்பிடுறாங்க. அங்கே விஸ்வநாதர் ஆலயமும், கங்கா நதியும் இருக்கான்னு கேட்கிறார், அவர்.

"நம் மரபிலும் கலைஞர்களுக்கு இந்த செம்மாந்த நிலை இருந்திருக்கிறது. கிழிந்த துணியை உடுத்திக்கொன்டு, அரசனுக்கு முன்னாடி, ‘வளநாடும் உனதோ, மன்னவனும் நியோ; உன்னை அறிந்தோ தமிழை ஓதினோம்‘’ என்கிறான் கம்பன். அரசன் நினைச்சா ‘லக்கலக்க’ன்னு கம்பன் தலையை சீவி இருக்க முடியுமே. அரசன் செய்யலை; சதாரண கிழிஞ்ச துணி உடுத்தியக் கம்பனைக் கண்டு அவன் பயந்திருக்கிறான். இப்போதுள்ள கவிஞர்கள், ‘’நீ எழுதுவதுதான் தமிழ். உன் முன்னாடி பேனா எடுக்கவே எனக்குக் கூசுது” என்கிறார்கள். இப்படி எதிர்பார்ப்போடு இருக்கிறவன் எப்படி கலைஞன்ங்கிற கர்வத்தோட அநியாயத்தை எதிர்க்க முடியும்? பிஸ்மில்லாகானுக்கும், அல்லா ரக்காவுக்கும், கம்பனுக்கும், ஜெயகாந்தனுக்கும் இருந்த கர்வம் இல்லைன்னா இலக்கியத்துல எதுவுமே செய்ய முடியாது.

"சரி, அவ்வளவு கர்வமா இருக்கும்படியா தமிழ் சமூகம் எழுத்தாளனை வெச்சிருக்கா என்றால் தயக்கத்தோடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆக, தமிழ் எழுத்தாளனின் பயத்துக்கு நியாயம் இருக்குங்கிறதை மறுக்க முடியாது. இந்த சமூகத்தில் எழுத்தாளனுக்கு என்ன மரியாதை இருக்கு? சினிமாவுக்குப் பாட்டு எழுதுகிறவங்களும், அரசியலிலும் அதிகாரத்திலும் பெரிய பதவிகளில் இருப்பவங்களும்தானே இங்கே உலக மகா கவிஞர்கள். ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகையில் லா.ச.ராமாமிருதம் பற்றிய ஒரு கட்டுரைல, அவர் படத்துக்குப் பதிலா லா.சு.ரங்கநாதன் படத்தைப் போட்டுருக்காங்க. பத்திரிகை ஆசிரியருக்கே லா.ச.ராமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும்? ஹங்கேரியில் பிரேக் ஏர்போர்ட்ல இறங்கி வெளியே வந்ததும், பெரிய விளம்பரப் பலகை ஒன்னு நம்மை வரவேற்கிறது. ‘நீங்கள் மொசார்ட்டும் காஃப்காவும் பிறந்த ஊருக்கு வருகை தருகிறீர்கள்’ என்றிருக்கு அதுல. சென்னையில அதுமாதிரி ஒரு போர்ட வச்சா, என்ன எழுதுவாங்கங்கிறதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நியாயமா ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மரியாதை எல்லாவற்றையும் இங்கே யாரோ பறிச்சுகிட்டுப் போறாங்க. கேரளாவிலோ, கர்நாடகத்திலோ மகாராஸ்டிராவிலோ இது நடக்குமா? ஒரு கொத்து வேலை, தச்சு வேலை செய்கிறவனுக்குக் கிடைக்கிற கூலிகூட, ஒரு சிறுகதைக்குப் செலவழித்த உழைப்புக்காக எழுத்தாளனுக்கு கிடைப்பதில்லை. மனைவி, குழந்தைகளுக்கான எவ்வளவு நேரத்தை செலவழித்து அந்தக் கதையை அவன் எழுதியிருப்பான். மாதம் எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருப்பான்.

"ஒரு எழுத்தாளன் எதிர்மறையான கருத்தைச் சொன்னா, அவன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கு. ஒரு டிவிஎஸ் 50-ல வந்துகூட அவனை இடிச்சு கொன்னுட முடியும். அந்த அளவுக்கு பலமில்லாத தனி ஆள் அவன். வெளியில உள்ள ஆபத்துகளைவிட இலக்கியத்துக்குள்ளேயே இருக்கும் ஆபத்து இன்னும் மோசம். பெண்ணியத்துக்கும் தலித்தியத்துக்கும் பொதுவுடமை தத்துவத்துக்கும் ஆதரவா எழுதுவது சுலபம். முற்போக்கானவனா உங்களைக் காட்டிக் கொள்ளமுடியும். ஆனால், இவற்றை விமர்சனம் பண்ணி எழுதுவது சிரமம். மீறி எழுதினா பயங்கரமான எதிர்ப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த எதிர்ப்புகளை தன்னால சந்திக்க முடியுமா என்ற அச்சம் எழுத்தாளனுக்கு இருக்கு. ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதியதுக்காக ஒரு பகுதியினரால் இன்றும் ஜெயமோகன் காழ்ப்புடன் பார்க்கப்படுகிறார். ஏன் ஒரு படைப்பாளி, ஒரு அரசியல் கட்சியை விமர்சித்து எழுதக்கூடாது? இதனாலதான் யாரையும் காயப்படுத்தாம, புண்படுத்தாம, நிரந்தரமான ஒரு வேலை, குடும்பம்னு சர்வ நிச்சயங்களோட வாழ்ந்துட்டு போயிருவோம்னு படைப்பாளி நினைக்கிறான்.

"அச்சமும் கவலையும் உள்ள எழுத்து தன் ஜீவனையும் ஆற்றலையும் இழந்துவிடுகிறது. எழுத்தாளன், தான் சரின்னு நினைப்பதை சொல்ல முதல்ல இந்த சமூகம் அவனை மதிக்கனும்.”

"ரவிக்குமார், சல்மா, கனிமொழி, தமிழச்சின்னு நவீன இலக்கியவாதிகள் அரசியலுக்கு வருகிறாங்களே?”

"படைப்பாளிகள் அரசியலுக்கு வர்றது நல்லதுதான். நடைமுறை அரசியல்வாதிகளைவிட நடைமுறை சமூகப் பிரச்னையை இவங்க அதிகம் உணர்ந்திருப்பாங்கதான. ஆனால், படைப்பாளியா எந்தளவுக்கு சமூகப் பொறுப்புணர்வோடு இருந்தாங்களோ, அப்படியே அரசியல்லயும் இருக்காங்களா என்பதுதான் முக்கியம். இருந்தாதான் அவர்கள் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கு. இப்போதான் இவங்க எல்லோரும் வந்திருக்காங்க. எனவே, பொறுத்திருந்து பார்த்துதான் இவங்களை மதிப்பீடு செய்யமுடியும்.”

"சினிமாவில் சிகரெட் காட்சிகளைத் தடைசெய்யணும்‘னு அன்புமணி ராமதாஸ் சொல்லி வருகிறார். விஜய், ‘என் படங்களில் இனிமே சிகரெட் காட்சிகள் இடம்பெறாது’ன்னு சொல்கிறார். இது ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாதா?”

"சினிமாவில் சிகரெட் குடிக்கலாமா, கூடாதா என்பதை கதையும் காட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும். புகை பிடிப்பது தவறு, அதைத் தடுக்கனும்னா, சினிமாவில சிகரெட் காட்சிகளை இல்லாமல் செய்து, சிகரெட் பாக்கெட்டுல சின்னதா ‘சிகரெட் உடல்நலத்துக்கு தீங்கானது’ன்னு குறிப்பிட்டா மட்டும் போதுமா? புகையிலைப் பயிர்செய்வதில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரணும். சிகரெட் கம்பெனிகளின் லைசன்ஸைக் கேன்சல் செய்யனும். ஆனா, அதைச் செய்யமாட்டாங்க. ஏன்னா, அதன் மூலம் வரும் வருமானத்தை இழக்க இவங்கத் தயாரா இல்லை. அரசு மதுபானக் கடைகளால் மட்டும் ஆண்டுக்கு ஏழாயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. அதை வாங்கி பாக்கெட்டுல போட்டுட்டு, ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு யாருக்கு இவங்க போதிக்கிறாங்க.

"கள், நம்ம ஊர் சரக்கு; உணவும் மருந்தும் சேர்ந்த இயற்கையான போதைப் பொருள். ஆனா, அதைத் தவறுன்னு தடை பண்ணியிருக்காங்க. கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு நம்மைச் சுற்றியிருக்கிற எல்லா மாநிலங்கள்லயும் கள் இறக்கலாம், குடிக்கலாம். அந்த மாநிலங்கள்ல சரியா இருக்கிற ஒரு விஷயம் நம்ம மாநிலத்துல மட்டும் எப்படி தப்பா போச்சி? கள் இறக்க அனுமதிச்சா ஏழாயிரம் கோடி வருமானம் பாதியாக ஆயிரும். கள் இறக்கினா ஒரு சமூகமே வாழும். 150 ரூபாய்க்குக் குடிக்கிறவன், 50 ரூபாயில் திருப்தியா குடிச்சிட்டு மிச்ச 100 ரூபாயை வீட்டுல கொண்டு போய் கொடுப்பான். அந்த 100 ரூபாயை அவனிடம் இருந்து பிக்பாக்கெட் அடிக்கத்தான் கள்ளைத் தடை செய்து, ஐ.எம்.எஃப் சரக்குகளை அரசாங்கமே விற்குது.

"சரி, ஏழாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் வருமானம் தருகிறவங்கன்னு குடிமகன்களை இந்த அரசாங்கம் மரியாதையா நடத்துதான்னா அதுவும் இல்லை. மூன்று ரூபாய் கொடுத்து டீ குடிக்கும் போது கிடைக்கிற மரியாதை டாஸ்மாக் பார்களில் கிடைப்பதில்லை. டீ கடையில், போன உடனே ‘வாங்க’ங்கிறான்; டேபிளைத் துடைக்கிறான்; தண்ணீர் கொண்டு வந்து வைக்கிறான்; லைட், ஸ்ட்ராங், சுகர் கம்மி, சூடு குறைவான்னு நாம சொல்றதுக்கு தக்கபடி போட்டு தர்றாங்க. ஆனா அரசாங்கம் நடத்துற டாஸ்மாக் பார்ல... உலகத்துல உள்ள மொத்த சாக்கடை ஈக்களும் அங்கதான் இருக்கு. டேபிளைத் துடைப்பதேயில்ல; குடிச்சி போட்ட பாட்டில் அங்கேயே கிடக்கும். எலி, பெருச்சாளி, குப்பைக்கு குறைவே கிடையாது. கொசுக் கடி இருக்க முடியாது. பாட்டில், சைடு டிஸ் சேர்த்து இவன் கொடுக்கிற தொன்னூறு ரூபாய்க்கு அரசாங்கம் தருகிற பரிசு இவ்வளவு துன்பங்களும். வேற எந்தத் தொழில்லயாவது வாடிக்கையாளனை இவ்வளவு கேவலமா நடத்த முடியுமா? மூன்று ரூபாய் மதிப்புள்ள சைடு டிஸை பத்து ரூபாய்க்கு விற்கிறான்; ஏழு பைசா மதிப்புள்ள பிளாஸ்டிக் கப்பு ஒரு ரூபாய். தண்ணீர் இலவசம் கிடையாது. ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு பிரசாரம் செய்கிற அரசாங்கமேதான் இந்த கொள்ளைகளை கண்டுக்காம அனுமதிக்குது. கொத்து வேலைக்காரன், பஸ் கண்டக்டர், சாதாரணக் கூலித் தொழிலாளி போன்றவங்கதான் இங்க குடிக்க வர்றாங்க. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி பேசுகிற சோசலிஷ அரசாங்கம் தன் குடிமக்களையே பன்றியைவிடக் கேவலமா நடத்துகிறதை டாஸ்மாக் பார்ல பார்க்கலாம்.

"எப்படி இத்தனைக் கொடுமைகளையும் குடிமகன்கள் பொறுத்துகிறாங்க? குடிப்பதை அவன் ஒரு குற்றவுணர்வோடு செய்கிறான். அப்படி செய்ய அவன் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். ஏன் குடிக்கிறது சம்பந்தமா ஒருவர் குற்றவுணர்வு அடையனும்? குடிக்கிறது ஒன்னும் கொலை மாதிரியான குற்றம் கிடையாதே. அசைவம் சாப்பிடுவது எப்படி என் தேர்வோ, அதுபோல குடிப்பதும் என் தேர்வு. குடி சரியா, தப்பா என்பது அடிப்படையில் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும் விஷயம். இங்கிலீஷ்காரன் குடிப்பது சரி, நான் குடிப்பது தப்புன்னா எப்படி? குடி, ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமே தவிர, அறம் சார்ந்த விஷயம் இல்லை. முன்னெல்லாம், ‘குடிக்கலைன்னா இவர் செத்துப் போயிருவாரு’ங்கிற மாதிரி டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருந்தாதான் பிரண்டி ஷாப்களில் பிராண்டி வாங்க முடியும். அப்புறம் அதைத் தளர்த்தி, ஆறரை கோடி தமிழர்களில் பத்து வயசுக்கு மேல் நாற்பது வயசுக்குள் உள்ள ஒரு தலைமுறைக்கு குடியை அறிமுகம் செய்தது யார்? அரசாங்கம்தானே. இந்த முரண்பாடு உண்மையிலேயே எனக்குப் புரியமாட்டேங்குது.”

"ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தால், நீங்க வருவீங்களா?”

"சினிமாவுக்கு எழுதுகிற எண்ணம் எனக்கு எப்போதுமே இல்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க; என் மிது மரியாதை வெச்சிருக்காங்க. நானும் அவங்க மேல மரியாதை வெச்சிருக்கேன். எனக்குத் தெரிந்து பிரமாதமான எழுத்தாளனாக வந்திருக்கக்கூடிய அனேகம் பேர் உதவி இயக்குநர்களாக சினிமாவில் இருக்காங்க.

"பல இயக்குநர்கள், அவர்களுக்கு பிடிச்ச எழுத்தாளர்னு என்னைச் சொல்றாங்க; சந்தோஷம். ஆனால், அப்படிச் சொல்கிற பெரும்பாலான சினிமாக்காரங்க, தொடர்ந்து என் படைப்புகளில் இருந்து திருடுறாங்க என்பதுதான் வருத்தத்துக்குறிய விஷயம். ஊர்ல சொல்வாங்க... பிள்ளையில்லாதவன் சொத்துன்னு. நம்மூர் சினிமாக்காரங்களுக்கு தமிழ் நாவல்களும் சிறுகதைகளும் பிள்ளையில்லாதவன் சொத்து மாதிரி. வேண்டியதை, வேணும்கிற போது எடுத்துக்கிறாங்க. அந்தப் படைப்புக்கு சொந்தக்காரனிடம் அனுமதி பெறவேண்டும்; உரிய அங்கீகாரம் கொடுக்கனும்; அதற்கான விலையைக் கொடுக்கனும்னு எதுவுமே கிடையாது. கி.ராஜநாராயணனுக்குப் பிறகு தமிழ் சினிமாக்காரங்களால அதிகம் கொள்ளையடிக்கப்பட்ட எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன்.

"என் படைப்புகளில் வேண்டியதை அவங்க எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு காட்சியை எடுத்துக்கொண்டால்கூட அதற்கான அங்கீகராத்தையும் ஊதியத்தையும் எனக்குத் தரணும் என்றுதான் நான் கேட்கிறேன். ஒரு காட்சியில் தலையைக் காட்டிக்கிட்டுப் போறவனுக்கு கூட சம்பளம் கொடுத்தாகனும். ஒரு பாட்டு காசுகொடுக்காம வாங்க முடியுமா? ஆனால், அந்தக் காட்சியை எழுதினவனுக்கு அது அவனுக்கு சொந்தம்கிற அங்கீகாரம்கூட இல்லை. நண்பர், தெரிந்தவர், மரியாதைக்குறிய எழுத்தாளர் என்று சொல்லிகிட்டு இப்படி புறவாசல் வழியா எடுத்துக்கொண்டு போவது திருட்டு இல்லாமல் வேற என்ன? கடந்த இருபது வருஷமா இந்தத் திருட்டை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதுக்கான அரசியல், பொருளாதார பின்புலம் எனக்குக் கிடையாது. நானோ அன்றாடம் காய்ச்சி. என் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல்தான் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. ‘அக்ரிமெண்ட்’ போட்டு, முறையா உரிமையை வாங்கிதான் தங்கர்பச்சான் செய்தார். படம் வந்தபோது, ‘இது நாஞ்சில் நாடனின் நாவலைத் தழுவியது’ என ஆரம்பத்துல கார்ட் போட்டிருந்தார். தியேட்டரில் நானே பார்த்தேன். ஆனால், பிறகு டி.வி.யில் இதுவரை ஐந்துமுறை அந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். ஆரம்பத்துல இருந்த அந்தக் கார்டைக் காணோம். இப்பவும் என் ஆத்மார்த்தமான நண்பர்தான் தங்கர்பச்சான். ஏன் எனக்கு இதைச் செய்தார்? எனக்கு நியாயமாகச் சேரவேண்டிய அங்கீகாரத்தை எப்படி ஒரு சக படைப்பாளியே மறுக்கலாம். இது எவ்வளவு நாணயக் குறைவானக் காரியம். எத்தனைக் கோடி செலவழித்துப் படம் எடுக்குறாங்க. எழுத்தாளனுக்கு உரிய பணத்தையும் அங்கீகாரமும் ஏன் கொடுக்க மாட்டேங்கிறீங்க?

"என் சிறுகதைத் தொகுப்பு புதிதாக வந்தால், குறைந்தது நூறு பிரதிகளாவது உதவி இயக்குநர்கள் வாங்குவாங்க. வாசிக்கிறப்ப கிடைக்கிற இலக்கிய அனுபவத்துக்காக அவங்க வாங்கலை. பழையது எல்லாவற்றையும் திருடியாச்சு, புதிசா என்ன திருடலாம் எனப் பார்க்குறாங்க. இதிலிருந்து எந்தக் காட்சியைச் சுடலாம், எந்த ஐடியாவை எடுத்துக் கொள்ளலாம் என்ற மோசடி உத்தியோடுதான் படிக்கிறாங்க. இந்த அடிப்படை நேர்மை, நாணயம் இல்லாத ஒருவர் எப்படி கலைஞனாக இருக்க முடியும்? எப்படி ஒரு நல்லக் கலைப் படைப்பை அவனால் சமூகத்துக்கு தந்துவிட முடியும்? சினிமாக்காரங்ககூட பேசிக்கொண்டிருக்கவே எனக்கு பயமாக இருக்கு. நாம பேசிக் கொண்டிருக்கும் போதே குறிப்பு எடுத்துக்கிறாங்க. அடுத்த சினிமாவில் அது காட்சியா வந்துவிடும்.

"ஒருத்தன் எனக்குப் போன் பண்ணுகிறான்... ‘’நான் இன்னார் இயக்குநரின் இன்னார் அஸிட்டென்ட் பேசுகிறேன். வெள்ளாளச் சமூகத்தில் தாலி அறுத்தா என்ன சடங்கு செய்வாங்க?’. கன்சல்டன்ஸிக்காக கூப்பிடுகிறான். ஒரு பல் டாக்டருக்கு போன் பண்ணி, ‘’எனக்கு பல் வலி. என்ன மாத்திரை சாப்பிடனு”ம்னு கேட்க முடியுமா? ‘’சொத்துல சின்ன பிரச்னை இருக்கு. என்ன பண்ணலாம்‘’னு வக்கிலுக்கு போன் பண்ண முடியுமா? அதற்கு கூலி கொடுக்கனும். ஆனால், எழுத்தாளனிடம் மட்டும் இலவசமா கவுன்சிலிங் செய்யலாம். வெள்ளாளச் சமூகத்தின் சடங்குகள் பற்றி என் புத்தகத்துல நிறைய இருக்கு. அதைத் தேடிப் படிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை. ஆனால், நான் எந்த ஊர்ல, என்ன வேலையில இருப்பனோங்கிறதைப் பத்தி கவலையே படாம போன் பண்ணுகிறான். இப்படிப்பட்டவங்க எந்த சமூக அநீதிக்கு எதிராப் போராட முடியும்? எந்தக் கலையை நிறுவிற முடியும்? அரசியல்வாதிகளைக் குறை சொல்ல இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு? அரசியல்வாதிகளைவிட எந்தவகையில் இவங்க மேலானவங்க. இன்றைக்குக் காலையில் பேப்பரில் படித்தேன்... ஒரு இயக்குநர் திருட்டு விசிடி விற்பதைப் பிடித்திருக்கிறார். ஏன்யா, உன் படத்தின் விசிடி விற்றா அது திருட்டு; என் கதையில் இருந்து இரண்டு காட்சியை உருவினா அது திருட்டு இல்லையா? நீ செய்கிற அதே செயலைத்தானே அவனும் செய்கிறான். நான் தொழில்துறையில் இருந்தவன். ஏழு முதல் எட்டு சதவிகிதம் லாபம்தான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இவங்க வட்டி மட்டுமே பதினைந்து சதவிகிதம் கொடுக்கிறாங்க. என்றால், எவ்வளவு லாபம் எதிர்பார்க்கிறாங்கன்னு கணக்கிடுங்க.”

"ஆரம்பத்துல இருந்தே நாஞ்சில் வட்டார மொழி எழுத்தாளரா அடையாளம் காணப்படுறீங்க. தொடக்க காலங்களில், வட்டார மொழிகளில் எழுதுவதை தமிழின் தனித்தன்மை சிதைத்துவிடும் என்று தமிழறிஞர்கள் விமர்சித்தார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?”

"அறிஞர்ங்கிறவன் யாரு? எழுதப்பட்டவைகளைத் தொகுத்து தன் அறிவைப் பெருக்கிக் கொண்டவன். ஆனால், கலைஞன் தன் அனுபவத்தின் மூலமாக வாழ்வில் இருந்து பெறுகிறவன். எனவே, அறிஞன் மாதிரி கலைஞனால் வாழ்வைப் பார்க்க முடியாது. அறிஞர்களின் முக்கியத்துவத்தை நான் மறுக்கலை. இப்படி மொழியை தண்ணீரிலும் அமிலத்திலும் போட்டுக் கழுவி, அவிச்சி சுத்தம் பண்ணி, பொதுத்தமிழ்ல எழுதனும்னு சொல்கிற அறிஞர்களுக்கு ஒரு அரசியல் இருக்கு. தமிழை செம்மொழி ஆக்க தோள் கொடுக்கிறவங்க நாங்கதான்னு மார்தட்டிக்கிறாங்க இவங்க. ஆனால், உண்மை நிலவரம் என்ன? தமிழ் பேராசிரியர்களும் அறிஞர்களும் அறியாத ஆயிரக்கணக்கான சொற்கள் நம் வட்டார மொழிகள்ல இன்னும் இருக்கு. இந்தச் சொற்களைப் பாதுகாத்து, பதிவு பண்றது வட்டார மொழி எழுத்துகள்தான். மொழிங்கிறது ஒரு வாழ்க்கை. தஞ்சை, செம்புலம், நாஞ்சில்னு ஒவ்வொரு புலத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கையை அந்த வட்டார மொழியிலதான் சொல்லமுடியும்.

"எங்கள் ஊர்ல ‘இளநீர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ‘கருக்கு’ன்னுதான் சொல்லுவோம். பனைமர மட்டை ஓரங்களில் கருப்பா ஒரு பகுதி இருக்கும். அதை வச்சி எதையும் வெட்டலாம். அதையும் கருக்குன்னுதான் சொல்லுவோம். மேலும், கருக்கு அருவான்னே ஒரு அருவா இருக்கு. எங்கே, எந்த இடத்துல சொல்றேங்கிறதை வச்சி வாசகர்கள் அதை புரிஞ்சிக்கிறாங்க. அப்புறம் ஏன் நான் உன்னுடைய வசதிக்காக, சௌகரியத்துக்காக என்னுடைய சொல்லை மாத்திக்கனும். மொழியை சுத்தம் பண்ணி எழுதினா, அதனுடைய உயிர்த் தன்மை செத்துப் போயிடும். அதன்பிறகு, மறைமலையடிகளும் மு.வ.வும் எழுதின தமிழைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டியிருக்கும்.

"ஒவ்வொரு படைப்பாளியும், காலத்தால் அழிந்துவிடச் சாத்தியமுள்ள ஆயிரக்கணக்கான சொற்களைப் புடிச்சி வைச்சிருக்கான். இப்படி, படைப்பாளிதான் தமிழை செம்மொழி ஆக்குகிறான்; அறிஞர்களோ, பேராசிரியர்களோ ஆக்கலை. அறிஞர்கள், சிலப்பதிகாரத்தையும் கம்ப ராமாயணத்தையும் மட்டுமே திரும்பத், திரும்ப ஆராய்ச்சிப் பண்ணி தமிழை செம்மொழி ஆக்கமுடியாது. சமகால இலக்கியத்துல என்ன நடக்குன்னு பார்க்கனும்.”

"இது அவசர யுகம். பரபரப்பா இருந்தால்தான் சம்பாதித்து வாழ முடியும்கிற நிலை. இதில் ஒருவர் ஏன் இலக்கியம் படிக்கனும்?”

"புத்தகம் படித்தும் இசை கேட்டும் ரிலாக்ஸாகப் பழகிக் கொள்ளாத ஒரு சமூகம், நாற்பது வயசுல சைக்கியாட்ரிஸ்ட் அல்லது ஆன்மிகவாதிகள்கிட்டேதான் போகனும். எதிர்காலத்துல இந்தியாவில் சைக்கியாட்ரிஸ்டுக்கு அமோகமான பிஸினஸ் இருக்கு.”

சந்திப்பு: தளவாய் சுந்தரம்
படங்கள்: சித்ரம் மத்தியாஸ்

(ஆனந்த விகடன் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. இதன் சுருக்கமான வடிவம் ஆனந்த விகடன் இதழிலும் கொஞ்சம் விரிவான பகுதி விகடன் இணையதளத்திலும் வெளியானது)